திங்கள், 30 நவம்பர், 2020

குழந்தைகளாவோம்...(1.12.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
 இன்றைய நாள் வாசகத்தின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 ஒரு சிறுவன் அழுதுகொண்டே இருந்தான். 
டாக்டர் ஏம்பா அழுகிறாய்? என்று கேட்டார்.
 எங்க நாய் செத்துப் போச்சு! என்றான் அந்த சிறுவன். 
உடனே அந்த டாக்டர் அவனிடம் போன வாரம் எங்க தாத்தாவும் செத்துப் போனார் நான் அழுத கிட்டா இருக்கிறேன்? என்றார். 
உடனே அந்த சிறுவன் டாக்டரை பார்த்து, உங்க தாத்தாவை நீங்க குட்டியிலிருந்து பால் கொடுத்து அன்புசெய்து வளர்த்தீர்களா? என்றான். 
டாக்டர் மௌனமானார். 

குழந்தைகளுக்கு எதையும் இயல்பாக வெளிப்படையாக பேசும் தன்மை உண்டு. பல நேரங்களில் குழந்தைகள் தங்கள் அழுகையின் மூலமாக தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள்.குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று எனக் கூறுவார்கள். குழந்தைகளிடமிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளமாக இருக்கின்றன. குழந்தைகள் பலவற்றை நமக்கு போகிற போக்கில் சொல்லி தந்து விட்டுச் செல்கிறார்கள். 

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரின் ஆவி அவர் மேல் தங்கியிருக்கும். ஞானம்,  மெய்யுணர்வு, அறிவுத்திறன் ஆற்றல், நுண் மதி, ஆண்டவரை பற்றிய அச்ச உணர்வு, இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.  இவ்வாறு தூய ஆவியானவர் அருளக்கூடிய கொடைகளை பற்றி நாம் முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்.  ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு தூய ஆவியானவர் வழியாக இத்தகைய கொடைகள் வேண்டுமென ஜெபிக்கக் கூடியவர்களாகத் தான் இருக்கிறோம். தூய ஆவியானவரின் அருள் கொடைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய குழந்தைகள், மிகவும் அன்பாகவும், நீதியோடும் ஏழைகளுக்கு உதவக் கூடியவர்களாகவும் வாழ்கிறார்கள். அவர்கள் அப்படி வாழ்வதற்கு தூய ஆவியானவர் வழங்கிய கொடை, ஒரு காரணமாக இருந்தாலும், அந்தக் கொடையை  அவர்கள் உணரச் செய்வதற்கு பெற்றோர்கள் மிகவும் அவசியமாகிறார்கள்.

 ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாகவே இருக்கிறது. எந்த ஒரு குழந்தையும் தன்னுடைய குடும்பத்தில் இருந்து 60 சதவீதமான அறிவினைப் பெற்றுக் கொள்கிறது என உளவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். 

இன்றைய நாளில் நாம் வாசிக்கின்ற நற்செய்தி வாசகத்தில் கூட, குழந்தைகளை பற்றி பெருமையாக பேசுவதை நாம் வாசிக்க கேட்கலாம். தூய ஆவியால் பேருவகை அடைந்த இயேசு தந்தையே! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே! உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் இதுவே உமது திருவுளம் என்று கூறுகிறார். நாமும் குழந்தைகளைப் போல் இருக்க அழைக்கப்படுகிறோம். 

குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை  இன்றைய முதல் வாசகத்தின் அடிப்படையில்  எசாயா இறைவாக்கினர் உரைப்பதாக உணரலாம். ஓநாய் செம்மறி ஆட்டுக்குட்டியோடு தங்கியிருக்கும்...
குழந்தைகளுக்கு நல்லவர் யார்? தீயவர் யார்? எனத் தெரியாது. காண்போர் அனைவரிடமும் செல்லும். அனைவரிடமும் புன்னகைக்கும்! அனைவருடனும்  ஒட்டிக் கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள்.
 கன்றும் சிங்ககுட்டி கொழுத்த காளையும் கூடிவாழும் பச்சிளம் குழந்தை அவற்றையும் நடத்திச் செல்லும். குழந்தைகளுக்கு விலங்குகளைப் பற்றிய அச்சம்  சிறுவயதில் இருப்பதில்லை குழந்தைகள் விலங்குகளை அன்போடு நோக்குவார்கள்.  விலங்குகள் வலிமையானதாகவும் நச்சுத்தன்மை கொண்டதாக இருந்தாலும், அதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் அதனருகில் செல்வார்கள். அவர்கள் அதனோடு சேர்ந்து விளையாடுவார்கள்.  

பொதுவாக தமிழ் திரைப்பட பாடல் ஒன்று உண்டு,  
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் 
மண்ணில் பிறக்கையிலே!-  அது 
நல்லவராவதும் தீயவராவதும்
பெற்றோரின்  வளர்ப்பினிலே! 

என்ற  பாடல் வரிகள் உண்டு. பெற்றோரை  பொறுத்துதான் ஒரு  குழந்தையின் வளர்ச்சியில் பல மாறுபாடுகள் உருவாகின்றன.  உதாரணமாக
ஒரு சிறு குழந்தை ஒரு மிகப் பெரிய கண்ணாடியை எடுத்து கீழே போட்டு உடைத்து விட்டது.  கோபத்தின் உச்சிக்குச் சென்ற தாய்,  ஓடி வந்து ஏன் இதை போட்டு உடைத்தாய்?  என குழந்தையை கடிந்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு ஒரு உறவினர் வருகிறார்.அவரிடம் குழந்தையை காண்பித்து இந்த குழந்தை இவ்வளவு பெரிய...‌ கண்ணாடி பொருளை எடுத்து கீழே போட்டு உடைத்து விட்டான் என பெருமையாக கூறுகிறார்கள்.  குழந்தை இரண்டையும் கவனிக்கிறது. ஒரு நேரம், கண்ணாடியை உடைத்ததற்காக தாய் திட்டினாள். மறுகனம் உறவினரிடம் கண்ணாடியை உடைத்தது பற்றி, பெருமையாக வியக்கக்கூடிய வகையில் மற்றவரோடு பேசுகிறார். குழந்தை இரண்டையும் பார்க்கிறது குழந்தை தன்னுடைய  வாழ்க்கைக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள்ள முயலுகிறது. எந்த ஒரு குழந்தையும் இந்த மண்ணிலே கெட்ட வார்த்தைகள் பேசுவது இல்லை மாறாக தாங்கள் கேட்ட வார்த்தைகளை தான் பேசுகிறார்கள் என கூறுவார்கள்.

 நமது குழந்தைகள் நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. இந்த குழந்தைகள் கள்ளங்கபடமற்றவர்களாக இருப்பார்கள். பல நேரங்களில் பெற்றோர் தங்கள் சுற்றத்தாரிடம் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகள் காரணமாக,  பலரோடு உறவு கொள்ளாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி விடுகிறார்கள். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு தங்களின் மனப்பான்மையைத் திணிக்கிறார்கள். நீயும் அவர்களோடு உறவு கொள்ளக் கூடாது. அவர்கள் வீட்டிற்குச் செல்லக் கூடாது. பேசக்கூடாது என கூறுகிறார்கள். ஆனால் கள்ளங்கபடமற்ற குழந்தைகள் அவர்களோடு உறவாடுகிறார்கள். அவர்களோடு பேசுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.  குழந்தைகளுக்கு தன்னைத் தீண்டியவர்களை, தன்னை காயப்படுத்தியவர்களை வெறுக்க தெரியாது. காயப்படுத்தினாலும் மீண்டும் அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள். அவர்கள் தங்களை விட்டுச் சென்றால் அழுது புலம்புவார்கள்
குழந்தைகள் ஞான மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள். இந்த குழந்தைகளை போலத்தான் நாம் ஒவ்வொருவரும் இருப்பதற்கு அழைக்கப்படுகிறோம். குழந்தைகளின் மனப்பான்மையை நாம் கொண்டிருந்தால்தான் விண்ணரசில் நுழைய முடியும். 

குழந்தை மனப்பான்மை என்பது எல்லா விஷயத்திலும் குழந்தைத்தனமாக இருப்பதல்ல!  குழந்தைகளிடம் காணப்பட்ட, அன்பு, இரக்கம், பகிர்வது போன்ற பண்புகளை நாம் உள்வாங்கிக் கொள்வது. நம் அனைவரும் குழந்தை பருவத்தில் இருந்துதான் இளமை பருவத்தை நோக்கி செல்கிறோம். அதன்பின் முதுமை பருவத்தை நோக்கிச் செல்கிறோம். முதுமைப் பருவம், இன்னொரு குழந்தை பருவம் எனக் கூறுவார்கள். குழந்தை பருவத்தில் நம்மிடமிருந்த குணங்கள் நம்மிடம் தான் இருக்கின்றன. ஆனால் சூழலுக்கு ஏற்ப நாம் அவற்றை மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 சிறுவயதில் அடிப்பட்டு வலிக்காத போது வலிக்கிறது என கூறி நாம் அழுதோம். இப்போது உண்மையாலுமே வலித்தாலும் வலிக்கவில்லை என கூறிக் கொண்டிருக்கிறோம்.  குழந்தைகளைப் போல இயல்பாக இருப்போம்!   நம்மிடம் இருக்கக்கூடிய அன்பு, நீதி, உண்மை, சகோதரத்துவம், போன்ற பண்புகளை கண்டுகொள்வோம். அத்தகைய பண்புகளோடு நம் அருகாமையில்  இருக்கக்கூடியவர்களை உற்று நோக்குவோம். வாழ்க்கையை அழகாக்கிக் கொள்வோம்.  குழந்தை உள்ளம் கொண்டவர்களாக இன்றைய நாளில் நாம் உருவாகிட உள்ளத்தில் உறுதி ஏற்போம்!  "மற்றவர்கள் பேசுவதை செவிமடுக்க செவிகள் மட்டும் போதாது!  இதயமும் இணைந்து செயல்பட வேண்டும்" என்பார்கள். நமக்குள் இருக்கக்கூடிய குழந்தைத் தன்மையை, குழந்தை மனப்பான்மையை நாம் இதயத்தால் கண்டுகொண்டு செயலாக்க இன்றைய நாளை  தொடங்குவோம்,  இறைவனது அருளோடு!

ஞாயிறு, 29 நவம்பர், 2020

புனித அந்திரேயா பற்றி அறிவோம். (30.11.2020)

புனித அந்திரேயா பற்றி அறிவோம்.

புனித அந்திரேயா
 (அ) புனித பெலவேந்திரர் 

1. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், 

2. இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவர். 

3. இவர் புனித பேதுருவின் சகோதரர். 

4.கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்தவர்.

5. மீன் பிடித்து வந்தார்.

6. திருமுழுக்கு யோவானிடம் சீடராயிருந்தவர்.பின்னர்  இயேசுவோடு சேர்ந்தவர். 

7. இயேசு திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமுழுக்கு யோவான், அவரைச் சுட்டிக்காட்டி, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" என்றார் . உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார். 

8. இயேசுவின் அழைப்புக்கிணங்கி ஓர் இரவும் பகலும் அவரோடு தங்கினார். (யோவா. 1:29-39). மறுநாள் தன் சகோதரன் பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தவர். 

9. கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தவர்.

10.இயேசு அப்பங்களை பலுகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே. 

11. கோவிலின் அழிவை முன்னறிவித்த போது 'அழிவு எப்போது வரும்?' என கேட்டவர் இவரே.

12.தூய ஆவியின் வருகைக்குப் பிறகு கப்பதோசியா, கலாசியா, மாசிதோனியா, பைசண்டைன் பேரரசு மற்றும் பல இடங்களில் மறைபணி புரிந்தவர்.

13.பத்ராஸில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டவர். 

14. சிலுவையைக் கண்டதும், "உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" என்றவர்.

15. பத்ராஸில்  உள்ள ஆலயத்தில் புனித அந்திரேயாவின்  புனித பண்டம் வைக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை உண்டாகும்! (30.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!

  அறிவிப்பதை கேட்டால் தான் நம்பிக்கை உண்டாகும்!

 இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் மீது நாம் கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கை பற்றி புனித பவுல் அடிகளார் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். ஆண்டவரை வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என உள்ளூர நம்பினால் மீட்பு பெறுவீர்கள் என கூறுகிறார்.  அவர் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார் என்பது விவிலியத்தின் கூற்றாக இருப்பினும், அவரை ஏற்றுக்கொண்ட நம்மிடையே யூதர் என்றோ, கிரேக்கர் என்றோ,  வேறுபாடில்லை.  அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களை பொழிகின்றார்.  ஆண்டவரைப் பற்றி அறிக்கையிடுவதை கேட்பதால் நம்பிக்கை உண்டாகிறது என்ற செய்தியை இன்றைய முதல் வாசகம் நமக்கு தருகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர்கள் இருவரைக் கண்டு தன் பணிக்கு  அழைக்கின்றார். அவர்களும் இயேசுவின் குரலை கேட்டதனால், அவர் மீது நம்பிக்கை கொண்டு அவர் பின்னே வருகிறார்கள். அதுபோலவே சற்று தூரம் நடந்து சென்ற பிறகு, மேலும் இரண்டு சகோதரர்களை சந்திக்கிறார். அவர்களையும் இயேசு அழைக்கிறார். இயேசுவின் வார்த்தைகளை கேட்டதனால் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தங்களிடம் இருந்த அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின் சென்றார்கள் என்று செய்தியானது, இன்றைய வாசகங்கள் வழியாக நமக்குத் தரப்படுகிறது.  இந்நேரத்தில் நாம் ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவிப்பதை கேட்கின்றோமா? என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்க நாம் அனைவருமே அழைக்கப்படுகின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தியானது ஒவ்வொரு நாளும் திருப்பலியில் பங்கெடுக்கும் போது அறிவிக்கப்படுகிறது. ஆனால் பல நேரங்களில் திருப்பலியில் பங்கெடுக்கக்கூடிய நாம், இறைவனது வார்த்தைகளுக்கு செவிமடுக்கிறோமா? அந்த வார்த்தைகளின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்கிறோமா? அந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது நம்பிக்கையை ஆழப்படுத்துகிறோமா? அல்லது  கடமைக்கு இறைவார்த்தை வாசிக்கப்படுகிறது, எழுந்து நிற்க வேண்டும். எனவே எழுந்து நின்று விட்டு அமர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றோமா? நமக்குள் நாமே கேள்விகளை எழுப்பி பார்ப்போம். இறைவனது வார்த்தையானது நம்பிக்கையை உருவாக்கக்கூடியது. ஆனால் அதை நாம் கேட்டால் தான் நம்பிக்கை நமக்குள் பிறப்பெடுக்கும். இறைவனது வார்த்தைகள் அறிவிக்கப்படும் போது அதனை, கடமைக்காக, கேட்டும் கேட்காதவர்கள் போல நின்று கொண்டு இருப்போமாயின், அது எத்தகைய மாற்றத்தையும் நமக்கு தராது. வார்த்தைகள் மிகவும் வலிமையானவை என்று கூறுவார்கள்.  வார்த்தைகளால் ஒருவரை குணப்படுத்தவும் முடியும். வார்த்தைகளால் ஒருவரை ரணப்படுத்தவும் முடியும் எனக் கூறுவார்கள். ஆண்டவரின் வார்த்தைகள் நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது. ஆனால் அதை நாம் உணர்ந்து கொள்கின்றோமா? என இன்றைய நாளில் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது அவருடைய வார்த்தைகள் இம்மண்ணில் வாழ்ந்த பலருக்கு ஆறுதலைத் தந்தது.  பலருக்கு நம்பிக்கையை கொடுத்தது. பலரின் துன்பத்திற்கு மருந்தாக அமைந்தது. நாம் இந்த சமூகத்தில் வாழ்கிறோம். இயேசுவின் மதிப்பீடுகளின் படி வாழ வேண்டும் என்று வாழக் கூடியவர்களாக இருக்கிறோம். நமது வார்த்தைகள், யாருக்கு எத்தகைய மாற்றத்தை உருவாக்குகிறது? யாருக்கு  எத்தகைய முறையில் ஆறுதலைத் தருகிறது? யாருக்கு நமது வார்த்தைகள் நம்பிக்கையைத் தருகிறது? என சந்திப்போம்.

 இன்று பெற்றோர்களின் வார்த்தைகளில் பிள்ளைகளுக்கு நம்பிக்கை உருவாவதில்லை. பிள்ளைகளின் வார்த்தைகளில் பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. நமது வார்த்தைகள் நம்பிக்கையின் வார்த்தைகளாக அமைய வேண்டும். நமது வார்த்தைகள் நம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகளாக அமைய வேண்டும். அவ்வாறு அமையும்போது, நாமும் இறைவனது வார்த்தைகளைப் போல,  நம்பிக்கையை விதைக்கும் வார்த்தைகளை ஒவ்வொரு நாளும், நாம் வாழும் சமூகத்தில் உள்ள மக்களோடு பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருப்போம்.

 இன்றைய நாளில் இறை வார்த்தைக்கு கவனத்தோடு செவிகொடுக்கவும் அவ்வார்த்தைகளின் படி வாழ்வை மாற்றிக் கொள்ளவும், அவ்வார்த்தைகளின் அடிப்படையில், நமது நம்பிக்கையை வலுப்படுத்தவும் இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொண்டு செயல்பட  உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

சனி, 28 நவம்பர், 2020

திருவருகைக்கால மெழுகுவத்திகள் (29.11.2020)

திருவருகைக்கால மெழுகுவத்திகள் 
திருவருகைக்கால மெழுகுவத்திகளை ஏற்றும் வழிமுறை 

இறை இயேசுவில் பிரியமானவர்களே ! இன்று திருவருகை காலத்திற்குள் காலடி வைக்கிறோம் . இக்காலம் , இறை மகனின் வருகைக்காக நம்மை தயாரிக்கின்ற காலம் . விழித்திருந்து நம் மீட்பரை சந்திக்க நம்மை அழைக்கின்ற காலம் . இருளின் பிடியில் இருந்தும் , அடிமையின் பிடியில் இருந்தும் , அழிவில் இருந்தும் , துன்பத்தல் இருந்தும் காத்துக்கொள்ள மானிட மகனை சந்திப்பதற்காக அவரை நம் உள்ளத்தில் ஏற்று அவரையே அணிந்து கொள்ள அழைக்கும் அன்பின் காலம் . இஸ்ராயேல் மக்கள் மெசியாவின் வருகைக்காக காத்திருந்தது போல நாமும் காத்திருப்போம் . விளக்குகளுடன் அன்று இயேசு மொழிந்த பத்து தோழியர் உவமையில் அக்கன்னியர் காத்திருந்தனர் . அவர்களை போல நாமும் விளக்குகள் ஏற்றி மணமகனின் வருகைக்காக நம்மையே தயார் செய்வோம் . 



முதல் வாரம் : 

எதிர்நோக்கு இது தான் எதிர்நோக்கின் மெழுகுவத்தி . இது மீட்பரின் வருகைக்காக காத்திருந்த நம் முதுபெரும் தந்தையர்களான - ஆபிரகாம் , ஈசாக்கு , யாக்கோபு ஆகியோரை குறிக்கின்றது . " கவணமாய் இருங்கள் . விழிப்பாய் இருங்கள் ஏனெனில் அந்நேரம் எப்போது வருமென உங்களுக்கு தெரியாது " - மாற்கு 13:33 , ஆண்டவர் நம்மை விழிப்புடன் காத்திருக்கும்படி கேட்கின்றார் . ஆனால் நாமோ உலக கவலைகளிலும் , உலக கவர்ச்சிகளிலும் நம் மனங்களை செலுத்தி வாழ்ந்து வருகிறோம் . இனியாவது " ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கின்றேன் ' என்று கூறி அவரின் வருகைக்காக நம்மையே ஆயத்தப்படுத்துவோம் . 

செபம் : இம்மானுவேலே இயேசு கிறிஸ்துவே ! எல்லா நாடுகளும் எதிர்பார்க்கும் ஆண்டவரே ! அனைத்து மக்களின் மீட்பரே வந்து எங்களிடையே தங்கும் . 


இரண்டாம் வாரம் : 

அமைதி இதுதான் அமைதியின் மெழுகுவத்தி . மீட்பரின் வருகை , வரும் காலம் , அவரின் இயல்புகள் போன்ற அனைத்து செய்திகளையும் தந்த இறைவாக்கினர்களான எசாயா , எரேமியா , தானியேல் போன்றோரை குறிக்கின்றது . " மனம் மாறுங்கள் , ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது " - மத்தேயு 3 : 1 இறைவாக்கினர்கள் அனைவரும் மீட்பரின் வருகைக்காக நாம் எவ்வகை தயாரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்துள்ளனர் . நாம் அனைத்தையும் அறிந்திருந்தும் நம் வலுவின்மையாலும் , விசுவாச குறைவாலும் மீண்டும் மீண்டும் ஆண்டவரை விட்டு விலகி செல்கிறோம் . இனியாவது அவரில் நம்பிக்கை கொண்டு அவரை நாடி தேடுவோம் . 


செபம் : ஓ இயேசு கிறிஸ்துவே அனைத்து உலகங்களின் அரசரே ! எல்லா இதயங்களின் மகிழ்ச்சியே ! விரைவில் வந்து உம் மக்களை மீட்டருளும் . 


மூன்றாம் வாரம் : 

மகிழ்ச்சி இது தான் மகிழ்ச்சியின் மெழுகுவத்தி . இது மீட்பரின் முன்னோடியான புனித திருமுழுக்கு யோவானை குறிக்கின்றது . ' பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது . ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாகுங்கள் ; அவருக்காக பாதையை செம்மையாக்குங்கள் , பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பபடும் ; மலை , குன்று யாவும் தாழ்த்தப்படும் ; கோணலானவை நேராக்கப்படும் ; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும் . மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பை காண்பர் " - லூக்கா : 3 : 4-5 நாம் மீட்பின் காலத்தை நெறுங்கிவிட்டோம் . திருமகன் கிறிஸ்துவை அறச்செயல்கள் நிறைந்த வாழ்வினால் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றோமா ? அவர் வரும்போது அவரது வலப்பக்கம் நிற்கவும் , விண்ணரசை அடையவும் ஏற்புடையவர்களாவோம் . 


செபம் : உலகத்தின் ஒளியே உண்மையின் சுடரே ! இயேசு கிறிஸ்துவே ! வந்து எம்மை தேற்றும் .

நான்காம் வாரம் : 

அன்பு இது அன்பின் மெழுகுவர்த்தி . அன்னை மரியாவையும் அவர் கணவர் புனித யோசேப்பையும் குறிக்கின்றது . அவர் பெரியவராய் இருப்பார் . உன்னத கடவுளின் மகன் எனப்படுவா -லூக்கா 1 1 : 32-33 மீட்பரை சந்திக்க அன்னை மரியாவும் புனித யோசேப்பும் எவ்வாறு ஆயத்தமாய் இருந்தனரோ அவர்களைப்போல் நம்மை மீட்க வந்த பாலகனை வரவேற்க நம்மை தயார்படுத்த இதுவே வாய்ப்பு . அன்னையின் எதிர்நோக்கையும் , புனித யோசேப்பின் நேர்மைத்தனத்தையும் கொண்டு வாழ முயல்வோம் . 


செபம் : உலகை கடந்த ஞானமே ! உண்மை கடவுளின் வார்த்தையே ! இயேசுகிறிஸ்துவே ! வந்து மீட்பின் பாதையை எமக்கு காட்டும்

விழிப்பாய் இருந்திட ...(29.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்று நாம் அனைவரும் திருவருகைக் காலத்தினை துவங்குகிறோம். இன்றைய நாளின் வாசகங்கள் அனைத்தும் நம்மை விழிப்பாய்  இருப்பதற்கு அழைக்கின்றன. விழிப்பாய் இருங்கள் என்ற வார்த்தையை கேட்ட போது உடனடியாக மனதிற்குள் வந்த ஒரு செய்தி, " தனித்திரு! விழித்திரு!" என்ற அரசின் செய்திதான் மனதிற்குள் வந்தது. தனித்திரு! விழித்திரு! என அரசு என்று கூறிக் கொண்டிருக்கிறது. அத்தகையை கூற்றுக்கான காரணம் என்ன  என்று ஆராயும் பொழுது, ஒரு கொடிய நோய்த் தொற்றானது, மக்களிடையே பரவி வருகிறது. இந்த நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டுமாயின் தனித்திருக்க வேண்டும். அதே சமயம் விழிப்போடு இருக்கவேண்டும் என்ற செய்தியினை அரசு அறிவுறுத்துகிறது. ஆனால் இத்தகைய சூழலில் கூட விழிப்போடு இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணி செய்யக்கூடிய மருத்துவர்களையும், துப்புரவு பணியாளர்கள் என பலரையும் நாம் இந்நேரத்தில் நன்றியோடு நினைவு கூற கடமைப்பட்டு இருக்கிறோம். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகங்கள், இன்றைய முதல் வாசகம், இவைகள் அனைத்தும் நமக்கு தரக்கூடிய செய்தி விழிப்பாயிருங்கள். இத்தகைய விழிப்பு என்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என சிந்திக்கும் பொழுது, முதல் வாசகம் தெளிவாக கூறுகிறது, ஆண்டவர் இயேசு கிறிஸ்து எதிர்பாராத நேரத்தில் நம்மை தேடி வருவார் என்ற செய்தியானது வழங்கப்படுகிறது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூட கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன் என புனித பவுல் கூறுகிறார். நாம் அனைவரும் திருவருகைக் காலத்தைத் துவங்குகிறோம். திருவருகைக் காலம் என்பது இயேசுவின் பிறப்பை நினைவூட்டுகிறது. இயேசுவின் பிறப்புக்கு நம்மை தயாரிக்க அழைக்கின்ற காலமாகும். முதல் வாசகம் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையை குறிப்பிடுகிறது.  ஆனால் இன்று திரு அவையானது, இயேசுவின் வருகைக்கு நம்மை நாம் தயாரித்துக் கொள்ள அழைப்பு விடுக்கும் விதமாக கிறிஸ்து பிறப்பு செய்தியை கிறிஸ்து பிறப்பு நாளை கொண்டாடுவதற்கு நம்மை தகுதியான முறையில் தகுதிப்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கிறது. ஆனால் இன்றைய வாசகங்கள் கொடுக்கக்கூடிய விழிப்பாய் இருங்கள் என்ற செய்தியானது, நாம் அனைவரும் நம்முடைய செயல்களில் விழிப்பாய் இருப்பதற்கு அழைப்பு தரக்கூடிய வகையில் அமைகிறது. அதாவது இன்று நாம் வாழக்கூடிய இந்த பரபரப்பான உலகில் ஆண்டவரின் இரண்டாம் வருகையை ஆவலோடு எதிர்பார்க்க கூடிய நாம், இயேசுவின் பிறப்பு விழாவிற்கு நம்மையே நாம் தயாரித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கக்கூடிய நாம் அனைவரும், நம்முடைய செயல்களில் எப்போதும் விழிப்பாய் இருக்க அழைக்கப்படுகிறோம். ஆம். நோய்த்தொற்று காரணமாக தனித்திரு! என அரசு கூறினாலும், தனித்து இருப்பது அவசியம்தான், அதேசமயம் விழிப்போடு இருந்து பாதிக்கப்பட்டவருக்கு நம்மாலான உதவிகளை செய்வதும் கட்டாயமாகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து எதிர்பாராத நேரத்தில் நம்மிடையே வருவார் என்ற செய்தி வழங்கப்படுகிறது. எப்போது வருவார் என தெரியாது. ஆனால் அவர் வரும்பொழுது அவர் நம்மை தேடி வரக் கூடியவராக இருக்கவேண்டும். இயேசுவின் பிறப்பு செய்தி நிகழ்ச்சி நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். பிறக்கப்போவது உலகின் மீட்பர். ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்ற செய்தி அங்கு இருப்பவர்கள் அனைவரும் அறிந்திருந்தால் இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்திருக்க மாட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. நாம் எதிர்பாராத நேரத்தில் இறைவன் நம்மை தேடி வருகிறார். அவர் தேடி வரும் போது நம்முடன் நாம் அவரை ஏற்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.அதற்கு நம்முடைய செயல்கள் எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும். நமது செயல்கள் எப்போதும் நலமானதாகவும் நல்ல செயல்களாகவும் அமைந்திட வேண்டும். நமது செயல்கள் எப்போதுமே பிறருக்கு நலம் தரக்கூடிய செயல்களாக அமைய வேண்டும். அவ்வாறு இருக்கும்போது நாம் இயேசுவை விழிப்போடு இருந்து ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருப்போம். 
ஒரு ஊரிலே ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கனவில் இறைவன் தோன்றி, நாளை உன் வீட்டிற்கு நான் உணவருந்த வருகிறேன் எனக்கூறினார். ஆண்டவரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்த அந்த பணக்காரன், ஆண்டவருக்காக பல வகையான உணவுகளை ஏற்பாடு செய்தான். பல வகையான ஆடைகளை எல்லாம் வாங்கி வைத்திருந்தான். பரிசு பொருட்களோடு ஆண்டவரின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கியிருந்தான். ஆனால் விடியற்காலை ஒரு பிச்சைக்காரன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டான். அந்த பிச்சைகாரனை அவர் அனுப்பி விட்டு, நான் ஆண்டவரின் வருகைக்காக காத்திருக்கிறேன். தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதே எனக் கூறி பிச்சைக்காரனை அனுப்பி வைத்தார்.  மீண்டும் சில மணி நேரம் கழித்து ஒரு ஏழை நபர் வந்தார். கிழிந்த உடையுடன் வந்து  உடை கேட்டார். அவருக்கு உடை தரவும் இவன் விரும்பவில்லை. ஏனென்றால் அவன் ஆண்டவருக்காக உடைகளை வாங்கி இருந்தான்.  இன்னும் சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்தார். அவர், தன்னுடைய நண்பன் பசியால் வாடுகிறான். ஏதாவது உதவி செய்!  என்று கேட்டார். ஆனால் அவனுக்கு உதவி செய்வதற்கும் இவன் இரங்கவில்லை. காரணம்,  வாங்கி வைத்த அனைத்தும் ஆண்டவருக்கானது. அவற்றை ஆண்டவருக்குத் தான் தருவேன் என்ற மனப்பான்மையோடு காத்திருந்தான்.  காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்தவன், கோபமடைந்த வண்ணம் படுக்கைக்கு சென்றான். உறங்கினான். மீண்டும் கனவு வந்தது. அந்தக் கனவில் ஆண்டவர் வந்தார்.  மூன்று முறை உன்னை தேடி வந்தேன். நீ என்னை கவனித்துக் கொள்ளவில்லை. உணவு கேட்டு வந்தேன் உன் வீட்டிற்கு. ஆனால் நீ எனக்கு உணவு தரவில்லை. சரி பரவாயில்லை. ஆடை கேட்டு செல்வோம் என ஆடை கேட்டு வந்தேன். அப்போது நீ எனக்கு ஆடை தரவில்லை. சரி பரவாயில்லை. எனக்குதான் தரவில்லை, மற்றவருக்காவது தருவாயா? என்ற எண்ணத்தோடு இன்னொருவருக்கு உதவி வேண்டுமென உன் வீட்டை நாடி வந்தேன்.  அப்போதும், நீ என்னை ஏற்கவில்லை. எனக்கு எதையும் நீ தரவில்லை என்று கூறினாராம். இந்த செல்வந்தனைப் போலத்தான் நாம் அனைவரும் நாம் இருக்கக் கூடிய இடங்களில், பல நேரங்களில், கடவுளை நாம் இப்படி இருப்பார், அப்படி இருப்பார் என்ற எண்ணத்தோடு நினைத்துக்கொண்டு, கண்ணுக்கு முன்பாக இருக்கக்கூடிய, தேவையில் இருக்கக்கூடியவர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றோம். இத்தகைய நிலையிலிருந்து மாற்றம் பெறவும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவும் அவருக்கு உண்மையான சீடர்களாக மாறிடவும்,  விழிப்போடு இருந்து எந்நேரத்திலும் இறைவனை ஏற்க கூடியவர்களாக நாம் உருவாகிட உருமாறிட விழிப்பாய் இருந்திட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். எனவே நமது செயல்கள் மூலமாக விழிப்பாய் இருந்து இறைவனை கண்டு கொள்ள இந்நேரம் முதல் விழிப்படைய உங்களை அன்புடன் வேண்டுகிறேன். விழித்துக் கொண்டவர்களாக ஆண்டவர் இயேசுவின் வருகைக்கு நம்மை நாம் தயாரித்துக் கொள்ள இந்த திருவருகைக் காலத்தில் அறச்செயல்களை நமது செயல்களாக மாற்றிக் கொண்டு தொடர்ந்து பயணிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன். அனைவருக்கும் நன்றி!

வெள்ளி, 27 நவம்பர், 2020

ஏன் விழிப்பாய் இருக்க வேண்டும்? (28.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளின் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை  உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் நான் விரைவில் வருகிறேன் எனக் கூறுகிறார். ஆண்டவரின் வருகை எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத ஒன்று. ஆனால் இந்த ஆண்டவரின் வருகையை ஆவலோடு அனைவருமே எதிர்பார்க்கிறார்கள். தொடக்க காலத்தில் இந்த ஆண்டவரின் வருகை விரைவாக வரப்போகிறது என்ற எண்ணத்தின் அடிப்படையில் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம் என்றெல்லாம் பலர் இருந்தார்கள். காலப்போக்கில் ஆண்டவரின் வருகை என்பது யாரும் அறியாத வண்ணம் திடீரென வரும் என்று உணர்ந்து கொண்டதன் அடிப்படையில்,  ஆண்டவரின் வருகைக்கு ஏற்ற வகையில் தங்கள் வாழ்க்கையை தயாரித்துக்கொள்ள கூடியவர்களாக மாறிப்போனார்கள். இன்றுவரை அந்த ஆண்டவரின் வருகையை எதிர்நோக்கி தான் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டவரின் வருகைக்கு நாம் விழிப்போடு இருக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட மண்ணுலகில் எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும். அந்நாள் என இங்கு குறிப்பிடப்படுவது ஆண்டவரின் வருகைக்கான நேரத்தை  என பொருள் கொள்ளலாம்.  ஆண்டவரின் வருகையின்போது நீதிமான்கள் நிலைத்திருப்பார்கள். மக்களை அடிமைப்படுத்தியோர்,  அடுத்தவர் உழைப்பை சுரண்டியோர், என அனைவரும் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகுவார்கள் என்ற செய்தியானது இன்றைய வாசகங்கள் வழியாக நமக்கு ஆழமாக தரப்படுகின்றன. 
  ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் விழிப்பாய் இருக்க இறைவன் நம்மை அழைக்கின்றார். ஏன் விழிப்பாய் இருக்க வேண்டும்? எதற்காக விழிப்புடன் செயல்பட வேண்டும்? என்று கேள்விகளை எழுப்பினால், நாம் ஆண்டவரின் வருகைக்காக நம்மை நாம் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். யாரும் அறியாத வண்ணம் இறைவன் இவ்வுலகத்திற்கு வருவார். அப்படியே வரும்போது அவர் நம்மை கண்டு பெருமை கொள்ளக் கூடியவராகவும் நம்மை அவர் தன்னுடைய உரிமைச் சீடன் என்று சொல்லக்கூடியவர்களாகவும் இருக்கக் கூடிய வகையில் நமது செயல்கள் அமைய வேண்டும். எனவே ஆண்டவரின் வருகை எப்போது வரும் என்று தெரியாது. எனவே இம்மண்ணில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நிமிடமும் விழிப்பாய் இருந்து ஒருவர் மற்றவரின் நலனில் அக்கறை காட்டக் கூடிய,  ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யக்கூடிய வகையில் வாழ்வதற்கு இறைவன் நம்மை அழைக்கின்றார். நாம் விழிப்பாக இருப்பது நமக்கு மட்டுமல்ல அனைவருக்கும் நல்லது. ஆண்டவரின் வருகைக்காக என்று மட்டுமல்ல நாம்  விழிப்பாக இருப்பது என்பது எப்போதுமே நல்லது. விழிப்பாய் இருக்கும்போது பல நேரங்களில் நாம் சரியானவைகளை சரியான நேரங்களில் செய்கின்றோம். ஆண்டவர் கூறக்கூடிய விழிப்பாய் இருங்கள்  என்ற செய்தியானது, ஒவ்வொருவருக்குமான வாழ்க்கை பாடமாகும். நாம் வாழக்கூடிய இந்த பரபரப்பான உலகத்தில் அடுத்தவர் நம்மை பார்க்கிறார்கள் என்ற விழிப்போடு இருக்காமல், அடுத்தவர்கள் நம்மை புகழ வேண்டும் என்ற எண்ணத்தோடு, மற்றவர்கள் நம்மை கவனிக்கிறார்கள் என்ற கவனத்தோடு செயல்பட்டு, நல்லவர்கள் போல பிறரிடம் நம்மைக் காட்டிக் கொள்வதை இறைவன் இங்கு குறிப்பிடவில்லை. மாறாக எப்போதும் எந்த நேரத்திலும் மற்றவர்கள் பார்க்கிறார்கள் பார்க்க வேண்டும் என்பதை எல்லாம் பொருட்படுத்தாது, எப்போதும் நன்மை செய்வதிலும், நல்லதை பேசுவதிலும், நாம் இருக்க வேண்டும் என்ற செய்தியை தான் இறைவன் நமக்கு இன்றைய நாளில் உணர்த்துகிறார். விழிப்பாக இருப்போம்! அடுத்தவருக்காக அல்ல, ஆண்டவர் இயேசுவுக்காக!  நாம் விழிப்பாயிருந்து ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்களாகிட உறுதி ஏற்றவர்களாய் தொடர்ந்து பயணிப்போம்!

வியாழன், 26 நவம்பர், 2020

இறையாட்சி நெருங்கி வந்து விட்டதா? (27.11.2020)

இறையாட்சி நெருங்கி வந்து விட்டதா?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. 

 பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்.
        
           சபை உரையாளர் 3 : 1,2.

சபை உரையாளர் புத்தகம் மூன்றாம் அதிகாரம் இவ்வாறாகக் கூறுகிறது. இவ்வுலகத்தில் நடக்கக்கூடிய ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு, ஒரு நேரம் உண்டு என அழுத்தமாக கூறப்படுகிறது. இவ்வார்த்தைகளின் அடிப்படையில் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்ட திருவெளிப்பாட்டு நூலிலிருந்து வாசித்த வாசகம் நமக்கு உணர்த்தக்கூடிய பாடம், ஒரு அரக்கப் பாம்பினை வானதூதர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டி வைக்கின்றார்கள். இந்த அரக்கப் பாம்பு தான் மக்களிடையே குழப்பத்தை உருவாக்குகிறது.  இங்கு அரக்கப் பாம்பு எனப்படுவது,  இச்சமூகத்தில் நிலவக்கூடிய ஒட்டுமொத்த தீமையின் உருவகமாக பொருள் கொள்ளப்படுகிறது. இவ்வுலகத்தில் நிறைந்து இருக்க கூடிய தீமைகள் தான் பல நேரங்களில் நம்மை சுயநலம் கொண்டவர்களாக, அடுத்தவர் நலனில் அக்கறை காட்டாத மனிதர்களாக,  வாழ நம்மை தூண்டக் கூடியதாக அமைந்திருக்கிறது. ஆனால் ஒரு நேரம் வரும். ஒரு காலம் வரும். அப்போது இந்த  ஒட்டுமொத்த தீமையின் உருவகமாக இருக்கக்கூடிய அரக்கப் பாம்பை ஆண்டவர் அடியோடு அழித்து போடுவார் என்ற செய்தியினை இன்றைய முதல் வாசகம் நமக்கு வழங்குகிறது.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் மரத்தினை உவமையாகக் கூறி மரத்திடம் இருந்து காலங்களை அறிந்து கொள்ளுங்கள் என இயேசு நமக்கு உணர்த்துகிறார். தன்னுடைய வார்த்தைகளின் வழியாக இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை இயேசு எடுத்துரைக்கிறார்.  நாம் வாழக்கூடிய இந்த சூழ்நிலையில் உண்மையாலுமே இறையாட்சி நெருங்கி வந்து விட்டதா? என்ற கேள்வியை இன்றைய நாளில் நாம் எழுப்பி பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். இறையாட்சி என்பது அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், இவைகளினால் இவ்வுலகில் மலரக் கூடிய ஒரு மனித நேயம் கொண்ட ஆட்சியாகும். இதுவே இறைவன் விரும்பக் கூடியதாகும். இறைவன் விரும்பும் இந்த ஆட்சியில் மனிதனை மனிதனாக மதிப்போம். மதத்தின் காரணமாகவோ,  மொழியின் காரணமாகவோ, சாதியத்தின் அடிப்படையிலோ, பாலினத்தின் அடிப்படையிலோ, எனக்கு கீழானவன் நீ! உனக்கு மேலானவன் நான்! என்ற எண்ணங்களை எல்லாம் விடுத்து, அனைவரையும் சமமாக, சகோதர, சகோதரிகளாக, இயேசுவைப் போல பார்க்கக்கூடிய மனிதர்களாக, இவ்வுலகத்தில் உள்ளவர்கள் இருக்கவேண்டும். அப்படி இருக்கும் போது தான் அது இறைவனது இறையாட்சியாக உருவாகிறது. இத்தகைய இறையாட்சி இன்று நிலவுகிறதா? என்ற கேள்வியை நாம் அனைவரும் நமக்குளாக எழுப்பி பார்ப்போம். நாம் வாழும் இந்த சூழ்நிலையில், அதிலும் குறிப்பாக இப்போது பரவக்கூடிய  நோய் தொற்று காரணமாக மனிதனை மனிதன்  தொடாமலும்,  ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்,  நோயுற்றான் என தெரிந்தால் அவரிடமிருந்து,  பல அடி தூரம் விலகி நிற்பதும், அவருடைய தேவைகளை நிவர்த்தி செய்ய வழி காட்டாமல் இருப்பதும், அவன் தேவைகளை நிவர்த்தி செய்ய உதவி செய்யாமல் இருக்க கூடிய சூழ்நிலையும் இன்று நிலவிக் கொண்டிருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. ஆனால் மற்றொருபுறம் உண்டு. அங்கு நோயாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். பராமரிக்கப்படுகிறார்கள். அரசும் பல வழிகளில் அவர்களை பாதுகாப்பதற்கும் அவர்கள் நோயிலிருந்து நலம் பெறுவதற்குமான முயற்சியில் ஈடுபடுகிறது. பலர் பல நேரங்களில் அரசு அரசியல் செய்கிறது எனக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அரசு அரசியல் செய்யட்டும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்ற கேள்வி தான் என்று அவசியம். நாம் வாழும் இச்சமூகத்தில் நாளுக்குநாள் மனித நேயம் என்பது மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மனிதனை மனிதன் வெறுக்கக்கூடிய சூழல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மனிதன் மனிதனை மதிக்காமல், தனக்கு கீழானவன் என எண்ணி, கர்வத்தோடு வாழ்ந்த காலங்கள் ஏராளம். அத்தகைய காலங்களில் எல்லாம் நீ  செய்வது தவறு என்று குரல் கொடுத்த பல மனிதர்கள் இன்றும் நம் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இன்றும் நாம் இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி வாழ வேண்டும் என போதிக்கிறோம், அறிவிக்கிறோம்.  ஆனால் நமது செயல்களில் அவைகள் வெளிப்படுகின்றனவா? என்ற கேள்வியை எழுப்பினால், இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது எனக் கூறுவதில் சற்று ஐயம் எழுகிறது.
நாம் வாழும் இந்தச் சூழ்நிலையில், நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும், மதிக்கவும், அவர்களின் தேவைகளை அறிந்தவர்களாய்,  அவர்களை அவர்களின் துயரத்தை துடைக்க கூடியவர்களாய் நாம் உருவாக வேண்டும் என்ற பாடத்தினை ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார். நம் அனைவருக்கும் தெரிந்ததுதான், சென்னை முழுவதும் வெள்ளத்தால் தவித்தபோது பல நல்ல உள்ளங்கள் பல தன்னார்வ தொண்டர்கள் வீதியில் இறங்கி நீரோடு போராடி பலரை மீட்டெடுத்தார்கள்,  பலரை காத்தார்கள் என்ற செய்தியை அறிவோம்.
 இன்றும் அதே நிலைதான் சென்னையில் நிலவுகிறது. மனிதநேயம் என்பது துன்பங்கள் சூழ்ந்து இருக்கும் போது மட்டும் வெளிப்படுவது அல்ல.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருந்து வெளிப்படக் கூடியது. இன்றும் கூட சென்னையில் தானே!  நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற எண்ணத்தோடு வாழக்கூடிய மனிதர்கள் பலர் உண்டு. ஆனால் இன்னும் பல விதமான மனிதர்கள் உண்டு. எங்கோ ஒருவருக்கு துயரம் எனத் தெரிந்தால், அவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும். ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயலில் ஈடுபடக் கூடியவர்கள்.  இன்று நாம் வாழும் உலகத்தில் மனித நேயம் என்பது மண்ணோடு மண்ணாக புதைக்கப்படுகிறது. புதைக்கப்பட வேண்டியது அல்ல மனித நேயம். மனித நேயம் என்பது தலைமேற்கொண்டு மதிக்கப்பட வேண்டிய ஒரு செயல்.  இதனை உணர்ந்தவர்களாக நமது செயல்கள், மனிதநேய செயல்களாக மாறும் போது, இயேசுவின் அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், அனைத்தும் பேசும் பொருளாக அல்லாமல், செயலாக ஒவ்வொருவரிடத்திலும் மாறும்போது, இறையாட்சி கண்டிப்பாக இம்மண்ணில் மலரும். அந்த இறையாட்சி மலர வைக்க வேண்டிய பொறுப்பு மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் உரியது. எங்கிருந்தோ இந்த இறையாட்சி வரும் என எண்ணுவதை விட, இறையாட்சியை உருவாக்கக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். நமது செயல்களால் இறைவனது ஆட்சியை, இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இறைவனின் அழைப்பை உணர்ந்தவர்களாக, வாழ்க்கையில் மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டு, உள்ள மாற்றத்தோடு தொடர்ந்து இறையாட்சியின் விழுமியங்களின்படி நமது வாழ்வை அமைத்துக்கொள்ள, இயேசுவின் பாதையில் பயணமாகுவோம்.

புதன், 25 நவம்பர், 2020

தலை நிமிர்ந்து நிற்போம்! (26.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!

 தலை நிமிர்ந்து நிற்போம்! 

 இன்றைய வாசகங்கள் நமக்கு வழங்கக் கூடிய மையச் செய்தி, தலைநிமிர்ந்து நிற்க கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதாகும். இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோன் மாநகர் வீழ்ந்தது என்ற செய்தியானது வானதூதர்களால் அறிவிக்கப்படுகிறது. பாபிலோன் மாநகர் வீழ்ந்தது என்பதை வரலாற்றுப் பார்வையில், திருவெளிப்பாட்டினை  எழுதிய யோவான் நற்செய்தியாளரின் பார்வையில் பார்க்கும் பொழுது தொடக்க காலத்தில் பாபிலோன் என்பது உரோமைப் பேரரசை குறிப்பதாக அமைந்திருக்கிறது. உரோமைப் பேரரசின் வீழ்ச்சி ஏன் பெரிதாக பேசப்பட்டது என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம். அக்காலத்தில் உரோமைப் பேரரசு பலவிதமான இன்னல்களை கொடுத்துக் கொண்டிருந்தது. மக்களை பல விதங்களில் அது துன்புறுத்திக் கொண்டிருந்தது.  அப்போது ஆட்சி அதிகாரம் கொண்டவர்கள் தங்கள் கடவுளாக வழிபடுமாறு மக்களை  தூண்டினார்கள். சுயமாக  மக்கள் தங்களுடைய கடவுளை வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அரசனையே கடவுளாக ஏற்றுக்கொண்டு அரசனுக்கு சிலைகள் நிறுவி, அரசனுக்கு கோயில்கள் கட்டி, அரசனை வணங்கக் கூடியவர்களாக மட்டுமே மக்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இத்தகைய சூழ்நிலைகளால் இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம் பலவிதமான இன்னல்களைச் சந்தித்தார்கள். எனவே தான் இவ்வாறு மக்களின் மீது கொடுங்கோல் ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த உரோமை பேரரசினை இறைவன் வீழ்த்துவதாக யோவான் காட்சி காண்கின்றார். அக்காட்சியின் அடிப்படையில் அவர் எழுதுகின்றார். உரோமைப் பேரரசு வீழ்ந்தது என வானதூதர்கள் அறிக்கையிட அதனை கேட்டு விண்ணில் இருந்த  உரோமை பேரரசினால் துன்புறுத்தப்பட்டு உயிர்விட்ட ஆன்மாக்கள் அனைத்தும் இணைந்து புகழ்ந்து பாடி கடவுளைப் போற்றும் வண்ணமாக இன்றைய முதல் வாசகம் அமைகிறது. 
இன்றைய நற்செய்தி வாசகத்தைப் பொருத்தவரை நாம் அனைவரும் தலைநிமிர்ந்து நிற்க அழைக்கப்படுகிறோம். ஏனென்றால் பலவிதமான இயற்கை சீற்றங்களால் நாம் அனைவரும் பாதிக்கப்பட இருக்கிறோம் என்ற செய்தியினை நற்செய்தி வாசகத்தின் வழியாக நாம் உணரலாம். அத்தகைய சூழலின் போது நாம் தலைநிமிர்ந்து நிற்க வாசகத்தின் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார். இப்போது நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் கூட, நிவர் புயலின் தாக்கத்தின் காரணமாக பல விதமான முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். நமது அரசும் பல வழிகளில் அதற்காக முயற்சிக்கிறது. மக்களும் தங்களின் வாழ்வாதாரத்தையும் தங்களுடைய உயிரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்று சூழ்நிலையின் காரணமாக பல விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. இயற்கை மாற்றங்கள் எப்போதுமே  மனிதனுக்கு பலவிதமான பாடங்களை உணர்த்துகிறது. மனிதனுக்குள் புதைந்திருக்கக் கூடிய மனித நேயத்தை வெளிப்படுத்துகிறது. இயற்கைக்கு எதிராக மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் சுட்டிக்காட்டுகிறது. உரோமைப் பேரரசு எப்படி மக்களை தங்களுக்கு கீழாக பலரை அடக்கி ஆண்டதோ, அதுபோல இயற்கை நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்ற மமதையோடு பல நேரங்களில் நமது சுயநலத்திற்காக இயற்கையினை பாழ்படுத்திய நேரங்களை நினைவு கூற வைக்கிறது, நடக்கக்கூடிய ஒவ்வொரு இயற்கை பேரிடர்களும்.
 இன்று நிலவக்கூடிய இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட நாம், இன்றைய வாசகங்களின் அடிப்படையில் சிந்திக்கும்போது, இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறப்படுவது போல அந்நாட்களில் கருவுற்று இருப்போர், பாலூட்டுவோர் ஆகியோரின் நிலைமை அந்தோ பரிதாபம் என்ற  என்ற வார்த்தைகள் இன்று நிலவக் கூடிய சூழலை நமக்கு கண் முன்பாக படம்பிடித்துக் காட்டுகிறது.   இயற்கைக்கு எதிரான நம்முடைய செயல்களினால் நாம் இவ்வாறான பலவிதமான துன்பங்களை சந்திக்க வேண்டிய சூழலில் இருக்கின்றோம்.

இச்சூழ்நிலைகளை எல்லாம் சரி செய்துகொண்டு, இயற்கை மாற்றத்தின் போது, இயற்கையின் பேரிடர்கள் நிகழும்போது, நாம் தலைநிமிர்ந்து நின்று மனிதத்தை காக்கவும், மற்ற உயிர்களை காட்டவும் இயற்கையை காக்கவும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தினை இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகின்றார். இன்று நாம் வாழக்கூடிய இந்த  உலகத்தை சற்று திருப்பி பார்ப்போமாயின், ஒரு காலத்தில் நேர்மை தவறாமல் வாழ்ந்தவர்களை பார்த்தோம். ஆனால் இப்போதெல்லாம் நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களை மட்டுமே அதிகம் பார்க்கின்றோம்.  நம்மைச் சுற்றி இயற்கை பேரிடர் நிகழும் போது மட்டும் நம்மிடம் இருக்கக்கூடிய மனிதநேயத்தை வெளிப்படுத்தக்கூடிய மனிதர்களும் இச்சூழலில் உண்டு.   நம்மைச் சுற்றி ஒரு இயற்கை பேரிடர் வரும் பொழுது மட்டுமே இயற்கையை பற்றி எண்ணிப் பார்க்கக் கூடிய மனிதர்களும் உண்டு.  ஆனால் நாம் எப்போதும் இயற்கையை எண்ணி பார்க்க வேண்டும். எப்போதும் நம்மிடம் இருக்கக்கூடிய மனிதநேயத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற செய்தியினை, இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில் மக்களை அடிமைப்படுத்தி தங்களின் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற  மமதையின் காரணமாக மக்களை அடிமைப்படுத்திய உரோமைப் பேரரசு ஒருநாள் வீழ்ந்தது என்ற செய்தியை வாசிக்கிறோம்.  நாமும் நமக்கு உட்பட்டது, நம்முடைய அதிகாரத்திற்கு கீழ் உள்ளது இந்த இயற்கை. எனவே நாம் இதனை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையோடு இருப்போமாயின், நம்முடைய செயல்களை சரிசெய்துகொள்ள இன்றைய வாசகங்கள் வழியாக நமக்கு இறைவன் அழைக்கின்றார். நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் இறைவன் நமக்கு கொடுத்ததன் நோக்கம்,  நாம் அவைகளோடு இணைந்து, அவைகளை வளர்க்கவும், பேணி பாதுகாக்கவும் தான். அவைகள் இன்றி நாமில்லை! இயற்கை இன்றி நாம் இல்லை! எனவே இந்த மகத்துவத்தையும் உணர்ந்தவர்களாக இறைவனின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கக் கூடியவர்களாக நாம் அனைவரும்,  நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இயற்கை பேரிடர்களை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இயற்கையை நேசிக்கவும்,  இயற்கையை அன்பு செய்யவும், இயற்கையை பராமரிக்கவும், பாதுகாக்கவும், அவைகளோடு இணைந்து அவைகளையும் மதித்து வாழ அழைக்கப்படுகிறோம். இயேசுவின் இந்த அழைப்பை உணர்ந்தவர்களாக, நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை காக்கக் கூடியவர்களாக, இயற்கையை காக்க கூடிய மனநிலை கொண்டவர்களாக, தலை நிமிர்ந்து நிற்போம், இறைவனின் உண்மை சீடர்களாக!

செவ்வாய், 24 நவம்பர், 2020

தலை நிமிர்ந்து நில்லுங்கள்... மகேந்திர சிங் தோனி

தலை நிமிர்ந்து நில்லுங்கள்.
கிரிக்கெட் இரசிகர்களால் ‘Cool Captain’ என அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியிடம் செய்தியாளர் ஒருவர், “கிரிக்கெட் விளையாட்டில் அழுத்தமும் பதற்றமும் நிறைந்த சூழல்களை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?” என்று கேட்டபொழுது, தோனி அவரிடம் இவ்வாறு பதிலளித்தார்:

“விளையாட்டில் அழுத்தமும் பதற்றமும் ஏற்படுகின்றபொழுது, நான் அவற்றை ஆர்வமுடன் எதிர்கொள்வேன். அது எனக்குக் கூடுதல் பொறுப்பு என்று பார்த்தால், கை கால்கள் உதறும்; சவாலான, பதற்றமான சூழல்கள் என்பவை, என் விளையாட்டு அணிக்கும், என் நாட்டிற்கும் முன்னால் நான் கதாநாயகனாக உயர்வதற்கு எனக்குத் தரப்படும் வாய்ப்புகள். அதனால் நான் அவற்றை ஆர்வமுடன் எதிர்கொள்வேன்.”

தோனியின் இவ்வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தால், அவரை ஏன் எல்லாரும் ‘Cool Captain’ என்று சொல்கின்றார்கள் என்பது நமக்குப் புரிந்துவிடும். ஆம், கிரிக்கெட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, சவால்களும் பிரச்சனைகளும் நமக்கு வருகின்றபொழுது, அவற்றைக் கண்டு பதற்றமடையக்கூடாது; மாறாக நாம் அவற்றைத் துணிவோடு எதிர்கொள்ளவேண்டும். நாம் நமக்கு வருகின்ற துன்பங்களையும் சவால்களையும் துணிவோடு எதிர்கொண்டால், நம்மால் ஒருநாள் சாதனையாளர்களாக, கதாநாயகர்களாக உயர முடியும் என்பது உறுதி.

கல்லறை வாசகம்!...


புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தன் தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை 

"சப்தமிட்டு நடக்காதீர்கள் இங் கேதான் என் அம்மா இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்"

உலகப்பேரழகி #கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்!
"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."

மகா #அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்....
"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."


ஒரு #தொழிலாளியின் கல்லறை வாசகம்....
"இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்."

#அரசியல்வாதியின் கல்லறையில்...
"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது."

ஒரு விலை_மகளின் கல்லறை வாசகம்...
"இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்."

#இவ்வளவு_தானா_வாழ்க்கை❓
ஆம் அதிலென்ன சந்தேகம்.
ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான்.
அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.
நாம் எதை ஆதாரமாக வைத்து நகர்கிறோம்❓
நமது பதவியா?
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது படிப்பா?
நமது வீடா?
நம் முன்னோர்களின் ஆஸ்தியா?
நமது அறிவா?
நமது பிள்ளைகளா?
எது நம்மைக் காப்பாற்றப் போகிறது?
இரத்தம் சுருங்க, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை.
பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.

கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.


ஒரே முறை வாழப்போகிறோம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம்.
நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிரம் மடங்காக....
பிறரை வாழ வைத்து வாழ்வோம்.

*தமிழ் மழை*

*தமிழ் மழை*

ஏன் அடைமழை என்கிறோம்?

அடைமழை = வினைத்தொகை!
☆ அடைத்த மழை
☆ அடைக்கின்ற மழை
☆ அடைக்கும் மழை

விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை = அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!

கனமழை வேறு! அடைமழை வேறு!
தமிழில், 14 வகையான மழை உண்டு!:)

தமிழில், மழை!

1. மழை
2. மாரி
3. தூறல்
4. சாரல்
5. ஆலி
6. சோனை
7. பெயல்
8. புயல்
9. அடை (மழை)
10. கன (மழை)
11. ஆலங்கட்டி
12. ஆழிமழை
13. துளிமழை
14. வருள்மழை

வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!
இயற்கை நுனித்த தமிழ்!

மழ = தமிழில் உரிச்சொல்!
☆ மழ களிறு= இளமையான களிறு
☆ மழவர் = இளைஞர்கள்

அந்த உரிச்சொல் புறத்துப் பிறப்பதே..
மழை எனும் சொல்! மழ + ஐ

இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை எ. காரணப் பெயர்!

மழை வேறு/ மாரி வேறு! 
அறிக தமிழ் நுட்பம்! இயற்கை!

மழை/மாரி ஒன்றா?

☆ மழை= இள மென்மையாக அலைந்து பெய்வது, காற்றாடி போல!
☆ மாரி = சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல!

மார்+இ= மாரி!
தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்!
அதான் மாரி+அம்மன் எ. ஆதிகுடிப் பெண், தெய்வமானாள்!

தமிழ்மொழி, 
பிறமொழி போல் அல்ல! 
வாழ்வியல் மிக்கது!

அட்டகாசம்...! 

இன்னும் கொஞ்சம்...

1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது

2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்..

3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்….

☆ சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு.. (சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)
சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள், மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தை குறிக்கும்….
அதை தவறாக மலையில் பட்டு தெறிக்கும் நீர் என பொருள் கொண்டு விட்டனர் என்று கருதுகிறேன்.
சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்
சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும்... மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்
4. அடைமழை - ஆங்கிலத்தில் Thick என்பார்களே அப்படி இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை..

அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்..
5. கனமழை -  துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்

6. ஆலங்கட்டி மழை - திடீரென வெப்பச்சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை (இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்…. புவி வெப்பமயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்).

7. பனிமழை - பனிதுளிகளே மழை போல பொழிவது. இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்..

8. ஆழி மழை - ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை..

மாரி - காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளசேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது. 
(அதனால்தான் இலக்கியங்களில் ‘மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல் மக்கள் அவதிக்குள்ளாகாமல் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று கேட்பதாக சொல்லப்பட்டிருக்கின்றன.)

துன்பமின்றி இன்பம் இல்லை! (25.11.2020)

துன்பமின்றி இன்பம் இல்லை! 
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளின் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகமானது திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

  இறுதி நாளின் போது மக்களை ஒடுக்கி மக்களை அடக்கி தங்களுக்கு கீழாக நினைத்து அவர்கள் மீது அதிகமான வரிச்சுமையையும் இதர சுமைகளையும் சுமத்திய பல ஆட்சியாளர்களையும், பல அடிமைத்தனத்தை சிரமேற்கொண்டு செயல்பட்ட பலரையும், இறைவன் பயிர்களை அறுவடை செய்வது போல அறுவடை செய்து வெற்றி கண்டார். அவ்வெற்றியின் அடிப்படையில் வானவர் தூதர் அணிகள் அனைவரும் இணைந்து இறைவனுக்கு புகழ் பாடிய நிகழ்வினை இன்றைய முதல் வாசகத்தின் வழியாக நாம் வாசிக்கின்றோம்.


 இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தரக்கூடிய செய்தி என்னவென்று பார்க்கும் பொழுது,  கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன். உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது எனக் கூறுவதற்கு ஏற்ப, நம் ஒவ்வொருவருக்கும் ஞானத்தையும் நாவன்மையையும் கொடுத்திருக்கிறார். ஆனால் அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது குறித்து சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

 கடவுள் கொடுத்த ஞானமும் நாவன்மையும் தீமைக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும் எது மக்களுக்குத் தீயது என சிந்தித்து ஞானத்தோடு அதனை கண்டுகொண்டு, அச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும், அச்செயல்களில்   யாரேனும் ஒருவர் ஈடுபடுகிறார் என்றால் அவர் செய்கின்ற செயல் தவறு எனச் சுட்டிக் காட்டுவதற்கும் தான், இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் ஞானத்தையும் நாவன்மையையும் கொடுத்திருக்கிறார். ஆனால் நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இதனை உணர்ந்து கொள்ளாமல், பல நேரங்களில் நம்முடைய ஞானத்தையும் நாவன்மையையும், ஆட்சியாளர்களுக்கும் அதிகாரம் செய்யக்கூடியவர்களுக்கும் சார்பாக, அவர்களை புகழ்வதிலும், அவர்களை புகழ்ந்து பேசி அதிலிருந்து கிடைக்கக் கூடிய, அவர்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய வெகுமதியில் நமது வாழ்வை நகர்த்தக் கூடியவர்களுமாக இதுவே முன்மதி என சொல்லிக் கொள்ளக் கூடியவர்களுமாக நாம் இருக்கிறோம்.  நாம் செய்கின்ற இத்தவறான செயல்களை நியாயப் படுத்துவதற்கும் இறைவன் கொடுத்த நாவன்மையை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் உண்மையாகவே இயேசுவின் விழுமியங்களின்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாயின் அநீதியை எதிர்த்து குரல் கொடுக்கக் கூடியவர்களாகவும் அநீதச் செயலில் ஈடுபடக்  கூடியவர்களின் செயல்பாடுகளை குற்றம் எனக் கூறி, சுட்டிக் காட்டக் கூடிய உண்மையான இறைவாக்கினர்களாக இருப்போம். அப்படிப்பட்ட இறைவாக்கினர்களாக நாம் இருக்கும்போது, இன்றைய வாசகத்தில் இடம் பெறுவது போல பெற்றோர் சகோதர சகோதரிகள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் நம்மை வெறுப்பார்கள். நாம் இயேசுவின் விழுமியங்களின்படி வாழ்கிறோம் என்பதால், அதன் பொருட்டு எல்லோரும் நம்மை வெறுப்பார்கள். இருப்பினும் இறைவன் கூறுகிறார், நமது தலைமுடி ஒன்று கூட விழவே விழாது என்று. தலை முடி ஒன்று கூட விழவே விழாது என்பது வெறுமனே முடியைக் குறித்தது அல்ல. நீங்கள் செய்யக்கூடிய இந்த நல்ல செயல்களால் நீங்கள் துன்பங்களை சந்திக்கிறீர்களென்றால் அந்த துன்பங்களிலிருந்து இறைவன் உங்களுக்கு ஆறுதலைத் தருவார். அத்துன்பங்கள் வழியாக நீங்கள் இச்சமூகத்தின் நீதி நிலைத்திட, நீதி தழைத்தோங்கிட முயலுகிறீர்கள் என்றால், கடவுள் உங்களை நோக்குகின்றார். உங்கள் துயரங்களை அவர் மாற்றுவார். இறுதி நாளின் போது அவர் உங்களுக்கு வெற்றிவாகையை சூடுவார். அப்போது    நாமும் வானதூதர்களோடு இணைந்து ஆண்டவரைப் புகழ்ந்து  பாடுவோம். இறைவன் கொடுக்கக்கூடிய ஞானத்தையும் நம் நாவன்மையையும் நமது நலனுக்காக பயன்படுத்துவதை விட அடுத்தவரின் நலனுக்காகவும் அநீதி இழைக்கப்படக் கூடிய இடங்களில் அவ்வநீதியை  எதிர்க்க கூடியவர்களாகவும் அநீதச் செயலில் ஈடுபடுபவர்களை சுட்டிக்காட்டி அவர்கள் மனமாற்றம் பெறுவதற்கு, நாம் வழிவகுத்து தரக்கூடிய நல்ல இறைவாக்கினர்களாக உருவாகிட இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார். இம்மண்ணில் உள்ள ஒவ்வொருவருக்கும் இறைவன் அபரிமிதமான ஞானத்தையும் நாவன்மையையும் தந்திருக்கிறார். அதனை உணர்ந்து கொண்டவர்களாக சமூகத்தில் நடக்கும் அவலங்களை எல்லாம் எதிர்க்கவும், சமூகத்தில்  நடக்கக்கூடிய அவலங்களை எல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கக் கூடிய உண்மையான இறைவாக்கினர்களாக இவ்வுலகத்தில் வாழ்ந்து இறைவனை நோக்கி பயணிக்க உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

திங்கள், 23 நவம்பர், 2020

வாழ்க்கைக் கல்வியை கற்பிப்போம்... (23.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாளின் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

இன்றைய முதல் வாசகமானது திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்டது. யோவான் தான் கண்ட காட்சியை குறித்து எழுதி வைக்கிறார். அவர் கண்ட காட்சி இறைவன் இறுதி நாளின்போது நல்லவர்கள் தீயவர்கள் வாழக்கூடிய இவ்வுலகின் மீது ஆட்சி செலுத்துவார். அப்போது நாம் பயிர் அறுவடை செய்வது போல அவரும் நல்லவர்கள் தீயவர்களை பிரித்து அறுவடை செய்து சேர்த்து வைப்பார் என்ற ஒரு கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைகிறது. அறுவடை என்றாலே பொதுவாக பெரும்பாலும் அதில் மகிழ்ச்சியானது புலப்படும். ஆனால் இந்த அறுவடையில் துன்பமும் அழிவும் இருப்பதைக் காண முடிகிறது. 

மனிதனாக மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தெரியும் ஒருநாள் மரணிப்போம் என்பது. அது தெரிந்திருந்தும் இருக்கக்கூடிய நாட்களில் நல்ல விதமான காரியங்களை செய்வதை விடுத்து விட்டு எப்போதும் அடுத்தவரோடு இணைந்து, அடுத்தவர் நலனில் அக்கறை கொள்ளாமல் தங்களுடைய விருப்பப்படி தங்களுடைய எண்ணத்தின் படி மட்டும், தான் என்ற மனப்பான்மை கொண்டவர்களாக வாழ்ந்து வரக்கூடிய இச்சூழ்நிலையில்,  இறைவனுடைய இத்தகைய வார்த்தைகள் நம்முடைய வாழ்வை மீண்டும் ஒருமுறை அலசிப் பார்த்து சரிசெய்து கொண்டு, இறுதி நாள் என்பது எவ்வாறு இருக்கும் என்பது எவருக்கும் தெரியாத வண்ணம் இருக்க, இறுதி நாளை நோக்கி பயணிக்க கூடிய நாம், அதாவது இறப்பை நோக்கி பயணிக்க கூடிய நாம், நமது வாழ்க்கையில் நலமான செயல்களைச் செய்யவும், நல்ல பணிகளை தெரிந்து கொள்ளவும், இது போன்ற வாசகங்கள் வழியாக இறைவன் நம்மிடையே உரையாடுகிறார்.

அதிகாலை நேரம்..
ஆலமரத்தில்..
ஆலவிழுதுகள் அசைய..
அனைவரையும் அழைத்தது..
அந்த குயில்களின்..
குதூகலப் பாட்டு..
ரசிப்பவர்க்கு இதமளிக்கும்..
இதமான பாட்டு!!

 அன்று இந்த பாடல்களை எல்லாம் கேட்டவர்கள் பலர். இன்று குயில்களின் ஓசையில்லாமல் எப்போதும் வாகனங்களின் இரைச்சல் சூழ்ந்து இருக்கக்கூடிய இந்த உலகத்தில் நாம் எதை நிலையானது நல்லது என நாடிச் செல்கிறோம் என சிந்திப்போம்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட கோவிலை பற்றி சிலர் பேசிக் கொண்டிருப்பதை இறைவன் கேட்கின்றார். கவின்மிகு கற்களாலும் நேர்த்தியான பொருட்களாலும் கோவில் அழகுபடுத்தபட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். இயேசு, இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா! ஒரு காலம் வரும். அப்போது கற்கள் ஒன்றின் மீது ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் என்கிறார். நாம் இன்று உலகத்தில் நிலையானது உறுதியானது, இது நமக்கு நல்லது, இது நம்மிடம் மட்டுமே இருக்கவேண்டும் என எண்ணிக் கொண்டு நாம் சேர்த்து வைக்கக் கூடிய அனைத்தும் கண்டிப்பாக ஒரு நாள் அழிந்து போகும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. நாம் சேர்த்து வைக்கக் கூடிய சொத்துக்கள் அனைத்தும் இன்று நம்முடையதாக இருக்கலாம். நாம் மரணிக்கும் போது அது நம்மைச் சார்ந்தவர்கள் உடையதாக மாறிப்போகிறது. நாம் நிலையானது என பற்றிக் கொண்டிருக்கும் எதுவும் நிலையானதல்ல. உங்களுக்கெல்லாம் நினைவில் இருக்கும் என எண்ணுகிறேன். 

காலா என்ற ஒரு திரைப்படம் வந்தது. அந்த திரைப்படத்தில் வில்லனாக வரக்கூடிய நபர் ஒரு கருத்தை கூறுவார். எதை கொண்டு வந்தோம் எடுத்துச் செல்ல! இங்கிருந்து இவ்வுலகத்தை விட்டு பிரிந்து செல்லும் பொழுது எதையும் கொண்டு போக முடியாது என்பது எனக்கு தெரியும்! ஆனால் இருக்கும் வரை ஒரு பிடி நிலமாக இருந்தாலும் அது என்னுடையதாக இருக்க வேண்டும் என்று கூறுவார்.

 இன்று இத்தகைய மன நிலையோடு தான் பல நேரங்களில் நாம் பலவிதமான செல்வங்களை நமக்கு நமக்கு என சேர்த்துக் கொள்ள விரும்புகிறோம். அதிகமான செல்வங்களை சேர்த்துக் கொண்டே செல்வதால், நமது மகிழ்ச்சி கூடும், நிம்மதி கூடும், நம் சந்ததியினர் நலமாக இருப்பார்கள் என நாம் எண்ணுகிறோம். ஆனால் உண்மையில் நலன் என்பது பொருட்களை சேர்த்து வைப்பது அல்ல. இருப்பதை மற்றவரோடு பகிர்ந்து வாழ்வதில்தான் இன்பமானது அமைகிறது. பொதுவாகவே குடும்பங்களில் காணப்படக்கூடிய ஒரு உன்னதமான செயல், தங்களுடைய குழந்தைகளின் நலனுக்காக பெற்றோர்கள் அனைத்தையும் சேர்த்து வைப்பார்கள். குழந்தைகளின் நலனுக்காக அனைத்தையும் சேர்த்து வைப்பதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால், குழந்தைகள் தங்களுக்கு வேண்டியதை அவர்களாக,  சுயமாக சம்பாதித்து கொள்வதற்கான பயிற்சியை தான் நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதை கொடுக்க மறந்து போய்  இன்று அவர்களுக்காக என்று கூறிக்கொண்டு நாம் நம் நிலத்தையும் பொன்னையும் பொருளையும் சேர்த்துக்கொண்டே செல்கிறோம். ஆனால் இவற்றை அவர்களாக சேமிப்பதற்கு, அவர்களாக தேடிப் பெற்றுக் கொள்வதற்கு பயிற்சிகளை நாம் கொடுக்க மறுக்கின்றோம். நம் குழந்தைகள் எப்போதும் நலமாக இருக்கவேண்டும் என எண்ணுவதில் தவறில்லை. நாம் இல்லாத போதும், நாம் இருக்கும் போதும், அவர்கள் சுயமாக அவர்களின் தேவைகளை அவர்களே நிவர்த்தி செய்யக் கூடியவர்களாக இச்சமூகத்தில் உருவாக வேண்டும். அத்தகைய பயிற்சியை நாம் நமது குழந்தைகளுக்கு கொடுக்கவே இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.  

நாம் வாழும் இந்த உலகத்தில் நிலையானது என பலவற்றை எண்ணி, ஏமாந்து விடாமல் இருக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. நாம் நமது குழந்தைகளின் நலனுக்கு எனக்கூறி சேர்த்து வைக்கக் கூடிய செல்வங்களால் அவர்கள் ஏமாந்து போகாமல் அவர்களை பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகளின் வாழ்க்கை நம்மிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் தங்களுடைய வளர்ச்சி நிலையில் 60 சதவீதமான அறிவினை தனது குடும்பத்தில் இருந்துதான் கற்றுக் கொள்கிறது என கூறுவார்கள். நாம் நமது குழந்தைகளுக்கு எத்தகைய கல்வியை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என சிந்திப்போம். நமது குழந்தைகளை எத்தகைய மனப்பான்மையோடு இவ்வுலகத்தில் உருவாக்குகிறோம் என்ற சிந்திப்போம். குழந்தைகளை நல்ல சிந்தனைகளோடு வளர்க்கவே பெற்றோர்களாகிய நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். அதுபோல உறவுகளும் சுற்று இருக்கக்கூடிய உறவுகள் அனைத்தும் தாங்களாக தங்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொள்ளவும், அதனை மற்றவரோடு பகிர்ந்து வாழவும் கற்றுக் கொடுக்க முன்வர வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். நமது சுயநலத்தின் காரணமாக நாம் செய்யக்கூடிய சின்னஞ்சிறு தவறுகள் பெரிய விளைவுகளை சமூகத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அதை இயற்கையை பாழ்படுத்துகிறது. உறவுகளை சிதைக்கிறது. உறவுகள் சிதைந்து போய் இன்று மனிதர்கள், அருகாமையில் இருப்பவர் யார் என அறியாத வண்ணம் வீட்டிற்குள்ளேயே கதவை அடைத்துக்கொண்டு இருக்கக்கூடிய சூழலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாம் இவ்வுலகில் வாழும்போது ஒருவர் மற்றவரோடு உறவுகொண்டு வாழவே அழைக்கப்பட்டிருக்கிறோம். உறவில் வாழவும், உறவில் மகிழவும், இன்றைய நாளில் உறுதி ஏற்போம். 

 நாம் நமது வாழ்க்கையை சரிசெய்துகொண்டு நிலையானது என்பது செல்வங்களை சேர்ப்பதில் அல்ல. இருப்பதை மற்றவரோடு பகிர்வதில் என்ற பாடத்தை நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும், இறுதி நாளை நோக்கி பயணிக்க கூடிய நாம், அதாவது நமது இறப்பினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கக் கூடிய நாம், வாழ்க்கையின் தத்துவங்களை உணர்ந்து இருந்தாலும், அதனை மேலோட்டமாக எண்ணி விட்டு மீண்டும் மீண்டும் அழிவுக்கான செல்வங்களை சேர்த்துக் கொண்டே இருப்பதை விட, நமது குழந்தைகளுக்கு அழியாச் செல்வமாகிய வாழ்க்கைக் கல்வியை கற்றுக் கொடுக்கக் கூடிய நல்ல மனிதர்களாக உருவாகிட இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், வாழ்க்கையில் நல்லவிதமான மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ள,  இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய் தொடர்ந்து பயணிப்போம்.

ஞாயிறு, 22 நவம்பர், 2020

இணையத்தால் இணையும் மனிதம்

 இணையத்தால் இணையும் மனிதம்




உடலால் உங்களோடு இல்லாவிட்டாலும்,

நான் உள்ளத்தால் உங்களுடன் இருக்கிறேன்.

(கொலோசையர்- 2: 5)

தொடக்கமாக....

இது நடக்குமா?..., இது சாத்தியமாகுமா?..., என்னால் இது முடியுமா?..., எதிர்காலம் எப்படியிருக்கும்?... என்றெல்லாம் பல சந்தேகக் கேள்விகளை எழுப்பக்கூடிய சூழலுக்கு மத்தியில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  இன்று கொரோனா தொற்று நோயின் தாக்கம் காரணமாக உறவுகள் எல்லாம் சிதைந்து, மனிதர்கள் அச்ச உணர்வின் காரணமாக ஒருவரை ஒருவர் தொடாமலும், சந்திக்காமலும்,  இன்னொருவரின் வீட்டில் துக்க நிகழ்வு என்று தெரிந்தாலும், அவர்களின் வீட்டிற்குச் செல்லாமல் இருக்கின்ற சூழ்நிலை இன்று நீடித்துக் கொண்டிருக்கிறது.  

தனித்திரு! விழித்திரு! என்கிறது அரசு.  விழித்திருக்கலாம், ஆனால் தனித்தே இருக்க இயலுமா?. தனித்திருந்தால் எப்படி மனித இனம் உறவுகளை வளர்த்துக் கொள்ளும்? என்ற கேள்வி ஆழமாக எல்லோர் உள்ளத்திலும் இன்று எழத் துவங்கி உள்ளது.  

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற நிலைமாறி, தனித்து இருந்தாலே இன்று உயிர் வாழ முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. உடலால் நாம் அனைவரும் தனித்து இருக்கிறோம். ஆனால் உள்ளத்தால் நாம் இணைந்து இருக்க வேண்டும் (கொலோசையர்- 2: 5) என்ற விவிலிய வார்த்தைகளுக்கு ஏற்ப உள்ளதால் நாம் இணைந்திருப்பதற்கு உதவி செய்வதாக இன்று இணையம் திகழ்கிறது.  இன்றைய நாட்களில் அனுதின வேலைகளுக்கும், அலுவலக வேலைகளுக்கும் அடுத்தவரை எதிர்பார்த்தே வாழ்ந்த மனிதர்கள் இன்று இணையம் வழியாக இணையத் துவங்கியுள்ளனர். 

இளைஞர் வளர்ச்சியில் இணையம்:

மனித வாழ்வின் முக்கியமான பருவம் இளமைப் பருவம். இப்பருவம் அளப்பரிய ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாற்றல் பிறப்பிலேயே கொடுக்கப்படுகின்ற ஒர் இலவச கொடை. அறிவியல் பூர்வமாக திட்டமிட்டு  சரியாக தனது நேரத்தையும், உழைப்பையும் பயன்படுத்துகின்ற இளைஞர்கள் வாழ்விலும், சமூகத்திலும் வெற்றி காண்பார்கள்.  இத்தகைய இளைஞர்களுக்கு தங்களின் திறமைகளை உடனடியாக வெளிக்காட்ட உதவும் உடனடி சாதனமாக இணையம் இளையோர் வாழ்வில் இன்று இணைந்துள்ளது.

கிங்ஸ் ஆஃ கிங் (Kings of King)  என்ற ஆங்கிலப்படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியாயிற்று. அதில் இடம் பெற்ற ஒரு காட்சி: நடக்க இயலாத ஒருவரை இயேசு நடக்கச் சொல்கிறார். அவர் தயங்குகிறார், எழுந்து நிற்க தடுமாறுகிறார், நடக்கத் துணிவில்லை, என்னால் நடக்க முடியுமா? என்ற அவநம்பிக்கை அவருக்குள் வேரூன்றி இருந்தது.  இதை பார்த்த இயேசு அவருக்கு சொன்ன வார்த்தை, தம்பி உன்னுடைய நம்பிக்கை, உன் கால்களை விட பலவீனமாக இருக்கிறது. எனவே, உன்னை நீ நம்பு. உன்னால் எழுந்து நடக்க முடியும்.  இவ்வார்த்தைகளால் அவரது உள்ளம் உந்தப்பட்டது. அவ்வளவு தான்! உடனே அவர் துணிந்து எழுந்து நடக்க ஆரம்பித்தார். என்னால் நிற்க முடிகிறது என்ற உணர்வு அவருக்கு நடக்க துணிவு தந்தது. முதலில் சற்றுத் தடுமாறினாலும், பின்னர் சீராக நடக்க ஆரம்பிக்கின்றார். இயேசுவின் செயல்படத் தூண்டுகின்ற வார்த்தைகள் அவரை ஊக்குவித்ததுதான் அவரை நடக்க வைத்தது. இன்று நாம் வாழும் உலகில் சிலரை கொள்கைகள் ஊக்குவிக்கும், சிலரை செய்கைகள் ஊக்குவிக்கும், சிலரை ஆற்றல் நிறைந்த வார்த்தைகள் ஊக்குவிக்கும். அதுப்போலவே இன்று நிலவும் சூழல் குழந்தைகள் முதல் முதியோரகள் வரை அனைவரையும் இணையத்தால் இணைய ஊக்குவிப்பதாக உள்ளது. இன்று பல இளைஞர்கள் நாடுகள் கடந்து இணையத்தால் இணைந்துள்ளனர் என்பது மறுக்கவியலாத உண்மை.

இணையத்தின் இயக்கத்தில் துளிர்விடும் நம்பிக்கை:

இளைஞர்களைப் போல் நம்மால் இணைய வழியில் அனைத்தையும் செய்து விட முடியுமா? என்ற கேள்வி இச்சமூகத்தின் மூத்த குடிமக்களின் உள்ளத்தில் ஆழமாக எழும்பியிருந்த தருணத்திலிருந்து இன்று மாற்றம் பெற்றுள்ளோம். இணையத்தால் 70 வயது என்ன 90 வயதிலும் எட்டிப் பிடிக்கலாம் சிகரத்தை என்பதை இன்று பல மூத்தோர்கள் தங்கள் வாழ்வால் உலகிற்கு வெளிகாட்டுகின்றனர். டிஜிட்டல் இந்தியா, இ-சேவை, எல்லாம் இணையத்தில் என்ற வார்த்தைகள் விளம்பரமாக நமது காதுகளின் அருகே வந்தபோது, இதுவெல்லாம் சாத்தியமா? என்று நகைத்த பலரும், இதுவெல்லாம் நமக்கு ஒத்துவராது என ஒதுங்கிய பலரும், இன்று இணையத்தால் இணைந்திட ஆர்வம் காட்டுகிறார்கள்.

மூத்தவருக்கும், இளைஞர்களுக்கும் இடையே எப்போதும் பல முரண்பாடுகள் காணப்படும். இணையத்தில் மூழ்கி கிடக்கும் இளைஞரை தவறாக பார்த்த சூழல் மாறி, இளையோர் இணையத்தால் இன்று இன்றியமையாத பல சாதனைகளை நிகழ்த்துவதை அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய சூழல் உருவாகி உள்ளது. ஆனால் இன்று இணையம் இருவரையும் இணைக்கும் இணைப்பு பாலமாகியுள்ளது. எப்போதும் அலைபேசியில் இருக்கிறான். அதில் என்னதான் உள்ளதோ? என்று பல சந்தேகங்களை எழுப்பிய பல மூத்தோர், இன்று அலைபேசியை ஆராய்ந்து அறிந்துகொள்ள முயலுகின்றனர். வீட்டிலிருந்து கொண்டே அனைத்தையும் இணையத்தின் வழியாக செய்துகொண்டிருப்பதை கண்டு காலமாற்றத்தை தங்களின் வாழ்வோடு  ஒப்பிட்டு இரசிக்கக்கூடிய தாத்தா பாட்டிகளின் எண்ணிக்கை இன்று ஏராளம். இன்றைய சூழலில் மூத்தோரின் உள்ளத்தில் இணையத்தால் இதயங்களை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை துளிர்விட தொடங்கியுள்ளது என்பதை பல வீடுகளில் என்று காண முடிகிறது.

கல்விகற்க இணையக்கல்வி:

பள்ளிக்கு சென்று பாடம் படித்த நிலையிலிருந்து வீட்டிலிருந்தே கற்கலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. பிள்ளைகளை பள்ளியில் விட்டு விட்டு பெருமளவில் பணம் சம்பாதிக்க நினைத்த பெற்றோர், இன்று பணத்தைவிட பிள்ளையின் பாதுகாப்பே சிறந்தது என உணர்ந்து பிள்ளைகளோடு நேரம் செலவிட தொடங்கியுள்ளனர். வாழ்க்கை கல்வி இணைய வழி கல்வியாக மாறியது போலவே, இறையியல் இணையத்தில் சாத்தியமா? என்ற நிலை மாறி இணையவழியில் இறையியலை கற்பது இன்றியமையாத ஒன்றாகி உள்ளது.  

மனிதர்கள் எப்போதும் ஒருவரோடு ஒருவர் தொடர்பிலேயே இருப்பதற்கு ஆசைப்படுகிறார்கள். ஆனால் அந்த தொடர்பு மறுக்கப்படும் போது அல்லது தூண்டிக்கப்படும் பொது அதனை எதிர்க்கிறார்கள்.  இன்று நிலவும் இச்சூழலில் தொடர்புகளை துண்டிக்க வலியுறுத்தினாலும், தொடர்புகளை இணைக்கும் இணைப்பு பாலமாக இணையம் உள்ளது என்பதில் துளியளவும் ஐயமில்லை.  இன்று நிலவும் இச்சூழ்நிலை உலகத்தின் வேகத்தை உணர்த்துகிறது என்பதை நாம் மறுக்க இயலாது. இச்சூழலில் உலகத்தின் வேகத்திற்கு ஏற்ப நம்மை நாம் வேகப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. வளமான கழனியை விவசாயியின் கையில் கொடுத்தால் நலமான வாழ்வு தரும் நல்லன பல பயிரிட்டு, வாழ்வை மேம்படுத்த வேண்டுவன செய்வார். அதுபோலவே இதுவரை வகுப்பறை கரும்பலகையை பின்பற்றி பாடம் கற்பித்த ஆசிரியர்கள், இன்று பாடம் கற்பிக்க இணையதளத்தை கையில் கொண்டுள்ளனர். நம் ஆசிரியர்கள் கண்டிப்பாக இதை கொண்டு வளமான நல்ல தலைவர்களை உருவாக்குவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சூழலுக்கு ஏற்ற இறையியல் என்னும் அடிப்படையில், நிலவும் சூழலில் சிரமம் பாராமல் இணைய வழியில் இறைபணி செய்திட சரியான திட்டத்தை  தரும் அவையும், திருஅவையின் உறுப்பினர்களும் முன்னெடுப்பது இறையாட்சியின் வளர்ச்சிக்கான பாதை என்பதில் மாற்றுக் கருத்தில்லை . 

இணையத்திலும் கவனம்:

ஒரு சமூகத்தின் அல்லது ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பெரும்பாலும் அந்நாட்டு இளைஞர்களின் தரத்தையும், திறத்தையும் பொருத்தே அமைகிறது. இந்த உண்மையை உணராத இன்றைய இளைஞர்கள் தம்மையே தங்களுக்குள் தொலைத்துவிட்டு வாழ்க்கையில் ஒரு பிடிமானம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சாதிக்கும் திறமை இருந்தும் அதை சோதிக்கும் முயற்சி துளிகூட இல்லை.  இவர்கள் வந்த இடம் தெரியாமல், புரியாமல் வெறுமையாக முகவரி இல்லாத கடிதங்களாக முடங்கிக் கிடக்கிறார்கள். அதுபோலவே பலவிதமான வழிகாட்டலின் உச்சமாக திகழக்கூடிய முதியவரும் முகவரியற்ற கடிதங்களாக இன்று முடங்கி போன சூழலில் இருந்து, இன்று இணைய வழியில் பல இதயங்களோடு இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதை மூத்தோரின் கண்களில் ஒளிரும் மகிழ்ச்சியில் காணமுடிகிறது.

இயன்றதை இணைய வழியில் கற்பிக்கவும், கற்கவும் முயற்சி எடுக்க வேண்டும். இணையத்தில் எப்போதும் இணைந்திருப்பது இயல்பாகவே உடல் நலனை பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே மூத்தோரின் பரிந்துரைகளின்படி நாம் இணையத்தை இடைவிடாது பயன்படுத்தாமல் உடல் நலன் கருதி தேவைக்கு மட்டும் பயன்படுத்த நாம் பழகிக்கொள்ள வேண்டும். 

இணையத்தில் நடக்கும் அனைத்தும் பலரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்தவர்களாக முன்மதியோடு இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டும். இன்று தங்களின் பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் குடும்பத்தின் மீது அக்கறை செலுத்தி குழந்தைகளை பேணி வளர்த்த மூத்தோர் இன்று இணையத்தில் மூழ்கி இருக்கும் இளையோரை இணையத்தில் இணைந்து இருப்பதை விடவும், வீட்டில் உள்ள நபர்களோடு அதிக நேரம் இணைந்து இருக்க ஊக்கப்படுத்த வேண்டியதும், அதை இளைய தலைமுறைக்கு சொல்லித் தரவேண்டிய பொறுப்பும் மூத்தோருக்கு உரியது. 

சான்றோர் எனப்படுபவர்கள் தங்கள் கற்றதை அடுத்தவருக்கு கற்றுத் தருபவர்கள்.  இளைஞர்களும் சான்றோர்களாகத் திகழ இன்றைய சூழல் உதவுகிறது. இக்கால பெரியவர்கள் பலருக்கு இணையம் பற்றிய அறிதலோ புரிதலோ அதிகம் இல்லாத சூழலில் அவர்களுக்கு தாம் கற்றதை கற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இளைஞர்களுக்கு இருக்கிறது.

இளைஞர்கள் தாம் அறிந்த இணைய வழி கல்வியை அடுத்தவருக்கு முழுமையாக எளிமையாக கற்பிக்கவும், கற்றதை பகிரவும் இணையவழி கல்வி உதவிசெய்யும். இணைய வழியில் இயேசுவின் சீடர்களை உருவாக்கிட நாம் நல்ல சீடர்களாக இருந்து அனைவருக்கும் பாதை காட்ட முயல வேண்டும்.  

நிறைவாக...

உளி படாத எந்த கல்லும் சிலை ஆவதில்லை. உழைப்பில்லாத எந்த கனவும் நனவாகுவதில்லை. நம்மால் இணையத்தை கற்றுக்கொள்ள இயலாது என்று மூத்தோர் எண்ணிக் கொண்டிருந்தால் அவர்களால் இணையத்தில் இணையும் கனவில் வெற்றி பெற முடியாது. 80 வயதிலும் இணையத்தை கற்றுக்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையோடு அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அம்முயற்சிகளுக்கு தம்மைத்தாமே தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்டவரே நீர் எங்கே இருக்கின்றீர்? என்று யோவானின் சீடர்கள் கேட்டபோது வந்து பாருங்கள் என்று இயேசு கூறினார். இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பிய எம்மாவூஸ்  சீடர்களும் "எங்களோடு தங்கும் இயேசுவே" என்று வேண்டினார்கள். இயேசுவுடன் பயணித்த போதும், இயேசுவுடன் தங்கிய போதும் தான்;; சீடர்கள் இயேசுவை புரிந்து கொண்டார்கள். இளைஞர்கள் மூழ்கி இருக்கக்கூடிய இணையத்தில் இணையும் போதுதான் மூத்தோர்கள் அதில் இருக்கக்கூடிய நிறை குறைகளை கண்டுகொள்ள முடியும். இணையத்தை கற்றுக் கொள்வதோடு இளைஞர்களுக்கு வழிகாட்டவும் முடியும். இது சிரமமான காரியம்தான், இருந்தாலும் இதனை நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பாகவும், பணியாகவும் கருதி இணையத்தை மூத்தோர் கற்றுக் கொண்டு அதில் இருக்கக்கூடிய நிறை குறைகளை உணர்ந்தவர்களாக வருகின்ற தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டும்.

திருத்தந்தை பிரான்சிஸ் 2020 மார்ச் 30ஆம் தேதி தன் சொந்த நாடான அர்ஜென்டினாவில் வாழும் நீதியரசர் முனைவர். ரொபெர்த்தோ  ஆந்தரஸ்  கலார்தோ அவர்களுக்கு தன் கைப்பட எழுதிய கடிதத்தில் இனி நாம் செய்ய வேண்டிய பணிகளை குறித்து சிந்திப்பதும் தயாரிப்பதும் மிக முக்கியம் என குறிப்பிட்டுள்ளார் என்பதை அருட்தந்தை முனைவர். மைக்கில் ராஜ் அவர்கள் தனது அன்பிரக்கம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், நாம் வருங்காலத்திற்கான வளமான பணிகளைச் செய்யவும், சிந்திக்கவும் முயல வேண்டும். மழலை வயதிலும், தள்ளாடும் வயதிலும் இணையத்தின் வேகத்தை எட்டிப் பிடிக்க முடியும் என்ற எண்ணத்தோடு நாம் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு இணையவழியில் இதயங்களோடு இணைந்திடுவோம். நாம் துணிந்து விட்டால் இமயமும் நமக்கு வழி கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இணையத்தால் இவ்வுலகம் முழுவதையும் இணைத்திட தொடர் முயற்சியை தொடர்ந்திடுவோம்!


அன்புடன் 

சகோ. ஜே. சகாய ராஜ்


கொடுத்து வாழ்வோம்...(23.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு பெண்மணி தன்னுடைய பிழைப்புக்காக வைத்திருந்த இரண்டு செப்புக் காசுகளை கடவுளுக்காக கொடுத்ததை புகழ்ந்து பேசுகிறார். 

இருப்பதில் கொடுப்பவர்கள் பலர். ஆனால் இருப்பதையே கொடுப்பவர்கள் சிலர் மட்டுமே. 

இருப்பதில் கொடுப்பது என்பது அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய செயலாக இருக்கிறது. நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன், என்னுடைய உறவுகள் எனக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள். 

சிறு வயது முதலே யாரேனும் ஒருவர் யாசகம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்து நின்றால் கையில் சில தொகையினை கொடுத்து அவரிடம் சென்று கொடுங்கள் என்று கூறுவார்கள். சென்று கொடுத்திருக்கிறேன். பல இடங்களில் பார்த்திருக்கிறேன் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கையில் ஒரு சிறு தொகையை கொடுத்து அதை யாசகம் கேட்பவர்களுக்கு கொடுக்கச் சொல்வார்கள். அவர்களும் சென்று கொடுத்துவிட்டு வருவார்கள்.

 பல நேரங்களில் ஆலயத்திற்குச் செல்லும்போது கூட பல பெற்றோர்கள் குழந்தைகள் கையில் ஒரு சிறிய அளவு தொகையை கொடுத்து, இதை உண்டியலில் போடு எனக் கூறுவார்கள். 

காணிக்கையாக கொடுப்பது அனைத்ததையுமே இல்லாத ஒருவருக்கு கடவுளின் பணியாளர்களாக இருக்கக்கூடியவர்கள் அதனை பெற்று கொண்டுபோய் சேர்க்கக்கூடிய பணியை செய்கிறார்கள் என்பது முற்றிலும் யதார்த்தமான உண்மை. 

ஆனால் ஏன் பெற்றோர்கள் குழந்தைகளின் கையில் பணத்தை,  சிறிய அளவு தொகையை கொடுத்து நீ கொண்டு போய்க் கொடுத்து விட்டு வா என சொல்வதும், நீ சென்று உண்டியலில் போடு என சொல்வதும் ஏன்? என்ற கேள்வியை எழுப்பி பார்க்கும் பொழுது, அதில் தான் நம்முடைய பெற்றோரின் வாழ்க்கை பாடத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. 

அடுத்தவனுக்கு உதவி செய்து நம்மிடம் இருப்பதை அவர்களோடு பகிர்ந்து வாழ்வோம் என்ற பாடத்தை, ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செயல்களின் வழியாக வாழ்க்கை பாடத்தை கற்பிக்கிறார்கள். 

பொதுவாகவே அடுத்தவருக்கு நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொண்டு வாழ வேண்டும் என அனைத்து மதங்களும் கூறுகின்றன. நாமும் நமது வாழ்வில் நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழுகிறோம். எதுவுமே இல்லை, இச்சமூகத்தில் இவன் மிகவும் நசுக்கப்பட்ட ஏழை எளியவர் எனச் சொல்ல படக் கூடியவர்வர்களும் அவரிடம் யாரேனும் ஒருவர் யாசகம் என கை நீட்டும் பொழுது அவருக்கு கொடுக்கக்கூடிய ஒரு பண்பினைப் பார்க்க முடிகிறது.  

இருப்பதில் பகிரக் கூடிய மக்களாக நாம் இருக்கிறோம். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன்னிடம் இருப்பதையே பகிர்ந்த ஒரு பெண்மணியை இயேசு சுட்டிக்காட்டி,  அப்பெண்மணியின் ஆழமான நம்பிக்கையை எடுத்துரைக்கிறார். இருப்பதில் பகிரும் போது நம்முடைய தேவைக்கு சில பொருள் நம்மிடம் இருக்கிறது. அதை வைத்து நமது வாழ்வை பார்த்துக் கொள்வோம். ஆனால் இருப்பதையும் பகிரும்போது அடுத்த தேவைக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? என்ற கேள்வியும் எழுகிறது. அக்கேள்விக்கான விடையாக இயேசு கூறுவது, அப்பெண்ணின் நம்பிக்கை. அப்பெண்மணி தன் பிழைப்புக்காக வைத்திருந்த இரண்டு செப்புக் காசையும் போட்டார் என்ற செய்தி அழுத்தம் தரப்படுகிறது. பிழைப்புக்காக வைத்திருந்ததையும் கொடுத்தார். அதன் அடிப்படை நோக்கம், கடவுள் நம்மை பார்த்துக் கொள்வார். நாம் அடுத்தவருக்கு தருகிறோம் கடவுள் நம்மை அடுத்தவர் வழியாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையின் உச்சம் என அதனை பொருள் கொள்ளலாம். நாம் இருப்பதையே பகிரக் கூடியவர்களாக இச்சமூகத்தில் வாழ்கிறோமா? என்ற கேள்வியை எழுப்பினால், பெரும்பாலும் இருப்பதில் இருந்து பகிரக்கூடியவர்களாகத் தான் நாம் இவ்வுலகத்தில் இருப்போம். அதில் எந்தவித தவறும் அல்ல. ஆனால்  இருப்பதிலிருந்து கூட அடுத்தவரோடு பகிராமல், எப்போதும் தான் உண்டு, தன் குடும்பம், தனது உறவுகள் என்ற ஒரு வட்டத்திற்குள் மட்டுமாக நாம் இருந்துகொண்டே இருப்போமாயின், அடுத்தவர் நலனில் அக்கறை கொள்ளாமல், அடுத்தவரின் தேவையை நிவர்த்தி செய்யாமல், நம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிராமல் நாம் வாழ்கிறோம் என்றால், நம் வாழ்வுக்கு அர்த்தம் இல்லை. 

எப்போதும் இருப்பதை அடுத்தவரோடு பகிர்வோம். என்னிடம் கொடுப்பதற்கு  பொருள் இல்லை என பலர் கூறுவார்கள். பகிரப்பட வேண்டியது பொருள் மட்டுமல்ல. அன்பான வார்த்தைகளும்,ஆறுதலாக உடனிருப்பும் தான். நம்மிடம் இருப்பதை நாம் பகிர வேண்டும்.  நாம் பகிர வேண்டும் என்றால் பொருளாதாரம் நம்மிடம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களிடம் நேரம் இருக்கிறது உங்கள் நேரத்தை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை கடவுளோடு செலவிடுங்கள். அதுவே நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய காணிக்கையாக இருக்கிறது.  

இன்று  ஆலயத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. ஆலயத்திற்கு எதற்கு வரவேண்டும்? வீடுகளில் அமர்ந்த வண்ணமே தொலைக்காட்சியில் திருப்பலி பார்த்துக் கொள்ளலாமே!  சில நாட்களாக நாங்கள் அப்படித்தான் இருந்தோம் என்று எதார்த்தமாக கூறக்கூடியவர்கள் இன்று ஏராளம். ஆனால் ஆலயங்கள் எதற்காக உருவாகின?

 பரபரப்பான இவ்வுலகத்தில் ஓடியாடி அழைந்து கொண்டிருக்க கூடிய மனிதன் சற்று அமைதியில் அமர்ந்து தங்களுடைய செயல்பாடுகளை சிந்தித்துப் பார்த்து, தெரிந்தும் தெரியாமலும் தான் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி அவன் தன் வாழ்வை சரிசெய்துகொண்டு, அடுத்தவரை அன்போடு நோக்கவும், அன்போடு தம்மிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து வாழவும் வழி வகுக்க வேண்டும். அப்பாடத்தை ஒவ்வொரு நாளும் அவனுக்கு கற்பிக்க வேண்டும். அப்பாடத்தை அவன் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஆறுதலற்று இருக்கக் கூடியவர் ஆறுதல் பெற வேண்டும். இது போன்ற பல நல்ல காரியங்களுக்கு பிறப்பிடமாக அமைந்திருப்பது தான் ஆலயங்கள். இந்த  ஆலயங்களில் அமர்ந்து ஜெபிப்பது என்பதும்,  தொலைக்காட்சியில் ஒரு திருப்பலியை பார்த்து ஜெபிப்பது என்பதும் எந்த ஒரு காலத்திலும் இணையாகாது. ஆலயத்திற்குச் செல்லும்போது பல  நபர்களை சந்திக்கிறோம். நாம் பெற்றுக்கொண்ட அமைதியை அடுத்தவரோடு பகிர்கிறோம். நம் ஆண்டவர் இயேசுவின் கல்வாரி திருப்பலியில் அவருடைய பாடுகளில் நினைவு கூர்கிறோம். அவரின் பாடுகளில் அவருடைய வாழ்க்கையில் இருந்து,  நமது வாழ்வு காண பாடத்தை கற்றுக்கொண்டுச் செல்கிறோம். 
அன்புக்குரியவர்களே,! இருப்பதை பகிரவும், இருப்பதிலிருந்து பகிரவும் இன்று நாம் அழைக்கப்படுகிறோம். நாம் பகிர்வதற்கு நம்மிடம் பொருள் இல்லை என சாக்குபோக்கு சொல்லுவதை விட்டு விட்டு,  நம்மிடம் இருக்கக்கூடிய ஆறுதலான வார்த்தைகளை,  நம்மிடம் இருக்கக்கூடிய அன்பான செயல்பாடுகளை, நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல பண்புகளை, மற்றவரோடு பகிர்ந்து கொள்வோம். 
இறைவன் இயேசுவோடு நமது நேரத்தை பகிர்ந்து கொள்வோம். அவரோடு உறவாடுவோம் உரையாடுவோம். இருப்பதை முழுமையா நாம் பகிரா விட்டாலும் இருப்பதிலிருந்து பகிர்ந்துகொள்ள இன்றைய நாளில் பாடம் கற்போம்.

இருப்பதையே பகிர்ந்த அந்த பெண்மணியிடம் காணப்பட்ட நம்பிக்கையை நம்முடைய நம்பிக்கைகளாக மாற்றிக் கொண்டு, நமது வாழ்வை இயேசுவின் பாதையில் அழகாக்கிக் கொள்ள இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொள்வோம்! 

தன்னலமில்லாத மனிதரின் நெஞ்சில் கடவுள் இருக்கின்றார். 

நல்ல தர்மம் செய்பவரின் கைகளில் கர்ணன் சிரிக்கின்றான்.

கொடுத்தவன் எல்லாம் சரித்திரத்தோடு சரித்திரமாகின்றான்.

அடுத்தவன் எல்லாம் தெருப்புழு போல கரிப்புகையாகின்றான். 

என்ற நம்ம ஊர் பாட்டுக்காரனின் நயமான வார்த்தைகளின் அடிப்படையில்,  நம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிர முயலுவோம். நமது குடும்பத்தில் நமது குழந்தைகளுக்கு நாம் அப்பண்பினை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடியவர்களாக இருந்தால் தொடர்ந்து அந்த பண்பை கற்றுக் கொடுப்போம். ஒருவேளை நமது குடும்பத்தில் அத்தகைய அடுத்தவருக்கு உதவி செய் என்ற பாடத்தை கற்றுக் கொடுப்பதிலிருந்து நாம் தவறி இருந்தால் இன்றைய நாளில் நமது குழந்தைகளுக்கு அந்த பாடத்தை கற்றுக் கொடுக்க துவங்குவோம். 
ஏனென்றால் மனிதன் என்பவன் ஒருவரோடு ஒருவர் தொடர்போடு இச்சமூகத்தில் வாழுகின்றான்.  நாம் அடுத்தவரோடு இணைந்து வாழவே இவ்வுலகத்தில் படைக்கப்பட்டிருக்கிறோம். தனித்து வாழ அல்ல. எதையும் தனக்கென வைத்துக் கொள்வதைவிட, அடுத்தவருக்கும் அது உரியது என்ற எண்ணத்தோடு இருப்பதை அடுத்தவரோடு பகிர்ந்து அடுத்தவரின் மகிழ்வில் இன்பம் காணக் கூடிய நல்ல மனிதர்களாக உருவாக இறையருளை வேண்டி இணைந்து, இயேசுவின் பாதையில் பயணம் செய்வோம்.

சனி, 21 நவம்பர், 2020

உங்கள் செயல்... உங்களுடைய பதில் (22.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே !
இன்றைய நாளின் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 தலைவர்கள் சிலருக்கு மாலைகள் போட தேதிகள் உண்டு !
சோப்பு போட்டு ஓட்டுகள் வாங்க 
தேர்தல் உண்டு! 
கூட்டணி சேர்ந்து 
பந்துக்கள் நடத்த பிரச்சனைகள் உண்டு! இன்னும் எல்லாமே உண்டு! ஆனால் 
எங்கள் கனவுகள் 
நிஜமாகும் 
நொடிகளை தவிர!!!!!

 புத்தாண்டு சமயத்தில் பத்திரிக்கையில் வந்திருந்த மேற்கண்ட இந்த புதுக்கவிதை வார்த்தைகள் இன்றைய நாட்டு நடப்பை மிகவும் அருமையாக படம்பிடித்து காட்ட கூடிய வகையில் அமைந்திருந்தது. மேல்குடிப் பெரும் தலைவர்களுக்கு எல்லாமே உண்டு. நடுக்குடி பெரும்பான்மையினருக்கு சிலையாவது உண்டு. கீழ்குடி பாமர மக்களுக்கு சாதாரணமானவை கூட, அடிப்படையானது கூட, இல்லை. இது எத்துணை காலத்திற்கு என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம்.  

இன்றைய நாள் வாசகங்கள் ஆண்டவர் இயேசு இறுதி நாளில் நம்மை எவ்வாறு தீர்ப்பிடுவார் என்பதை குறித்து விளக்குகின்றன. 

இன்றைய முதல் வாசகத்தில் ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளை தேடிச் செல்வது போல,  நானும் என் மந்தையை தேடிப் போவேன் என்ற வார்த்தைகைகள் இடம்பெறுகின்றன. நானே என் மந்தையை மேய்த்து இளைப்பாற செய்வேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.  இறுதிநாளில் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு அடையாளம் தெரியாதவர்களாகவும், இவர்களுக்கு யாரும் இல்லை என்ற ஒரு கருத்தை மனதில் கொண்டு, தங்களுடைய வாக்கு வங்கிகளாக மட்டுமே அவர்களை பயன்படுத்திக் கொண்டு, மக்களை அநியாய முறையில் ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியாளர்களையும், மக்களின் அறியாமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கை நடத்தக்கூடிய அத்துணை நபர்களையும் இறைவன் கண்ணோக்குவார். இறுதி நாளில் நசுக்கப்பட்ட தன்னுடைய மக்களை ஆண்டவரே தேடிச் செல்வர் என்ற செய்திகளை இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்குகிறது. 
ஒரு மனிதர் வழியாக சாவு வந்தது போல ஒரு மனிதர் வழியாகவே  இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போல கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர் என்ற வார்த்தைகளின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அரசராக, நடுநிலை அரசராக, உண்மையான நீதிமானாக இருந்து, இறுதி நாளில் இவ்வுலகில் ஒவ்வொருவரும் செய்த செயல்களுக்கு ஏற்ப நம்மை அவர் கண்காணிப்பார் என்ற செய்தியினை இன்றைய இரண்டாம் வாசகமானது நமக்கு எடுத்துரைக்கிறது. இந்த உலகத்தில் நாம் நினைத்தது எல்லாம் செய்து கொள்ளலாம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம். நான் வாழ வேண்டும் என்பதற்காக யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு வாழக்கூடிய அனைவருக்கும் இறுதியில் மரணம் நிச்சயம் என்ற செய்தியானது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் மரணிக்கும் வரை எதுவாக இருந்தாலும் அது நம்முடையதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அடுத்தவரை நசுக்கி, அடுத்தவருடைய உழைப்பை உறிஞ்சி வாழக்கூடிய மனிதர்களுக்கு இயேசு, அரசராக இறுதிநாளில் தீர்ப்பு வழங்க வருவார்.  சாவே கடைசிப் பகைவன். அதுவும் அழிக்கப்படும் என்பது போல, இறந்தால் அவர்கள் செய்தது அனைத்தும் முடிந்துவிடும் என்பது அல்ல. அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் செய்த செயல்களுக்கு ஏற்ப மானிட மகனாகிய இயேசு கிறிஸ்து அவர்களுக்கு நீதித் தீர்ப்பு வழங்குவார் என்ற செய்தியை இன்றைய இரண்டாம் வாசகம்  நமக்கு விளக்குகின்றது. 

 இன்றைய நற்செய்தி வாசகத்தில்
கிறிஸ்து அரசராகிய இயேசு கிறிஸ்து,  அரசராக அமர்ந்திருந்து நீதி வழங்கும் போது, ஏழை எளியோருக்கு செய்த உதவிகளை எல்லாம் அவருக்கு செய்த உதவிகள் எனக்கூறி, நேர்மையாளர் பலரையும் அழைத்து, உதவி செய்த நேர்மையாளர்கள் எல்லாம் சிறப்பு செய்வார். இந்த ஏழை எளிய மக்களை கண்டும் காணாமல், அவர்களின் குரலைக் கேட்டும் கேட்காமல், தங்களின் விருப்பப்படி, தங்களின் நலன் மட்டுமே முக்கியம், தங்களின் சுற்றத்தார் நலன் மட்டுமே முக்கியம், என்ற எண்ணத்தோடு அடுத்தவரை அழித்து, அடுத்தவரின் உழைப்பில் மகிழ்ந்து கொண்டிருந்த, நேர்மையற்ற ஆட்சி செய்த பல தலைவர்களையும்,  ஏழைகளுக்கு உதவ மறுத்த பல மனிதர்களையும், இறைவன் நீதியோடு நீங்கள்  உங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவாதது என்பது,  எனக்கு உதவி செய்யாதது என்பதாகும் என்ற வார்த்தைகளை கூறி, நீங்கள் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இரக்கம் காட்டாத போது எனக்கு இரக்கம் காட்டாமல் இருந்திருக்கிறீர்கள். அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யாத போது, என்னுடைய தேவைகளையும் நீங்கள் நிவர்த்தி செய்ய வில்லை. அவர்களை பசியில் வாட விட்ட போது, என்னையும் நீங்கள் பசியில் வாட விட்டீர்கள். நீங்கள் அவர்களை கவனித்துக் கொள்ளாமை யின் விளைவு, நீங்கள் தண்டனை பெறுவீர்கள் என்ற அடிப்படையில் அவர்களை தண்டிப்பது போன்ற உருவகக் செய்தியை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இருந்து நாம் உணருகிறோம். இறுதி நாள் அது எப்போது வரும் என யாரும் அறியாது இருக்கிறார்கள். இறுதி நாள் எப்போது வரும் என்பது யாரும் அறியாத ஒன்று. ஆனால் மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் மரணிக்க வேண்டும் என்பது நிச்சயம். மரணிக்கக் கூடிய ஒவ்வொருவரும் கண்டிப்பாக இறுதி நாளில் இறைவன் அவர்கள் செய்த செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்குவார் என்பது உண்மை. இவ்வுலகில் பல மதங்கள் இருக்கின்றன. அனைத்து மதங்களும் சுட்டிக்காட்டும் ஒரே செய்தி, நீ செய்கின்ற செயலுக்கு ஏற்ற தண்டனையை இறைவன் உனக்கு தருவார் என்பதாகும். இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நாம் நம்முடைய செயல்கள் எப்படிப்பட்ட செயல்களாக இருக்கின்றன?  அவை அறச் செயல்களா?  அடுத்தவருக்கு நலன் தரக்கூடிய செயல்களா? அடுத்தவர் மீது இரக்கம் காட்டக் கூடிய செயல்களா? சிந்தித்து பாருங்கள்.

 உங்கள் செயல்களை இறுதி நாளில் இறைவன் தனக்கு செய்தது என கூறி உங்களை பாராட்ட கூடிய செயல்களாக இருக்கிறதா? அல்லது நீங்கள் செய்த செயல்களால் என்னை துன்புறுத்தினீர்கள் எனக்கூறி இறைவன் நம்மை தண்டிக்கக் கூடியவராக இருப்பாரா? என்ற கேள்வியை உங்களுக்குள் எழுப்பிப் பாருங்கள்.

 "எந்த ஒரு மாற்றமாக இருந்தாலும் அந்த மாற்றத்தின் முதல் விதையாக நீ இரு"  என்ற காந்தியடிகளின் காந்தியடிகளின் வார்த்தைகளுக்கு ஏற்ப,  இந்த நேரத்தில் நமது செயல்கள் பல நேரங்களில் அடுத்தவருக்கு நலம் தரும் செயலாகவோ, பல நேரங்களில் அடுத்தவர் குரலுக்கு செவி கொடுக்காதவர்களாகவோ, நாம் இருந்திருப்போமாயின், நமது வாழ்வை சரிசெய்துகொள்ள இன்றைய நாளில் இறைவன் நம்மை அழைக்கிறார்.

 இந்த மண்ணின் புனிதையான அன்னை தெரசா அவர்கள், மிகவும் அழகாகக் கூறுவார்,  இந்த உலகத்தில் ஒரு மனிதன் உணவின்றி இறக்கிறான் என்றால், 
கடவுள் அவனை பராமரிக்கவில்லை என்பது அர்த்தம் அல்ல. மாறாக உன்னையும் என்னையும் போன்றவர்கள் அவனைப் பராமரிக்கவில்லை என்பதனால் என்று கூறுவார். இன்றைய நாளில், நமது அறச்செயல்களால்,  நம்முடைய ஆறுதலான வார்த்தைகளால், துன்புறுவோருக்கு ஆறுதலையும்,  தேவையில் இருப்போரின் தேவைகளை நிவர்த்தி செய்ய நம்மிடம் இருப்பதை அவர்களோடு பகிர்ந்து கொண்டு வாழவும், இன்றைய நாளில் உறுதி ஏற்போம் இவ்வாறு நாம் வாழும்போது அரசராகிய இயேசுகிறிஸ்து ஆட்சியுரிமையோடு வரும் பொழுது கண்டிப்பாக நம்மை அவர் இரக்கத்தோடு கண்ணோக்குவார். கடவுளின் இரக்கத்தைப் பெற வேண்டும் என்பதற்காக உதவ வேண்டாம். மனிதனை மனிதன் மதிக்க வேண்டும். மனிதன் ஒவ்வொருவரும் கடவுளின் சாயல். கண்ணால் காணக்கூடிய ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்கக்கூடிய கடவுள் தன்மையை கண்டுகொள்வோம். அந்த கடவுள் தன்மையை, கண்டு கொள்ளக்கூடிய எண்ணத்தோடு, கண்ணில் காணும் மனிதர்களிடம் இருக்கக்கூடிய கடவுள் தன்மையை கண்டுகொள்வோம். 
இறுதிநாளில் நம்முடைய செயல்களால் நாம் அன்று தீர்ப்பிடப்படுவோம். நமது செயல்கள் நமக்கு நல்ல தீர்ப்பைத் தருமா? நமது செயல்கள் இறைவனது இரக்கத்தை நமக்குப் பெற்றுத் தருமா? தராதா? என்ற கேள்வி உங்கள் முன் இருக்கிறது. இக்கேள்விகளுக்கு விடை உங்கள் செயல்களில் தான் அமைந்திருக்கிறது. உங்கள் செயல்களால் உங்களுடைய பதில் எது என்பதை தேர்வு செய்து கொள்ள இன்றைய நாளில் உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...