வெள்ளி, 30 ஏப்ரல், 2021

உழைப்பால் முன்மாதிரிகளாவோம்... (1.5.2021)

உழைப்பால் முன்மாதிரிகளாவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 ஒரு கிராமத்தில் ஒரு சிறுவன் படிப்பில் மிகவும் பின்தங்கி இருந்தான். அவன் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் அவனது தாய் தந்தையர் அவனை அடிக்கடி ஒழுங்காகப் படி,  இல்லையேல் உன்னை நாங்கள் அருட்சகோதரிகள் நடத்தக்கூடிய அல்லது அருட்தந்தையர்கள் நடத்தக்கூடிய ஒரு பள்ளியில் கொண்டு போய் சேர்த்து விடுவோம்.  அப்படி நாங்கள் அங்கு சேர்த்தால் அவர்கள் உன்னை ஒழுங்காக படிக்கவில்லை என்றால், அடித்து உதைத்து தோலை உரித்து தொங்க விட்டுவிடுவார்கள்.  எனவே, ஒழுங்காகப் படி. இல்லையேல் உன்னை நாங்கள் அந்த பள்ளிக்கு மாற்றி விடுவோம் என்று அவ்வப்போது அச்சுறுத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால் சிறுவனோ அவர்கள் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.  அவன் தொடர்ந்து சேட்டைகள் பல செய்வதிலும் விளையாட்டுத்தனமுமாக இருந்தான்.  ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற பெற்றோர், இனி சரிப்பட்டு வராது என்று கருதி, அவனை அரசு பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு போய் ஒரு அருட்சகோதரிகள் நடத்தக்கூடிய ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்.  அந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் எதிர்பாராதவிதமாக முதல் மதிப்பெண் பெற்று வந்தான். பெற்றோருக்கு ஒரே ஆச்சரியம். எப்படி நமது மகன் திடீரென இப்படி மாறினான்? என்ற எண்ணம். அவர்களால் பொறுக்க இயலவில்லை. மகனை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றார்கள். அங்கிருந்த அருள் சகோதரியிடம் நடந்ததையெல்லாம் சொன்னார்கள். அவரும் அமைதியாக அனைத்தையும் கேட்டுவிட்டு,  எல்லாம் அப்படித்தான்! படிக்க ஆரம்பிச்சுருவாங்க! என்று சொல்லி எதார்த்தமாக அனுப்பி வைத்தார். ஆனாலும் அச்சிறுவனின் தாய்க்கு ஐயம் நீங்கவில்லை. மீண்டும் தன் மகனிடம் எப்படி நீ இவ்வளவு மதிப்பெண் பெற்றாய்? என்ற கேள்வியை மீண்டும் எழுப்பிக் கொண்டே இருந்தார். உடனே அந்த சிறுவன் சொன்னான், அம்மா! நீங்கள் தானே சொன்னீர்கள்! ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால் இந்த பள்ளியில் அடித்து உதைத்து தோலை உரித்து தொங்க விட்டுவிடுவார்கள் என்று. பள்ளிக்குச் சென்றதும் முதல் நாள் முதல் வரிசையில் அமர்ந்தேன். நான் அமர்ந்து நேராக கண்களை நோக்கியபோது கரும்பலகையையும் அதற்கு மேல் ஒருவரையும் பார்த்தேன். அங்கு ஒருவனை அடித்து உதைத்து தோலை உரித்து சிலுவையில் அறைந்து தொங்க விட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் முடிவு செய்துகொண்டேன், நீங்கள் பொய் சொல்லவில்லை உண்மையை சொல்லியிருக்கிறீர்கள். நானும் படிக்கவில்லை என்றால் என்னையும் இப்படிதான் தொங்க விட்டுவிடுவார்கள் என்ற ஐயம் தோன்றியது. உடனே படிக்கத் தொடங்கி விட்டேன் என்று கூறினானாம். 
                            இயேசுவின் சிலுவையை குறித்து வேடிக்கையாகவும் யதார்த்தமாகவும் இவ்வாறு சில கற்பனைக் கதைகள் உண்டு.ஆனால் இதோ இங்கு  சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய இயேசு,  ஏதோ குற்றம் செய்ததற்காக தொங்கவிடப்பட்டவரல்ல. சமூகத்தில் மாற்றத்தை நிலைநாட்ட விரும்பியதன் அடிப்படையில் இங்கு இவர் தொங்கவிடப்பட்டார். ஆம்!  மனிதனை மனிதன் தொட மறுத்து, அச்ச உணர்வோடு வாழ்ந்த நேரத்தில் அவனைத் தேடிச் சென்று தொட்டு குணப்படுத்தியவர் இந்த இயேசு கிறிஸ்து. சட்டத்தால் ஒரு மனிதன் நசுக்கப்படும் பொழுது அது தவறு எனச் சுட்டிக் காட்டியவர் இந்த இயேசுகிறிஸ்து. ஆனால் மேலோட்டமான சட்டங்களை பிடித்துக் கொண்டு மனிதத்தை மறந்து வாழும் மனிதர்களிடத்தில் மனிதத்தை விதைத்தவர் இந்த இயேசு கிறிஸ்து.  இது போன்ற செய்கைகளின் காரணமாக இவர் பலரின் சூழ்ச்சியால் இந்நிலைக்கு ஆளானார் என்பது தான் உண்மை.
           இன்றைய நாளில் நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் செயல்பாடுகளையும் உழைப்பாளர் தினம் ஆகிய இன்று உழைப்பாளர் அனைவருக்கும் தந்தையாகிய புனித யோசேப்பின் வாழ்வு நெறிமுறைகள் குறித்தும் சிந்தித்திட அழைக்கப்படுகிறோம்.  

கடவுள் இந்த உலகைப் படைத்த போது ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து மிகவும் அழகாகப் படைத்தார்.  அவர் படைத்த ஒவ்வொன்றும் மிகவும் அழகாயிருந்தது. அது நல்லது எனக் கண்டார் என்று விவிலியத்தில் நாம் வாசிக்கலாம்.

                  இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு படைப்புமே இறைவன் இவ்வுலகை எவ்வளவு அதிகமாக அன்பு செய்தார் என்பதை நமக்கு வெளிக் காட்டிக் கொண்டிருக்கின்றன.  

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே இவ்வுலகத்தில் ஒருவர் மற்றவரின் நலனுக்காக ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வதற்காகவே இருக்கின்றோம். அடுத்தவரின் உதவியோடுதான் அனைத்தும் இங்கு நடக்கிறது.  நாம் குழந்தையாக பிறந்த போது மருத்துவரின் உதவி தேவைப்பட்டது.  குழந்தையாக பிறந்தபின் நாம் வளர்ந்த போது நம்மை வளர்க்க நமது தாய் தந்தையரின் உதவி தேவைப்பட்டது.  நாம் ஆன்மீக காரியங்களில் வளர்வதற்கு அருட்தந்தையர்கள் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், ஞானப் பெற்றோர்கள் என பலரின் வழிகாட்டுதல் தேவைப்பட்டது. கல்வி அறிவைப் பெற்றுக்கொள்ள ஆசிரியரின் உதவி தேவைப்பட்டது. தனக்கென சொல்லிக் கொள்ள நமக்கு காலம் செல்லச் செல்ல செல்ல நமக்கென ஒரு வேளை தேவைப்படும். அந்த வேளையும் அடுத்தவரிடம் இருந்து வரும். காலம் செல்லச்செல்ல நமக்கு என்று சொல்லிக் கொள்ள ஒரு குடும்பம் தேவைப்படுகிறது. எனவே குடும்பத்திற்கு செல்வோம்.ஒரு  குழந்தை  பிறந்தபிறகு நமக்கு எனச் சொல்லிக்கொள்ள நம்மை பராமரித்துக் கொள்ள குடும்பம் தேவைப்படுகிறது.  மரணத்தை நாம் சந்திக்க நேர்ந்தால் கூட நமது உடலை எடுத்து இறுதிச்சடங்கை செய்வதற்கும் அடுத்தவர் உதவி தேவைப்படுகிறது. அடுத்தவருக்கு உதவி செய்வதே வாழ்வின் நோக்கம். இயேசு இந்த உலகில் இருந்த போது அதைச் செய்தார். அதையே நாமும் செய்ய இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசுவுக்கு அவரிடத்தில் காணப்பட்ட அத்தனை நற்பண்புகளையும் உழைப்பதற்கான ஆர்வத்தையும் அவருக்கு ஊட்டியவர் அவரது வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பும் அன்னை மரியாளும் ஆவார். தாயைப் போல பிள்ளை என்று பழமொழி கூறுவார்கள். அவ்வாறே ஆண்டவர் இயேசுவின் பெற்றோர்கள் தங்களிடத்தில் தாம் வளர்த்துக்கொண்ட உழைப்பின் முக்கியத்துவத்தையும் பிறரன்பு செயல்களின் தாராள மனதையும் அனைவரையும் மதிக்கக்கூடிய மனித மாண்பையும், தமக்காக மட்டுமல்லாது இந்த சமுதாய மாற்றத்திற்காக ஏற்றத்திற்காக தன்னை ஒரு கருவியாக்கும் பணியார்வத்தை ஆண்டவர் இயேசுவின் இதயத்தில் சிறுவயதிலிருந்தே ஊட்டி வளர்த்தார்கள்.

இன்றைய இரண்டாம் வாசகம் சொல்லுகிறது நீங்கள் எதை சொன்னாலும் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவை மையப்படுத்திச்
செய்யுங்கள் என்று.  எனவே, இனி வரக்கூடிய நாட்களில் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொன்றிலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்பட வேண்டும் என்பதை மனதில் இருத்துங்கள். 
      ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது நல்லதைச் செய்யுங்கள் என சொல்லுவதை விட, அதைத் தான்  செய்தார். செய்ததையும் சொல்லிக்கொண்டே சென்றார். இயேசு தான் சென்ற இடங்களில் எல்லாம் நன்மையே செய்து செய்தார் என விவிலியத்தில் வாசிக்கிறோம்.  அவர் நன்மைகளை செய்தார். செய்ததைச் சொன்னார்.  ஆண்டவர் இயேசுவின் பெற்றோரான புனித யோசேப்பு மற்றும் அன்னை மரியாளைப் போல நாமும் நமது குழந்தைகளுக்கு முன்மாதிரிகளான வாழ்வை காண்பிக்கும் போது தான் நம்மிடம் இருந்து அவர்கள் அதனை உள்வாங்கிக் கொள்வார்கள் என்பதை உணர்ந்தவர்களாய், நம்மிடம் இருக்கும் உழைப்பின் ஆர்வத்தையும் மேன்மையையும் நாம் வளர்த்துக் கொள்ளவும் அதன் வழியாக ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக வாழ்ந்து அவரது சாட்சிகளாகிட இறையருள் வேண்டி இத்திருப்பலியில் இணைந்து ஜெபிப்போம்.

நற்கருணை அருள்சாதனம் வழியாக இயேசுவை பிரதிபலிப்போம்...(1.5.2021)

இயேசுவை பிரதிபலிப்போம்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 ஒரு கிராமத்தில் ஒரு சிறுவன் படிப்பில் மிகவும் பின்தங்கி இருந்தான். அவன் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் அவனது தாய் தந்தையர் அவனை அடிக்கடி ஒழுங்காகப் படி,  இல்லையேல் உன்னை நாங்கள் அருட்சகோதரிகள் நடத்தக்கூடிய அல்லது அருட்தந்தையர்கள் நடத்தக்கூடிய ஒரு பள்ளியில் கொண்டு போய் சேர்த்து விடுவோம்.  அப்படி நாங்கள் அங்கு சேர்த்தால் அவர்கள் உன்னை ஒழுங்காக படிக்கவில்லை என்றால், அடித்து உதைத்து தோலை உரித்து தொங்க விட்டுவிடுவார்கள்.  எனவே, ஒழுங்காகப் படி. இல்லையேல் உன்னை நாங்கள் அந்த பள்ளிக்கு மாற்றி விடுவோம் என்று அவ்வப்போது அச்சுறுத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால் சிறுவனோ அவர்கள் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.  அவன் தொடர்ந்து சேட்டைகள் பல செய்வதிலும் விளையாட்டுத்தனமுமாக இருந்தான்.  ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற பெற்றோர், இனி சரிப்பட்டு வராது என்று கருதி, அவனை அரசு பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு போய் ஒரு அருட்சகோதரிகள் நடத்தக்கூடிய ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்.  அந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் எதிர்பாராதவிதமாக முதல் மதிப்பெண் பெற்று வந்தான். பெற்றோருக்கு ஒரே ஆச்சரியம். எப்படி நமது மகன் திடீரென இப்படி மாறினான்? என்ற எண்ணம். அவர்களால் பொறுக்க இயலவில்லை. மகனை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றார்கள். அங்கிருந்த அருள் சகோதரியிடம் நடந்ததையெல்லாம் சொன்னார்கள். அவரும் அமைதியாக அனைத்தையும் கேட்டுவிட்டு,  எல்லாம் அப்படித்தான்! படிக்க ஆரம்பிச்சுருவாங்க! என்று சொல்லி எதார்த்தமாக அனுப்பி வைத்தார். ஆனாலும் அச்சிறுவனின் தாய்க்கு ஐயம் நீங்கவில்லை. மீண்டும் தன் மகனிடம் எப்படி நீ இவ்வளவு மதிப்பெண் பெற்றாய்? என்ற கேள்வியை மீண்டும் எழுப்பிக் கொண்டே இருந்தார். உடனே அந்த சிறுவன் சொன்னான், அம்மா! நீங்கள் தானே சொன்னீர்கள்! ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால் இந்த பள்ளியில் அடித்து உதைத்து தோலை உரித்து தொங்க விட்டுவிடுவார்கள் என்று. பள்ளிக்குச் சென்றதும் முதல் நாள் முதல் வரிசையில் அமர்ந்தேன். நான் அமர்ந்து நேராக கண்களை நோக்கியபோது கரும்பலகையையும் அதற்கு மேல் ஒருவரையும் பார்த்தேன். அங்கு ஒருவனை அடித்து உதைத்து தோலை உரித்து சிலுவையில் அறைந்து தொங்க விட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் முடிவு செய்துகொண்டேன், நீங்கள் பொய் சொல்லவில்லை உண்மையை சொல்லியிருக்கிறீர்கள். நானும் படிக்கவில்லை என்றால் என்னையும் இப்படிதான் தொங்க விட்டுவிடுவார்கள் என்ற ஐயம் தோன்றியது. உடனே படிக்கத் தொடங்கி விட்டேன் என்று கூறினானாம். 
                            இயேசுவின் சிலுவையை குறித்து வேடிக்கையாகவும் எதார்த்தமாகவும் இவ்வாறு சில கற்பனைக் கதைகள் உண்டு.ஆனால் இதோ இங்கு  சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கக் கூடிய இயேசு,  ஏதோ குற்றம் செய்ததற்காக தொங்கவிடப்பட்டவரல்ல. சமூகத்தில் மாற்றத்தை நிலைநாட்ட விரும்பியதன் அடிப்படையில் இங்கு இவர் தொங்கவிடப்பட்டார். 
ஆம்!  மனிதனை மனிதன் தொட மறுத்து, அச்ச உணர்வோடு வாழ்ந்த நேரத்தில் அவனைத் தேடிச் சென்று தொட்டு குணப்படுத்தியவர் இந்த இயேசு கிறிஸ்து. சட்டத்தால் ஒரு மனிதன் நசுக்கப்படும் பொழுது அது தவறு எனச் சுட்டிக் காட்டியவர் இந்த இயேசுகிறிஸ்து. ஆனால் மேலோட்டமான சட்டங்களை பிடித்துக் கொண்டு மனிதநேயத்தை மறந்து வாழும் மனிதர்களிடத்தில் மனிதநேயத்தை விதைத்தவர் இந்த இயேசு கிறிஸ்து.  இது போன்ற செய்கைகளின் காரணமாக இவர் பலரின் சூழ்ச்சியால் இந்நிலைக்கு ஆளானார் என்பது நாம் அறிந்த உண்மை.
இந்த இயேசுவின்  திருவுடலையும் திரு இரத்தத்தையும் முதன்முதலாக சுவைக்க இருக்கக்கூடிய இந்த குழந்தைகளுக்காக ஜெபிக்க நாம்  இங்கே கூடியிருக்கிறோம். இவர்களும்  எப்படா அந்த நண்மையை கொடுப்பாங்க? என்ற எதிர்பார்ப்போடும் ஆவலோடும் ஆண்டவர் இயேசுவை முதன்முறையாக தங்களுக்குள் பெறுவதற்கு காத்திருக்கிறார்கள்.  

எனவே இன்றைய நாளில் நாம் நமக்கு தமது  திருவுடலையும் திரு இரத்தத்தையும்  தந்திட்ட இயேசுவை குறித்து சிந்தித்திட அழைக்கப்படுகிறோம்.  

கடவுள் இந்த உலகைப் படைத்த போது ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து மிகவும் அழகாகப் படைத்தார்.  அவர் படைத்த ஒவ்வொன்றும் மிகவும் அழகாயிருந்தது. தாம் படைத்த அனைைத்தையும் நல்லது எனக் கண்டார் என்று விவிலியத்தில் முதல் வாசகம் வழியாக நாம் வாசிக்க கேட்டோம்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு படைப்புமே இறைவன் இவ்வுலகை எவ்வளவு அதிகமாக அன்பு செய்தார் என்பதை நமக்கு வெளிக் காட்டிக் கொண்டிருக்கின்றன.  இன்று முதன்முறையாக இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை, தங்களுக்குள் ஏற்க வந்திருக்கக்கூடிய அன்பு தம்பிகளே! தங்கைகளே! இந்நாளில் நீங்கள் மனதில் இருத்த வேண்டிய செய்தி, இதற்கு முன்பு வரை நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பது தெரியாது. ஆனால் இனி வரக்கூடிய நாட்களில் நீங்கள் உங்கள் வாழ்வில் இயேசுவைப் பிரதிபலிக்க வேண்டும். இயேசுவாக செயல்பட வேண்டும். வெறுமனே நாங்கள் இயேசுவை வணங்குகிறோம்,  இயேசுவின் ஆலயத்திற்குச் சென்றோம், திருப்பலியில் கலந்து கொள்கிறோம் என்று சொல்லக் கூடியவர்களாக இல்லாமல், சொல்லுவதை செயலாக்கப்படுத்தக் கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.  இதற்கு முன்பு வரை ஏனோ தானோ என்று திருப்பலிக்கு வந்திருப்போம். ஆனால் இனி திருப்பலிக்கு வரும்போது ஆண்டவர் இயேசு கிறிஸ்து பெறப் போகிறோம் என்ற உணர்வோடு வர வேண்டும்.  இதற்கு முன்பு வரை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்திருப்போம். ஆனால் இனி வரக்கூடிய நாட்களில் நீங்கள் ஆண்டவர் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்ள விருக்கிறீர்கள்.  எனவே கவனத்தோடு இறைவனது வார்த்தைகளுக்கு செவி கொடுக்க வேண்டும்.  மறையுரை வழியாக சொல்லப்படக்கூடிய கருத்துக்களுக்கு கவனத்தோடு செவி கொடுக்க வேண்டும். 
ஏதேனும் ஒரு நல்ல செயலை தெடர்ந்து செய்ய வேண்டும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே இவ்வுலகத்தில் ஒருவர் மற்றவரின் நலனுக்காக ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வதற்காகவே இருக்கின்றோம். அடுத்தவரின் உதவியோடுதான்இவ்வுலகில் அனைத்தும் இங்கு நடக்கிறது.  

நாம் குழந்தையாக பிறந்த போது மருத்துவரின் உதவி தேவைப்பட்டது. 
பிறந்த குழந்தையாக நாம் வளர்ந்த போது நம்மை வளர்க்க நமது தாய் தந்தையரின் உதவி தேவைப்பட்டது.  
நாம் ஆன்மீக காரியங்களில் வளர்வதற்கு அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் ஞானப் பெற்றோர்கள் என பலரின் வழிகாட்டுதல் தேவைப்பட்டது. 
கல்வி அறிவைப் பெற்றுக்கொள்ள ஆசிரியரின் உதவி தேவைப்பட்டது. 
தனக்கென சொல்லிக் கொள்ள  ஒரு குடும்பம் தேவைப்படுகிறது. எனவே குடும்பத்திற்கு செல்வோம்.
மரணத்தை நாம் சந்திக்க நேர்ந்தால் கூட நமது உடலை எடுத்து இறுதிச்சடங்கை செய்வதற்கும் அடுத்தவர் உதவி தேவைப்படுகிறது. அடுத்தவருக்கு உதவி செய்வதே வாழ்வின் நோக்கம். 

இயேசு இந்த உலகில் இருந்த போது அதைச் செய்தார். அதையே நீங்களும் செய்ய இன்றைய நாளில் அழைக்கப்படுகிறார்கள்.  இயேசுவின் திருவுடலையும் திருஇரத்தத்தையும் பெறப் போகின்ற நீங்கள், இனி உங்கள் வாழ்வில் மாற்றத்தை காண்பிக்கவேண்டும். 

இதையே இன்றைய இரண்டாம் வாசகம் சொல்லுகிறது நீங்கள் எதை சொன்னாலும் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவை மையப்படுத்திச்
செய்யுங்கள் என்று.  எனவே, இனி வரக்கூடிய நாட்களில் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொன்றிலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்பட வேண்டும் என்பதை மனதில் இருத்துங்கள். 

இதற்கு முன்பு வரை நீங்கள் ஜெபித்து இல்லையா?  இனி ஜெபிக்கத் தொடங்குங்கள். 
 இதற்கு முன்பு வரை உங்கள் நண்பர்களோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தீர்களா? இனி சண்டைகளை களைந்துவிட்டு நட்போடு பழகுங்கள். 
இதற்கு முன்பு வரை சரியாக படிக்காமல் இருந்தீர்களா?  இனி சரியாகப் படிக்க முயலுங்கள்.  
இதற்கு முன்பு வரை யாருக்கும் உதவி செய்யாமல் இருந்தீர்களா?  இனி உதவி செய்யத் தொடங்குங்கள். 
 இன்று இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பெறப்போகின்ற நீங்கள் உங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு நற்செயலை மனதில் ஆழமாக பதித்துக் கொண்டு அதனை தொடர்ந்து செய்திட வேண்டும்.

முதல் முறையாக இயேசுவின்  உடலையும் இரத்தத்தையும் பெறக் கூடியவர்கள் இவர்கள். எனவே நமக்கெல்லாம் வேலையில்லை என்று பெரியவர்களாகிய நாம் ஒதுங்கிக் கொள்ளலாகாது. இவர்கள் இன்று இந்தச் சடங்கில் இந்த திருவருள்சாதனத்தின் மூலம் இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பெறுவதில் பங்கெடுக்கிறார்கள் என்றால்,  நாம் இவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். நாம் இவர்களுக்கு முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். 

ஒரு அம்மா சொன்னாங்க என் பையன் எப்ப பார்த்தாலும் கெட்ட வார்த்தையா பேசுரான் பிரதர் என்றார்கள். நம்மில் பலருக்கு இதே கவலை இருக்கத்தான் செய்கிறது.  ஆனால் உண்மையில் குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவது இல்லை. கேட்ட வார்த்தைகளைத் தான் பேசுகிறார்கள். 

ஒரு குழந்தை தனது வாழ்வில் 60 சதவீதமான அறிவை தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் பெற்றுக் கொள்கிறது என உளவியல் அறிஞர்கள்  கூறுகிறார்கள். நம்மிடம் இருந்துதான் குழந்தைகள் அனைத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். 

ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையைத் தாயானவள் மிகவும் அன்பாகவும் அழகாகவும் பராமரித்து வந்தாள்.சிறு குழந்தையாக இருந்த அந்தக் குழந்தை திடீரென ஒரு மிகப்பெரிய கண்ணாடி பாட்டிலை  தூக்க முயற்சித்து அதை கீழே போட்டு உடைத்தது. உடனே தாய் ஓடி வந்தாள். குழந்தையை பார்த்துக் கத்தினாள்.  இதை இனிமேல் எடுப்பியா?   இனிமேல் எடுப்பியா?  இனிமேல் எடுத்தா அடி விழும் அம்மாட்ட என்று கத்தினாள். பிறகு உடைந்த துண்டுகளை எல்லாம் சரி செய்துவிட்டு குழந்தையும் அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தி வைத்துவிட்டுச் சென்றாள். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு  ஒரு விருந்தினர் வந்தார்.  அந்த விருந்தினரிடம் சென்று இந்த குழந்தைக்கு முன்பாகவே  அந்த தாய், இத்துனூன்டா இருக்கிறான்! எவ்வளவு பெரிய பாட்டில்! அதை ஒத்த ஆளா தூக்கி கீழே போட்டு உடைத்து விட்டான், என்று பெருமையாகச் சொன்னார். குழந்தை இரண்டையும் கவனிக்கிறது.  இதே செயலை செய்ததாக சிறிது நேரத்திற்கு முன்பாக திட்டிய தாயானவள் இப்போது அதை வியப்பாகவும் பெருமையாகவும் அடுத்தவரிடம் பேசுகிறார்.குழந்தைக்கு ஒரே குழப்பம் நாம் செய்தது சரிதானா? ஒரு நேரம் நாம் செய்த செயல் தவறு என திட்டி அம்மா இப்போது அதையே வியந்து அடுத்தவரிடம் பாராட்டுகிறார் என்ற எண்ணம் மறுபுறம்.   குழந்தைகள் நாம் செய்கின்ற ஒவ்வொன்றையும் கவனிக்கிறார்கள். நம்மிடம் இருந்துதான் அனைத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். கற்றுக்கொண்டதை அவர்கள் வெளிக் காட்டுகிறார்கள்.  எனவே குழந்தைகளின் வாழ்வு நலமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு நமது வாழ்வு எடுத்துக்காட்டான வாழ்வாக இருக்க வேண்டும்.

       ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது  தான் சென்ற இடங்களில் எல்லாம் நன்மையே செய்தார் என விவிலியத்தில் வாசிக்கிறோம்.  அவர் நன்மைகளை செய்தார். செய்ததைச் சொன்னார்.  நாம் நமது குழந்தைகளுக்கு முன்மாதிரிகளான வாழ்வை காண்பிக்கும் போது தான் நம்மிடம் இருந்து அவர்கள் அதனை உள்வாங்கிக் கொள்வார்கள்.  இன்றைய நாளில் முதல் முறையாக இயேசுவின் திருவுடலையும் திரு இரத்தத்தையும் பெறக்கூடிய இந்த குழந்தைகளுக்காக நாம் ஜெபிப்பதோடு நின்றுவிடாமல் நமது செயல்களில் ஆண்டவர் இயேசுவிடம் காணப்பட்ட நற்பண்புகளை வெளிக்காட்ட முயலுவோம்.  நம்மிடம் இருந்து வெளிப்படும் செயல்களை காணக்கூடிய நமது குழந்தைகள் கண்டிப்பாக அவர்களும் நல்ல மனிதர்களாக இச்சமூகத்தில் வளருவார்கள் மேலும். இன்று நம் நாட்டில் நிலவும் இக்கட்டான சூழலுக்கு மத்தியிலும்  இதுபோன்ற திருவருட்சாதனங்கள்  ஏன் அனைவர் முன்னிலையில் நடக்கிறது என்றால்,  இதுபோன்ற திருவருள்சாதனங்களை பெறும் நிகழ்வு நடக்கும் போதெல்லாம் ஏற்கனவே இதே திருவருள் சாதனத்தை பெற்றுக்கொண்ட நாம் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப வாழுகின்றோமா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிப் பார்த்து நம்மை நாமே சரிசெய்து கொண்டு சரியான பாதையில் பயணப்பட வேண்டும் என்பதற்காகத்தான் திருஅவையில் அனைத்து திருவருள்சாதன நிகழ்வுகளையும் அனைவருக்கும் முன்பாகவே நடத்துகின்றன. 
அன்புக்குரிய பெற்றோர்களே! பெரியோர்களே! இளைஞர்களே! நமது குழந்தைகள் நல்ல குழந்தைகளாக இயேசுவின் மதிப்பீடுகளின் படியும் இயேசுவிடம் காணப்பட்ட நற்பண்புகளின் படியும் இவ்வுலகத்தில் வாழ வேண்டுமென்றால், நாம் நம்முடைய வாழ்வில் இயேசுவைப் பிரதிபலிக்க தொடங்குவோம். நம்மை பார்த்து வளரும் நமது குழந்தைகளும் இயேசுவை பிரதிபலிப்பார்கள். எனவே இந்த திருப்பலியில் முதல் முறை இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் பெறவிருக்கும் நமது குழந்தைகளுக்காக செபிப்போம்.  அதேசமயம் நமது வாழ்வையும் சீர்படுத்துவோம். நாம் இவர்களுக்கு முன்மாதிரிகளாக மாறுவோம் இவர்கள் இவர்களுக்குப் பின் வரக்கூடிய தலைமுறைக்கு முன்மாதிரிகளாக மாறுவார்கள் இதற்கு நாம் அனைவரும் இணைந்து செய்யவேண்டியது நம்மில் இயேசுவைப் பிரதிபலிக்க வேண்டும் .... நாம் ஒவ்வொருவருமே இயேசுவை நமது தனிப்பட்ட வாழ்வில் பிரதிபலிக்க  அருள்வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

வியாழன், 29 ஏப்ரல், 2021

இன்று மீட்பு செய்தி என்பது என்ன? (30.4.2021)

இன்று மீட்பு செய்தி என்பது என்ன?

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்று வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில் நமக்கு தான் மீட்புச் செய்தி தரப்பட்டதாக புனித பேதுரு கூறுகிறார். இன்று எங்கு திரும்பினாலும் மரண ஓலங்களே கேட்கின்றன. நாளுக்குநாள் செய்தித்தாளை திருப்பும் போதெல்லாம்,  இறந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கு கூட ஆள் இல்லாத நிலையில் திண்டாடும் மக்கள். நாளுக்கு நாள் கொரோனா தொற்று காரணமாக பலியாகக் கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இறந்த சடலங்களை எரிப்பதற்கு விறகு பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தியை நாம் செய்தித்தாளில் வாசித்தோம்.  இறந்துபோன மனைவியின் உடலை ஒருவன் சைக்கிளில் வைத்துக்கொண்டு, அடக்கம் செய்ய யாரும் வரவில்லை என்பதற்காக, சைக்கிளில் சுமந்து கொண்டு சென்றான் என்ற செய்தியையும் செய்தித்தாளிலிருந்து நாம் அறியலாம். இறந்து போன தாயின் உடலை மகன்கள் இருவரும்  இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றார்கள் என்ற செய்தியையும் செய்தித்தாள்களும் ஊடகங்களும் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. நிகழக்கூடிய அனைத்துச் சூழல்களையும் பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது நடக்கக் கூடிய அனைத்து சூழல்களும்  நமக்கு நம்பிக்கையை தரவில்லை.  வாழ்வு மீதான அச்சத்தையும் இறப்பு எதார்த்தமாக நடக்கக் கூடியதாகவும், எப்போது இறப்பு யாரை நெருங்கும் என யாரும் அறியாத வண்ணம் நாளுக்கு நாள் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதை நாம் காணமுடிகிறது.  ஒருபுறம் இப்படி இருக்க,  இன்னொருபுறமோ இறந்த சடலங்களை வைத்து அரசியல் நடக்கிறது. இறப்புச் சடங்கை செய்வதற்கு‌ அதிகமான பணம் தேவைப்படுகிறது. இதுபோன்று கொரோனா அவல நிலை  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலையில் இறைவன் நமக்குத் தரும் மீட்புச் செய்தி என எதை நாம் பார்ப்பது? என்ற கேள்வி நம் உள்ளத்தில் எழலாம்.
   ஏனென்றால் மீட்பு செய்தி நமக்கு தரப்பட்டது என்கிறார் பேதுரு. நமக்கு எது மீட்பு செய்தி? நிகழக்கூடிய  அனைத்து சூழ்நிலைகளும் நமக்குத் தருகின்ற செய்தி, "நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்"! என்பதாகும். நிகழக் கூடிய அனைத்து சூழல்களும் இன்று நமக்குக் கற்பிக்கும் பாடம், நமக்குள் இருக்கும் மனித நேயத்தை சாகடித்து விடக் கூடாது என்பதாகும்.  
                           மனிதன் மனிதநேயம் கொண்டவனாக நம்பிக்கையோடு இன்னல்களுக்கு மத்தியில் துணிந்து செயல்பட வேண்டும் என்ற பாடம் தான் இன்று நம் அனைவருக்கும் மீட்புச் செய்தியாக தரப்படுகிறது.  நோய்த்தொற்று அச்சம் காரணமாக, மனிதனுக்குள் இருந்த மனித நேயம் சிறிதுசிறிதாக அழிந்து கொண்டே செல்கின்ற நிலை உருவாகிக்கொண்டே செல்கிறது. இந்நிலை தொடர்ந்தால் மனிதன் மனிதரிடமிருந்து தன்னை ஒதுக்கி கொள்ள முயல்வான்.
இன்றே பலர் அவ்வாறு தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இந்நிலை தொடர்ந்தால் மனிதநேயம் என்பது மறைந்து போகும்.  இக்கட்டான இச்சூழ்நிலையில்  நாம் இறைவன் மீது நம்பிக்கையை ஆழப்படுத்த வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு மனித நேயத்தோடு நம்மாலான சின்னஞ்சிறு உதவிகளை செய்ய வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் இறைவனது  மீட்பு திட்டத்தில் பங்கு பெற முடியும். இன்றைய உலகில் நடக்கும் ஒவ்வொரு சூழலுமே  நமக்கு ஏதோ  ஒரு பாடத்தைக் கற்பிக்கிறது. இன்று நிலவும் சூழலும் நாம் நம்மை, சுய ஆய்வு செய்யவும், நமக்குள் இருக்கும் மனிதநேயத்தை கேள்விக்குட்படுத்தி பார்க்கவும், நமது நம்பிக்கையை ஆழப்படுத்தவும், அழைப்பு தருகின்றன. 

இன்றைய நற்செய்தி வாசகத்திலும்,  இறைவன் உள்ளம் கலங்க வேண்டாம்,  என்ற நம்பிக்கை செய்தியினை தருகிறார்.  இந்த நம்பிக்கை செய்தி என்பது இறைவன், ‌ நாம் அனைத்து விதமான இன்னல்களுக்கு மத்தியிலும்,  அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு இவ்வுலகத்தில் நம்மால் ஆன சின்னஞ்சிறு உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்து வழிகாட்டக் கூடியவர்களாக இருக்கவேண்டும் என்ற செய்தியினை தருகிறது. ஏனென்றால் இறைவன் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக அவர் நமக்கு வழி காட்டுவேன் என்கிறார்.  நமக்கான வழியை தயார் செய்கிறேன் என்கிறார். அவரைப் பின்பற்றி வர நம்மை அழைக்கிறார். இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது நோயாளிகளைக் கண்டு  ஒதுங்கி நிற்க வில்லை. அவர்களைத் தேடிச் சென்றார். தன்னால் ஆன உதவியைச் செய்தார். அவர்களைத் தொட்டு சுகப்படுத்தினார்.  

 நமது தொடுதல் மற்றவரை சுகப்படுத்துமா? என்ற கேள்வி நமக்குள்  எழலாம்!   தொடுதல் என்பது இன்று நமக்கு நோயினை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் ஆழமாக மனதில் பதிந்து இருக்கலாம்.   ஆனால் நமது வார்த்தைகள் அடுத்தவரை தொட வேண்டும். நமது சேவைகள் அடுத்தவரை தொட வேண்டும். நாம் செய்யக்கூடிய சின்னஞ்சிறு உதவிகள்,  நமது பாதுகாப்பை மையப்படுத்திக் கொண்டு , நாம் செய்யக்கூடிய சின்னஞ்சிறு உதவிகள் மூலம், அடுத்தவரின் உள்ளத்தை தொடலாம். துன்புறுவோருக்கு துணை நிற்கலாம். 
ஆறுதலான வார்த்தைகளை கொடுக்கலாம். அவர்களுக்கு இயேசுவைப் போல வழிகாட்டலாம்.  எனவே நிகழும் இக்கட்டான இச்சூழ்நிலையில், சூழலைக் கண்டு அஞ்சி கலங்காது, ஆண்டவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களாக,  நாம் இச்சமூகத்தில் தொடர்ந்து,  நல்ல மக்களாய் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவர்களாய், தொடர்ந்து நலமான நல்ல பணிகளை முன்னெடுக்க கூடிய இயேசுவின் உண்மை சீடர்களாகிட இறையருளை வேண்டுவோம்.

புதன், 28 ஏப்ரல், 2021

திருத்தூதர்கள் பேதுரு மற்றும் பவுல் திருவிழா

 திருத்தூதர்கள் பேதுரு மற்றும் பவுல் திருவிழா


தி.ப12:1-11, 2தீமொ4:6-8,17-18, மத்16:13-20

விசுவாசத்தின் மாதிரிகளாய் வாழ்வோம்

ஒரு முறை மாமன்னர் அலெக்சாண்டர் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் ஏழை எளியவர்களுக்கும், அன்பர்கள் நண்பர்களுக்கும் பிரித்துக் கொடுக்க ஆரம்பித்தார். உடனே அருகில் இருந்த ஒருவர், “மாமன்னா நீங்கள் இவ்வாறு எல்லாவற்றையும் பிரித்துக் கொடுத்தீர்கள் என்றால், உங்களுக்கென்று எந்தச் சொத்தும் இருக்கப் போவதில்லை” என்று கூறியபோது “அதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை, இந்த அழியக்கூடிய சொத்துக்களை விட எனக்கு கடவுள் நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை என்ற அழியாத சொத்துக்கள் என்னிடம் உள்ளது. அதை வைத்துக் கொண்டு இன்னும் பல செல்வங்களை என்னால்; திரட்ட முடியும்” என்றாராம். இதையே “நம்பிக்கையை வைத்திருப்போர் எல்லாவற்றையும் வைத்திருக்கிறார்கள்”; என்று அரேபியப் பழமொழி ஒன்று கூறுகிறது.

ஆம் அன்பிற்குரியவர்களே! இது போன்று நம்பிக்கை நம் வாழ்விலும் பல்வேறு நிலைகளில் காணப்பட்டிருக்கும். 

வெற்றி தோல்வியைச் சந்திக்கும் போதும், இன்ப துன்பங்களை அனுபவிக்கின்ற போதும்,  ஏமாற்றங்களைச் சந்திக்கும் போதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் போதும் இழப்புகள் நேரிடுகின்ற போதும் நாமும் நம்பிக்கை தளாராது நம் வாழ்வை நகர்த்திச் சென்றிருப்போம்.

இவ்வாறு நம்பிக்கை தளராது நம்பிக்கையை வளர்த்தெடுத்த விளைநிலங்களாக நம்பிக்கையின் நாயகர்களாக வாழ்ந்தவர்கள்தான் இன்றைய புனிதர்கள் தூய பேதுரு மற்றும் தூய பவுல். ஏனெனில் தி.ப12:11 ல் பேதுரு தன்னுணர்வு பெற்றபோது “ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்து கொண்டேன் என்று தனது நம்பிக்கையை அறிக்கையிடுவதைப் பார்க்கலாம். அதே போன்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் அழகாய் சொல்லுவார் “ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார்.” என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். இன்று நாம் ஒவ்வொருவருமே இவர்களைப் பின்பற்றி நம்பிக்கையின் மாதிரிகளாய் வாழ அழைக்கப்படுகிறோம். மேலும் அவர்களின் நம்பிக்கை நிறைந்த வாழ்வை இன்றைய வாசகங்களின் பின்னணியில் சிந்திக்க ஆசைப்படுகிறேன். அதில் இறை நம்பிக்கை கொண்டவர்கள் மூன்று கொடைகளைப் பெற்றிருக்கின்றனர்.

1. இறைநம்பிக்கை கொண்டவர்கள் துன்பங்கள் கண்டு துவண்டுவிடமாட்டார்கள்: புனித பேதுரு மற்றும் பவுல் இவர்கள் இருவருமே சிறையில் அடைக்கப்பட்டனர், ஏராளமான இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் ஆனால் பயந்து ஓடிவிடவில்லை, ஒடுங்கிப் போய்விடவுமில்லை மாறாக துன்பங்களைப் பொருட்டாகக் கருதாது தொடர்ந்து வீறு நடை போட்டவர்கள். இந்நடைக்கு அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது இறைவன் மீது கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை.

நம்பிக்கையில் நாம் வளர வளர வாழ்வில் வரும் இன்னல்களை, துன்பங்களை மனதைரியத்துடன் சந்திக்கும் மனப்பக்குவம் பெறுகிறோம். மேலும் நாம் கடவுள்; மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை நெருப்புக்கும், வாழ்வில் வரும் துன்பங்களை காற்றுக்கும் ஒப்பிடலாம். தீ கொஞ்சமாக இருந்தால் காற்று இலேசாக அடித்தால் அது அணைந்துவிடும். மாறாக தீ அதிகம் இருந்து, காற்று அதிகமாகும் போது தீயும் அதிகமாகிறது. அதாவது கடவுள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை ஏனோ தானோவென்று இருக்கும் போது சிறிய துன்பங்களைக் கூட எதிர்கொள்ள முடியாது, ஆனால் நம் நம்பிக்கை வலுவாக இருக்கும்போது நாம் சந்திக்கும் இன்னல்கள் நமது நம்பிக்கையை அதிகப்படுத்தும் இவ்வாறு நம்பிக்கையை அதிகப்படுத்தி வாழ்ந்தவர்கள்தான் தூய பேதுரு மற்றும் தூய பவுல்.

2. இறைநம்பிக்கை கொண்டவர்கள் இறை ஆசீர் பெறுவார்கள்: நமது நம்பிக்கை நலமானதாக, வளமானதாக, உறுதியாக இருக்கின்ற போது இறைவனின் ஆசீர் நமக்கு அபரிவிதமாகப் பொழியப்படும். இதற்குச் சிறந்த உதாரணங்கள்தான் இன்றைய புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல். இவர்கள் இருவரின் விசுவாசம் இவர்களுக்கு இறை ஆசீரை நிறைவாகப் பெற்றுத் தந்தது. ஏனெனில் இன்றைய நற்செய்தி மத் 16:18ல் “உன் பெயர் பேதுரு, இந்தப்பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா…” என்று இறைவனின் ஆசீர் வழங்கப்படுகிறது. அதே போன்று தூய  பவுல் ஆசீருக்காக் காத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம் 2தீமொ4:8ல் “எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்.” இறைவனின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இறைவனின் ஆசீரைக் கண்டிப்பாகப் பெறுவார்கள் என்பது தெளிவுபடுகிறது.

3. இறைநம்பிக்கை கொண்டவர்கள் செயல்பாடு மிக்கவர்கள்: யாக்2:;26ல் பார்க்கிறோம் “உயிர் இல்லாத உடல் போல செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே”. நமது நம்பிக்கை என்பது வெறும் வாய்ச்சொல்லில், அறிக்கையிடுவதில் முழுமை பெறுவதில்லை மாறாக நம்பிக்கை வாழ்வாக்கப்படுவதிலும் செயல்பாட்டிலும் முழமை பெறுகிறது. இத்தகைய இறைநம்பிக்கையை செயல்பாடுகளில் காட்டியவர்கள்தான் இன்றைய புனிதர்கள் புனித பேதுரு மற்றும் பவுல். ஏனெனில் தாங்கள் பெற்ற நம்பிக்கையை நாடுகள், கடல்கள் கடந்து வாழ்ந்துகாட்டி அறிவித்த வள்ளல்கள். இறைநம்பிக்கையை இவ்வாறுதான் வாழவேண்டும் என்று வாழத்தூண்டியவர்கள். ஆகவேதான் பவுலடியாh தனது கடிதத்தில் என்னைப்போல் வாழுங்கள் என்று கூறும் அளவிற்கு சொல்லிலும் செயலிலும் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தினார். மேலும் பவுலடியார் நம்பிக்கையை தங்கள் செயல்கள் வழியாக வெளிப்படுத்தியதற்காக தெசலோனிக்க நகர் மக்களைப் புகழ்வதை 1தெச1:3 ம் வசனம் சுட்டிக்காட்டுகிறது. இவர்;களைப் போன்று இன்று நாமும் இறைநம்பிக்கையை வாழ்ந்து காட்ட அழைக்கப்படுகிறோம். 

அன்பிற்குரியவர்களே நமது வாழ்வைச் சற்று சிந்தித்து பார்ப்போம் நாங்கள் பாரம்பரிய கிறிஸ்தவர்கள,; கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி இருப்பவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோமே, நமது நம்பிக்கையின் துணையினால் நாம் சந்திக்கும் துன்ப துயரங்களைக் கண்டு துவண்டு விடாமல் வாழ்ந்திருக்கிறோமா? துன்ப நேரங்களில் இறைவன் மீதுள்ள நம்பிக்கையை வளர்த்திருக்கிறோமா? நமது நம்பிக்கையால் நாம் ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோமா? நம்பிக்கையை வெறும் அறிக்கையிடுவதோடு நின்றுவிட்டோமா அல்லது வாழ்ந்து காட்ட முற்படுகிறோமா? என்பதைச் சிந்திப்போம். உண்மையான நம்பிக்கையாளர்கள் நாம் என்பதை வாழ்ந்து காட்டுவதற்கான அருள் வேண்டி இப்பலியில் தொடர்ந்து மன்றாடுவோம்.

 


வாக்கு மாறாதவர் கடவுள் ... (29.4.2021)

வாக்கு மாறாதவர் கடவுள் ...
கோரோனா தொற்றுநோய் ஒருபுறம் உச்சத்தை எட்டிக் கொண்டு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றாலும் .  ஆவலோடு தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் யார் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கப் போகிறார்கள்? என்பதை அறிவதற்கு அனைவரும் ஆவலாக காத்திருக்கின்றனர். இதற்கு 
இன்னும் ஒருசில தினங்களே இருக்கின்றன...

இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று சொன்னவர்கள் எல்லாம் சொன்னதை  செய்வார்களா? என்ற எண்ணம் இப்போதே இதயத்தில் துளிர் விட தொடங்கி விட்டது. ஏன் இத்தகைய எண்ணம் இதயத்தில் துளிர்விட்டது என சிந்திக்கும் போது இடத்திற்கு ஏற்றார் போல நிறத்தை மாற்றும் பச்சோந்திகள் போல இன்று மனிதர்கள் பலர் இச்சமூகத்தில் நாளுக்கு நாள் பெருகி விட்டார்கள் என்பதே அதற்கு காரணமாகிறது...
ஆட்சிக்கு வருபவர்களும் அதிகாரத்தின் மத்தியில் இருப்பவர்களும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு மகத்துவமான செய்தி என்னவென்றால் பணியாளர் தலைவரை விட உயர்ந்தவர் அல்ல தேர்ந்தெடுத்த மக்களைவிட தேர்வு செய்யப்பட்டவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல அவர்களில் தேர்வு செய்யப்பட்டதன் நோக்கமே அடுத்தவருக்கு அறியவே இதனை மனதில் கொண்டு அவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற கூடியவர்களாக வாழ இன்றைய நாளில் இறைவார்த்தை வழியாக அழைக்கப்படுகிறார்கள் இது ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் மனிதர்களுக்கான அழைப்பு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்திற்குமான அழைப்பாகும்.

கடவுள் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பொருட்டு இயேசுவை உலகிற்கு அனுப்பினார்.இந்த உண்மையை உலகிற்கு பலர் எடுத்துரைத்தார்கள். இந்த உண்மையை கூறியவர்களை எல்லாம் இயேசுவாகவே பார்க்கப்பட்டார்கள்... ஆனால் வீண் பெருமைக்கும் மயங்காத இவர்கள் இயேசுவை  பற்றி நாங்கள் அறிவிக்கின்றோம் என்ற செய்தியை வெளிக்காட்டியவர்கள்.அவர்களுள் ஒருவரான யோவானை பற்றித்தான் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க கேட்டோம்...

நாம் ஆட்சியாளர்களை தேர்வு செய்வது போலவே இறைவனும் தன்னுடைய பணியை இச்சமூகத்தில் செய்யக்கூடிய மனிதர்களை தேர்வு செய்கிறார். தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களை தேர்வு செய்தது யார்? என்பதை மனதில் இருத்தி செயல்படும் பொழுது மகத்துவமான நல்ல பணிகளை சமூகத்தில் முன்னெடுக்க முடியும். இத்தகைய எண்ணத்தை மனதில் கொண்டு பயணம் செய்யவே நாம் ஒவ்வொருவரும் இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
 

இத்தகைய எண்ணத்தின் அடிப்படையில் நமது பயணத்தை தொடரும் போது நாம் வாக்கு மாறாத இறைவனை போல நாமும் கொடுத்த வாக்கை மாறாத நல்ல பணியாளர்களாக இருந்து, நாம் தேர்வு செய்யப்பட்ட நோக்கத்தை அறிந்தவராய் மக்களுக்கு மகத்துவமான நல்ல பணிகளை செய்யக்கூடிய மனிதர்களாக இச்சமூகத்தில் வளம்பெற முடியும் .பலவிதமான பணிகளுக்கு மத்தியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் அனுதினமும் பலவிதமான வார்த்தைகளை வாக்குறுதிகளாக  பயன்படுத்துகிறோம்.  கொடுத்த வாக்கைக் காக்க கூடிய நல்ல பணியாளர்களாக நாம் மாறிடவும், வாக்கு மாறாத இறைவனின் வழியில் நடந்திடவும் இறைவனது அருளை தொடர்ந்து வேண்டுவோம். 

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

ஒளியாக மாறிட.... (28.4.2021)

ஒளியாக மாறிட....


இயேசுவில் அன்புக்குரியவர்களே... உங்கள் அனைவரோடும் இன்றைய வாசகங்களின் அடிபடையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒளி இருளை அகற்றும் ...
ஒளி வழிகாட்டும்...
ஒளி உண்மையை பிரதிபலிக்கும் ...
இத்தகை ஒளியாக உலகிற்கு வந்தவர் தான் இயேசு கிறிஸ்து...இவரைப் போல நாமும் ஒளி வீசிட நாம் இயேசுவின் மீது நம்பிக்கையில் வளர வேண்டும் ...

 என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்.
இந்த இயேசுவின் மீது நாம் கொள்கின்ற நம்பிக்கை நம்மை ஒளியின் பாதையில் வழிநடத்தும்...
உண்மைக்கு சாட்சியாய் வாழ்ந்திடத் தூண்டும்.

எனவே ஆண்டவர் இயேசுவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் அவரது வார்த்தைகளை வாழ்வாக மாற்றிக்கொண்டு... ஒளியின் பாதையில் உண்மை சீடர்களால் தொடர்ந்து பயணித்திட இறையருளை வேண்டுவோம். 
கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது.என்ற முதல் வாசக வார்த்தைகளுக்கு ஏற்ப ஒளியின் பாதையில் பயணிக்கும் போது,நாம் வாழும் சமூகத்தில் கடவுளின் வார்த்தைகளால் உலகில் ஒளியேற்றிட நம்மால் இயலும்... வாருங்கள் நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்.என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப நாமும் இச்சமூகத்தில் ஒளியாக திகழ... அடுத்தவர் வாழ்வில் நம்பிக்கை என்னும் ஒளியினை ஏற்றிட... நமக்குள் இன்றைய நாளில் நம்பிக்கை எனும் ஒளியை பற்றவைத்து கொண்டு பயணத்தை முன்னெடுப்போம்.... இச்சமூகத்தில் ஒளியாக மாறிட....




திங்கள், 26 ஏப்ரல், 2021

செயல்களே எனக்கு சான்றாக அமையும்... (27.4.2021)

செயல்களே எனக்கு சான்றாக அமையும்... 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே...

இன்றைய நாளில் இன்றைய வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய வாசகங்களை நீங்கள் கவனமாக கவனித்து இருந்தீர்கள் என்றால் என்னுடைய கேள்விக்கு எளிதாக உங்களால் பதில் சொல்ல இயலும்.
 எனது கேள்வி இதோ... 
கிறிஸ்தவர்கள் என்று முதன் முதலில் நாம் பெயர்பெற்றது எங்கே?

கீழே சென்று விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக நீங்களே யோசித்துப்பாருங்கள் விடை என்னவாக இருக்கும் என்று ....


அந்தியோக்கு நகரில் தான் நாம் கிறிஸ்தவர்கள் என்ற பெயரை முதன்முதலில் பெற்றோம்.

கிறிஸ்தவர்கள் என்றால் இயேசு கிறிஸ்து கற்பித்த நெறிமுறைகளின்படி அவரைப் போல வாழக்கூடியவர்கள் என்பதுதான் உண்மை. 

கிறிஸ்தவர்கள் என்றாலே பொதுவாக எதற்கும் போராட மாட்டார்கள். மாறாக மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபிக்க கூடியவர்கள் என்ற பெயருண்டு.  ஏனென்றால் இயேசு தன்னை கொலை செய்தவர்களை கூட சிலுவையில் தொங்கும் போது அதாவது மரணிக்கும் தருணத்திலும் மன்னித்தார். அவரை பின்பற்றக் கூடியவர்கள். எனவே இவர்கள் அடுத்தவர்கள் செய்யக்கூடிய தவறுகளை மன்னிப்பார்கள்.அவர்களுக்காக ஜெபிப்பவர்கள் என்று பலர் கருதுகிறார்கள். இது முற்றிலும் உண்மை தான் ஆனால் கிறிஸ்தவர்கள் எப்போதும் ஜெபித்துக் கொண்டே இருப்பவர்கள் மட்டுமல்ல.... ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போலவே இச்சமூகத்தில் நடமாட கூடியவர்கள்... இயேசுவைப் போல  தேவைப்படும் பட்சத்தில்  சாட்டையைச் சுழற்ற அஞ்சாதவர்கள். 
நீதி மறுக்கப்படும் போது எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடியவர்கள். 
சமூக அவலங்கள் அரங்கேறும் போது அதைச் சுட்டிக்காட்டி மனிதத்தை முன்னிறுத்தும் மனிதநேய தொண்டர்கள் என்றால் அது மிகையாகாது. 
இப்படி பல விதமான பண்புகளை உள்ளடக்கிய கிறிஸ்தவர்களாகிய நாம் உண்மையில் கிறிஸ்துவின் நெறிமுறைகளின்படி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்ற கேள்வியை இன்று நம்முள் எழுப்பி பார்த்து நம்மை நாமே சுய ஆய்வு செய்து கொள்ள இன்றைய வாசகங்கள் அழைப்பு தருகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் நீர்தான் மெசியாவா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அதற்கு இயேசு நான் உங்களிடம் என்னைப் பற்றி கூறினேன். நீங்கள் நம்பவில்லை. நான் செய்கின்ற செயல்களே எனக்கு சான்றாக அமையும் என்கின்றார். இயேசுவின் செயல்கள் ஒவ்வொன்றும் அவர் மெசியா என்பதை இச் சமூகத்திற்கு வெளிக்காட்டியது. நாம் உண்மையான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் நெறிமுறைகளின்படி வாழ்பவர்கள் என்பதை வார்த்தைகள் அல்ல நமது செயல்களை வெளிகாட்ட வேண்டும் ... உண்மையில் நமது செயல்கள் அதனை வெளிக்காட்டுகின்றனவா? என்று நம்மை நாம் சுய ஆய்வு செய்வோம்.

பெயருக்கு நாங்களெல்லாம் கிறிஸ்தவர்கள் என பெருமை பாராட்டுவதை விட்டுவிட்டு இயேசுவின் மீது உண்மையான அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்களாய்  இயேசுவைப்போல இச்சமூகத்தில் இறையாட்சி மலர இன்றைய நாள் முதல் நமது சொல்லையும் செயலையும் சீர்தூக்கிப் பார்த்து சொல்வதை நிறுத்தி நமது செயல்களால் நாம் இயேசுவைப் பின்பற்றும் உண்மையான கிறிஸ்தவர்கள் என்பதை வெளிகாட்ட முயல்வோம்...

இயேசுவை ஏற்றவர்கள் தான் கிறிஸ்தவர்கள் என்பது அல்ல.... மாறாக இயேசுவின் விழுமியங்களை பின்பற்றும் ஒவ்வொருவருமே கிறிஸ்தவர்கள் தான்.

எங்கு  அநீதி இழைக்கப்படுகிறதோ, அங்கு நீதியை நிலை நாட்டுபவரும்  இயேசுவின் விழுமியங்களின் படி வாழும் கிறிஸ்தவரே...

எங்கு மக்கள் நசுக்கப்படுகிறார்களோ, அங்கு  அவர்கள் சார்பாக குரல் கொடுக்கக்கூடிய ஒவ்வொருவரும் இயேசுவின் விழுமியங்களின் படி வாழும் கிறிஸ்தவரே...

சமூகத்தில்  ஒரு மனிதன் தேவையில் இருக்கும்போது அவனுக்கு உதவி செய்யக்கூடிய ஒவ்வொரு நபரும்  இயேசுவின் விழுமியங்களின் படி வாழும் கிறிஸ்தவரே...
பரபரப்பாகவும், அச்சத்திற்கு மத்தியிலும்  சுழன்று கொண்டிருக்க கூடிய இந்த பூமியில் நாம் உண்மை கிறிஸ்தவர்கள் என்பதை நமது சொல்லால் அல்ல செயலால் காட்டிட முயல்வோம்.அப்போது நாமும் இயேசுவைப் போலவே   இயேசுவின் சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்ததன் அடிப்படையில் இயேசு "நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் என்றார்(யோவான் 10: 30) .நமது சொல்லும் செயலும் இணையும் போதுதான் நாம் உண்மையாகவே இயேசுவோடு இணைந்து இருக்கிறோம் என சொல்ல முடியும்.
எப்போதும் இயேசுவோடு இணைந்திட சொல்லையும் செயலையும் ஒன்றாக்கி வாழ்ந்திட  இறையருளை தொடர்ந்து வேண்டுவோம். 

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

ஆயனுடைய ஆடுகளாக மாறிட... (26.4.2021)

ஆயனுடைய ஆடுகளாக மாறிட...

நன்மைகள் பெருக நல்லெண்ணம் வளர்க்கும் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு கணவனும் மனைவியும் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து கோரினார்கள். அவர்களை விசாரித்த நீதிபதி இறுதியில் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் நீங்கள் இருவரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினாராம். சற்று நேரம் ஆலோசனை செய்த இருவரும் மீண்டும் நீதிபதியிடம் வந்து நின்றார்கள். நீதிபதி அவர்களிடம் எல்லாவற்றையும் சரிசமமாகப் பிரித்து விட்டீர்களா? என்று கேட்டார். அவர்கள் நீதிபதியைப் பார்த்து எங்களுக்கு ஒரு வருட காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டார்கள். நீதிபதியும் மிகுந்த ஆச்சரியத்துடன் ஏன்? என்று கேட்டார். அப்போது அவர்கள், எங்களுடைய சொத்துக்களையும் நில புலன்களையும் நாங்கள் சரிசமமாகப் பிரித்து விட்டோம். ஆனால் எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.  அவர்களை இப்போது சரிசமமாக பிரிக்க இயலாது. எனவே இன்னும் ஓராண்டு காலம் இணைந்து வாழ்ந்து நான்காவது குழந்தையுடன் வந்த பின்னர் குழந்தைகளையும் சரிசமமாக பிரித்துக் கொள்கிறோம் என்று கூறினார்களாம். இவர்கள் குழந்தைகளை மையப்படுத்தி இணைந்து விடுவார்கள் என்று நம்பிய நீதிபதி அவர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து போய் விட்டார். 

ஆம் அன்புக்குரியவர்களே! 
ஒருவரை மற்றவரோடு இணைப்பதற்கான வழிகளை இறைவன் நமக்காக முன்னெடுக்கிறார். ஆனால்,  அதனை உணராமல் பிரிந்து வாழ்வதற்கான காரணங்களை வாய்ப்புகளையே பலநேரங்களில் மனித இனம் விரும்பி, தேடிக் கொண்டிருக்கிறது. எனவே தான் இன்று விவாகரத்துக்காக ஓடக் கூடிய கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. 
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய நாளில் இறைவன்,  நமக்கு உணர்த்தக் கூடிய செய்தி என்னவென்று ஆராயும் போது,  தொடக்கத் திருஅவையிலே, புனித பேதுருவுக்கு இறைவன் காட்சி வழியாக வெளிப்படுத்திய வெளிப்பாடுகளை இன்று நாம் வாசிக்க  கேட்கின்றோம்.  நமது வாழ்வில் பலவிதமான காரியங்கள், நமது உள்ளத்தில் எழ,  அந்த எண்ணங்களின் அடிப்படையிலேயே அனைத்தும் நிகழ வேண்டும் என ஆசைப்படுகின்றோம். இவ்வாறாக இன்று நமது உள்ளத்தில் நாம் விரும்புவதை எல்லாம் இறைவனும் எண்ணுகிறாரா? என்பது தான் இன்று நமக்கு முன்பாக இருக்கக் கூடிய கேள்வி. பெரும்பாலான நேரங்களில் நாம் ஒன்றை நினைத்துக் கொண்டு இது இறைவனது விருப்பம் என எண்ணிக் கொண்டிருக்கிறோம். இறைவனது திட்டம் என பயணிக்கின்றோம். ஆனால் உண்மையிலேயே நாம் இறைவனது விருப்பத்தையும் திட்டத்தையும் உணர்ந்து கொள்கின்றோமா? தொடக்க திருஅவையில் இதே போன்ற சிக்கல்கள் தான் நிலவிக் கொண்டிருந்தன. புறவினத்தாரை   தீண்டத்தகாதவர்கள் என்றுதான் கருதினார்கள் யூதர்கள். யூதர்கள் மட்டுமே என்ற மனநிலை அவர்களிடத்தில் மேலோங்கி காணப்பட்டது. இந்த நேரத்தில் இறைவன் காட்சி வழியாக பேதுருவோடு உரையாடுகிறார். பேதுருவுக்கு பலவற்றை காண்பித்து அவற்றை எடுத்து உண்ணச் சொல்கிறார். ஆனால் பேதுரு கடவுளிடம், அவையெல்லாம் தீட்டானவை என்று கூறுகிறார். அப்போது ஆண்டவரின் பதில் மொழி, "எனது பார்வையில் நான் உனக்குத் தருவது உனக்குத் தீட்டாகத் தெரிகிறதா?  என்ற கேள்வியை எழுப்புகிறார். அப்போது பேதுரு இவ்வாறு புரிந்து கொள்கிறார்.  இயேசுவை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். இயேசுவை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அனைவருமே ஒன்றானவர்கள்.  இங்கு மதத்தால், மொழியால் இனத்தால் அவர்களைப் பிரித்து பார்ப்பது தவறு என்பதைப் புரிந்து கொள்கிறார். எனவே புறவினத்தாரை ஏற்றுக்கொள்வதில் அவரிடமிருந்த ஒரு வித தயக்கம் அங்குக் களையப்படுகிறது. களைந்து அவர் அனைவரையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நபராக மாறுகிறார். யூதர்களை மட்டும் முன்னிறுத்திச்் சென்ற தொடக்ககால திருஅவையில், இந்த சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் இயேசு ஒரு காட்சி வழியாக பேதுருவுக்கு சுட்டிக் காண்பித்து, மாற்றத்தை உருவாக்குகிறார். பேதுரு இந்த உண்மையை உணர்ந்து கொள்வதற்கு முன்பு வரை தான் கொண்டிருந்த யூத இனம் சார்ந்திருந்த எண்ணங்களின் அடிப்படையில், அவைகளையே  கடவுளுக்கு உகந்தவை என எண்ணிக் கொண்டிருந்தார். அதையே நடைமுறைப்படுத்தவும் முயற்சித்தார். ஆனால் இயேசு அவரோடு காட்சியின் வழியாக, உரையாடியதன் வழியாக இயேசுவின் உண்மையான நோக்கத்தையும் எண்ணத்தையும் உணர்ந்து கொண்டார். பல நேரங்களில் நாமும் நமது வாழ்வில் இறைவனது விருப்பம் என எண்ணிக்கொண்டு நமது விருப்பங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்போம். ஆனால் நாம் முன்னெடுத்து செயல்படுத்தக் கூடிய செயல்கள் அனைத்தும் நமது சுய விருப்பமே தவிர அவை இறைவனது விருப்பம் இல்லை என்பதை நாம் ஏதேனும் ஒரு வழியில் ஏதேனும் ஒரு தருணத்தில் நாம் உணர்ந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகும். அப்படி உருவாகும் போது உண்மையாலுமே இறைவனது விருப்பம் என்ன என்பதை உணர்ந்து கொண்டு நாம் செயல்படுவோமாயின் நாம் ஆயனுடைய குரலை அறிந்த ஆடுகளாக இருப்போம். அதை உணர்ந்து கொள்ளாத போது நாம் ஆயனது குரலை அறியாத ஆடுகளாக தான் இருப்போம். ஆயன் என்பவன் பின்னிருந்து ஆடுகளை முன்னோக்கிச் செல்ல அனுமதித்து,  பின்னிருந்து அதனை மேற்பார்வை செய்து கொண்டு வரக் கூடியவர். எனவே தான் பல நேரங்களில் இறைவன் நம்முடைய எண்ணங்களை தொடக்கத்தில் அவர் நிறுத்துவது இல்லை. நமது எண்ணங்களின் படி நம்மை செயல்பட விட்டு அதன் வழி நமக்கு அனுபவங்களையும் வாழ்க்கை பாடங்களையும் கற்பிக்கக் கூடிய ஒரு நல்ல ஆயனாக இருந்து மந்தையாகிய நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். எனவே இன்றைய நாளில் நாம் ஆயனது குரலை உணர்ந்துகொண்ட ஆடுகளாக அவரது மந்தையில் பயணம் செய்கிறோமா? அல்லது ஆயனுடைய குரலை அறியாத ஆடுகளாக அவரது மந்தையில் பயணிக்கின்றோமா?  என கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம். நாம் ஒருவேளை ஆயனுடைய குரலை அறியாத ஆடுகளாய் இருப்போமாயின் இன்றைய நாளில் எனது குரலைக்் கண்டு கொள்ள நாம் செய்யக்கூடிய சின்னஞ்சிறு செயல்பாடுகளையும் சீர்தூக்கி பார்த்து ஆயனது குரலுக்கு ஏற்றவகையில் செயல்படக்கூடிய ஆயனுடைய ஆடுகளாக மாறிட இன்றைய நாளில் இறையருளை வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம்.

சனி, 24 ஏப்ரல், 2021

நல்ல ஆயனாக மாறுவோம்!...(25.4.2021)

நல்ல ஆயனாக மாறுவோம்!
இயேசுவில் அன்புக்குரியவர்களே ...
இன்று  நிலவக்கூடிய இக்கட்டான இந்தச்சூழ்நிலை,.. அனுதினமும் அச்சத்தை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. திரும்பும் திசை எங்கும் மரண ஓலங்கள் கேட்கின்றன. எங்கு பார்த்தாலும்  கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்ற வார்த்தைகள் தான் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கின்றன. நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் மறைத்துவிட்டு கொரோனா தொற்றுநோயின் தாக்கம் மட்டுமே அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பு செய்தியாக உள்ளது.  பரபரப்புச் செய்திகளை கேட்டாலே அச்சம் வரக்கூடிய நிலை உருவாகியுள்ள இச்சூழ்நிலையில், இன்றைய நாள்  வாசகங்களின் வழியாக இறைவன் நம்மை நல்ல ஆயனாக மாறிட அழைப்பு தருகின்றார். 

நல்ல ஆயன் ஆடுகளுக்காக தன் உயிரையே தரக்கூடியவர்.  இயேசு நமக்காக தன் இன்னுயிரை தந்தார்.   நம்மிடையே வாழும் மனிதர்கள் ஒவ்வொரு நாளும் கொரோனா  தொற்றுநோய் காரணமாக பல விதமான இன்னல்களையும் துன்பங்களையும் அடைகிறார்கள்.  இந்நேரத்தில் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்ய வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.  தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அடுத்தவரின் துயரை கண்டும் காணாமல்  இருப்பதற்கு நாம் ஒன்றும் கல்லான இதயம் கொண்டவர்கள் அல்ல. நம் அருகாமையில் இருக்கக்கூடியவர்கள்,  நோய் தொற்று காரணமாக துன்புறுபவர்களுக்கு நமது பாதுகாப்பை மனதில் வைத்துக்கொண்டு, நாம் பாதுகாப்போடு இருந்து அவர்களுடைய துன்பங்களை துடைப்பதற்கு நாம் அவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்திட இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம். 


இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது, அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் நல்ல ஆயனாக விளங்கினார்.  இன்று நாமும் நல்ல ஆயராக  விளங்க வேண்டிய தருணம் இது.  நிலவும் சூழல் அனைத்தும் நல்ல ஆயராக மாறி,  ஒருவருக்கொருவர் உதவி செய்து அடுத்தவர்களின் துயரத்தில் பங்கெடுக்கக்கூடிய நல்ல மனிதர்களாக வாழ்ந்திட நமக்கு அழைப்பு தருகின்றன. 

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் இயேசுவின் பெயரால், அங்கு உள்ளவர்கள் இயேசுவின் பெயரால் நலம் அடைந்தார்கள் என்ற செய்தியினைை நாம் வாசிக்க கேட்டோம். நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நாம் கொண்டுள்ள மனித நேயத்தின் அடிப்படையில் நாம் செய்யும் சிறு சிறு உதவிகள் மூலமாக,    கண்டிப்பாக நோய்த் தொற்றில் உள்ள ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் ஆறுதல் பெறுவர். இன்று ஊடகங்களுடைய பரபரப்பு செய்தி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நேரத்தில் மனிதர்கள் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தொடக்க காலத்தில் மக்கள் நம்பிக்கையைை இழக்கும் தருவாயில் இருக்கும் போதெல்லாம் தொடக்க காலத்தில் திருத்தூதர்கள் நம்பிக்கையை ஊட்டினார்கள். இயேசுவின் பெயரால் நம்பிக்கையை தந்தார்கள். இன்று நாமும் நம்பிக்கையை தரக்கூடிய நல்ல ஆயனாகவே இருக்க அழைக்கப்படுகிறோம். நோய்த்தொற்று இருந்தால் நாம் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் உள்ள  மனிதர்களிடம், ஒன்றுமில்லை! நீங்கள் நலமாக உள்ளீர்கள் விரைவில் குணமாவீர்கள். நீங்கள் நலம் அடைவீர்கள்.  
உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற ஆறுதலான வார்த்தைகளை கொடுக்க முயலுவோம். அப்படிக் கொடுக்கும் பொழுது கண்டிப்பாக ஒவ்வொருவர் மனதிலும் நம்பிக்கையை விதைக்க முடியும். அந்த நம்பிக்கை அவர்களை நலமாக்கும் என்ற எண்ணத்தோடு, அந்த எண்ணத்தை நமக்குள்ளும் விதைத்துக் கொண்டு  நமது எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் நாம் செயல்படத் துவங்கிட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
இன்றைய இரண்டாம் வாசகமும் அன்பை மையப்படுத்துகிறது. 
 
          நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்.
1 யோவான் 3:1 என்ற இறை வார்த்தை கடவுள் நம்மீது அன்பு கொண்டுள்ளார் என்பதை தெளிவுபடுத்துகிறது. அதன் அடிப்படை நோக்கமே நாமும் ஒருவர் மற்றவரிடம் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான்.

தன் பெண்டு, 
தன் பிள்ளை 
தன் வீடு 
தன் சோறு 
சம்பாத்தியம், 
இவையுண்டு தானுண்டு என்போர்  கடுகு உள்ளம் கொண்டோர். என்ற பாரதிதாசனின் பாடல் வரிகளின் நிலையை கடந்து, இன்று நான் மட்டுமே வாழவேண்டும் என்ற எண்ணமானது மனிதர்களின் மனதில் ஆழமாக குடிகொள்கிறது. எனவே மனிதனுக்குள்ளாக இருக்கக்கூடிய மனிதநேயமானது, சிறிது சிறிதாக நோய்த்தொற்று காரணமாக அழிந்து வருகிறது. இந்நேரத்தில் நமக்குள் இருக்கும் மனித நேயத்தை, முன் நிறுத்துவோம். அதனை அழிந்து விடாமல் காத்துக் கொள்வோம். அந்த மனித நேயத்தின் அடிப்படையில், அடுத்தவர் மீது அன்பு கொண்டவர்களாக, துன்புறக்கூடிய மக்களுக்கு துணை நிற்க கூடியவர்களாகவும், அவர்களுக்கு ஆறுதல் தரக் கூடியவர்களாகவும் அவர்களுக்கு நல்வழி காட்டக்கூடிய நல்லாயனாகவும் நாம் மாறிட இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். 

நமக்காக உயிரை கொடுத்த நல் ஆயராம் இயேசு கிறிஸ்துவின் வழிவரக் கூடிய நாமும் அவரைப்போல நல்ல ஆயர்களாக மாறிட உள்ளத்தில் உறுதி ஏற்போம். 
உள்ளத்தில் உறுதி ஏற்பது முக்கியமல்ல. நாம் ஏற்ற உறுதியானது நமது செயலில் வெளிப்பட வேண்டும். எனவே நம்மாலான சின்னஞ் சிறு உதவிகள் மூலமும், நல்ல ஆறுதலான வார்த்தைகள் மூலமும், கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடியவருடன் உரையாடுவோம். இந்த கொரோனாத் தொற்றுநோய் ஓர் அரசியல் என்று ஒருபுறம் பேச்சு இருந்தாலும், வதந்தி என்று ஒருபுறம் பேச்சு இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களே நமது இலக்காக இருக்க வேண்டும். அவர்களே நமது மந்தையின் ஆடுகள். அவர்களைத் தேடிச் செல்வோம். அவர்களுக்கு வழிகாட்டுவோம். அவர்களோடு உரையாடல் நடத்துவோம். அவர்களுக்கு ஆறுதலைத் தருவோம். நம்பிக்கையை அவர்களுக்குள் துளிர்விடச் செய்வோம். அந்த நம்பிக்கை அவர்களை குணமாக்கும். நமது நம்பிக்கையும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் கண்டிப்பாக நல்ல ஆயரின் பாதையில் அனைவரும் நடந்திட வழிவகுத்திடும் என்ற உறுதிப்பாட்டுடன்  இன்றைய சூழலில்  நல்ல ஆயனாக நாம் விளங்கிட இறையருளை வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம்.

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

வார்த்தைகளை நமதாக்கிக் கொள்வோம்... (24.4.2021)

வார்த்தைகளை நமதாக்கிக் கொள்வோம்...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய முதல் வாசகம் தொடக்கத் திருச்சபை தூய ஆவியாரின் துணையுடன் அமைதியில் தழைத்து வளர்ச்சியுற்றது என்பதையும், பேதுரு தான் சென்ற இடங்களிலெல்லாம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் அற்புதங்கள் செய்ததையும் குறிப்பாக லித்தா என்னும் நகரில் ஐனேயா என்னும் ஒருவருக்கு முடக்குவாதத்தில் இருந்து விடுதலை கொடுத்ததையும் யோப்பா நகரில் மரித்துப் போயிருந்த தபித்தா என்னும் பெயருடைய நற்பண்புகள் மிகுந்த பெண்ணுக்கு மீண்டும் புத்துயிர் அளித்ததையும் எடுத்துக்கூறுகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தனக்கு எதிராக முணுமுணுத்த சீடர்களிடம்,  வாழ்வு தருவது தூய ஆவியே. 
எனது வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன என்று இயேசு கூறிய பொழுது, இயேசுவின் சீடர்கள் சிலர் அவரை விட்டு நீங்கியதையும், பேதுருவோ, இயேசு ஆண்டவரிடம், நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன! என்று அறிக்கையிடுவதையும் காண்கிறோம். 

நிறைகுடம் தளும்பாது! குறைகுடம் கூத்தாடும்! என்று நமது முன்னோர்கள் பழமொழிகள் கூறுவார்கள்.
உள்ளத்தில் அமைதியை உணர்ந்து எதிர்வருகின்ற சூழ்நிலைகளுக்கு அமைந்த மனதோடு  தம்மைக் கையளித்து தூய ஆவியானவரின் வழிகாட்டுதலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, தூய பேதுருவின் வார்த்தைகளுக்கு காதுகளை மட்டுமல்ல தன்னுடைய இதயங்களையும் திறந்து செவிகொடுத்த மக்களின் ஒட்டுமொத்த சூழல், ஒட்டுமொத்த நம்பிக்கை, அங்கு இறை வல்லமையால் அற்புதங்களும் அதிசயங்களும் நிகழ வாய்ப்பாக அமைந்தது.

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஆண்டவரின் வார்த்தைகளை புரிந்துகொள்ளாத சீடர்கள்,  நிறைவைத் தேடாது, தமது சிந்தனையால் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக் கொள்ளாது, அவருக்கு எதிராக முணுமுணுத்ததையும், கொஞ்சம் கொஞ்சமாக இறுதியில் அவரை விட்டு விலகிச் செல்வதையும் காண்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசுவால் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட புனித பேதுரு, ஆண்டவரது வார்த்தைகளின் வலிமையை உணர்ந்தவராக, அவை நிலை வாழ்வு தருகின்ற வார்த்தைகள் என்பதனை அறிக்கையிடுகின்றார். 

               இன்று பரபரப்பாகவும் அதிவேகமாகவும் உடனடி கலாச்சாரத்திற்கு மத்தியிலும் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய இந்த உலகத்தில் உண்மையையும் நன்மையையும் கண்டுணர நமது உள்ளத்திற்கு அமைதி தேவை. நமது சிந்தனைக்கு அமைதி தேவை என்பதை உணர்ந்தவர்களாக, நமது வாழ்வில் நாம் இன்றைய நாளில் சந்திக்கும் எந்த ஒரு நிகழ்விலும் இறை திருவுளத்தை தேர்ந்து தெளிய, தூய ஆவியானவரின் தூண்டுதலுக்கு செவிகொடுக்க, நிலை வாழ்வை கண்டுகொள்ள, நமது உள்ளத்திற்கு தேவையான இறை அமைதியை அதிகமதிகமாக பெற்றுக்கொள்ள,  ஆண்டவர் இயேசுவின் நிலைவாழ்வு தரும் வார்த்தைகளை நமதாக்கிக் கொள்ள இறையருள் வேண்டி இணைந்து ஜெபிப்போம்.

வியாழன், 22 ஏப்ரல், 2021

இறைவன் இருப்பது எங்கே?...(23.4.2021)

இறைவன் இருப்பது எங்கே?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்திலே மிகவும் கொடூரமான ஒரு மனிதன் இருந்தான்.  உலகத்தில் சொல்லக்கூடிய அத்தனை தீய பழக்கங்களையும் கொண்டிருந்தவன். அவன் ஒரு காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தான். அதே காட்டுப்பாதையில் எதிர்முனையில் ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணும் நடந்து வந்தாள். நடுக் காட்டை அடைந்தபோது அவளுக்கு பேறுகால வலி வந்தது. துடிதுடித்தவளாய், என்ன செய்வது? என்று தெரியாமல் அருகில் இருந்த மரத்தின் அடியில் அமைதியின்றி நிலை தடுமாறி விழுந்தாள். பிரசவ வலி வேதனையில் துடித்துக்கொண்டிருந்தாள். யாராவது வந்து நம்மை காக்க மாட்டார்களா? என்ற நினைப்போடு வழியைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் கண்ணில் பட்டது,  இந்த சமூகத்தால் அயோக்கியன் என கருதப்பட்ட அந்த  கொடூர மனிதன் மட்டுமே. இவனையா நான் பார்க்கவேண்டும்!  இவன் எப்படி எனக்கு உதவி செய்வான் என்று அந்த பெண்ணின் மனதில் பலவிதமான எண்ணங்கள் ஒருபுறம். மறுபுறமோ வலியும் வேதனையும். துடிதுடித்துக் கொண்டிருந்தாள்.  அவ்வழியே வந்த அந்த கொடூர குணம் கொண்டவன் அந்தப்பெண்ணின் அருகில் வந்து நின்றான். அவள் துடிப்பதை சற்று நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவன் அந்த பெண்ணின் அருகில் அமர்ந்தான். தன்னுடைய கைலியை எடுத்து அந்த பெண்ணின் மீது விரித்தான். இதற்கு முன்பு வரை அவன் அவ்வாறு செய்ததே கிடையாது. இவனுக்கு இதெல்லாம் பழக்கமே கிடையாது. இருந்தபோதும், அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தான்.  குழந்தையை கையில் எடுத்தான். தான் கையில் எப்போதுமே வைத்திருக்கக்கூடிய கூரிய கத்தியை எடுத்து, தொப்புள் கொடியை வெட்டினான்.  இதற்கு முன்பு வரை இவன் அப்படி செய்ததே கிடையாது.  ஆனால் அதை அன்று அவன் செய்தான். அதன் பிறகு தாய் அரை மயக்கத்தில் முனங்கிக் கொண்டிருக்கும் போது, ஓடிச்சென்று அருகிலிருந்த ஒரு குட்டையில் இருந்து தண்ணீரை கொண்டு வந்தான். அந்த தாயின் வாயில் அந்த தண்ணீரை குடிக்கக் கொடுத்தான். அவளது கை சட்டையை சற்று விலக்கி குழந்தைக்கு உணவருந்தும் வகையில் அந்த குழந்தையை அப்பெண்ணின் மார்பகம் பக்கம் வைத்தான். இத்தகைய கதையை எழுதிய வால்ட் விட்மன் என்ற ஆசிரியர், இந்த கதைக்கு மனிதன் பிறந்தான் எனப் பெயரிட்டார்.

மனிதன் என்பவன் இவ்வுலகத்தில் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டவன் என விவிலியம் கூறுகிறது. கண்ணால் காணக்கூடிய ஒவ்வொரு மனிதனுமே இறைவனின் சாயல், இறைவனின் உருவம்.  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் உறைந்திருக்கிறார்.  அவன் உலகத்தில் மிகவும் அயோக்கியன், மோசமானவன் என கருதப்பட்டாலும், அவனுக்குள்ளும் இறைவன் உறைந்திருக்கிறார்.  இவ்வுலகத்திலேயே மிகவும் புனிதமானவன் என்று சொல்லப்படக்கூடியவர்களின் உள்ளத்தில் இறைவன் உறைந்திருக்கிறார். தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து கொள்ளும் போது மனிதன் மாமனிதனாக மாறுகிறான்.  எப்படிப்பட்ட மனிதனாக இருந்தாலும் தன்னுள் இருக்கும் இறைவனை கண்டுணர முடியும் அவ்வாறு கண்டு உணரும் போது நாம் இச்சமூகத்தில் நலமான நல்ல பணிகளை முன்னெடுத்து மனித மாண்பை முன்னிறுத்தி ஆண்டவர் இயேசுவின் சீடர்களாய் இருந்து ஒருவர் மற்றவரின் தேவைகளை சரி செய்யவும், ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன் உறைந்திருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளக் கூடியவர்களாக மாறலாம்.  

இன்றைய முதல் வாசகத்தில் நாம்  பவுலின் மன மாற்றத்தை குறித்து, பவுல் அழைக்கப்படுவது குறித்தும் நாம் வாசிக்கின்றோம்.  

பல நேரங்களில் நாம் நமக்குள்ளே இறைவனை தேடுவதில்லை. இறைவனை வெளி உலகில் தேடுகிறோம். எங்கெங்கோ தேடி அலைகின்ற இறைவனை நாம் நமக்குள் தேடி கண்டு கொள்ளவே இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.பவுல் தன்னுடைய வாழ்வில் இறைவனை தன்னுடைய கல்வி அறிவின் அடிப்படையிலும்,  சட்டங்களின் அடிப்படையிலும்.  புத்தகங்களின் அடிப்படையிலும் கடவுளைத் தேடினான். அவரால் கடவுளை கண்டு கொள்ள முடியவில்லை. அவர் கடவுளை தனக்குள் தேடியபோது தான் கடவுளை கண்டுகொள்ள முடிந்தது.  

இயேசுவை பற்றி அறிவிப்பவர்களை எல்லாம் கொன்று குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணப்பட்ட சவுல், இயேசுவின் குரலைக் கேட்டு தனக்குள்ளாக இயேசுவை தேடத் தொடங்குகிறார். அதன் விளைவு அன்று ஸ்தேவானை
கல்லெறிந்து கொல்லும் போது கல்லெறிபவர்களுக்கு சார்பாக நின்று கொண்டிருந்த சவுல்,தனக்குள் இருக்கும் இறைத்தன்மையை  கண்டுணர்ந்ததன் அடிப்படையில்  கல்லடி வாங்கி கொண்டிருந்த ஸ்தேவானோடு தன்னையும் இணைத்துக் கொள்ளக் கூடிய வாழ்வை தொடங்குகிறார். இதையே இன்றைய முதல் வாசகத்தில் நாம் தெளிவாக வாசிக்கக் கேட்டோம்.  பவுலை போலத்தான் நாமும், நமக்குள்ளாக இறைவனை கண்டுகொள்ள அழைக்கப்படுகின்றோம்.   அன்னை தெரசா அவர்கள் கூறுவார், ஒரு மனிதன் பசியால் இவ்வுலகில் இறக்கிறான் என்றால் அது கடவுள் அவனை பராமரிக்கவில்லை என்பதால் அல்ல.  உன்னையும் என்னையும் போன்றவர்கள் அவனை பராமரிக்காமல் விட்டதன் விளைவு எனக் குறிப்பிடுவார். 

 இன்று நாம் வாழக்கூடிய  உலகத்தில் நாம் பல நேரங்களில் நமக்குள் இருக்கும் இறைத்தன்மையை கண்டு கொள்வதை விட வெளியுலகில்  இறைவனைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். நாம் நமக்குள்ளாக ஒரு சுய ஆய்வு செய்து பார்ப்போம். நம்மிடம் இருக்கும் இறைத்தன்மையை கண்டுகொள்வோம். எப்படி நாம் உண்ணக் கூடிய உணவானது உடலில் கலந்து விடுகிறதோ, அது போல மனித உடலுக்குள் கலந்துள்ள இறைத்தன்மையை கண்டுகொள்வோம். 
எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.  யோவான் 6 :56 என்ற இறைவார்த்தையின் அடிப்படையில் நம்மோடு இணைந்துள்ள இறைவனை நாம்  கண்டு கொள்ளவும், அதனடிப்படையில் கண்ணால் காணும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் உறைந்திருக்கிறார் என்ற உன்னதமான உண்மை உணர்ந்து கொள்ளவும், உணர்ந்து கொண்டதன் அடிப்படையில்  நாம் தொடர்ந்து ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை காட்டக்கூடிய இயேசுவின் உண்மைச் சீடர்களாக இந்த உலகத்தில் பயணம் மேற்கொள்ள இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம். 


புதன், 21 ஏப்ரல், 2021

நம்முடன் உரையாடுகிறார் ... (22.4.2021)

நம்முடன் உரையாடுகிறார்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறை வார்த்தைகளின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய முதல் வாசகத்தில் ஸ்தேவான் கொலை செய்யப்பட்டதை பிலிப்பு மக்களுக்கு அறிவிக்கின்றார்.  பிலிப்பு அறிவிக்கக்கூடிய செய்தியைக் கேட்டு மக்கள் ஒரு மனத்தவராய் அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரது வார்த்தைகளை பின்பற்ற முயலுகிறார்கள். பிலிப்பின் வார்த்தைகளை கேட்டு அவ்வார்த்தைகளின்படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்ட அந்நகர மக்களிடையே பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று என்ற செய்தியினை இன்றைய முதல் வாசகத்தில் நாம்  வாசிக்க கேட்கிறோம். 

ஒரு இளைஞன் ஒருவன் கடற்கரை மணலில் நின்று கடவுளை நோக்கிக் கத்தினான்.  இறைவா!  என் வாழ்வில் எப்போதும் துன்பங்களே வந்து கொண்டிருக்கின்றன.  நீ என்னோடு உடன் இருக்கிறாயா? என்று கேட்டான். உடனே கடவுள், முன் நோக்கி நட என்றார்.  அவனும் முன் நோக்கி நடந்தான். அவன் அருகில் இரண்டு காலடித் தடங்கள் இருந்தன. ஒன்று அவனுடையது மற்றொன்று யாருடையது என அவனால் காண இயலவில்லை.  ஆனால் அவன் நடந்த போது அவன் தடத்திற்கு அருகாமையில் அந்தத் தடமும் வந்து கொண்டே இருந்தது. உடனே சற்று நன்றி, இறைவா! என் அருகில் இருப்பது நீர் தானா என்றான். உடனே இறைவன், நான் தான் என்றார். நீ என்னுடன் தான் நடந்து கொண்டிருக்கிறாயா? பரவாயில்லை. வா! பேசிக்கொண்டே நடப்போம் என பேசிக்கொண்டே நடக்கத் தொடங்கினான்.  திடீரென பெரிய அலை வந்தது.  பயந்து ஓடிச் சென்றான். ஓடிப்போய் ஒரு பாறையின் மீது ஏறி நின்று கொண்டான். ஓடி வந்த பாதையை திரும்பிப் பார்த்தான், ஒரே ஒரு காலடித் தடம் மட்டுமே இருந்தது.  உடனே இறைவனை பார்த்துச் சொன்னான்! நீ என்னுடைய இன்பத்தில் என்னுடன் நடந்து வந்தாய்.  துன்பத்தில் என்னை விட்டுவிட்டு ஓடிவிட்டாயே!  என்றான். உடனே கடவுள் சொன்னார்,  ஓடியது நீ  அல்ல. உன்னை தூக்கிக்கொண்டு ஓடியவன் நான். என்னுடைய காலடித் தடங்களைத் தான் நீ உன்னுடையது என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று கூறினாராம்.  பல நேரங்களில் கடவுள் நம்மோடு இருக்கிறார். பல நல்லவர்களின் வழியாகவும், நல்ல மனிதர்களின் வார்த்தைகளின் வழியாகவும் நம்முடன் இருக்கிறார்.  அவரை நாம் கண்டுகொள்வதில்லை.  எப்படி தன்னுடைய காலடி தடத்திற்கும் இறைவனது காலடித் தடத்திற்கும் வித்தியாசம் தெரியாதவனாக,  இந்த இளைஞன் இருந்தானோ, அந்த இளைஞனைப் போலவே பல நேரங்களில் நம் அருகில் இருக்கக்கக்கூடிய இறைவனது வார்த்தைகளை அறிவிக்கக்கூடிய இனியவர்களின் வார்த்தைகளை விட, மற்ற வார்த்தைகளுக்குத் தான் நாம் அதிகம் கவனம் செலுத்தி இறைவன் நம்மோடு இல்லை என எண்ணுகிறோம்.



இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவரை அவரும் ஏற்றுக்கொள்கிறார்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்பவரை அவர் புறம்பே தள்ளுவதில்லை. அவர்களை விட்டு விடுவதில்லை.  அவர்களை தந்தையிடம் கொண்டு போய் சேர்க்கின்றார் என்ற செய்தியினை நாம் வாசிக்க கேட்கின்றோம்.  நாம் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களாய்  அவர் காட்டிய வழியில் நற்செய்தியின்  மதிப்பீடுகளை பின்பற்றி வாழும்போது, நமது வாழ்வு ஆண்டவருக்கு உகந்த வாழ்வாக அமைகிறது.  அவ்வார்த்தைகளின் வழியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் படியும் இறையாட்சியின் விழுமியங்களின் அடிப்படையிலும் வாழ்வை அமைத்துக் கொண்டு பயணம் செய்யும்போது நாம் கடவுளின் பார்வையில் மதிப்பு மிக்கவர்களாகவும் மனமகிழ்வு கொண்டவர்களாகவும், எப்போதும் இன்புற்று இச்சமூகத்தில் வாழமுடியும். பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலர் ஆண்டவரின் வார்த்தைகளின்படி வாழ்வை அமைத்துக் கொள்வதில்லை. பல நேரங்களில் நற்செய்திகளுக்கு நாம் நமது செவிகளை திறப்பதில்லை.  எனவேதான் பல நேரங்களில் நாம் துன்புறுகிறோம்.  திக்கற்றவர்களாகவும்,  ஆதரவு அற்றவர்களுமாக இவ்வுலகத்தில் நாம் இருப்பது போல எண்ணுகிறோம்.  நாம் வாழும் இந்த உலகத்தில் நம்மை சுற்றி பிலிப்பை போல பல நல்லவர்கள், நல்லவிதமான வார்த்தைகளை அனுதினமும் பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நமது செவிகள் பெரும்பாலான நேரங்களில் நற்செய்திகளுக்கும் நல்ல வார்த்தைகளுக்கும் செவி திறப்பது இல்லை. மாறாக அதற்கு எதிரானவைகளின் மீதே அதிக கவனத்தை செலுத்துகின்றனர். அதன் விளைவாக நாம் பல நேரங்களில் இன்னல்களையும் துன்பங்களையும் மட்டுமே நமது வாழ்வுக்கான நோக்கமாகவும் இலக்காகவும் குறிக்கோளாகவும் கொண்டு வாழ்வில் பல நேரங்களில் துன்புற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய நல்லவர்களின் நல்ல வார்த்தைகளை செவி திறந்து கேட்கக் கூடியவர்களாகவும் இந்நாளில் மாறிட அழைக்கப்படுகிறோம்.  அவ்வாறு நாம் நல்லவர்களின் வார்த்தைகளுக்கு செவி திறக்கும் போது, நாமும் மனமகிழ்வு கொண்டவர்களாக மாறுவோம். நம்மையும் இறைவன் தன்னுடைய மக்கள் என அழைத்து தன்னோடு சேர்த்துக் கொள்வார். அவர் நம்மைக் கைவிடுவதில்லை. நம்மை விட்டு விலகுவதில்லை. நம்மோடே இருக்கின்றார் என்பதை அப்போது நாம் உணர்ந்து கொள்ள முடியும்.  இதற்கான அருளை உணர்ந்து கொள்ள முடியும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை சுற்றி பல நல்ல மனிதர்களின் வழியாகவும், நற்செயல்கள் வழியாகவும், நல்ல சொற்களின் வழியாகவும், அனுதினமும் நம்முடன் உரையாடுகிறார் என்பதை கண்டு நடந்து கொண்டு வாழ்வை அழகாக்கிட இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

வாழ்க்கை வாழ்வதற்கே... (21.04.2021)

வாழ்க்கை வாழ்வதற்கே ...

வாழ்க்கை வாழ்வதற்கே என்று உற்சாகத்தோடு உத்வேகத்தோடு சிறப்பாக வாழ ஆசைப்படும் அன்பு உள்ளங்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகம் ஸ்தேவான் இறந்த பின்பு இறைப் பற்று கொண்டவர்கள் யூதேயா சமாரியா பகுதிகளில் சிதறடிக்கப்பட்டு போனதையும், சவுல் வீடு வீடாகச் சென்று ஆண்களையும் பெண்களையும் சிறைப்பிடித்துச் சென்றதையும், பிலிப்பு சமாரியா பகுதியில் மெசியாவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததையும் அவர் வழியாக இறைவன் அங்கு பல்வேறு நோய்களை குணமாக்கியதையும், கால் ஊனமுற்றோர் முடக்குவாதமுற்றோருக்கும் குணம் கொடுத்ததையும், பேய்களை ஓட்டியதையும், எடுத்துரைக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஆண்டவர் தந்தையின் திருவுளத்திற்கு ஏற்ப இவ்வுலகில் எவரையும் அழியவிடாமல் அவர்களை உயிர்த்தெழச் செய்ய வேண்டும். அவர்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும். ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவராக அனைவரும் நிலை வாழ்வைப் பெற வேண்டும். இதுவே என் பணி. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் புறம்பே தள்ளி விட மாட்டேன் என்று கூறுகிறார். 

இந்த உலகில் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் பொழுது நல்ல உடல் நலத்துடன் முழுமையாக வளர்ச்சியடைந்த உடல் உறுப்புகளுடன் பிறக்க வேண்டும் என்றே எல்லோரும் விரும்புவர். ஆனால் பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லாமல் சிறிய அளவிலான இரண்டு கால்களுடன் பிறந்த ஒரு ஆண் குழந்தை தனது நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு இன்று இவ்வுலகில் அனைத்து மனிதருக்கும் போராட்டங்களை வெல்லக் கற்றுத் தரக்கூடிய ஒரு மாமனிதராக வளர்ச்சி அடைந்த நிலையை, வாழ்வு பெற்ற நிலையை நிக் என்ற உலகப்புகழ் பெற்ற மனிதரில் நாம் காண்கிறோம். தனக்கென்று இவ்வுலகில் வாழ்வதற்கு சரியான உடல் கூட இல்லையே என்று தன்னையே அழித்துக் கொள்ள வேண்டும் என்று கூட நினைத்த நிக் என்ற மனிதர் இன்று இறைவன் தனது வாழ்வுக்கு என்று ஒரு மிகப்பெரிய திட்டத்தை வைத்திருப்பதை உணர்ந்துகொண்ட அந்த நிமிடத்தில் இருந்து தன்னை உலகம் முழுவதற்கும் முன்னேற்றங்களை கற்றுத் தரக்கூடிய ஒரு மனிதராக இன்று உயர்ந்து நிற்கின்றார். 

 இவரைப் போலவே இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இன்றைய இறைவார்த்தையின் வழியாக இயேசு ஆண்டவர் இவ்வுலகில் உள்ள அனைவரும் வாழ்வு பெற வேண்டும். எவரையும் அழிய விடுவது தந்தையின் விருப்பம் அல்ல. என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் இவ்வுலகிற்கு வந்தேன் என்று கூறுகிறார். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே தந்தையின் திருவுளம் என்பதை எடுத்துரைக்கிறார். 

இன்றைய நாளில் நாமும் மகனாகிய இயேசு கிறிஸ்துவையும் சிறப்பாக கண்டு கொண்டு அவற்றில் நமது நம்பிக்கையை ஆழப்படுத்த அவர் பாதத்தில் சில மணித்துளிகள் செலவிடுவோம். ஆண்டவர் இயேசுவை நமது உள்ளத்தின் கோவிலில் கண்டு கொண்டவர்களாக, அவர் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக அவரது கரங்களில் நம்மையே ஒப்புக் கொடுப்போம். அவரது கரங்களில் இருந்து நிலை வாழ்வையும் நிறைவான மகிழ்ச்சியையும் பெற்றுக்கொள்வோம். மல்லிகை தோட்டத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்பதற்கு ஏற்ப, ஆண்டவர் இயேசுவிடம் இருந்து நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ளும் நாமும் இன்று நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு விளம்பரம் இல்லாமல் வாழ்வை வழங்கும் இறையருளை வேண்டி இணைந்து செபிப்போம்.

திங்கள், 19 ஏப்ரல், 2021

திருமண விழா நன்றியுரை.

திருமண விழா நன்றியுரை.
1. இன்பம் பொங்கிடும் இந்த நல்ல நாளிலே இனிய நல்வேளையிலே என் இல்லத்தின் திருமண விழா இனிதே நடைபெற, அன்பு உள்ளங்கள் கனிராஜ் - ஜெய ருபி, இறையருளால் தமது இல்லற வாழ்வை இனிதே தொடங்க இன்று இந்த நிகழ்வை தொடங்கி வைத்து வழிநடத்திக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு முதற்கண் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

2. ஒரு பங்கின் வளர்ச்சிஅந்த பங்கை வழிநடத்திக் கொண்டிருக்கும் பங்கு தந்தையரின் நோக்கிலும் வாக்கிலும் அடங்கியுள்ளது என்று கூறுவார்கள். அந்த வகையில் நமது பங்கை சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கும் நமது பங்கின் பங்குத்தந்தை அருள்திரு மைக்கேல்ராஜ் அவர்களுக்கும் நமது உதவி பங்குத்தந்தை அருட்திரு ஸ்டீபன் மரியதாஸ் அவர்களுக்கும் மற்றும் தொண்டி பங்கின் பங்குத்தந்தை அருட்திரு சவரிமுத்து அவர்களுக்கும் இன்றைய நாளில் எமக்காக திருப்பலி நிறைவேற்றி ஜெபித்து எம் அன்பு பிள்ளைகளை ஆசீர்வதித்த எம் அருட்தந்தையர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

3. சகோதரர்கள் ஒன்றித்து வாழ்வது எத்துணை நன்று எத்துணை இனியது என்பதற்கேற்ப எங்களோடு என்றென்றும் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது இல்லத்தின் அன்பு நிறைந்த அருள் சகோதரிகள்
...........................,.............................
இன்று எங்களோடு இணைந்து எங்களில் ஒருவராக நமது அன்பு பிள்ளைகளுக்காக ஜெபித்து வாழ்த்து வந்திருக்கும் அருட் சகோதரிகள் அனைவருக்கும் எங்களது அன்பின் வாழ்த்துக்களை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

4. வானவில்லுக்கு ஏழு வண்ணங்கள் உண்டு. இனிய சுவையில் ஆறு வகை உண்டு. அந்த வகையில் எமது குடும்பத்தின் வானவில்லாக அறு சுவை சேர்க்கும் நறுமணமாக இன்று எம்மோடு இணைந்து இந்த நமது திருமண விழா செல்வங்களை வாழ்த்தி ஜெபிக்க இங்கு வந்திருக்கும் எமது உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவருக்கும் நன்றி! அனைத்திற்கும் நன்றி!

இயேசுவைக் கொன்று விட்டார்களா? (20.4.2021)

இயேசுவைக் கொன்று விட்டார்களா?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு பாலைவனத்தில் ஒரு மனிதன் ஆராய்ச்சிக்காக சென்றிருந்த பொழுது தனது குழுவினரை விட்டுவிட்டு வழிதவறி தனியே நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு மிகுந்த தாகமாக இருந்தது. அவன் வந்து கொண்டிருந்த வேளையில் தண்ணீர் அடித்து எடுக்கும் ஒரு தண்ணீர் குழாய் அங்கே இருந்தது. அந்தக் குழாய்க்கு வெளியே ஒரு செம்பில் தண்ணீரும் இருந்தது. அருகிலேயே ஒரு வாசக பலகை, அதில், இந்த தண்ணீரை அந்த குழாயினுள் ஊற்றியபின் தண்ணீர் பிடித்து குடிக்கவும். மீண்டும் இந்த செம்பில் தண்ணீர் நிரப்பி இங்கு வைக்கவும் என எழுதி இருந்தது. ஆனால் அந்தக் குழாயோ துருப்பிடித்து போனதாக இருந்தது. இதனால் அந்த மனிதனுக்கு இந்த செந்தில் இருக்கும் தண்ணீரை ஊற்றினால் இந்த துருப்பிடித்த  இந்தக் குழாயிலிருந்து தண்ணீர் வருமா என்று ஒரு சந்தேகம் எழுந்தது.

          ஆயினும் உள்ளத்தில் ஏதோ ஒரு சிறு பொறி தட்ட, அவன் அந்த தண்ணீரை அந்த குழாயினுள் ஊற்றினான். குழாயின் கைப்பிடியைப் பிடித்து அடித்தான். தண்ணீர் இரண்டு நிமிடங்களில் பொங்கி வழிந்தது. தாகம் தீர தண்ணீரைக் குடித்துவிட்டு மீண்டும் அந்த செம்பில் தண்ணீர் நிரப்பி வைத்து விட்டுச் சென்றான்.
ஆம் அன்புக்குரியவர்களே! இன்றைய வாசகங்கள் வாழ்வுக்கான வழியைப் பற்றியும் அதை எதிர்ப்பவர்களின் மன நிலையைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன. 

இன்றைய முதல் வாசகத்தில் புனித ஸ்தேவான் இயேசு கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த பரிசேயர்களையும் சதுசேயர்களையும் நோக்கி, "மிகப் பெரிய இறைவாக்கினரான இயேசுவை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்!" என துணிவோடு எடுத்துரைத்ததையும் விண்ணுலகில் கடவுளின் மாட்சியை கண்டதையும், ஸ்தேவானின் அருளுரையை ஏற்க விரும்பாத பரிசேயர்களும் சதுசேயர்களும் அவரை கல்லால் எறிந்து கொன்றதையும், இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு ஆண்டவர், "வாழ்வு தரும் உணவு நானே! என்னிடம் வருபவருக்கு பசியே இராது! தாகம் இராது!" என்று கூறுவதையும் நாம் காண்கிறோம். 

நாம் இன்று மேற்கண்ட பாலைவன பயணம் செய்த மனிதன், அவன் சந்தித்த அடிகுழாய்க்கு அருகில் இருந்த தண்ணீரை குழாய்க்குள் ஊற்றிய பொழுது உள்ளிருந்து தண்ணீர் ஊற்றெடுத்து அந்த மனிதனுக்கு நிறைவை அளித்தது போல இயேசு ஆண்டவரும், தன்னுடைய சிலுவைப் பலியின் வழியாக, வாழ்வை ஊற்றெடுக்கச் செய்தார். நன்மைகளை ஊற்றெடுக்க செய்தார். 

இன்று நாமும் இயேசு ஆண்டவர் காட்டிய வாழ்வின் பாதையில் வழி நடக்க, அவரை நோக்கி செல்ல, அவரை பின்பற்றி செல்ல, அவரைச் சென்று அடைந்திட நமக்கு அழைப்பு தருகின்றார்.

நாமும் நல்ல அனுபவசாலிகள் ஆகிவிடுவோம்!
 நன்மைகளில் மற்றவர்களையும் வாழ வைப்போம்!
எனவே இயேசுவின் பின்னால் நாமும் செல்வோமா!!!!
👍

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

வானதூதரின் முகம் போல்! (19.4.2021)

வானதூதரின் முகம் போல்!

இறை வல்லமையால் ஒளியூட்டப்பெறும் அன்பு உள்ளங்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒருமுறை மதியம் மறைக்கல்வி வகுப்புகள் முடிந்து வீடு திரும்பிய சிறுவன் தன் தாயிடம், அம்மா! கடவுள் மிகவும் அழகாக இருப்பார்! அவரை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? என்று கேட்டான். தாய், இல்லை என்று சொன்னாள். கடவுள் நல்லவர் அம்மா. தன்னைத் தேடுவோருக்கு அவர் தன்னை வெளிப்படுத்துவார் அம்மா! என்று தன் தாயிடம் கூறிய அச்சிறுவன் மீண்டும் தாயிடம், எனது மறைக்கல்வி ஆசிரியர் கூறிய கடவுளை இன்று நான் காண விரும்புகிறேன். அவருக்கு நான் எதையாவது கொடுக்க வேண்டும்! பின்னர் அந்த கடவுளை பற்றி நான் உங்களிடம் பேசுவேன், என்று கூறியவனாக தனது மதிய உணவை எடுத்துக்கொண்டு அந்த வீட்டைக் கடந்து அருகிலிருந்த கடை வீதியையும் கடந்து அருகில் இருந்த ஒரு பூங்காவின் வழியாகச் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது அந்தப் பூங்காவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கே ஒரு முதியவர் மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டே அச்சிறுவர்கள் விளையாடுவதை இரசித்துக் கொண்டிருந்தார். அவரது அருகில் சென்ற அச்சிறுவன் அவரின் புன்னகையை கண்டதும் தானும் அவரை நோக்கி புன்னகை செய்தான். அந்த புன்னகையில் தனது பயணத்தின் களைப்பை மறந்தான். அவரோடு அவனுக்கு பேச வேண்டும் போல இருந்தது. உடனே அவரின் அருகில் அமர்ந்து அவரோடு உரையாட ஆரம்பித்தான். அவரது உற்சாகமூட்டும் வார்த்தைகளில் மிகவும் மகிழ்ந்தான். பின்னர் அவனுக்கு சற்று பசி எடுப்பது போல் தோன்றவே தனது மதிய உணவை பிரித்தான். அந்த முதியவருக்கும் தன்னுடைய உணவை வழங்கியவனாக தானும் அந்த உணவை உண்டான். அவரது புன்னகை தவழ்ந்த முகத்தின் அன்பு நிறைந்த வார்த்தைகளில் அவன் மிகுந்த ஆனந்தம் அடைந்தான். அந்த முதியவரும் சிறுவனோடு அன்போடு மகிழ்வோடும் உரையாடினார். அச்சிறுவன் கொண்டுவந்த உணவின் ஒரு பகுதியை தானும் உண்டு மகிழ்ந்தார். இருவரும் மாலையில் அவரவர் வீட்டிற்குச் சென்றனர். 

 அச்சிறுவன் மகிழ்வுடன் தன் தாயிடம் வந்து, அம்மா நான் கடவுளைப் பார்த்தேன். அவரோடு பேசி விளையாடி மகிழ்ந்தேன். அவருக்கு மிகவும் வயதாகி விட்டது. அவரது புன்னகை அன்பு நிறைந்த புன்னகை. அது அனைவரையும் அன்புடன் நோக்கி பார்க்கும். அனைவரின் உள்ளத்திலும் மகிழ்வை ஊற்றெடுக்கச் செய்யும் என்று கூறினான். 

பூங்காவில் இருந்து மிக மெதுவாக தன்னுடைய வீடு நோக்கிச் சென்ற அந்த முதியவர் தன்னுடைய மனைவியை பார்த்து இன்று நான் கடவுளை கண்டேன். அவர் இளமைத் துடிப்புடனும் சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் தன்னுடைய பணிகளை செய்கிறார் என்று கூறினார்.

இன்றைய முதல் வாசகத்தில் புனித ஸ்தேவான் தூய ஆவியானவரின் ஆற்றல் பெற்றவராக இறை அருளும் வல்லமையும் நிறைந்தவராக பல்வேறு செயல்களைச் செய்கிறார். இவன் திரு சட்டத்திற்கு எதிராக செயல்படுகின்ற பொய் சாட்சிகள் அவரை நோக்கி கத்தினாலும், இதை வல்லமையால் ஆட்கொள்ளப்பட்ட அவரின் மூலமும் அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கு வானதூதரின் முகம் போல பிரகாசமாக இருந்தது என இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம். 
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவரால் உணவு ஊட்டம் பெற்ற மக்கள் அவரைத் தேடிச் செல்வதை நாம் காண்கிறோம். அப்பொழுது ஆண்டவர் கூறுகிறார், நீங்கள் அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். அழியாத நிலை வாழ்வு தரும் உணவிற்கே உழையுங்கள் என்று கூறுகிறார். எனவே அங்கிருந்த மக்களும் கடவுளுக்கு ஏற்றவையாக எமது செயல்கள் இருக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவரைக் கேட்டனர். 
                              

இன்றைய சிந்தனையின் தொடக்கத்தில் நாம் கண்ட பூங்காவில் சந்தித்த முதியவரும் சிறுவனும் தன்னுடைய அன்பான வார்த்தைகளாலும் கனிவான பார்வையாலும் ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டி உதவிக்கரம் நீட்டி ஆண்டவரை தேடும் காரியத்தில் மகிழ்வான அனுபவம் பெற்றனர். 

இன்றைய முதல் வாசகத்தில் தூய ஸ்தேவானின் முகம் அவர் ஆற்றிய அரும்செயல்களாலும் நற்செயல்களாலும் அவரின் முகம் பிரகாசிக்க கண்டனர். 
ஆண்டவர் இருக்கேன் பணிந்து அவரது பணிகளை ஆற்றுகின்றன ஒவ்வொருவரின் முகமும் ஆண்டவரின் ஆசியால் வல்லமையால் நிரப்ப பெற்று வானதூதரின் முகம் போல பிரகாசமாக ஒளி வீசும்.

            இன்று நாம் வாழும் இவ்வுலகில் நாம் சந்திக்கும் நமது அன்றாட நிகழ்வுகளில் நாம் ஆண்டவரின் துணையை நாடி அவரது அன்பில் நிறைந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருகின்றோமா? என்பதை சிந்திப்போம்.

ஆண்டவரோடு இணைந்து இருப்பவர்கள் ஒருபோதும் வெட்கத்திற்கு உள்ளாவது இல்லை, என்ற வார்த்தைக்கு ஏற்ப நமது வாழ்வில் நாம் சந்திக்கும் சவால்களுக்கு மத்தியிலும் ஆண்டவரின் அருள் நிறைந்த வல்லமையை நம்மை தாங்குகிறது என்பதை உணர்ந்தவர்களாக வானதூதரின் முகம் போல மகிழ்வும் அருளும் நிறைந்தவர்களாக நமது இல்லங்களிலும் நம்மைச் சுற்றி வாழ்கின்ற ஒவ்வொருவரிடமும், நன்மை தனங்கள்  வெளிப்பட நாமும் இறைவனின் கருவியாகிட இறையருளை நிறைவாக வேண்டி இணைந்து ஜெபிப்போம்.

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

பணிகளை பகிர்வோம்.... (18.4.2021)

பணிகளை பகிர்வோம்....

அனுதினமும் ஆண்டவரின் பணியை செய்யப் புறப்படக்கூடிய அன்பர்களே வணக்கம்!
 இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்து பணி செய்ய அழைப்பு விடுக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் கைம்பெண்கள் கவனிக்கப்படாததைக் குறித்து சீடர்களுக்குள்ளேயே சலசலப்பு ஏற்படுகிறது.
 அவர்களுக்குள் எழுந்த சலசலப்பை உணர்ந்துகொண்ட இயேசுவின் உடன் பயணித்த சீடர்கள் அனைவரும் ஒன்று கூடி, சிலரை பந்தியில்  பரிமாறுவதற்கு என தேர்வு செய்கிறார்கள்.  தங்களுடைய பணிப் பொறுப்புகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள். 

           இன்று நாம் வாழக்கூடிய இந்தச் சூழ்நிலையில் பெரும்பாலும் அனைத்து விதமான பொறுப்புகளையும் அனைத்துப் பணிகளையும் நாமே முன்னெடுக்க வேண்டும். அனைத்துப் புகழும் பெருமையும் நமக்கே கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயணிக்கின்றோம். அப்படி பயணிப்பதிலோ, ஈடுபாட்டோடு செயல்படுவதிலோ தவறில்லை. ஆனால் அவ்வாறு செய்யும் பொழுது பல நேரங்களில் நாம் பலரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். எப்படி அனைத்து பணிகளையுமே சீடர்கள் கவனித்துக் கொண்டிருந்த போது கைம்பெண்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டார்களோ அது போல பல நேரங்களில் நம்மையும் அறியாமல் பணிச்சுமை காரணமாக பலரை கண்டுகொள்ளாமல் இருந்து விடுகிறோம்.  இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் விவேகம் உள்ளவர்களாக செயல்படவே இன்றைய வாசகங்கள் வழியாக நாம் அழைக்கப்படுகிறோம். 

              இதையே  இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நாம் வாசிக்க கேட்கிறோம்.  இயேசுவின் சீடர்கள் கடலில் பயணம் செய்கிறார்கள். ஆனால் இயேசு கடல் மேல் நடந்து அவர்களை நோக்கி வருகிறார். இயேசுவையும் அவர்கள்  பேய் எனக் கருதி அஞ்சினார்கள்.  அவர்களிடம் இயேசு "அஞ்சாதீர்கள்"! என்று கூறினார்.

 இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பெரும்பாலும் பணிகளை நாம் பகிர்ந்து கொள்ளாமல் பணிச்சுமைகளை நாமே ஏற்றிக்கொண்டு அதிகமான பழுச் சுமைகளை கொண்டிருக்கிறோம் என்று கூறிக்கொண்டு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதிகமான துன்பங்களை கடவுள் நமக்கே தருகிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நம்மிடம் கடவுள் கொடுக்கக் கூடிய பணிப் பொறுப்புகள் அனைத்துமே நாம் மட்டும் செயல்பட வேண்டும் என்பதற்காக அல்ல. அதை அடுத்தவரோடு செயல்படவே அடுத்தவரோடு பகிர்ந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காகவே இறைவன்  நமக்கு பணிகளையும் பொறுப்புக்களையும் வழங்குகிறார். அதனை நாம் உணர்ந்து கொண்டு நடந்துகொள்ள வேண்டும் இதனை உணர்ந்து கொள்ளாமல் இயேசுவைப் பேய் என எண்ணி கலங்கிய சீடர்களைப்போல பணிகளைக் கண்டு பணிச்சுமைகளைக் கண்டு பயந்து அஞ்சி பணிச்சுமைகளைக் கண்டு பயந்து அஞ்சி நடுங்காமல், பகிர்ந்து கொண்டு நாமும் ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக தொடர்ந்து பயணிக்க அழைக்கப்படுகிறோம். எனவே பணிகளை பகிர்ந்து அதனோடு இணைந்து ஆண்டவர் இயேசுவின் அன்பையும் அருளையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும், அனைவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளவும் இறையருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம்.

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...