“அஞ்சாமை, கீழ்ப்படிதல், அன்பு – நம் கிறிஸ்தவ வாழ்வின் அடையாளம்”
சகோதர சகோதரிகளே,
இன்றைய வாசகங்கள் நம் வாழ்வின் மூன்று முக்கிய உண்மைகளை நினைவூட்டுகின்றன:
- கடவுளிடமிருந்து யாரும் தப்பிச் செல்ல முடியாது உதாரணம் யோனா.
- உண்மையான அடுத்திருப்பவர் இரக்கத்தோடும் அன்போடும் வாழ்பவர் உதாரணம் நல்ல சமாரியர்.
- உண்மைக்காக அஞ்சாமல் வாழ வேண்டும் உதாரணம் இன்றைய புனித புருனோவின் வாழ்க்கை.
1. யோனாவின் ஓட்டமும் கடவுளின் திட்டமும் (யோனா 1:1-17)
யோனாவிடம் கடவுள் நினிவே மக்களை நோக்கி அறிவிக்கச் சொன்னார். ஆனால் யோனா தப்பிச் செல்ல நினைத்தார்.
- கடவுளிடமிருந்து ஓட முடியாது; அவர் எங்கு சென்றாலும் நம்முடன் இருக்கிறார் என்பதை யோனாவின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது .
- யோனாவின் கீழ்ப்படியாமையால் அவர் மட்டுமல்ல, அவருடன் கப்பலில் இருந்த மக்கள் கூட ஆபத்தில் சிக்கினர்கள்.
- ஆனால் யோனாவை கடவுள் கைவிடவில்லை; மீன் வயிற்றுக்குள் மூன்று நாள் வைத்துப் பின் மீண்டும் பணி செய்யச் அனுப்பி வைத்தார்.
இந்த முதல் வாசகம் நமக்குத் தரும் வாழ்வுக்கான பாடம்: கடவுள் நம்மை அழைக்கும் பணியில் இருந்து நாம் விலகிட விரும்பினாலும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்கு அவர் நமக்கு உறுதுணையாக இருப்பார் என்பதை உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்...
2. நல்ல சமாரியர் – உண்மையான அடுத்திருப்பவர் (லூக்கா 10:25-37)
- திருச்சட்ட அறிஞர் “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று கேட்கிறார்.
- இயேசு நல்ல சமாரியரின் உவமையால், உண்மையான அடுத்திருப்பவர் பிறருக்கு இரக்கம் காட்டுபவர் என்பதை வெளிப்படுத்தினார்.
- குருவும், லேவியரும் தேவையில் இருப்பவரை பார்த்தும் புறந்தள்ளினர்; ஆனால் அந்நியராக கருதப்பட்ட சமாரியர் உயிரோடும் மனமோடும் உதவினார்.
இந்த உவமையை நமக்குத் தரும் வாழ்வுக்கான பாடம்: அடுத்திருப்பவர் என்பது என் இரத்த உறவினர் மட்டுமல்ல; தேவையில் இருப்பவர் யாராயினும் அவர்கள் நமக்கு அடுத்திருப்பவர். கிறிஸ்தவ அன்பு எல்லைக்குட்பட்டதல்ல எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்வோம்...
3. தூய புருனோவின் சாட்சியம்
- அதிகாரம், எதிர்ப்பு, அழுத்தம் ஆகியவற்றுக்கு அஞ்சாமல், திரு அவைக்காக நின்றவர்.
- உண்மையை உரக்கச் சொன்ன துணிவாளர்.
- துறவற சபையை நிறுவி, இறை வார்த்தையை பாதுகாத்து, வருங்கால சந்ததிக்காக ஒளி விட்டுச் சென்றார்.
இவரது வாழ்வு நமக்குத் தரும் வாழ்க்கை பாடம்: கிறிஸ்துவுக்காக அஞ்சாமல், துணிவோடும் நேர்மையோடும் வாழ்ந்திட வேண்டும்.
இன்றைய இறை வார்த்தைகள் நம் வாழ்வுக்குத் தரும் அழைப்பு
- யோனா போல் ஓடாமல், கடவுளின் திட்டத்திற்கு கீழ்ப்படிவோம்.
- நல்ல சமாரியர் போல், மதம், இனம், மொழி என பாகுபாடு பார்க்காமல் அன்போடும் இரக்கத்தோடும் வாழ்வோம்.
- புனித புருனோ போல், உண்மைக்காக அஞ்சாமல் துணிவோடு நிற்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக