திங்கள், 31 மே, 2021

உடைந்தாலும் உருக் கொடுத்திடலாம்!.... (1.6.2021)

உடைந்தாலும் உருக் கொடுத்திடலாம்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 கடவுள் எப்பொழுதும் உடைந்த பொருட்களை மிக அழகாக பயன்படுத்துவார். 

உடைந்த மேகங்கள் தான் மழை பொழியும்!
 உடைந்த நிலம்தான் உழும் வயலாக மாறும்!
  உடைந்த நெல் தான் விதையாகும்!

 ஆனால், எப்போதாவது உடைந்து நொறுங்கினால், நம்புங்கள்! கடவுள் உங்களை பெரிய விஷயத்திற்கு தயார்படுத்துகிறார் என்று கூறுவார்கள்.

 இன்றைய நாளில் நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தையில் உடைபடக் கூடிய மனிதர்களை நாம் சந்திக்கிறோம். 

ஒன்று தோபித்து, கண் பார்வையோடு இருந்த நபர் திடீரென ஒரு குருவியின் எச்சம் அவர் கண்ணில் விழ, பார்வை இழந்தவராக மாறுகிறார். பார்வையுள்ள ஒரு நபர் பார்வையை இழந்து விட்டார் என்றால் அவருடைய நிலை அந்தோ பரிதாபம்! ஆனாலும் பார்வையற்ற அந்த நிலையிலும் நேர்மையோடு இருக்க எண்ணுகிறார். உடைந்துபோனவராக மாறினாலும் கூட தான் உடைபட்டதைக் குறித்து எண்ணி வருந்துவதை விட உடைபட்ட நிலையிலும் ஆண்டவருக்கு உகந்த வாழ்வு வாழவேண்டும் என எண்ணுகிறார். எனவே தான் தன் மனைவியின் உழைப்பின் பயனாக கொண்டுவந்த ஆட்டுக்குட்டியைக் கூட பார்வையற்ற நிலையில் இருந்த அவர் உண்மையிலுமே  இது உழைப்பின் பயனாக கிடைத்ததா? அல்லது வேறு ஒருவர்க்கு உரியதா? என்பதை ஆய்ந்து   அறிகின்றார். அதன் அடிப்படையில் அதனை பயன்படுத்த  முயலுகின்றார் என்பதை முதல் வாசகம் தெளிவுபடுத்தியது. 

இன்றைய நற்செய்தி வாசகத்திலும்  ஆண்டவர் இயேசுவை உடைத்துப் பார்க்க ஆசைப்பட்டார்கள்.  இயேசுவின் மீது எப்படி குற்றம் சுமத்தலாம் என்ற எண்ணத்தோடு பின் தொடர்ந்து கொண்டிருந்த பலர்,  ஒரு நாணயத்தை எடுத்து ஆண்டவர் இயேசுவை சோதிக்க முற்படுகிறார்கள். இதை சீசருக்கு செலுத்துவதா? கடவுளுக்கு செலுத்துவதா? என்ற கேள்வியை எழுப்பி, இவன் சீசருக்கு செலுத்த வேண்டியதில்லை என்று சொன்னால் அரசியல் ரீதியாக இவனை கைது செய்யலாம்! குற்றம் சுமத்தலாம்! என்ற நோக்கத்தோடு பயணம் செய்தவர்கள். அவர்களுக்கு மத்தியில் இயேசு கிறிஸ்து, தன்னை உடைப்பதற்கான முயற்சியில் பலர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதும்,  அங்கு அவரை சுற்றி இருந்த அவர்களுடைய உள்ளங்களை  அறிந்தவராய்,  ஆண்டவர் இயேசு  கிறிஸ்து அவர்களிடம் விவேகத்தோடு பதில் கூறுகிறார்,  யாருக்கு உரியதோ அவருக்கு இதை செலுத்துங்கள் என்று! இதில் பொறிக்கப்பட்டுள்ள முத்திரை யாருடையது? என்ற கேள்வியை எழுப்பி,  அப்படியாயின் சீசருக்கு உரியதை சீசருக்கும் கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் செலுத்துங்கள் என்று கூறுகிறார்.  
நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் பல நேரங்களில் இயேசுவை சோதிக்க முற்பட்டது போல பலர் நம்மை சோதிக்கலாம். அந்த சோதனைகளில் பல நேரங்களில் இயேசுவைப் போல நாமும்  விவேகத்தோடு வெளிவர முடியும்.  பல நேரங்களில் விவேகம் அற்றவர்களாக, உடைந்து போகக்கூடியவர்களாக நாம்  மாறிடவும் முடியும். உடைந்து போகின்ற போதெல்லாம் மனம் உடைந்து விடாதீர்கள்.  நீங்கள் உடைபட்டாலும் உங்கள் நம்பிக்கை உடைபடல் கூடாது.  உங்கள் உள்ளத்தில் ஆழமாக இருத்திக் கொள்ளுங்கள்! எல்லா அருளும் நிறைந்த இறைவன் நமக்கு வழி காட்டுவார்.  நமக்கு துணை நிற்பார். நம் சார்பாக செயலாற்றுவார்   என்பதை மனதில் நிறுத்துங்கள்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து எப்படி விவேகத்தோடு செயல்பட்டாரோ  அவரைப் போல உடைபடக் கூடிய சூழல் உருவாகும் போதெல்லாம் விவேகத்தோடு நாம்  செயல்பட அழைக்கப்படுகின்றோம்.  ஒருவேளை நாம் பலருடைய சூழ்ச்சிகளால் உடைபட்ட நிலையை அடைந்தாலும் மனம் தளர வேண்டாம். உடைபட்ட   நிலையிலும் எப்படி தோபித்து நேர்மையாளராக இருக்க விரும்பினாரோ அத்தகைய நேர்மையாளராக நாமும் இருப்பதற்கு அழைக்கப்படுகின்றோம். இன்று நிலவக்கூடிய இந்த இக்கட்டான சூழ்நிலைகள் அனுதினமும் நம்மை உடைத்துக் கொண்டிருக்கின்றன.  நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கை நாம் கொண்டிருக்கின்ற அன்புறவு,    நாம் கொண்டிருக்கக்கூடிய தோழமை என்ற அனைத்தையும் இந்த தொற்றுநோய் உடைத்துக் கொண்டு இருக்கிறது.   விவேகத்தோடு இருப்போம் இந்த நாட்களில். அதேசமயம் உள்ளம் உடைந்து போனாலும் உங்களிடம் இருக்கின்ற நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். 

           உடைபட்ட மேகங்கள் மழையை தருவது போல, உடைப்பட்ட நிலம் உழும் வயலாக மாறுவதுபோல, உடைபட்ட நெல் மீண்டும் விதையாக மாறுவது போல, உடைபடுகின்ற நம்மை கடவுள் பலவிதமான அனுபவங்களால் தேற்றி, மீண்டும் உயர்த்துவார் என்பதை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். அந்த இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு உடைபடும் நேரங்களிலும் உங்கள் நம்பிக்கையை இறுகப் பிடித்துக் கொண்டு மீண்டும் எழுந்து நிற்க இறை அருளை இன்றைய நாளில் வேண்டுவோம்.

      நம்மோடு மட்டும் இதனை நிறுத்திவிடாமல் உடைபட்டு இருக்கக்கூடிய இந்த சமூகத்தில் பலவித காரணங்களால் மனமுடைந்து இருக்கக்கூடிய பலரைக் கண்டு கொள்வோம். அவர்களும் எழுந்து நிற்க நாம் நம்மாலான சின்னஞ்சிறு முயற்சிகளை அவர்களுக்கு செய்வோம். அடுத்தவருக்கு நம்பிக்கை ஊட்டுவோம். அடுத்தவரின் செயலை ஊக்கப்படுத்துவோம், பாராட்டுவோம்.  சோதிக்கும் நோக்குடன் பலர் சுற்றி வந்தாலும் அவர்களை கண்டு அஞ்சாது விவேகத்தோடு துணிவோடு எழுந்து நிற்போம். உடைபட்ட உள்ளங்களாகிய  நம்மை இறைவன் உயர்த்துவார் என்ற நம்பிக்கையோடு இன்றைய நாளில் தொடர்ந்து பயணிப்போம்.

ஞாயிறு, 30 மே, 2021

உங்களுக்கு கடிதம் எழுத எண்ணினேன் ...(31.5.2021)

அன்புள்ள உடன் பிறப்புக்கு! அன்புச் சகோதரனின் அன்பு மடல்!
திரும்பும் திசை எங்கும் மரண ஓலங்கள்! 
இறந்துபோன உடல்களை எரிப்பதற்கு விறகு வாங்குவதற்குக் கூட வழியில்லை என்ற சூழ்நிலையில், இறந்த உடல்களை கங்கை நதியில் விட்டுவிடக் கூடிய அவலங்கள். 
நாளுக்குநாள் ஓய்வின்றி எரியக் கூடிய மயானங்கள். 
அங்கே அழுகுரலுக்கு பஞ்சமில்லை, 
அழுகையும் நின்றபாடில்லை அரசு மருத்துவமனைகளில்! 
திரும்பும் திசையெங்கும் பலவிதமான மக்கள் கொரோனா தொற்று நோயின் காரணத்தினால் அனுதினமும் சுவாசிக்கக் கடினப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த அவலநிலை!

தொடர்ந்து கொண்டே இருக்கிறது இரண்டு வருடங்களாக! என்று இந்த நிலை மாறும் என்பது தெரியாத வண்ணம்.... 
எத்தனையோ முயற்சிகளை அரசு முன்னெடுத்து கொண்டே இருந்தாலும் கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கிறது இன்றைய சூழல்!

இந்தச் சூழலில் வெளியே செல்ல அஞ்சி வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருக்கக்கூடியவர்கள் பலர்!  வாரத்தில் ஒருநாள் கடைகளைத் திறந்து வைத்தால், இருப்பதையெல்லாம் நாம் வாங்கி வீட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவன் வீட்டில் உலை வைக்க அரிசி இருக்கோ இல்லையோ என் வீட்டில் ஒரு மாதத்திற்கு தேவையானது இருக்க வேண்டும் எங்க எண்ணத்தோடு நகரக்கூடிய ஒரு மக்கள் கூட்டம். 
இவ்வாறு இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், வியந்து போனேன் ஒரு சிலரை கண்டு. 

திரும்பிய திசை எங்கும் அழுகுரலும், வறுமையும், பசியும், தலைவிரித்தாடி கொண்டிருக்க, பல தன்னார்வலர்கள் இணைந்து பசியால் வாடி கொண்டிருப்பவர்களுக்கு தினமும் உணவளிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்ற செய்தியைக் கேட்ட பொழுது பாரதி கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. இந்த ஜெகத்தில் எங்கே யாரேனும் ஒருவருக்கு உணவு இல்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்! என்ற பாரதியின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. 

ஆங்காங்கே பலர் இணைந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து அதன் மூலம் பலரின் பசியை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்... செய்தியைக் கேட்ட போது உள்ளம் மகிழ்ந்தேன், இன்னும் மனிதநேயம் மறையவில்லை மனிதன் இடத்திலிருந்து என்று உணர்ந்து கொண்டேன்.

இன்றைய நாளில் நாம் விவிலியம் வாசிக்கும்போது திரு அவை இன்று அன்னை மரியாள் எலிசபெத்தை  சந்திக்கும் நிகழ்வை நினைவு கூருகிறது. 

எலிசபெத்தம்மாள் நிறைமாத கர்ப்பிணி பெண்ணாக, முதிர்ந்த வயதில் வயிற்றில் குழந்தையை சுமந்த வண்ணமாய், இருந்தவள். இந்தப் பெண்மணியை நோக்கிய அன்னை மரியாள் சென்றாள். அவருடைய துன்பத்தில் அவருடன் இருந்தாள். அவரை பராமரித்தாள். ஆனால் இன்று சொந்த வீட்டில் உள்ளவர்களை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு விட்டார் என தெரிந்ததும், அவர்களிடம் இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள கூடிய நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் இவர் செய்து  சரி, அவர் செய்வது தவறு எனக் கூறுவது ஏற்புடையதாகாது.  இருந்த போதிலும் அடுத்தவரின் துயரத்தை நம் துயரமாக காண இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது. 
முதிர்ந்த வயதில் கருவுற்றிருந்த எலிசபெத்தம்மாளின் அந்த நிலை, அவர்களுக்கு எவ்வளவு துயரமாக இருந்திருக்கும் என்பதை ஒரு பெண்ணாக அன்னை மரியாள் அறிந்திருப்பார். எனவேதான் அன்னை மரியாள் தேடிச் சென்றாள். அவருக்குத் துணையாக இருந்தாள். துன்பத்தில் பங்கு எடுத்தாள். 

        இங்கு நாம் வாழும் சமூகத்தில் ஆங்காங்கே அடுத்தவரின் துயரத்தை தன் துயரம் என எண்ணி, அடுத்தவரின் பசி போக்கி அதில் மகிழக்கூடிய மனிதர்களாக பலர் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவராக, நாமும் செயல் ஆற்றிட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். 
            வெறும் வார்த்தைகளால் எழுதப்பட்டதுதான் இந்த கடிதம் என எண்ணி இதை படித்துவிட்டு நகர்ந்து விடாமல், நாமும் நாம் வாழ்கின்ற பகுதியில், நாம் வாழ்கின்ற இடங்களில், யாரேனும் ஒருவர் துன்புறுகிறார், பசியால் வாடுகிறார், தேவையில் இருக்கிறார், என அறிந்தால் அவர்களின் தேவையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். அடுத்தவரின் துயரத்தினை நம்மால் முழுமையாக நிவர்த்தி செய்ய முடியாவிட்டாலும், பல தன்னார்வலர்கள், பல தொண்டு நிறுவனங்கள் மூலமாக, அவர்களின் தேவையை நிறைவேற்றிட வழிகாட்டும் பணியிலாவது நாம் ஈடுபடுவோம். 
         எப்படி அன்னை மரியா எலிசபெத்தைம்மாளை தேடி சென்றாரோ, அதுபோல நாம் இன்றைய நாளில் தேவையில் இருப்பவரைத் தேடி செல்லவும், அவரது மகிழ்வில் நாம் மகிழவும் அழைக்கப்படுகிறோம். அடுத்தவரின் மகிழ்வில் நாம் மகிழ உங்களுக்காக இறைவனிடத்தில் நான் வேண்டுகிறேன். நீங்களும் எனக்காக இறைவனிடத்தில் வேண்டுங்கள். 
           இதை படித்த பின் அடுத்த வேலையை பார்ப்போம் என சென்று விடாமல், படித்ததை நமது வாழ்வில் செயலாக்கப்படுத்த நம்மிடம் இருப்பதை, அடுத்தவரோடு பகிர்வோம், அது உணவாக இருந்தாலும் சரி, பொருளாக இருந்தாலும் சரி. நேரமாக இருந்தாலும் சரி ...
      இருப்பதை அடுத்தவரோடு பகிர்வோம். அடுத்தவரின் மகிழ்வில் நாம் மகிழ இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம். 
   
                        என்றும் அன்புடன்,
                     உங்கள் சகா.

சனி, 29 மே, 2021

மூவொரு இறைவன் திருநாள்...(30.5.2021)

இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்று நாம் அனைவரும் தாய்த்திரு அவையாக  இணைந்து மூவொரு இறைவனின் திருவிழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம். இந்நேரத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும்  மூவொரு இறைவன் திருநாள் வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக்கொள்கிறேன்.
கண்ணதாசன் அவர்கள் கூறுவார்... 
மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன் மணந்து பார் என்றார் கடவுள்.... 
நட்பு என்பது யாதெனக் கேட்டேன் பழகிப் பார் என்றார் கடவுள்....
அனைத்தையும் நான் அனுபவித்தே அறிய வேண்டுமென்றால் ஆண்டவனே நீ எதற்கு? என்றேன்...
 அந்த ஆண்டவன் சற்று அருகே வந்தான் அந்த அனுபவமே நான்தான் என்றான்.... 

இன்று நமது அனுபவத்தின் துணை கொண்டு மூவரை இறைவனை நாம் அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.


தந்தை, மகன், தூய ஆவி மூவரும் ஒரே கடவுளாக இருக்கிறார்கள். இதுவே நமது கிறிஸ்தவ மறையின் நம்பிக்கையாக அமைந்திருக்கிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட கூடிய நாம் இந்த மூவரும் தொடக்கத்திலிருந்து இருந்தவர்கள் என்பதை விவிலியத்தின் உதவியோடு  புரிந்துகொள்ள வேண்டும். 


தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, 
மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
என தொடக்க நூலில் முதல் அதிகாரத்தில் 1, 2 வசனங்களில் நாம் வாசிக்கலாம்.  மேலும் பவுல் இயேசுவை குறித்து சான்று பகரும் போது,  
அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு.
கொலோசையர் 1:15
எனக் குறிப்பிடுகிறார். 

இத்தகைய இறை வார்த்தைகள் வழியாக தந்தை மகன் தூய ஆவி மூவரும் ஒன்றாக தொடக்கத்திலிருந்தே இருந்தவர்கள் என்பதை நாம் அறியலாம்.

விவிலியத்தில்  மூவரை இறைவனை இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வில் நாம் கண்டுகொள்ள இயலும்.
 தந்தையாம் இறைவன் விண்ணிலும்....
தூய ஆவி புறா வடிவில் நடுநிலையிலும்...  
இயேசு தண்ணீரிலும் ...என மூவரையும் நாம் ஒருங்கே கண்டுகொள்ள முடியும்.மூன்று ஆட்களாக இருந்தாலும் இவர்களின் சிந்தனை, சொல், சித்தம் என அனைத்தும் ஒன்றாகவே இருந்தது.

எனவேதான் இயேசு 
நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்.என்றார்.என
யோவான் 14:7 விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம். 

அது போலவே தான் இந்த தூய ஆவியானவர். இயேசுவின் விண்ணேற்றமடைந்து செல்லும்போது நம்மோடு இருப்பதற்கு நம்மை நல்வழிப் படுத்துவதற்கு நம்மீது இந்த தூய ஆவியாரை பொழிந்தருளினார். 

இதையே விவிலியத்தில் ...
 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.

யோவான் 16:13 வசனத்தின் இறைவார்த்தைகள் நமக்கு உணர்த்துகின்றன. 

ஒரே எண்ணத்தை கொண்டவராக இவர்கள் மூவரும் இணைந்து இருக்கிறார்கள். சொல்லாலும் செயலாலும் சிந்தனையாலும் என அனைத்திலும் மூவரும் ஒன்றுபட்டு மூவொரு ஆட்களாய் ஆனால் ஒரே கடவுளாய், விளங்குகிறார்கள். 
             இந்த இறைவனின் சாயலாக இம்மண்ணில் படைக்கப் பட்டவர்கள் தான் மனிதர்களாகிய நாம். இதையே....

தொடக்க நூல் 1:27 கூறுகிறது. 

கடவுள் தம் உருவில் மானிடரைப்* படைத்தார்; 

என்று... இவ்வுலகில் பிறந்து இருக்கும் மனிதர் ஒவ்வொருவரும் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டவர்கள். எனவே கடவுளின் எண்ணங்கள் நமது எண்ணங்களாக இருத்தல் அவசியமாகிறது. 

        ஆனால் பொதுவாகவே ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் வாய்ந்தவன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எண்ணக் கூடியவர்கள் என நாம் நம்மை பற்றி கூறுவது முற்றிலும் உண்மையே.  ஆம் ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் வாய்ந்தவன் தான். 

ஆனால் கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்று கூறுவது போல ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் காணப்பட்ட அனைத்து விதமான நற்பண்புகளும் உள்ளிருக்கின்றன. உள்ளிருக்கின்ற அந்த இறைத்தன்மையை, இறை குணங்களை, நாம் பல நேரங்களில் கண்டு உணர்வது இல்லை. 

ஒரு கவிஞன் எழுதினான்....

சமூகத்தில் ஒரு விலங்கு இனத்திற்கு ஒரு துயரம் நேரும் போது அந்த இனத்தைச் சார்ந்த மற்ற விலங்குகள் அனைத்தும்  இணைந்து அதனை எதிர்க்கின்றன. ஆனால் மனித இனம் மட்டுமே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கின்றன என்று.... 

இப்படிப்பட்ட மனிதர்களுக்கும் இயலும் பலர்  இச்சமூகத்தில் ஏதேனும் ஒரு துயர் நடக்கிறது என்றால் அப்போது அந்த மக்களின் துயரத்தை துடைப்பவர்களாக செயல்படுகிறார்கள். இயேசுவும் இந்த மண்ணில் வாழ்ந்த போது அடுத்தவரின் துயரத்தை தன் துயரம் என எண்ணியவர். அடுத்தவரின் கண்ணீரைத் துடைக்க முற்பட்டவர் தான். 
        இயேசுவிடம் காணப்பட்ட அதே பண்பு நம்மிடம் இருக்கிறது என்றால், அந்தப் பண்பை நாம் அனுதினமும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் நாம் அவ்வப்போது மட்டுமே அதனை நினைவு கூருகிறோம். எங்கேனும் ஏதேனும் ஒரு தீமை நடைபெற்றால், எங்கேனும் ஏதேனும் ஒரு இக்கட்டான சூழல் உருவாகும்போது தான் நமக்குள் இருக்கக்கூடிய மனிதநேயம் என்பது வெளிப் படக் கூடிய ஒன்றாக இன்று இருக்கிறது. 

ஆனால் எல்லா சூழ்நிலையிலும்  தந்தையின் விருப்பம் மகனாகிய இயேசுவின் இடத்தில் வெளிப் பட்டது தூய ஆவியாரும் தந்தையின் விருப்பத்தை நம்முள் இருந்து எப்போதும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார். ஆனால்  நாம் தேவைக்கு ஏற்ற வகையிலும் சூழலைப் பொருத்தும் நமக்குள் இருக்கக்கூடிய இயேசுவின் எண்ணங்களை நமது வாழ்வாக மாற்றுவதை விட்டு விட்டு, எப்போதும் நமக்குள் உறைந்திருக்கும் இயேசுவின் எண்ணங்களையும், இயேசுவின் சிந்தனைகளையும் கண்டுகொண்டு அதனை இச்சமூகத்தில் நிலைநாட்டக் கூடியவர்களாய் நாம் இருக்க வேண்டும். சந்தர்ப்பமும் சூழலும் வாய்த்தால் மட்டுமே அதை செய்யவேண்டும் என எண்ணுவதை விட ஒவ்வொரு நிமிடமும் நாம் இயேசுவைப் போல எப்படி இயேசு கடவுளின் விருப்பத்தை அறிந்தவராய் இம்மண்ணில் நடமாடினாரோ, அதைப்போல நாமும் செயல்பட வேண்டும். இதற்கு நம்முள் இருந்து கொண்டு நம்மை தூய ஆவியானவர் தூண்டிக் கொண்டுதான் இருக்கிறார். அவரின் குரலுக்கு செவி கொடுக்க முயலுவோம். எண்ணத்தால் சிந்தனையால் சொல்லால் செயலால் எப்படி தந்தை மகன் தூய ஆவியார் இணைந்திருக்கிறார்களோ, அதுபோல அவரின் சாயலில் படைக்கப்பட்டு இருக்கக்கூடிய நாமும் அவரோடு இணைந்து இருக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். 

இறைவனடி சேர்ந்த திருச்சி மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு அந்தோணி டிவோட்டா அவர்கள் அடிக்கடி எங்களிடம் கூறுவது உண்டு. நமது கிறிஸ்தவ மறையிலேயே மிகப்பெரிய ஜெபம் என்றாலும், மிகச் சிறிய ஜெபம் என்றாலும் அது தந்தை,மகன், தூய ஆவியின் பெயராலே ஆமென் என சொல்லக் கூடியது தான் என கூறுவார். 

இந்த ஜெபத்திற்கான அர்த்தத்தை அவர் எங்களுக்கு சொல்லித் தரும்பொழுது மூவொரு இறைவனைப்  மனித வாழ்வோடு இணைத்து அதிகம் விளக்குவார். 

தந்தை எனச் சொல்லும் பொழுது  படைத்த இறைவனை நாம் நினைவு கூருகிறோம். நாம் தந்தை எனச் சொல்லும் போதெல்லாம் இந்த உலகத்தில் நாம் பிறக்க காரணமாயிருந்த நமது பெற்றோர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என எங்களுக்கு கூறுவார். 

மகன் எனச் சொல்லும் பொழுதெல்லாம் இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது. இந்த இயேசு கிறிஸ்து நம்மை மீட்பதற்காக மனிதனாக இம்மண்ணிற்கு வந்தவர். நமக்காக இறந்தவர். எனவே இன்று நாம் வாழும் இந்த சமூகத்தில் இந்த மீட்பு பணியை செய்யக் கூடியவர்களை நினைவுகூர அழைப்பு விடுத்தார். அறியாமை என்ற நோயிலிருந்து நம்மை விடுவிக்க நமக்கு அனைத்தையும் அறியச் செய்யக்கூடிய நம்மை மீட்டெடுக்க கூடிய நமது ஆசிரியர்களையும் நமக்கு நல்வழி காட்டக் கூடிய நல்லவர்கள் பலரையும் மகன் எனச் சொல்லும்போது நினைவில் இருத்திக்கொள்ளுங்கள் என்பார். 

தூய ஆவி என்று சொல்லும் பொழுது, இந்தத் தூய ஆவியாரின் பணி என்பது வழிநடத்தும் பணியாகும். அந்த வழி நடத்தும் பணியை இன்று இச்சமூகத்தில் செய்து கொண்டிருக்கக் கூடிய நமது உடன்பிறந்த சகோதர சகோதரிகள் நமது ஞான பெற்றோர் ஆன்மிக வழிகாட்டிகள் என இன்னும் எத்தனையோ நபர்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். அவர்களை எல்லாம் நினைவில் கொள்ளுங்கள் என்பார். 

எனவே தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் என்ற ஜெபத்தை நீங்கள் சொல்லும் பொழுது ஏதோ கடமைக்காக சொல்லிவிட்டு செல்பவர்களாக அல்லாமல் அதனை சிந்தித்து தியானித்து செய்யுங்கள் எனக் கூறுவார். 
       எனவே இனி வரக்கூடிய நாட்களில் நாம் தந்தை, மகன், தூய ஆவி என கடமைக்கு சொல்லிவிட்டுச் செல்பவர்களாக இல்லாமல் அதில் இருக்கக்கூடிய ஒற்றுமையையும் ஒன்றிப்பையும் அதன் உண்மை அர்த்தத்தையும் உணர்ந்து செய்வோம். எனவே  நமது வாழ்வில் இந்த ஜெபத்தை நமது அடையாள ஜெபமாக அனுதினமும் பயன்படுத்துவோம். எந்த நிகழ்வை தொடங்கினாலும் இந்த மூவொரு இறைவனின் துணையோடு தொடங்குவோம். எதை நிறைவு செய்தாலும் இந்த மூவொரு இறைவனின் துணையோடு நிறைவு செய்வோம். நாம் மூவொரு இறைவனோடு இணைந்தவர்கள் என்பதனை நமது சொல்லாலும் செயலாலும் வெளிக்காட்டிட இறைவனது அருளை இன்றைய நாளில் வேண்டுவோம்.


வெள்ளி, 28 மே, 2021

ஞானம் இறைவனிடமிருந்து வருகிறது.... (29.5.2021)

ஞானம் இறைவனிடமிருந்து வருகிறது....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை  உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய வாசகங்கள் நம்மை தூய ஆவியானவரிடமிருந்து வெளிப்படக்கூடிய, தூய ஆவியின் கனிகளுள் ஒன்றான ஞானத்தை பெற்றுக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. 

ஞானம் அனைவராலும் விரும்பப்படக் கூடியது. 
ஞானம் சராசரி மனிதனையும் சாதனையாளனையும் வேறு படுத்திக் காட்டக் கூடியது. 

ஞானம் இறைவனிடமிருந்து வரக்கூடியது. அனுதினமும் பல வளர்ச்சிகளை காணும் நாம் ஞானத்தில் வளர்வது அவசியம்....

இன்று எப்படியாவது தேர்ச்சி பெற்றால் போதும் என்ற மனநிலையில் தான் பல குழந்தைகளும்,பேற்றோரும் உள்ளனர்.... இதை முழுமையான வளர்ச்சியல்ல என அறிந்தாலும் சமூக அந்தஸ்த்திற்காக இதை நாடுவோர் பலர் என்பது மறுக்க முடியாத உண்மை...

இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது,  விவேகத்தோடும் ஞானத்தோடும் செயல்பட்டார், என்பதனை அவரது வாழ்வில் இருந்து அறியலாம். இன்றைய நற்செய்தியிலும்கூட இயேசுவிடம், எந்த அதிகாரத்தைக் கொண்டு நீர் இதை செய்கிறீர்? என்ற கேள்வி எழுப்பப்படும் போது ஞானமிக்கவராய் திருமுழுக்கு யோவானின் அதிகாரம் எங்கிருந்து வந்தது? என்று கேள்வியை எழுப்புகிறார். ஞானத்தோடு இருந்தமையால் இயேசுவின் கேள்விகள் பரிசேயரையும் சதுசேயரையும் வாயடைக்கச் செய்தது. என்ன பதில் கூறுவது எனத் தெரியாமல் திகைப்புற்றாகள்.

 இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நாமும் ஞானத்தோடு செயல்படும்போது, இவ்வுலகத்தில் அனைத்தின் மீதும் வெற்றி காண முடியும். 
ஞானம் நம்மை எப்போதும் உயர்த்தும். 
ஞானம் இறைவனிடமிருந்து வருகிறது. 
இறைவனிடம் இருந்து வரக்கூடிய ஞானத்தைப் பெற நாம் தகுதியானவர்களாக மாற முடியும். 
அதற்கு திறந்த மனம் வேண்டும்...
 ஞானி என்பவன் அனைவரிடத்திலும் கற்பவன் என்பார்கள்... சிறுவர், பெரியவர் வேறுபாடின்றி அனைவரிடத்திலும் சமூக அந்தஸ்து என்ற வீண் பெருமைகளை புறம்தள்ளி... குழந்தைகளின் முறையான வளர்சியை முன்னிருத்தி திறந்த மனதோடு கற்க நாம் முயல வேண்டும்...  

எனவே இன்றைய நாளில் தூய ஆவியாரின் வரங்களுள் ஒன்றான ஞானத்தினைப் பெற்று வாழ்வில்  சிறப்படைய இறையருளை வேண்டுவோம். ஞானத்தைப் பெறுவது நமது சுயலாபத்திற்காகவோ நன்மைக்காகவோ இருத்தல் ஆகாது. சாலமோனின் ஞானத்தைக் கொண்டு மக்களுக்கு நல்லதை எடுத்துரைக்கவும், அவர்களை நல்வழி நோக்கி அழைத்துச் செல்ல அதை பயன்படுத்தவும் உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொண்டவர்களாய் இறைவனிடத்தில் ஞானத்தை வேண்டுவோம் இந்நன்நாளிலே!

வியாழன், 27 மே, 2021

தொட்டுவிடும் தூரத்தில் அல்ல... ஆனால் நான் அதை விட்டு விட போவதுமில்லை... (28.5.2021)

தொட்டுவிடும் தூரத்தில்  அல்ல... ஆனால் நான் அதை விட்டு விட போவதுமில்லை...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்! 
இரக்கம் உள்ளவராகவும் நேர்மை உள்ளவராகவும் இருப்பது என்பது தொட்டுவிடும் தூரத்தில்  இருப்பபதல்ல... என்று எண்ணிக்கொண்டு நாம் வ்வாறு வாழ முயலாமல் விட்டு விடுபவர்கள் அல்ல நாம் என்பதை நமது சொல்லிலும் செயலிலும் வெளிக்காட்ட இன்றைய வாசகங்கள் அழைக்கின்றன.

நேர்மையாளர்களின் செயல்கள் மறக்கப்படுவதில்லை என இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது இரக்கம் உள்ளவராகவும்,  நேர்மையாளராகவும் செயல்பட்டார்.  எனவேதான் அவரது செயல்கள் இன்றும் சமூகத்தில் தாக்கத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன.  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இரண்டு காரியங்களைச் செய்கிறார். 

1,  ஒரு மரத்தினை சபிக்கின்றார். 
2. ஆலயத் தூய்மையைப் பற்றி அறிவிக்கின்றார். 

ஏன் இயேசு மரத்தை சபிக்க வேண்டும்?  
ஆலயத் தூய்மையை எடுத்துரைக்க வேண்டும்?  

என சிந்திக்கும் போது,  மரமானது தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு பலன் தரக்கூடிய பணியினை செய்ய வேண்டும். அப்பணியைச் செய்யாமல் இருக்கின்ற காரணத்தினால்,  அம்மரத்தின் மீது  கடவுள் கோபம் கொண்டவராய், அம்மரத்தை  சபிக்கின்றார் எஎன எண்ணலாம். ஆனால் மரத்தைச்  சபித்ததன் நோக்கம், அம்மரம் யாருக்கும் பயன்படவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், முறையற்ற பருவத்தில் பழத்தை எதிர்ப்பார்த்தது ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் நம்பிக்கையான வார்த்தையின் வலிமை எவ்வளவு என்பதை சீடர்களுக்கு கற்பிக்க அந்த மரத்தை பயன்படுத்துகிறார் எனவும் உணர முடிகிறது. காலையில் இயேசு சபித்த மரம், மாலையில் பட்டுப்போனதைக் கண்டு வியந்த சீடர்கள் இயேசுவிடம் அதை அறிவிக்கிறார்கள். இயேசு அவர்களிடத்தில் உங்களிடமும் ஆழமான நம்பிக்கை இருந்தால், நீங்கள் ஒரு மலையைப் பெயர்ந்து கடலுக்குச் செல் என்றாலும், அது நடக்கும் என அவர்களுக்கு வார்த்தையின் மீதான நம்பிக்கையைப் பற்றி, அவர்களுக்கு எடுத்துரைக்கக் கூடிய பணியினை செய்கின்றார். அதே இயேசு கிறிஸ்து ஆலயத்திற்கு செல்கிறார், அங்கு ஆலயத்தில் நடக்கக்கூடிய பலவிதமான, முறையற்ற செயல்களைக் கண்டு அங்குள்ளவர்கள் மீது கோபம் கொண்டவராய், "இது கடவுளின், இறைவேண்டலின் வீடு, இதை கள்வர் குகைகளாக நீங்கள் மாற்றி விட்டீர்கள்" என்று கூறி, ஆலயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார். 

இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது நேர்மையாளராகவும் இரக்கம் உடையவராகவும் இருந்தார். எனவே தான் அவர், தான் வாழ்ந்த அந்த சமூகத்தில்,  ஏழை எளியவர்களை கண்டபோது அவர்கள் மீது இரக்கம் கொண்டார். அதேசமயம் நேர்மையாளராக இருந்த காரணத்தினால் தான், சமூகத்தில் நடக்கக்கூடிய அநீதிகளுக்கு எதிராக அஞ்சாமல் குரல் கொடுக்கக்கூடிய மனிதராக திகழ்ந்தார். இயேசுவைப் போல நாம் நேர்மையாளராகவும், இரக்கம் உள்ளவராகவும் இச்சமூகத்தில் நாம் இருக்கும் போது, நமது செயல்கள் எதுவும் என்றும் எப்போதும் மறக்கப்படாது என்பதனை முதல் வாசகம் தெளிவுபடுத்துகிறது. அந்த வாசகத்திற்கு வடிவம் தரும் வகையில் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. எனவே இன்றைய நற்செய்தி வாசகமும், இன்றைய முதல் வாசகமும், நமக்கு உணர்த்தும் செய்தி இரக்கத்தோடும், நேர்மையாளராகவும் நாம் செயல்படும்போது,  நாம் எடுக்கக் கூடிய அனைத்து நல்ல விதமான செயல்களும் சமூகத்தில் என்றும் நிலைத்து நிற்கும். 

இன்றும், சமூகத்தில் பலவிதமான நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர்களை நாம் நினைவுகூர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். கொரோனா தொற்றுநோய் அச்சம் ஒரு புறம் இருந்தாலும், தன்னார்வ மனதோடு முன் நின்று பணி செய்யக்கூடிய, பலர் இன்றும் நம் கண்களில் தென்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் இரக்கத்தோடும் நேர்மையோடும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், இன்னும் பல ஆயிர தலைமுறைகள் கடந்தாலும், இவர்களின் அரும்செயலானது, இவர்கள் ஆற்றிய நல்ல செயலானது, என்றும் மறக்கப்படாது, என்றச் செய்தியினை இன்றைய வாசகங்கள் வழியாக நாம் பெறுகிறோம். வாசகங்கள் கொடுக்கக்கூடிய வார்த்தைகளுக்கு உயிரோட்டம் தர வேண்டுமாயின், நமது சொல்லிலும் செயலிலும் நாம் இரக்கம் உள்ளவர்களாகவும், நேர்மையாளராகவும் நடக்க கடமைப்பட்டிருக்கிறோம். எனவே நமது சொல்லிலும் செயலிலும், நேர்மையானவர்களாக மாறிட இறையருளை இறைஞ்சி வேண்டுவோம்.

புதன், 26 மே, 2021

அதட்டுபவர்கள் ஆற்றுப்படுத்துபவர்களாக மாறுவார்கள்.... (27.5.2021)

அதட்டுபவர்கள் ஆற்றுப்படுத்துபவர்களாக மாறுவார்கள்....

பொதுக்காலம் 8வது வாரம் வியாழன் 

சீரா: 42: 15 - 22 , மாற்: 10: 46 - 52

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஒளிரும் சூரியன் எந்தவித பாகுபாடுமின்றி இவ்வகிலத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் தனது ஒளிக்கீற்றினை படச் செய்கிறது. இந்த சூரியன் நல்லவர்கள் மீது மட்டும் தான் தன் ஒளிக்கீற்றை செலுத்துவேன் எனக் கூறுவது இல்லை. கெட்டவர்கள் மீது நான் செலுத்த மாட்டேன் எனக் கூறுவதும் இல்லை. மாறாக அனைவர் மீதும் ஒளிக்கீற்றை வீசுகிறது.  அதுபோலத்தான் ஆண்டவரின் மாட்சியும் விளங்குகிறது. ஆண்டவரின் மாட்சி இவ்வகிலத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உரியது.   இவ்வகிலத்திலுள்ள ஒவ்வொருவருமே ஆண்டவரின் பிள்ளைகள். அவரது மாட்சியில் பங்கெடுக்க தகுதி பெற்றவர்கள். ஆனால் பல நேரங்களில் நாம் ஆண்டவரின் மாட்சியில் பங்கெடுக்க முயலும் போது பலவிதமான தடைகள் எழுகின்றன.  

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, பார்வையற்ற பர்த்திமேயு,  ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடமிருந்து பார்வையைப் பெற வேண்டும் என்பதற்காக தன் குரலை உயர்த்துகிறார்,ஆண்டவரின் மாட்சியில் பங்குபெற விரும்புகிறார். ஆனால் அவரைப் பலர் அதட்டுகிறார்கள். அதட்டியவர்கள் எல்லாம் ஆற்றுப்படுத்தக் கூடியவர்களாக மாறும் நிகழ்வும் அங்கு அரங்கேறுகிறது. எந்த மக்கள் கூட்டம், பேசாதிரும்!,  கத்தாதிரும்! அவரை தொடர்ந்து அழைக்காதே! என்று கட்டுப்படுத்த முயன்றார்களோ, அவர்களே ஒரு கட்டத்தில்,  உன்னை இயேசு அழைக்கிறார்! துணிவோடு எழுந்து வாரும்! எனக் கூறி,  அவரை ஆற்றுப்படுத்தும் பணியையும் செய்கிறார்கள்.  

எப்போது அதட்டுபவர்கள் ஆற்றுப்படுத்துபவர்களாக மாறுவார்கள்? என சிந்திக்கும் போது, வாழ்வில் நாம் நமக்குத் தேவை என எண்ணி  எதை நோக்கி முயற்சியில் ஈடுபடுகிறோமே அல்லது குரல் எழுப்புகிறோமோ, அப்போது நம்மை விமர்சிக்க கூடியவர்கள், கட்டுப்படுத்த எண்ணக் கூடியவர்கள், நமது முயற்சியில் நாம் வெற்றி காணும் போதும், நாம் யாரை நோக்கி எதற்காக குரல் எழுப்பினோமோ அக்குரல்  கேட்கப்படும் பொழுதும் அதை அறிந்ததும் அவர்கள் நம்மை ஆற்றுப்படுத்தும் சக்திகளாக மாறுகிறார்கள். ஆனால் இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் ஆற்றுப்படுத்தும் சக்திகளாக அதட்டுபவர்களை மாற்றுவதற்கு, நாம் உள்ளத்தில் துணிவையும், விடாமுயற்சியை கொண்டிருக்கவேண்டும்.நமது குரல் கேட்கப்படும் என்றும் நமது முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும் எனவும்  ஆழமான நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். பர்த்திமேயுவின் ஆழமான நம்பிக்கை ஆண்டவர் இயேசுவை நோக்கித் தன் குரலை எழுப்பிக் கொண்டே இருக்கச் செய்தது.  எனவே தான் அதட்டுபவர்களைப் பற்றி அவர் பெரிதும் கவலை கொள்ளவில்லை.  அதட்டுபவர் அதட்டட்டும், நான் கேட்க வேண்டியதைக்
 கேட்பேன் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து குரல் எழுப்பினார். அவர் குரல் இயேசுவின் காதுகளுக்கு எட்டியது.  எனவே இயேசு நின்று திரும்பிப் பார்த்து, அவரை அழைத்து வாருங்கள் எனக் கூறுகிறார்.  இயேசுவின் இந்த வார்த்தைகளை கேட்டதும் அதுவரை அதட்டிக் கொண்டிருந்த மக்களெல்லாம் ஆற்றுப்படுத்தும் பணியை செய்கிறார்கள். துணிவோடு எழுந்து வாரும்! உன்னை இயேசு அழைக்கிறார் என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

                      இன்று நாம் வாழும் இந்த சமூகத்தில்  சமூகத்தின் நலனை முன்னிறுத்தி குரலெழுப்பும் போது, அதிகமானவர்கள்  நம்மை அதட்டும் பணியில் ஈடுபட்டாலும்,  அவர்களைத் ஆற்றுப்படுத்துபவர்களாக மாற்ற வேண்டுமாயின் நாம் நம்பிக்கையோடு தொடர்ந்து இறைவனது  மாட்சியில் நாம் பங்கு கொள்ள தொடர்ந்து நமது குரலை எழுப்பிக்கொண்டே  தொடர் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு நாம் செயல்படும்போது அதட்டுபவரும் ஆற்றுப்படுத்துபவர்களாக மாறுவார்கள்.

 ஒளிரும் சூரியன் எப்படி பாகுபாடின்றி அனைவர் மீதும் தன் ஒளிக்கீற்றினை வீசும் போது அதை யாரும்  தடுப்பது இல்லையோ,அல்லது ஒருவேளை தடுக்க எண்ணினாலும் சூரியன் தன் செயலை மாற்றுவதில்லையோ,  அது போல நாமும் இந்த சமூகத்தில் முயற்சியில் ஈடுபடும் நபர்களின் முயற்சி வெற்றியடைய  (குரல் எழுப்பும் பலரின் குரல்கள் யாரை நோக்கி எழுப்புகிறார்களோ அவர்களைச் சென்று அடைவதற்கு) வழி கொடுப்போம். 

அதட்டுவதை விட (தடையாக இருப்பதை விட) ஆற்றுப்படுத்துபவர்களாக மாறுவோம். அதற்கான அருளை வேண்டி இறைவனிடத்தில் மன்றாடுவோம்.

செவ்வாய், 25 மே, 2021

பணியாள் முதன்மை பெறுவோம்... (26.5.2021)

பணியாள்  முதன்மை பெறுவோம்...

பொதுக்காலம் 8வது வாரம் - புதன்
சீரா: 36: 1-2a, 4-5a, 9-17
மாற்: 10: 32-45.

அறம் செய்ய விரும்பும் அன்பு நண்பர்களே வணக்கம்

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.
மார்க் 10 :45


 என்ற இறைவார்த்தையின் அடிப்படையில் இன்றைய நாளில் நாம் அனைவரும் பணியாளராக இருப்பதற்கு அழைக்கப்படுகிறோம். பொதுவாகவே எல்லா இடத்திலும் முதன்மையான இடத்தை தேடக்கூடிய நாம் இன்றைய நாளில் முதன்மையான இடத்தை அடைவதன் நோக்கம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.

ஒரு பள்ளியில் ஓட்டப்பந்தய போட்டியானது நடைபெற்றது. ...பந்தயத்தில் கலந்துகொள்ள பல குழந்தைகள் தயாராக இருந்தனர். ஒவ்வொரு குழந்தையும் முதலிடத்தைப் பெற வேண்டுமென  குழந்தையின் பெற்றோர்  உற்சாகமூட்டினார்கள்....
அதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் எழுந்து நின்று ஆசிரியரிடம் சென்று நான் ஒலிபெருக்கி வாயிலாக  ஒரு கேள்வியை இங்கே கூடியுள்ள பெற்றோர்களிடத்தில்   கேட்க விரும்புகிறேன் என்றான். உடனே ஆசிரியரும் ஒலிபெருக்கியில் அவனை கேள்வியை கேட்க அனுமதித்தார். அவன் ஒலிபெருக்கி வாயிலாக அன்பார்ந்த பெற்றோர்களே அனைவரும் என்னை உற்று நோக்குங்கள் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. நீங்கள் எல்லோரும் உங்கள் குழந்தை முதலில் வரவேண்டும் என உற்சாகப்படுத்துகிறீர்கள். நீங்கள் செய்வதில் தவறு இல்லை நீங்கள் உங்கள் குழந்தையை முதன்மையான இடத்தை பிடிக்க வேண்டும் என எண்ணுவதில் தவறில்லை. ஆனால் உங்கள் குழந்தை தான் முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் உங்களுடைய ஒவ்வொரு குழந்தைகள் இடத்திலும் பதிந்தால் அவர்கள் அனைவரும் தாங்கள் முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக அடுத்தவரை கண்டுகொள்ளாமலும் தன்னை மட்டுமே  முன்னுரிமை படுத்த கூடியவர்களாகவும் மாறிவிடுவார்கள் என எனக்குத் தோன்றுகிறது.  என்னுடைய எண்ணம் சரிதானா? என்றான். சிறுவன் கூறிய வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் சற்று நிமிடம் சிந்திக்க வைத்தது.

  பொதுவாகவே நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் முதன்மையான இடத்தை அடைய அனைவரும் ஆசைப்படுகிறோம். இன்றைய நற்செய்தியில் யாக்கோபும் யோவானும் முதன்மையான இடத்தை விரும்பினார்கள்.  ஆனால் முதன்மையான இடம் என்பது ஒரு பெருமையானது அல்ல மாறாக அந்த முதன்மையான இடம் என்பது தொண்டு செய்வதற்கான இடம் அடுத்தவரை இணைத்து, அழைத்துச் செல்வதற்கான ஒரு இடம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். எனவேதான் இயேசு உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும் என எண்ணுகிறார்.

நடைமுறையில் நாம் தேர்வு செய்கின்ற அதிகாரிகள் எல்லாம் நமக்கு பணி செய்வதற்காகத்தான் தேர்வு செய்கிறோம்.  ஆனால் தேர்வு செய்த பிறகு  அதை மறந்து போய் அவர்களுக்கு நாம் பணியாளர்களாக மாறுகிறோம்.ஆனால் இன்றும்  பணி செய்ய வந்தவர்கள் பலர்  தங்கள் பணியால் முதன்மையான இடத்தை பெறுபவர்களாக மாறுகிறார்கள்.

  நாம் நமது வாழ்வில் 
நேர்மையோடு ஒரு நல்ல பணியாளராக நாம் இருக்கும்பொழுது முதன்மையான இடத்தை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை அந்த முதன்மையான இடம் நம்மை தேடி வரும் என்பது தான் நிதர்சனமான உண்மையாகும். இந்த உண்மையைத்தான் இயேசு சீடர்களுக்கு கற்பித்தார் தன்னுடைய வாழ்வு மூலமாகவும் அதை அவர்களுக்கு  வெளிப்படுத்தினார்.  
இயேசுவுடன் பயணித்தாலும் போட்டிக்கும் பொறாமைக்கும் பஞ்சமில்லை இயேசுவின் சீடர்கள் இடத்தில்.எனவேதான் 
உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.
மார்க் 10 :44 
என்ற வார்த்தைகளை இயேசு அழுத்தமாக சீடர்களுக்கு கூறுகிறார்.  முதன்மையான இடம் என்பது ஏதோ பெயர்,பொருள், பதவி, பட்டம் என புகழைத் தரும் என்ற எண்ணத்தோடு இருந்த சீடர்களுக்கு நீங்கள் எதைக் கேட்கிறீர்கள் என்பது பற்றிய தெளிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் எனச் சுட்டிக் காண்பித்து அவர்களுக்கு முதன்மையான இடத்தைப் பெறுவதற்கான வழியையும் கற்பிக்கின்றார். நம்மைப் பார்த்து நமது சொல்லின் படி வளரக்கூடிய நமது குழந்தைகளுக்கு நாம் முதன்மையான இடம் என்பது ஒரு பெயரையும், புகழையும் தரவல்லது ஆனால் அதேசமயம் இறுமாப்பையும் தரவல்லது என்பதை கற்றுக் கொடுப்போம். முதன்மையான இடத்தை அடைவதில் காணும் சுகத்தை விட முதன்மையான இடத்தை அடைவதன் நோக்கம் நாம் இச்சமூகத்தில் முன்மாதிரிகளான பணியாளராக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்போம். என் குழந்தை முதன்மையான இடத்தைப் பெற்றது என்பதைவிட என் குழந்தையால் பலர் முதன்மையான இடத்தை பெறுபவர்கள் ஆனார்கள் என்ற நிலையை உருவாக்க முயல்வோம்.  இத்தகைய பண்புகளோடு குழந்தையை வளர்க்க நமது இதயத்தில்  முதலில் இடம் வேண்டும். பணியால் முதன்மை பெறவேண்டும் என்பதை    இதயத்தில் இருத்தி வெற்று வாழ்வுக்கான முதன்மையான இடத்தை அடைவதற்கு ஆசை கொள்ளாமல் பொறுமையோடு நமது பணிகளை சிறப்பாக செய்து கொண்டு முன் செல்ல இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம் அவ்வாறு செயல்படும்போது இன்றைய முதல் வாசகத்தில் நான் கேட்டது போல 

உமக்காகப் பொறுமையுடன் காத்திருப்போருக்குப் பரிசு அளியும்; உம் இறைவாக்கினர்கள் நம்பத்தகுந்தவர்கள் என மெய்ப்பித்துக் காட்டும்.
சீராக் 36 :16
என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப இறைவன் நம்மை உயர்த்துவார் என்ற நம்பிக்கையோடு நாம் வாழும் இச்சமூகத்தில் நல்ல ஒரு பணியாளராக மாறுவோம் இயேசுவைப்போல்  பணியால் முதன்மையான இடத்தை பெறுவோம்.
இன்று நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பலர் தங்களின் பணிகளால் முதன்மையான இடத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அனுதினமும் செய்திதாள்கள் நமக்கு உணர்த்திக்கொண்டு தான் இருக்கின்றன.  ஆங்காங்கே பலர் தங்களது பணியால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி பலரின் தேவைகளை நிவர்த்தி செய்து நல்ல ஒரு பணியாளராக செயல்பட்டு சமூகத்தில் முதன்மையான இடத்தை நோக்கி நகர்கிறார்கள். அவர்களுடன் நம்மை நாம் இணைத்துக் கொண்டு நமது பணியால் முதன்மையான இடத்தை பெற்றிட, நமது குழந்தைகள் பணியால் முதன்மையான இடத்தை அடைந்திட இறையருளை இன்றைய நாளில் வேண்டும். நமது வேண்டுதல் நமது செயலில் வெளிப்பட  இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் முயற்சிக்கு துவங்குவோம்.

பணியாள் முதன்மையான இடத்தை பெறுவோம் மனமகிழ்வோடு வாழ்வோம். 


திங்கள், 24 மே, 2021

எங்களுக்கு என்ன கிடைக்கும்?(25.5.2021)

எங்களுக்கு என்ன கிடைக்கும்?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே எதையாவது செய்தால் அதிலிருந்து நமக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு செய்கிறார்கள். எதிர்பார்ப்போடு செயல்படும் போது, நாம் எதிர்பார்த்தது நமக்கு கிடைக்காத போது அதை மனம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது.  எனவே மனதில் போராட்ட குணமானது உதிக்கிறது.  அடைய எண்ணியதை எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம்.  எப்படியாவது எதிர்பார்த்ததைப் பெற்று விட வேண்டும் என்று தூண்டுகிறது.   இன்றைய நற்செய்தி வாசகத்திலும்  எதையோ எதிர்பார்த்து இயேசுவின் பின் வந்தவர்கள் போல, சீடர்களுடைய கேள்விகள் அமைகின்றன. உம்மைப் பின் தொடர்வதால், அனைத்தையும் விட்டுவிட்டு வருவதால், எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்ற கேள்வியை பேதுரு எழுப்புகிறார். பேதுருவின் கேள்வியை அமைதியாக கேட்டுவிட்டு இயேசு கூறுகிறார்,  உங்களுக்கு எல்லாவற்றையும் பல மடங்காக திருப்பித் தருவேன் என்கிறார். ஒருவிதத்தில் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது, எப்படி இவர், நாம் இழந்ததை பல மடங்காகத் திருப்பித் தருவார் என்று? அன்று தம்முடைய தந்தையையும் தாயையும் விட்டு விட்டு சீடர்கள் இயேசுவைப் பின்பற்றி வந்தார்கள் என்பதை நாம் விவிலியத்திலிருந்து அறியலாம். இயேசு தன்னை பின்தொடர சீடர்களை அழைத்த போது அவர்கள் தங்களிடம் இருந்ததை எல்லாம் விட்டு விட்டு வந்தார்கள். 

    அவர்கள் தங்களிடம் இருந்ததை எல்லாம் விட்டு விட்டு வந்தார்கள் என்ற வார்த்தையினை நாம் ஒவ்வொரு சீடரின் அழைத்தல் நிகழ்விலும் காண முடியும். மறைமாவட்டங்களிலோ அல்லது குருத்துவ பயிற்சிக்கான இடங்களிலோ, அல்லது துறவற பயிற்சிக்கான இடங்களுக்கோ செல்லும் போதெல்லாம் அங்கு முன்னிறுத்தப்படுவதும் இதுபோன்ற இறை வார்த்தைகள் தான். ஆண்டவர் அழைத்தார், எனவே இருப்பதை எல்லாம் விட்டு விட்டு வந்தார்கள் என்று. விட்டு விட்டு வந்தவர்கள் எல்லாம் எல்லாவற்றையும் இழந்தவர்களாக மாறினார்கள், என்ன நாம் எண்ணுகிறோம். ஆனால் அவர்கள்தான் பன்மடங்கு பெற்றவர்களாக மாறினார்கள். 
            அன்று  இயேசுவின் சீடர்கள் தனது தாயுடனும் தந்தையுடனும் குடும்பத்தினருடனும் வீட்டோடு இருந்திருந்தால், அவரை அவரதுஃ வீட்டார் மட்டுமே அறிந்திருப்பர். ஆனால் ஆண்டவர் இயேசுவின் பணிக்காக அவர்கள் முன் வந்தபோது, அகிலமே அவர்களை அறியக்கூடிய நிலை உருவானது. 
      பொதுவாகவே குருக்களும் கன்னியர்களும் சொல்வது உண்டு, எங்களை பெற்றெடுத்தது ஒரு தாய் தந்தை.  ஆனால், எங்களுக்கு உலகில் பல தாய் தந்தையர்கள் உண்டு என்று. செல்லும் இடங்களில் எல்லாம் அனைவரையும் அம்மா அப்பா என அழைக்கக்கூடிய பண்பானது அவர்களிடம் காணப்படுகின்றது. இத்தகைய யதார்த்தமான நிகழ்விலிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம், அவர்கள் விட்டு விட்டு வந்தது ஒரு பெற்றோரை, ஆனால் அவர்களுக்குக் கிடைத்ததோ ஓராயிரம் பெற்றோர். இயேசுவின் வார்த்தைகளும் அப்படித்தான். நாம் எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் எதையாவது ஒன்றை இழக்கும் பொழுது, நாம் பன்மடங்காக அவற்றைப் பெறுகிறோம். ஆனால் எதிர்பார்ப்போடு ஒன்றை இழக்கும் பொழுது, நாம் எதிர்பார்த்தது நிறைவேறாமல் ஏமாற்றத்தை தழுவும் போது அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் வேதனை அடைகிறது. அந்த வேதனை எப்படியாவது எதிர்பார்த்ததை அடைந்துவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட வைத்து பலவிதமான துன்பத்தையும் துயரத்தையும் நமது வாழ்வில் உருவாக்குகிறது. எனவே நாம் இழக்க வேண்டும். பலனை எதிர்பார்த்து அல்ல. எதையும் எதிர்பார்க்காமல் இழக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை நாம் உள் வாங்கிக் கொள்வதற்காக பேதுரு எழுப்பிய கேள்வியாகத்தான், எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்ற கேள்வியை இன்றைய நாளில் நாம் சீர்தூக்கிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். 

முதல் வாசகத்தில், 

1.திருச்சட்டத்தை கடைபிடித்தல்- காணிக்கைகள் செலுத்துதல், 
2.கட்டளைகளை கருத்தில் கொள்ளுதல் -
 நல்லுறவு பலி செலுத்துதல்,
3. அன்புக்கு கைமாறு- 
மாவு படையல் செலுத்துதல்.
4. தருமம் செய்தல்-
நன்றி பலி செலுத்துதல்.
5. தீச் செயலை விட்டு விடுதல்-
ஆண்டவருக்கு விருப்பமானது.
6. அநீதியைக் கைவிடுதல்-
பாவ கழுவாய் பலிக்கு
    இணையாகும் என்று சீராக்கின் ஞான நூலாசிரியர் ஒவ்வொரு காரியத்திற்கும் இணையானது எது என்று குறிப்பிடுகின்றார். 

               நமது தியாகத்திற்கு இணை எது என்ற கேள்வியை நாம் எழுப்பாமல், நாம் செய்வது தியாகம் என்பதை உணர்ந்து தியாகம் செய்வோம். அந்த தியாகத்தில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாத போது, நாம் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு அபரிமிதமாக, பலனை இறைவன் தருவார் என்ற நம்பிக்கையோடு தியாகங்கள் பல செய்ய முன்வருவோம். ஆனால் செய்யும் தியாகம், பலனை எதிர்பார்த்ததாக இருக்கக் கூடாது என்பதை உள்ளத்தில் இருத்தி கொண்டு, வாழ்வில் வெற்றிபெற இறையருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம்.

ஞாயிறு, 23 மே, 2021

அன்னைக்கு தெரியாதது எதுவும் உண்டா? (24.5.2021)

அன்னைக்கு தெரியாதது எதுவும் உண்டா?

இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே! 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் அனைத்து சலேசிய துறவற சகோதரருக்கும், தந்தையர்க்கும், சகோதரிகளுக்கும்  இன்றைய நாளில் விழா வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்....
தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள். 

கடவுள் இந்த பூமிக்கு வருவதில்லை. அவருக்கு பதிலாகத் தான், அவர் தாயை அனுப்பி வைத்திருக்கிறார் என்பார்கள். 

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பார்கள். 

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். மாதா என தாயையே முன்னுரிமைப்படுத்துகிறோம்.  

இந்த சமுதாயத்தில் ஒரு குழந்தையை உருவாக்கும் பணியை செய்பவள் ஒரு தாய். பெற்றெடுத்த தன் பிள்ளையை, பேணி வளர்க்கிறாள். அவர் தன் குழந்தைக்கு நல்லவை அனைத்தையும் செய்து தருகிறாள். குழந்தை வளர்ப்பில் தன்னை முழுவதுமாக ஐக்கியப்படுத்திக் கொள்கிறாள். 

நாம் பிறப்பதற்கு முன்பாகவே தான் திரும்பிப் படுத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஏதாவது நிகழ்ந்து விடுமோ? என எண்ணிக் கொண்டு, தனது சுய விருப்பு வெறுப்புகளையும் சுகங்களையும் ஓரம் தள்ளி, நமக்காக அனைத்தையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தியாக உள்ளம் கொண்டவள் தான் இந்தத் தாய். இவ்வாறு  தாய்மையைப் பற்றி நாம் புகழ்ந்து கொண்டே செல்லலாம். கவிஞன் ஒருவன் எழுதினான், அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் நீ எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும். ஏனென்றால், என்னை நீ சுமந்தது போல உன்னை நான் சுமக்க வேண்டும் தாயே என எழுதி வைத்தான்.   ஒரு குழந்தையை வைத்து அதன் பெற்றோரை அடையாளம் கண்டு கொள்ள முடியும். அந்த வகையில் இயேசுவின் செயல்பாடுகளுக்கு முழு முதல் காரணம் அவரது தாய் என்றால் அது மிகையாகாது.  தாய்க்கு அனைத்தும் தெரியும். தன் குழந்தை தன்னிடம் பொய் உரைக்கிறதா? அல்லது உண்மை பேசுகிறதா? என்பதை தாய் உடனே கண்டு பிடித்து விடுவாள். இருந்தபோதும் அதை வெளியே காட்டி கொள்ள மாட்டாள். தனக்கு வயிறார உண்பதற்கு உணவு இல்லை என்றாலும், தன் குழந்தை வயிறார உண்பதைக் கண்டு நிறைவு காண கூடியவள் தான் தாய். எனவேதான் இந்த தாயை தெய்வத்திற்கு இணையாக ஒப்பிடுகிறார்கள். 
இவ்வாறு பலர் தாயை பற்றி புகழ்ந்து கூறினாலும், இந்த புகழ்ச்சி திருஅவையிலும் இருக்கிறது. திருஅவையின் தாயாக அன்னை மரியாள் விளங்குகிறாள். 
திருஅவையை வழிநடத்தும் நம் தாய் அன்னை மரியாவும், நம் அனைவரின் தேவையை அறிந்தவராக இருக்கிறார். நமக்காக இறைவனிடத்தில் எப்போதும் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார், என்ற நம்பிக்கையில் தான் இன்றும் திருஅவை அவரை முதன்மையாகக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறது. 

இன்றைய முதல் வாசகத்தில் தவறிழைத்த முதல் பெற்றோர் தாங்களுள் யார் தவறு செய்தார் என்பதை இறைவன் அறிய மாட்டார்? என்ற எண்ணம் கொண்டு இருந்ததனால் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்த தொடங்கினார்கள். என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள் என்று கூறியவன், நீர் கொடுத்த அந்தப் பெண் என்று கடவுளிடம் இந்தப் பெண்ணை தன்னிடமிருந்து தனிமைப்படுத்தி காட்டுகின்ற நிகழ்வை நாம் விவிலியத்தில் அறிந்து கொள்ளலாம்.
ஒரு தவறிழைக்கும் பொழுது அந்தத் தவறில் மாட்டிக் கொள்கின்ற சூழலில் அடுத்தவரை மாட்டிவிட்டு நாம் தப்பித்துக்கொள்ள கூடிய பண்பு கொண்டவர்களாக பலநேரங்களில் நாம் இருக்கலாம். ஆனால் தவறு செய்தாலும் அதை நான் செய்தேன் என ஒப்புக் கொள்வதற்கு ஒரு துணிவு தேவை. அந்தத் துணிவை கற்றுத் தரக்கூடிய பணியை செய்பவளும் ஒரு தாயாகத் தான் இருக்க முடியும். 
     
பொய் சொன்னா அம்மாட்ட சொல்லிரு. அம்மா திட்ட மாட்டேன் அடிக்க மாட்டேன். ஆனா பொய் சொல்லக்கூடாது நீதான் இந்த தப்பை பண்ணினாயா? என்று அம்மா கேட்கும் பொழுது ஆம் என்று சொல்லி பல நேரங்களில் குழந்தைகள் தங்களது தவறை ஒப்புக் கொள்கிறார்கள். தவறுகளை ஒப்புக் கொள்ளக்கூடிய பண்புகளையும் கற்றுக்கொடுக்கும் இந்த தாயைப் போன்று தான் திரு அவையிலும் பலவிதமான
குழப்பங்களும், சந்தேகங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தாலும்,  நாம் செய்கின்ற செயல் சரியா? தவறா? என சீர்தூக்கிப் பார்த்து, தவறு  என்றால் அதனை உணர்ந்து கொண்டு மனமுவந்து ஏற்றுக் கொண்டு, திருத்திக் கொண்டு பயணிக்க கூடிய பணியை இன்று திருஅவை செய்து கொண்டிருக்கிறது என்பதை வரலாற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். இந்த போக்கை நமக்கு அன்னை கற்பித்தார் என்பதே நம் நம்பிக்கை.

ஒரு காலத்தில் மதத்தின் பெயரால் போரில் ஈடுபட்ட இதே கிறிஸ்தவ மதம் இன்று போர் தவறு என்பதை உணர்ந்து, மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, தன் தவறை திருத்திக் கொண்டிருக்கிறது. எப்படி ஒரு தாய் தன் குழந்தைக்கு பொய் சொல்லக்கூடாது ஒரு தவறை மீண்டும் செய்ய கூடாது என கற்றுக் கொடுத்தாரோ அதுபோல  திருஅவையை அன்னை மரியாளின் பரிந்துரை செபமும், வழிகாட்டுதலும் நல் வழியை  நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால்....
இன்றைய முதல் வாசகத்தில்  இறைவன் அறிய மாட்டார் என எண்ணி முதல் பெற்றோர்  ஒருவர் மாற்றி ஒருவர் குறை கூறினார்கள்.  நாம் வாழும் இந்த உலகத்தில் நாமும் நாம் செய்வது யாருக்கும் தெரியாது என்று எண்ணிக் கொண்டு பல செயல்களை மறைமுகமாக செய்து வருகிறோம். ஆனால் அனைத்தையும் உற்று நோக்குபவர் இறைவன் என்பதை தான் இன்றைய நாளில் நாம் உள்ளத்தில் இருத்திக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் இன்றைய வாசகங்கள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. எப்படி அன்னைக்கு தெரியாமல் நாம் தவறிழைக்க தயங்குகிறோமோ, அதுபோலத்தான் நாம் ஆண்டவர் இயேசுவுக்கு எதிராக தவறிழைக்கவும் தயக்கம் கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.  சொல்லாலும் செயலாலும் ஆண்டவர் இயேசுவுக்கு உகந்த வாழ்வையே நாம் மேற்கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும். அதுவே நமது வளர்ப்பின் அழகும்,  நமது வளர்ப்பின்  முதிர்ச்சியுமாக கருதப்படுகின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் சீடர்கள் அனைவரும் இணைந்து செபித்தார்கள் என நாம் வாசிக்க கேட்டோம். நாமும் அவர்களை போல இணைந்து செபிக்க அழைக்கப்படுகிறோம்.  சீடர்கள் யாரும் இவர் யார்? அவர் யார்? யார் படித்தவர்? யார் படிக்காதவர்? என்ற வேறுபாடுகளை எல்லாம் கடந்து அனைவரும் ஏற்றுக் கொண்டு இணைந்து ஜெபித்தார்கள். எப்படி ஒரு தாயானவள், 10 பிள்ளைகளைப் பெற்று இருந்தாலும்,அனைத்து பிள்ளைகளையும் ஒன்று என கருதுகிறாளோ, பத்து பிள்ளைகளையும் ஒரு பிள்ளை போலவே கருதி, ஒவ்வொருவரையும் எப்படி பாலூட்டி சீராட்டி வளர்த்தேடுக்கிறாளோ, அது போலத்தான் திரு அவையிலும் பல விதமான குளறுபடிகளும், பல விதமான மொழி பேசக்கூடிய மக்களும், பல விதமான கருத்துச் சிந்தனைகளை உடைய மக்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் இணைத்துக் கொண்டு சரியான பாதையில் பயணிக்க நமக்கு அழைப்பு தறப்படுகின்றது.  இவ்வாறு நாம் செயல்படும்போது நாம் கடவுளிடம் இருந்து வந்தவர்களாக, கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுபவர்களாக இச்சமூகத்தில் நாம் இருக்க முடியும். உருவகங்கள் வழியாக உரையாற்றிக் கொண்டிருந்த இயேசு ஒரு கட்டத்தில் உருவகங்களை நிறுத்திவிட்டு வெளிப்படையாகவே தவறை சுட்டிக் காண்பித்தார்.  சரியானதை எடுத்துரைத்தார். இன்று நாமும் வாழுகின்ற இந்த  சமுதாயத்தில் எதையும் மறைத்து மறைத்து பேசுவதைவிட சரியை  சரி  எனவும், தவறைை தவறு எனவும்  சொல்லுவோம். ஏனென்றால் நமது தாயான அன்னை மரியா நம்மை இத்தகைய பண்புபோடு வளர வேண்டுமெனவே நம்மை ஊக்கப்படுத்துபவராக இருக்கிறார். தொடக்ககால திருஅவையில் சீடர்களை  ஒருங்கிணைத்த அன்னை மரியா  இன்று நம்மையும் பாகுபாடுகளைக் கடந்து,  நல்லவர் தீயவர் என அனைத்தையும் விலக்கி, அனைவரையும் தன் பிள்ளை எனக்கருதி  நமக்காக இறைவனிடத்தில் பரிந்து பேசுகிறார். அந்த அன்னை திருஅவையின் தாயாக இருந்து இத்திரு அவையை வழிநடத்துவதன் வழியாக நம் ஒவ்வொருவரையும் வழிநடத்துகிறார். அந்த அன்னையின் குரலுக்கு செவி கொடுத்து நாமும் ஒருவர் மற்றவரைை ஏற்றுக்கொண்டு, அந்த அன்னையிடம் காணப்பட்ட அனைத்து நற்பண்புகளையும், நமது நற்பண்புகளாக மாற்றிக்கொண்டு இச்சமூகத்தில் பயணிக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். எனவே தாய்த் திரு அவையை வழிநடத்தக் கூடிய அன்னைை மரியாவை இன்றைய நாளில் மனதில் இருத்தி, அவரைப் போல எந்தவித எதிர்பார்ப்புமின்றி, அடுத்தவர் நலனைை முன்னிறுத்தி வாழுகின்ற நமது தெய்வங்களான தாய்மார்களைை மனதில் கொண்டு, அன்னை மரியாவை நோக்கி இன்றைய நாளில் நமது மன்றாட்டுக்கள் எடுத்துரைத்து அன்னையின் ஆசியைப் பெற்றுக் கொள்வோம். அடுத்தவருக்கும் பெற்றுத்தர முயலுவோம்.

வெள்ளி, 21 மே, 2021

உங்கள் வாழ்வு தூய ஆவியாரின் பாதையிலா ....?(23.5.2021)

உங்கள் வாழ்வு தூய ஆவியாரின் பாதையிலா ....?

இயேசுவில் அன்புக்குரியவர்களே உங்கள் அனைவருக்கும் தூய ஆவியாரின் பெருவிழா வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன் ...

காற்றிலே ஒரு மயிலிறகு பறந்து வந்தது பறந்து வந்த அந்த மயிலிறகு ஒரு ஓவியனின் அருகில் விழுந்தது அதை எடுத்து ஓவியன் அதைக்கொண்டு ஒரு அழகிய ஓவியத்தை வரையத் தொடங்கி வரைந்து முடித்த பிறகு அந்த மயிலிறகை தூக்கி எறிந்தான் . அது மீண்டும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டது இப்போது அது ஒரு மருத்துவரின் கையை சென்றடைந்தது. அதை எடுத்த மருத்துவன் அதைக்கொண்டு எண்ணெயைத் தொட்டு காயப்பட்ட ஒருவருக்கு மருந்திட்டான். மீண்டுமாக காற்று வீசிய பொழுது அந்த மயிலிறகு மீண்டும் பறந்து சென்று ஒரு இளைஞனின் கையில்கிடைத்தது அந்த இளைஞன் அந்த மயிலிறகு எடுத்து அதில் சில பகுதிகளை அகற்றி விட்டு அதைக் கொண்டு தனது காதுகளை குடையத் தொடங்கினான்.ஒரே மயிலிறகு தான் ஒருவர் அதனை அழகிய படமாக வரைய பயன்படுத்தினார் ஒருவர் அடுத்தவரின் காயத்தை துடைக்க பயன்படுத்தினார் ஒருவன் தன் காதுகளை குடைவதற்கு பயன்படுத்தினான். இந்த மயிலிறகு போலத்தான் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் தூய ஆவியானவர் இருக்கிறார் அவரை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான விதத்தில் பயன்படுத்துகிறோம்.

 பலர் பல நேரங்களில் அவரை பயன்படுத்தி வாழ்வில் பல அற்புதமான காரியங்களை முன்னெடுக்கிறார்கள். சிலர் நேரங்களில் அவரை பயன்படுத்தி இச்சமூகத்தில் அடுத்தவரின் நலனை காக்கிறார்கள். இன்னும் சிலரோ  அவரை பெரிதும் கண்டு கொள்வதில்லை. அவரை உதாசீனப்படுத்திவிட்டு செல்ல கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுள் நாம் எப்படிப்பட்டவர்கள்?இந்தத் தூய ஆவியார் யார்? என்னவெல்லாம் செய்வார்?  என்பதை சிந்திக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, 
மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது
(தொடக்கநூல் 1:1-2)
இவ்வாறு படைப்பின் தொடக்கத்தில் இருந்தே இருந்து வருகின்ற இந்த 
தூய ஆவியாரை இயேசு இறந்து உயிர்த்த விண்ணிற்கு ஏறிச் செல்லும் போது நம்மோடு இருப்பதற்காகவும் நன்மை தீமையை நமக்கு வெளி காட்டுவதற்காகவும் நம் மீது பொழிந்து சென்றார் என விவிலியத்தில் நாம் வாசிக்கலாம்.
இந்தத் தூய ஆவியானவர் மனிதர்களாகிய ஒவ்வொருவர் மேலும் பொழியப்பட்டுள்ளார். இன்றைய முதல் வாசகத்தில் பெந்தகோஸ்து பெருவிழா பற்றி நாம் வாசிக்க கேட்டோம் 

பெந்தக்கோஸ்து பெருவிழா என்றால் பொதுவாக  நாம் நினைவுக்கு வருவது இயேசுவின் சீடர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.
(திருத்தூதர் பணிகள்2:4) என்பது தான். 
பேசியவர்கள் கலிலேயர்கள். ஆனால் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு அங்கு கூடி இருந்த பல மொழி பேசும் மக்களும் சீடர்கள் பேசுவதை தங்களுடைய மொழிகளில் கேட்டு மலைத்துப் போனார்கள். தூய ஆவியானவர் நம்மீது இருந்து செயலாற்றுகிறார் என்பதை உணரும்போது நாமும் இந்த சமூகத்தில் வியக்கத்தக்க பல காரியங்களை செய்திட முடியும். 


இந்தத் தூய ஆவியானவர் மனிதர்கள் ஒவ்வொருவர் மேலும் பொழியப்படுகிறார். இவரை திருமுழுக்கு அருள் சாதனத்திலும் உறுதிபூசுதல் அருள் சாதனத்திலும் நாம் பெறுகின்றோம். 
இந்தத் தூய ஆவியானவர் தந்தை இறைவனிடமிருந்தும் மகன் இயேசுவிடம் இருந்தும் வருபவர்.
இவரைப் பெற்றுக்கொள்கின்ற நாம் இவர் தரக்கூடிய அருள் வரங்களையும் கனிகளுக்கும் ஏற்றவகையில் இச்சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட கூடியவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்.
 
 இன்று நாம் வாழும் இந்த சமூகத்தில் சந்தையில் கூவி கூவி விற்கப்படும் பொருட்களில் ஒன்றாக இந்த தூய ஆவியானவரின் பெயரை வைத்து  வியாபாரம் செய்யும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இன்று ஒரு சிறிய அறை இருந்தால் போதும் அங்கு மக்களை கூட்டி ஜெபம் என்ற பெயரில் மக்களை திசை மாற்றும் பணியில் ஈடுபடுவோர் பலர்.  கூடி தானே ஜெபிக்கிறார்கள் அதில் என்ன குறை இருக்கிறது? என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம்...  கூடி ஜெபிப்பதில் அல்ல குறை பிரிந்து ஜெபிப்பதில் தான் குறை இருக்கிறது... இவர்கள் கூடி ஜெபிப்பவர்கள் அல்ல பிரிந்து ஜெபிப்பவர்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.  

கோவில் இல்லா நகரில் குடியிருத்தல் ஆகாது என்பதற்கு ஏற்ப.....ஒர் ஊர் இருந்தால் அந்த ஊரில் உள்ள அனைவரும் கூடி ஜெபிக்க கோவில்கள் இருக்கும். அத்தகைய கோவிலினுள் வந்து இணைந்து ஜெபிப்பது தான் உண்மையான கூட்டுச் ஜெபம் ஆனால் அந்தக் கோவிலில் உள்ளவர்களோடு  இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகளின் அடிப்படையிலும், முன்னுரிமைகள்  என்ற எண்ணத்தின் போக்கிலும், சுய விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் பிரிந்து சென்றவர்களை பிரிந்து சென்று ஜெபிப்பவர்கள் என்று கூறுவதுதான் முறையாக இருக்கும் என எண்ணுகிறேன்.  ஆனால் தூய ஆவியாரின் பணி என்பது இணைப்பையும் மையப்படுத்தி ஒன்றிப்பை உருவாக்குவது. எனவே தான் திருஅவை இன்றும் பிரிந்து சென்றாலும் இவர்களை சகோதரர்கள் என அழைத்து ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.

முரண்பாடுகளோடு பயணிக்கக்கூடிய இந்த உலகத்தில் நாம் நினைப்பது அனைத்தும் அரங்கேற வேண்டும் என்று எண்ணக்கூடிய இடமல்ல இந்த ஆலயங்கள் ... சுய விருப்பு வெறுப்புகளை கடந்து இந்த சமூகத்தில் நிகழுக்கூடிய அனைத்து விதமான மக்களுடைய எண்ணங்களும் ஏக்கங்களும் எளிய வகையில் பிரதிபலிக்கக்கூடிய இடம்தான் இந்த ஆலயங்கள்.... எனவே இந்த ஆலயங்களில் பல குறைகள் நம் கண்ணுக்கு தெரியலாம் ....பல கேள்விகள் உள்ளத்தில் எழலாம் ...நம்மிடையே பல விதமான முரண்பாடுகள் தோன்றலாம் ....இவைகளை இறைப் உதவியோடு தூய ஆவியாரின் துணைகொண்டு  
எது சரி எது தவறு என்பதை உணர்ந்தவர்களாய் சரியானது தொடரவும் தவறானது மாற்றம் பெறவும் இணைந்து ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொண்டு அடுத்தவர் நலனை மையப்படுத்தி ஜெபிப்பது தான் ஒற்றுமையின் அடையாளம் ஆகும்.அதுவே தூய ஆவியாரின் வழிநடத்துதல் ஆகும்.
சுய விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து, முரண்பாடுகளின் அடிப்படையில் நாம் இணைந்து இருத்தலாகாது எனக்கூறி பிரிந்து செல்ல நினைத்தால் அது தூய ஆவியாரின் தூண்டுதலாக இருத்தலாகாது என்பதை இன்றைய நாளில் உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.   
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பிரிவினை என்பது தூய ஆவியாரின் தூண்டுதல் அல்ல என்பதை தெளிவுபடுத்திக்காட்டுகிறது.தூய ஆவியின் செயல்பாடு இணைப்பை ஒன்றிப்பை மையப்படுத்தியது.
எனவே அதில் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்ற தூய ஆவியாரின் கனிகள் இடம்பெறும்.

படைப்பின் தொடக்கத்திலிருந்து செயலாற்றும் இந்த தூய ஆவியானவர் தான் இயேசு இந்த மண்ணில்  பிறந்தது முதல் இறப்பு வரை அவரது வாழ்வில் உடன் இருந்தவர் என்பதை விவிலியத்தின் உதவியோடு நாம் அறிந்து கொள்ளலாம். தான் கொண்டிருந்த இந்த தூய ஆவியானவரை தான் இயேசு நம் மீது பொழிந்து நமக்கு நன்மை, தீமையை எடுத்துரைக்கும் துணையாளராக விட்டுச் சென்றார்.
தந்தையாம் இறைவனிடம் இருந்தும் மகன் இயேசுவிடம் இருந்து வந்த இந்த தூய ஆவியானவர் இன்றும் நம்மீது இருந்து  நம்மை நல்வழி நோக்கி அழைத்துச் செல்லும் பணியை செய்து கொண்டிருக்கிறார். இவரை பலர் பல நேரங்களில் நமது மனதின் ஓசை என்கிறார்கள் பலர்.
 நமது மனதின் ஓசையாக செயல்படும் இவரது குரல் ஒலியை நாம் பல நேரங்களில் உதாசீனப்படுத்திவிட்டு மனம் போன போக்கில் சிற்றின்ப நாட்டங்களின் அடிப்படையில் செயலாற்றுகிறோம்.  ஆனால் இன்றைய நாளில் நாம் அனைவரும் இணைந்து இந்தத் தூய ஆவியானவரின் குரலோசைக்கு செவி கொடுக்கக் கூடியவர்களாக மாறி, நமது சுய விருப்பு வெறுப்புகளை எல்லாம் புறம்தள்ளி அனைவரின் நலனையும் முன்னிறுத்தி எப்போதும் எல்லா விதமான சூழ்நிலைகளிலும் அடுத்தவரையும் ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பக்குவத்தை பெற்றவர்களாக  ஒருவர் மற்றவர் நலனை முன்னிறுத்தி முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இணைந்து ஒரே குடும்பமாய் தூய ஆவியானவரை பெற்றுக்கொண்ட நாம் இயேசுவின் சீடர்களைப் போல வியக்கத்தக்க சமூக பணிகளை முன்னெடுத்துச் செல்ல இன்றைய நாளில் இறை அருளை தொடர்ந்து வேண்டுவோம் .
நமது சொல்லிலும் செயலிலும் தூய ஆவியானவரின் தூண்டுதலில் செயல்படும் இயேசுவின் சீடர்கள் நாம் என்பதை வெளிகாட்டுவோம்...

சீடனின் பணி என்ன? (22.5.2021)

சீடனின் பணி என்ன? 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய நாள் இறைவார்த்தைகள் ஒரு சீடனுக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகள் என்ன? என்பதை வெளிக்காட்டுகின்றன.  சீடன் எனப்படுபவன் வந்தோரை வரவேற்கத் தெரிந்தவராகவும் இறைவார்த்தையை அறிவிக்க கூடியவராகவும் இருத்தல் அவசியமாகிறது. 

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
(எபிரேயர் 4:12 )
             ‌ என விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம்.

                    இன்றைய முதல் வாசகத்தில் பவுல் இறைவார்த்தையை அறிவித்ததால் பலவிதமான துயரங்களை சந்தித்தார்.  துயரத்திற்கு மத்தியிலும் துவண்டு போய்விடாமல் ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக, அவரைப்பற்றி அறிவிக்கும்போதெல்லாம் எழக்கூடிய இன்னல்களை எல்லாம் கண்டு அஞ்சாமல் நடுங்காமல் பயந்துபோய் தன் வாழ்வை மாற்றிக் கொள்ளாமல், துணிவோடு அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். அப்படி அறிவித்ததால் அவர் பலரால் விசாரிக்கப்பட்டார். சிறையில் இருந்தார். பலவாறு அவர் துன்பப்பட்டார்.  துன்பங்களுக்கு மத்தியிலும் தன்னிடம் நம்பிக்கையோடு வரக் கூடியவர்களை வரவேற்கும் பணியினைச் செய்தார்.  அவர்களை உபசரித்தார்.  அவர்களோடு இறைவார்த்தையைப் பகிர்ந்து கொண்டார்.  ஒரு சீடனாக இதையெல்லாம் செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். நாமும் நம்மை தேடி வருபவர்களை வரவேற்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.  அவர்களோடு இறைவார்த்தையான நல்ல வார்த்தைகளை பகிரக் கூடியவர்களாக இருக்கிறோம். பலவிதமான கவலைகளோடும் துன்பங்களோடும் ஆலயத்தை நோக்கி வரக் கூடியவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை தருவது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது. இறைவனது வார்த்தைகளால் அவர்களை தேற்ற வேண்டியது ஒவ்வொரு சீடனுடைய பொறுப்பாகும். இந்தப் பணியினை நாம் சிறப்பாக செய்ய இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு இறையாட்சியினைப் பற்றி பலவாறு அறிவிக்கின்றார்.  ஆனால் இயேசு அறிவித்த வார்த்தைகளில் இருக்கக்கூடிய உண்மைத் தன்மையையும் உண்மையையும் உணர்ந்து கொள்ளாமல் பல நேரங்களில் வார்த்தைகளில் சிலவற்றை மட்டும் பிடித்துக் கொண்டு, இவர் ஏன் இதைச் சொன்னார்? எதற்காக இப்படி சொன்னார்? என்று பல நேரங்களில் எண்ணிக் கொண்டு இருக்கிறோம்.  தன்னுடன் இருந்த சீடர்களினுடைய எண்ணத்தை அறிந்தவராய் அவர்களுடைய எண்ண ஓட்டத்தை உணர்ந்து அவர்களுடைய அத்தகைய எண்ண ஓட்டம் தவறானது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார் இயேசு.  நாமும் பல நேரங்களில் இறைவார்த்தையை கேட்க வேண்டும் என்ற ஆவலோடு ஆலயத்திற்கு வருகிறோம். இறைவார்த்தையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் பல நேரங்களில் நாம் எதற்காக வந்தோம்? என்ன பணியை செய்ய வேண்டும்? என்பதை மறந்து போய் ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டு செயல்படக் கூடியவர்களாக இருக்கிறோம்.

 இத்தகைய நிலையில் இருந்து நாம் மாறி பவுலைப் போல வந்தோரை இன்முகத்தோடு வரவேற்கவும், அவர்களுக்கு நல்ல வார்த்தைகளான இறைவார்த்தையைப் பகிரவும் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.  

இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் இறைவனது வார்த்தைகளான நல் வார்த்தைகளுக்காக ஏங்கும் உள்ளங்களாக இவ்வுலகில் பலர் உண்டு. பாராட்டுக்காக ஏங்குபவர்களைப் பாராட்டலாம். ஆறுதல் இன்றி தவிப்பவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை தரலாம். தேவையில் இருப்பவர்களின் தேவையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடலாம். 

 இது போன்ற இறைவார்த்தையின் அடிப்படையிலான பணிகளை இச்சமூகத்தில் நாம் முன்னெடுக்கும் போது நாம் உண்மையான சீடர்களாக  மாறுகிறோம். ஆறுதல் தேடியோ அல்லது பலவிதமான துன்பங்களுக்கு மத்தியிலோ நம்மைத் தேடி வருபவர்களைக் கண்டும் காணாமல் சென்று விடாமல், அவர்களை வரவேற்கவும், இறைவார்த்தைகளான நல் வார்த்தைகளை அவர்களோடு பகிரவும், இறையருளை வேண்டுவோம் இன்றைய நாளிலே.

வியாழன், 20 மே, 2021

நீங்கள் விசாரிக்கப் பட்டதுண்டா? ... (21.5.2021)

நீங்கள் விசாரிக்கப் பட்டதுண்டா? 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 விசாரணை என்றதுமே தமிழில் விசாரணை என்ற ஒரு படம் வந்தது. அது உங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் இன்றைய வாசகங்கள் இரண்டிலும் இரண்டு விசாரணைகளை நாம் காணலாம். 

முதல் வாசகத்தில்  பவுல் விசாரிக்கப்படுகிறார். நற்செய்தி வாசகத்தில் இயேசு பேதுருவை விசாரிக்கிறார். இந்த விசாரணைகள் இரண்டுமே அன்பை அடிப்படையாகக் கொண்டது. பவுல் இயேசுவின் மீது ஆழமான அன்பு கொண்டிருந்தார். அதன் விளைவாக அவருடைய கருத்துக்களை போதித்தார். அதை ஏற்றுக்கொள்ள இயலாத சிலர் அவரை குற்றவாளி என தீர்ப்பிட்டு அதிகாரிகளின் முன்பாக அழைத்து வந்தார்கள். அந்த அதிகாரிகளைக் கண்டு அஞ்சாமல் தான் அன்பு செய்கின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை மனதில் உறுதியாக பற்றிக் கொண்டிருந்த காரணத்தினால், உயர் அதிகாரிகளும் என்னை விசாரிக்கலாம். நான் காத்திருக்கிறேன் எனக் கூறி, சிறைவாசத்தை இன்முகத்தோடும், தைரியத்தோடும், ஏற்றுக் கொண்டவர் இந்த பவுல். 


நற்செய்தி வாசகத்திலும் இயேசு தன்னுடைய சீடரான பேதுருவிடம் நீ என்னை அன்பு செய்கிறாயா? என்று விசாரிக்கிறார். மூன்று முறை இதே கேள்வியை எழுப்ப, இரண்டு முறை ஆம் என்று கூறிய பேதுரு, மூன்றாம் முறை நான் உம்மை எவ்வளவு அன்பு செய்கிறேன் என்பது உமக்குத் தெரியுமே என்று கூறி தன்னை முழுவதுமாக கையளிக்கின்றார்.  


இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில், பேதுருவை போலவும், பவுலைப் போலவும் பல நேரங்களில் அன்பை அடிப்படையாகக் கொண்டு நாமும் விசாரிக்கப்படுகிறோம். ஒருவரை அளவுக்கு அதிகமாக அன்பு செய்கிறோம். ஆனால் ஏதோ ஒரு சின்ன கருத்து வேறுபாடு. உடனே அன்பில் சந்தேகம் எழுகிறது. உண்மையாலுமே இவர் நம்மை முழுவதுமாக அன்பு செய்கிறாரா? என்ற கேள்வியானது உள்ளத்தில் எழுகிறது.  

குடும்பத்திலும் ஒருவருக்கு ஒருவர் அனைத்தையும் விட்டுக்கொடு பகிர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும், திடீரென நடக்கக்கூடிய சின்னஞ்சிறு மனக்கசப்புகள், அன்பில் கேள்விகளை உருவாக்குகிறது.  இந்த அன்பில் எழக்கூடிய கேள்விகள் அன்றோடு நின்றுவிடாமல் அது தொடரும் பொழுது, சந்தேகங்களாக மாறுகிறது. 
நாம் ஏதோ ஒரு நிகழ்வின் காரணமாக மன வருத்தத்தோடு வீட்டிற்கு வரலாம்.  வரும் போது நமது அன்புக்குரியவர் நம்மிடம் அந்த ஏதேனும் ஒன்றை கேட்கும் பொழுது, யாரோ ஒருவர் மீது இருக்கக்கூடிய கோபத்தை நமது அன்புக்குரியவர்களிடம் வெளிப்படுத்துகிறோம். உடனே அன்புக்குரியவர்களாள் அதை ஏற்க இயலவில்லை. அங்கு உறவில் சிக்கல் இருப்பதாகவும், அன்பு குறைவுபடுகிறது என்று எண்ணிக் கொண்டு ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்ள துவங்குகிறோம். சந்தேகப்பட துவங்கினாலோ, உறவு வளராது.

உண்மையான அன்பு என்பது ஒருவர் எப்படி இருக்கிறாரோ அவரை அப்படியே ஏற்றுக் கொள்வதில் தான் அடங்கி இருக்கிறது.

இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது அவர் பலவிதமான மனிதர்களை சந்தித்தார். சந்தித்த ஒவ்வொரு மனிதரையும் அன்பு செய்தார். அவர்கள் இருப்பது போல அவர்களை ஏற்றுக் கொண்டார்.  ஆனால் இன்று நாம் கருதுகின்ற அன்பு என்பது நமது விருப்பம் போல் ஒருவர் செயல்படுவது தான் உண்மையான அன்பு என எண்ணுகிறோம். எனவே நமது விருப்பப்படி ஒருவர் செயல்படவில்லை என்றால்,  அவர்  நம்மீது முழுமையாக அன்பு கொள்ளாதவர் என எண்ணி, சந்தேகிக்க கூடியவர்களாக இருக்கிறோம். இயேசு பேதுருவிடம் நீ என்னை அன்பு செய்கிறாயா? என்ற கேள்வியானது, பேதுருவிடம் இயேசு ஐயப்பட்டு கேட்ட கேள்வி அல்ல. அவரிடம் மூன்றாம் முறையாக பேதுரு உமக்குத் தெரியுமே என்று  தன்னையே கையளித்தது போல,  நாம் அடுத்தவரை அன்பு செய்வது என்பது வெறுமனே வார்த்தைகளால் அல்லாமல் சொல்லிலும் செயலிலும் வெளிப்படவேண்டும்.  அடுத்தவர்களின் உணர்வுகளையும், உள்ளத்து எண்ணங்களையும் உணர்ந்து கொண்டவர்களாய், அடுத்தவர்கள் இருப்பது போல அவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களோடு இச்சமூகத்தில் பயணிப்பது தான் உண்மையான அன்பாக இருக்க முடியும். நமது விருப்பப்படி நடக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அதுதான் அன்பு என நினைத்தால், அது அன்பிற்கு நாம் கொடுக்கும் தவறான விளக்கமாக இருக்கும். இன்றைய நாளில் இயேசுவின் மீது அதீத அன்பு கொண்டிருந்த காரணத்தினால் தான், பேதுரு இயேசுவிடம் தன்னையே முழுமையாக கையளித்தார். அதேபோலத்தான் பவுலும்,  தன்னுடைய வாழ்வில் இயேசுவை அன்பு செய்வதால்  துன்பமே நேர்ந்தாலும், துணிவோடு அதனை ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், இவர்கள் ஒவ்வொருவருமே இயேசுவை இருப்பது போல இயேசுவை  கண்டார்கள், நம்பினார்கள், அன்பு செய்தார்கள். நாமும் சக மனிதர்கள் மீது  நாம் கொண்டுள்ள அன்பு குறித்து விசாரிக்கப்படும் போது பவுலைப் போலவும் பேதுருவை போலவும் நம்மை நாம் முழுமையாக கையளிக்க துணிவு கொள்வோம்.மேலும்   நாமும் நம் ஆண்டவரின் அன்பில் நிலைத்திருக்க வேண்டுமாயின் சக மனிதர்களுடன் கூடிய அன்பில், உறவில் நிலைத்திருக்க வேண்டும். அதற்கு நாம் நமது விருப்பப்படி அவர்கள் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு அடுத்தவர் இருப்பது போல அவர்களை ஏற்றுக்கொண்டு இச்சமூகத்தில் வலம்வர இறையருளை வேண்டுவோம்.

சமாரியர் – ஓர் அலசல் முன்னுரை:

 அலகு ஒன்று

1. யார் இந்த சமாரியர் – ஓர் அலசல்

முன்னுரை:

நம் வாழும் உலகில் ஒருவர் ஒருவர் இணைந்து வாழவே படைக்கப்பட்டுள்ளோம். ஆனால் பல நேரங்களில் இதனை மறந்து ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்துவதே நோக்கமாக கொண்டு பலவிதமான காரணங்களை உருவாக்கி ஒருவரை ஒருவர் அடிமைபடுத்தி வாழும் நிலையே பல ஆண்டுகளாக தொடர்கிறது. மனித இனம் ழுமுவதற்கும் “ஆண்” சட்டம் இயற்றுபவராக காட்டப்படுகிறார்கள்;. மனித குலம் முழுவதற்கும் இரண்டாம் நிலையிலே “பெண்” காட்டப்படுகிறாள். இந்த நிலையே சமூகத்தில் பெரும்பாலும் காணப்படுகின்ற எதார்த்தம். இதைக்காணும் போது மனதில் ஏன் பெண்களுக்கு சமஉரிமை அளிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகின்றது. மனித வரலாற்றில் பாவம் நுழைந்ததற்கும், சமூகத்துன்பங்களுக்கும் பெண்களே அதிகப் பொறுப்பாவார்கள் என்கிற அடிமைப்படுத்தும் சிந்தனைகளும்  காணப்படுகின்றது. பலநேரங்களில் ஆண்கள் முன்னேறுவதற்குப் பெண்கள் கருவிகளாக்கப்பட்டார்கள். வரலாற்றில் பெண்களின் சாதனைகளும், படைப்புகளும் ஆணாதிக்கச் சிந்தனையால் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.  சமுதாயத்திலும், குடும்பத்திலும் தந்தை வழி ஆதிக்கம் சக்தி வாய்ந்ததாகவும், பெண்களும், குழந்தைகளும் ஆண் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு வாழுகின்ற நிலையே காணப்படுகின்றது. அதுப்போலவே நமது நட்டில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைப் போலவே யூதர்களால் ஒதுக்கப்படும் சமாரியர் பற்றியும், சமாரியப்பெண் பற்றிய புரிதலில் ஆழப்பட ஓர் வரலாற்று பயணம்.

1.1 யூத, சமாரிய உறவு பற்றிய பார்வை

தொடக்கத்தில் இருந்து இன்று வரை யூதருக்கும் சமாரியாருக்கும் இடையே உறவு சீர் குலைந்து இருந்து வருகிறது. இவர்கள் ஒருவர் மற்றவரை வெறுத்தனர். இவர்களிடையே பகைமை முற்றி ஒருவர் மற்றவரைத் எதிரிகளாகவே பவித்துவருகின்றனர். 

கி.மு. 721ஆம் ஆண்டிலிருந்தே இப்பகைமை உருவாகியது. ஆசிரியப் படையெடுப்பின் விளைவாகக் கலப்பு திருமணங்கள் நடந்து, கலப்பு இனமாகிவிட்ட வடநாட்டவரைத் தென்னாட்டு யூதர்கள் தாழ்வானவர்களாகக் கருதினர். இதுவே யூதருக்கும் சமாரியர்களுக்கும் இடையேயான பிரிவின் ஆரம்பமாக வரலாற்று ஆசிரியர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

கி.மு. 6ஆம் நூற்றாண்டில் பாபிலோனிலிருந்து திரும்பி வந்த யூத அகதிகள் அழிவுற்ற தங்கள் ஆலயத்தைக் கட்டத் தொடங்கியபோது (கி.மு. 539,38) சமாரியரின் ஒத்துழைப்பை உதறித் தள்ளினர். இது யூதருக்கு வெறுப்பை அதிகரித்தது. எருசலேம் ஆலயம் கட்டுவதில் தங்களுக்கு பங்கு தரப்படாததால் சினமுற்ற சமாரியர்கள் மாமன்னர் அலெக்சாந்தரின் அனுமதி பெற்றுக் கெரிசிம் மலையில் தங்களுக்கெனத் தனியொரு ஆலயத்தைக் கட்டினார் (கி.மு. 323). இது யூதருக்கு எரிச்சலைக் கொடுத்தது. இந்தப் போட்டி ஆலயத்தைத் தகர்ப்போம் என அவர்கள் சபதமிட்டனர். சுpல காலத்திற்க்கு பின்னர் மக்கபேய மன்னர் யோவான் இர்க்கான் இந்த ஆலயத்தைத் தரை மட்டமாக்கினர் (கி.மு. 135-109). இந்த ஆலயத்தின் எந்த தடயமும் இருக்கக்கூடாது என்பதற்காக ஆலயத்திற்குக் கீழே இருந்த பாறையை வெட்டிச் சமாரியரின் ஆலயம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் செய்தார். இது சமாரியரின் கோபத்தைக் மேலும் அதிகமாக்கியது; எனவே பகைமை முற்றியது அது பல வருடங்களாக வரலாற்றில் தொடர்கிறது. 

கலிலேயாவில் வாழ்ந்த யூதர்கள் எருசலேமுக்குச் செல்லும்போது சமாரியா வழியாக செல்வது தான் நேரிய வழி ஆனால் அவர்கள் நேர்வழியில் செல்லாது, யோர்தான் ஆற்றைக் கடந்து பெரேயா வழியாக இரு மடங்கு தூரம் அதிகமாக பயணம் செய்து எருசலேமை அடைவர். இயேசுவின் காலத்திற்குச் சற்று முன்பு, பெரிய ஏரோது சமாரியரை ஆதரித்து, சமாரியாவில் பல திட்டங்களை நிறைவேற்றினார்; சமாரிய நகரையும் திரும்பக் கட்டினார். இது யூதரின் கோபத்தையும் பகைமையையும் அதிகரித்தது. இயேசு இளைஞனாக இருந்த காலத்தில் சமாரியர் எருசலேம் ஆலயத்தில் மனித எலும்புகளைப் போட்டு அதனை தீட்டுப்படுத்தினர். இது வெறுப்புணர்வை இன்னும் வளர்த்தது.

இவ்வாறு பல நிகழ்வுகள் யூதர் சமாரியரிடையே உயர்வு தாழ்வு மனப்பான்மை, போட்டி, பொறாமை, வெறுப்பு, பகைமை ஆகியவற்றை வளர்த்தன. எனவேதான், யூதர் சமாரியரோடு பழகுவதில்லை (4:9) என்ற குறிப்பு காணப்படுகிறது.  இவ்வாறு பல நிலைகளில் யூதருக்கும் சமாரியருக்கும் இடையே பல நிலைகளில் உறவானது சிதைந்து காணப்பட்டது. 

1.2 இயேசுவின் காலத்திய ஏழைகள் - யார்?

1.2.1. எருசலேம் ஆலயத்தை மையபடுத்திய ஏழைகள்:

இயேசுவின் காலத்தில் பல நிலைகளில் மக்கள் ஏழைகளாக இருந்தனர். உணவு, உடை, தங்குமிடம் என எதுவும் இல்லாத நிலையில் பலர் எருசலேம் ஆலயத்தை சார்ந்தn இடங்களில் தங்கி வாழ்ந்தனர். இக்காலத்தில் எருசலேம் ஆலயம் அமைந்துள்ள இடத்தின் அருகே வாழ்ந்த பிச்சை எடுப்பவர்களுக்கு பிச்சையெடுப்பவர்களின் சொர்க்கமாக எருசலேம் திகழ்ந்தது. எருசலேமில் பிச்சையிடுவது யூதர்களின் தலை சிறந்த பண்பாகக் கருதப்பட்டது (மத் 6:2-5). எனவே பிச்சை எடுப்பவர்களின் கூட்டம் அதிகமாக இப்பகுதியில் இருந்தது. பலர் உழகை;காமல் பார்வையற்றோர்,  காதுக்கேளாதோர், ஊனமுற்றோர் போல நடித்தும் பிச்சையெடுத்தனர். பிச்சையால் வாழ்ந்த தொழுநோயாளர்கள் பலர் கெத்சமனி செல்லும் பாதையில் காணப்பட்டனர் என வரலாற்றில் இருந்து அறியலாம். தொழுநோயாளிகள் புனித நகரில் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், நுழைவாயில்கள் அருகில் கூடாரம் அமைத்து பிச்சையெடுத்தனர். அன்று நுழைவாயில் கோயிலின் அங்கமாக கருதப்படவில்லை (திப 3:2).  இவ்வாறு பல நிலைகளில் உண்மையில் ஏழைகளாகவும், ஏமாற்றும் நோக்கம் கொண்ட பல உழைக்க மனமற்ற ஏழைகளும் எருசலேம் ஆலயத்தை மையம் கொண்டு வாழ்ந்து வந்தனர்.

இக்காலத்தில் சமூக, அரசியல், பொருளாதார என அனைத்து நிலைகளிளும் பலர் ஏழைகளாக்கப்பட்டிருந்தனர். ஏழைகளுல் சிலர் உழைப்பினால் வாழ்ந்தனர். சிலர் திருப்பயணிகளின் காணிக்கையை நம்பி வாழ்ந்தனர். இன்னும் சிலருக்குக் கோவில் கருவூலத்திலிருந்து பணம் தரப்பட்டது. மேலும் பிச்சையிடுதல் யூதமறையின் அடிப்படைக் கோட்பாடாகும் (மத்6:2-4) எனவே பிச்சையை நம்பியும் பலர் வாழ்ந்தனர். பிச்சையிடும் செயல் முக்கிய மதச்சடங்காகவும், நீதிச் செயலாகவும் கருதப்பட்டது (திப11:1). 

1.3 இயேசுவின் வாழ்வில் வெளிப்பட்ட ஏழ்மை நிலை:

இயேசுவின் வாழ்வும் ஏழ்மையில் ஊறியது. இயேசுவின் பிறப்பு மாடமாளிகையில் அல்ல மறாக மாட்டு தொழுவத்திலே என்பது இவரின் வாழ்வு நிலையை எளிதில் உணர வழிவகுக்கிறது. எருசலேம் தேவாலயத்தில் வழங்கப்படும் காணிக்கைகளில் ஏழைகளின் காணிக்கையாகிய இரண்டு மாடப்புறாக்களைத் தான் இயேசுவின் பெற்றோர் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறார் (லூக் 2:24, லேவி 12:8). இயேசு மானிட மகனுக்கு தலைசாய்க்கவும் இடமில்லை (மத் 8:20, லூக் 9:58) என்பது இவரின் நிலையை படம்பிடித்து காட்டுகிறது. இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது நாடோடி போதகராக தம்மை ஏற்றுக்கொண்டவர்களிடையே தங்கியும், அவர்களோடு உணவருந்தியும் வந்தார். இயேசுவின் இறப்புக்கு பிறகு கூட அவரது உடலை வi  க்க கிடைத்தது மாற்றான் கல்லறையே. இவ்வாறு இயேசுவின் வாழ்வில் அவர் ஏழையாக இருந்தார் என்பது கண்கூடு.

1.4 இயேசுவின் காலத்திய சமாரியர்கள் - யார்?

இயேசுவின் காலத்திய சமாரியர்கள் யூதர்களுக்கும் ஆசீரியர்களுக்கும் பிறந்தவர்களே சமாரியர்கள். கலப்பினத்தால் பிறந்த சமாரியர்களை யூதர்கள் இரண்டாம் தர குடிமக்களாகக் கருதினார். யூதர்கள் தங்களுடைய இனத்துக்குள்ளே மட்டுமே திருமணம் செய்வார்கள். யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே திருமணம் என்பது சிந்திக்க இயலாத ஒன்று. எனவே யூதருக்கும் பிற இனத்தார்க்கும் (அசீரியர்களுக்கும்) இடையேயான திருமண உறவால் பிறந்த சமாரியர்கள் தொட்டில் வாழ்க்கையிலிருந்தே தீட்டுப்பட்டவர்கள் என்றும், மற்றவர்களைத் தீட்டுபடுத்துகின்றவர்கள் என்று யூதர்கள் கருதினர். அதிலும் குறிப்பாக சமாரியப் பெண்களுக்குத்  தொட்டிலில் இருந்தே மாதவிடாய் உண்டு என்றும், இதனால் இவர்களின் கணவன்மார்கள் என்றென்றும் தீட்டுப்பட்டவர்கள்  (லேவி 15:24)  என்றும் கருதப்பட்டனர். மொத்தத்தில் சமாரியர்கள் இருக்கின்ற இடமும், அந்த இடத்தில் வைக்கப்படும் பொருட்கள் அனைத்தும் தீட்டுப்பட்டதாக கருதப்பட்டது. சமாரியர்களால் வெறுக்கப்பட்ட யூத இனத்தில் இயேசு பிறந்ததாலும், சமாரியர்களால் வெறுக்கப்பட்ட எருசலேம் ஆலயத்திற்கு இயேசு செல்வதாலும், சமாரியர்கள் இயேசுவுக்கு அடைக்கலம் தர மறுக்கின்றனர் (லூக் 9:52-53). ஆந்த அடிப்படையில் தான் சமாரியப் பெணணும்; இயேசுவுக்கு தண்ணீர் தர மறுக்கின்றாள். இயேசுவின் காலத்திலே யூதர்கள் சமாரியர்கள் இருவரிடையும் அழமான பகைமை உணர்வு மேலோங்கியே காணப்பட்டது.

1.5 இயேசுவின் காலத்திய பெண்கள் - யார்?

இயேசுவின் காலத்தில் யூதப் பெண்கள் பொது வாழ்வில் பங்கெடுப்பதில்லை. பெண்களுக்கு எதிராக பல விதமான அடக்கு மறைகள் காணப்பட்டன. பெண்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும் எருசலேம் பெண்கள் இரண்டு முகத்திரைகளை அணிந்திருந்தனர். பெண்கள் கூட்டத்தில் ஒரு மூலையில் இருப்பது சிறப்பாக கருதப்பட்டது. ஆண், பெண்ணோடு தனிமையாக இருப்பது தவறு  (யோவா 4:27) என்ற பார்வை நிலவியது. சந்தைகள், மாமன்றங்கள், நீதிமன்றங்கள், கூட்டங்கள் போன்ற அதிகமாக மக்கள் கூடுகின்ற இடங்களில் பெண்கள் மறுக்கப்பட்டனர். 

பொதுவாகவே அக்காலத்தில் பெண்கள், புறவின அடிமைகள், குழந்தைகள் ஆகியோர் தரம் தாழ்ந்தவர்களாகவே பார்க்கப்பட்டனர். அக்காலத்தில் இவர்களுக்கான சமூக உரிமைகளும் மிகவும் குறைவு. அதிலும் வழிபாட்டுக் காரியங்களில் பெண் ஆணுக்கு நிகரானவள் அல்ல. ஆண் குழந்தையின் பிறப்பு நற்செய்தியாக அறிவிக்கப்பட்டது (எரே 20:15). பெண் குழந்தையின் பிறப்பு சோக கீதமாக தென்பட்டது. 

இயேசுவின் காலத்தில் பெண், குழந்தை பெற்றுத் தரும் கருவியாகப் பார்க்கப்பட்டாள். வெளியுலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டாள். திருமணத்திற்கு முன் தந்தையின் கட்டுப்பாட்டிலும், திருமணத்திற்குப் பின் கணவனின் கட்டுப்பாட்டிலும் இருந்தாள். பல வகைகளில் ஆண்களைவிடத் பெண்கள் தரம் தாழ்ந்தவர்களாக கருதப்பட்டானர்.  அக்கால பெண்கள் நிலையை குறித்து பிலோ அவர்கள் “விவாதம் மற்றும் செயல்பாடுகள் நிறைந்த பொது வாழ்க்கையில் எல்லாக் காலத்திலும் ஆண்களுக்கு மட்டும் உரியது” என்று கூறுகின்றார்.

1.6 நற்செய்தியாளர்களின் பார்வையில் சமாரியர்கள்:

நற்செய்தியாளரான லூக்கா சமாரியர்களைக் கிறிஸ்தவ வாழ்வின் முன் மாதிரிகளாகக் சமாரியர்களைக் காட்டுகின்றார் (லூக் 10:25-37; 17:11-19). நற்செய்தியாளரான யோவான் (4:1-42) எந்தவிதமான அடையாளத்தையும் எதிர்பாராது, வார்த்தையின் பொருட்டு இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளும் மக்களாக சமாரியர்களைக்; காட்டுகின்றார். நற்செய்திதியாளர்கள் முன்மொழியும் இயேசுவின் பார்வையில் சமாரியர்களை உரிமைக் குடிமக்களாக்குகின்றானர். இயேசுவின் போதனைகளின்  அடிப்படையில் சமாரியர்களை நம்பிக்கையின் முன் மாதிரியாகக் காட்டுகின்றார்கள். 

முடிவுரை

பெண்கள் என்றாலே அடிமை நிலையில் உள்ளவர்கள். அதிலும் குறிப்பாக சமாரிய பகுதி பெண்கள் அடிமைகளிலும் அடிமைகளாக வாழ்வதை வரலாற்றின் மூலம் அறிகிறோம். அவர்களுடைய வாழ்வில் அவர்கள் அனுபவித்த துன்பங்கள், ஒடுக்கபப்பட்ட ஓரங்கட்டப்பட்ட நிலைகளை இந்த அலகின் மூலம் நாம் அறிந்துக் கொள்ள முடிகிறது.


அலகு இரண்டு

2. இயேசுவும் சமாரியப் பெண்ணும்

முன்னுரை

இயேசுவின் பணியானது அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஒரு பணியாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஏழைகள் பாவிகளாக கருதப்பட்ட சமாரிய மக்களை தேடிச் சென்று பணி செய்ததையும், உரையாடியதையும், உறவாடியதையும் நாம் விவிலியத்தில் காண்கிறோம். இந்த அலகானது சமாரியப் பெண்களின் பொருளாதார நிலை, வழிபாட்டு நிலை, நற்செய்தி நிலைகளில் காணப்படும் ஏழ்மையை சுட்டிக்காட்டுகிறது.

2.1 இயேசுவும் சமாரியரும்

யூதர்களால் வெறுக்கப்பட்க்கூடிய சமாரியர்கள் பற்றிய பார்வையில் இயேசு முற்றிலும் மாறுபட்டுச் செயல்படுகிறார். யூதர்கள் செல்ல மறுக்கக்கூடிய சமாரிய பகுதியை இயேசு தேடிச் செல்கிறார் (4:4);. யூதர்கள் பேசவும், உறவாடவும் மறுக்கக்கூடிய சமாரியர்களிடம் இயேசு பேசியும், அவர்களிடம் தண்ணீர் கொடுங்கள் என்ற கூறி உறவாடவும் செய்கிறார். இயேசு தமது உரையாடல் மூலம் தம்மை சமாரியருக்கு வெளிப்படுத்துகிறார். இயேசு ஒரு சமாரியரை அதுவும் ஒரு பெண்மணியைத் தம் முதல் திருத்தூதராகச் செயல்பட வைக்கிறார் (4:29). இயேசுவைக் கண்டுக் கொண்ட சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்கிறார்கள் (4:39, 41-42). இயேசுவைப் பற்றிய மிக உயர்வான உண்மை ‘அவரே உலகின் மீட்பர்’ என்பது இவ்வுண்மை சமாரியர் வாயிலிருந்தே வருகிறது.  இயேசு தறந்த மனதுடன் சமாரியர்களிடம் சென்றார். சமமரியர்களும் திறந்த மனதுடன் இயேசுவை மொசியாவாக கண்டுக் கொண்டனர்.

2.2 சமாரியப் பெண் பற்றி புரிதல்கள்

யோவான் நற்செய்தி 4: 1 - 42 இந்தப் பகுதியில் வரும் முக்கிய நபர் சமாரியப் பெண். இவரை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒரு சிலர் இவரை ஒரு தனி நபராகப் பார்க்கின்றனர். ஐந்து கணவர்களைக் கொண்டிருந்த இவர் வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவராக, வஞ்சிக்கப்பட்ட ஏழையாகக் கருதப்படுகின்றார். இத்தகையோர் மேல் இரக்கம் காட்டி ஆற்றுப்படுத்துவதே இயேசுவின் சிறப்புப் பண்பு.

வேறு சிலர் லேவியர் திருமண முறை அடிப்படையில் இவருக்கு ஐந்து கணவர்கள் இருந்ததாக எண்ணுகின்றனர். லேவியர் திருமணம் முறைப்படி மூத்த சகோதரர் இறந்தால் இளைய சகோதரர் அவரது மனைவியைத் திருமணம் செய்து அவருக்கு மகப்பேறு கொடுக்க வேண்டும். இம்முறையில் ஒரு பெண் ஏழு கணவர்களைக் கொண்டிருந்ததாக ஒத்தமை நற்செய்திகளில் வாசிக்கின்றோம் (மாற் 12:18-27). அதுபோல இங்கு வரும் சமாரியப் பெண்ணும் ஐந்து கணவர்களைக் கொண்டவராக இருந்திருக்கலாம். ஆனால் பல அறிஞர்களின் கருத்துப்படி சமாரியப் பெண் இங்குச் சமாரிய மக்களுக்குப் பிரதிநிதியாக உருவகப்படுத்தப்படுகிறார். இவருடைய ‘ஐந்து கணவர்கள்’ என்பது சமாரியர்கள் திருமறை நூல்களாகக் கருதி வழிபடும் தோராவை குறிப்பதாக பார்க்கப்படுகிறது. சமாரியர்கள் அசீரிய நாடு கடத்தலுக்குப் பின் வழிபட்டு வந்த ஐந்து தெய்வங்களை குறிக்கலாம் என்ற பார்வையும் உள்ளது. ஏனெனில் கணவன் என்பதை குறிக்கும் ‘பாகால்’ என்னும் எபிரேயச் சொல்லுக்குத் தெய்வம் என்று பொருள். எனவே “உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள்” (4:18) என்பதை உமக்கு (உங்களுக்கு) ஐந்து தெய்வங்கள் இருந்தார்கள் என்று புரிந்து கொள்ளப்படுகின்ற பார்வையுள்ளது. இவை சமாரிய வரலாற்றைக் குறிப்பதாக அமைகிறது. “உம்முடன் இப்போது இருப்பவர் உம் கணவர் அல்ல” (4:18) என்பது இப்போது சமாரியர் வழிபடும் யாவே கடவுளை குறிப்பதாக பார்க்கப்பட்டது. இக்கடவுளை அவர்கள் முறையாக வழிபடவில்லை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறு தங்களது அருள் வாழ்வு குறித்தும், உண்மை தெய்வம் குறித்தும் அறியாத சமாரியர்களின் அறியா நிலையில் உள்ள ஏழ்மையை இப்பகுதிச் சுட்டிக்காட்டுகிறது. இயேசு இவர்களின் அறியா நிலையில் இருக்கும் ஏழ்மையை  அறிந்துக் கொள்வதற்கான கருவியாகவும், சமாரியர்களின் பிரதிநிதியாகவும் சமாரியப் பெண்ணை இயேசு இங்கு உருவகப்படுத்துகிறார். 

2.3 பொருளாதார ஏழ்மை

சமாரியா பகுதி செல்வச் செழிப்பான பகுதி. கோதுமையும், பிற தானியங்களும் அதிகமாகவே விளையும் பகுதியாகும். சுமாரியாவின் பள்ளத்தாக்குப் பகுதிகள் எல்லாம் பச்சைப் பசேல் என்று தாவரங்களின் கூடாரங்களாய் இருந்தது. ஆனால் யூதருக்கும் சமாரியருக்கும் இடையே நிலவிய பகைமை உணர்வால் அங்கே விளையும் பொருட்களை எங்கும் விற்பனை செய்ய முடியாது. அதை எந்த யூதரும் வாங்குவது இல்லை, சமாரியர்களை யூதர்கள் தங்களுடன் சேர்த்துக் கொள்வது இல்லை. இதனால் பொருளாதாரத்தில் அவர்கள் ஒரு தீவுக்குள்ளான வாழ்க்கை போல சமாரியர்களுடைய வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. எனவே பொருளாதார ஏழ்மை இப்பகுதியில் எப்போதும் நிலவியது.

2.4 வழிபாட்டு ஏழ்மை

வழிபாடு என்பது கடவுளை மாட்சிப்படுத்துவதற்காக அன்றி,  தங்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வதர்காக அல்ல. சமாரியரும் யூதரும் வெளியடையாளங்களில் தங்களின் உணர்வுகளை தொலைத்து கொண்டிருந்தனர். குறிப்பாக, சமாரியர் தங்களின் தனித்தன்மையை எண்பிக்க, யூதரிடம் இருந்து தங்களை தனித்துவப்படுத்த விரும்புகின்றனர். இவர்களின் எண்ண ஓட்டத்தினை இயேசு சுட்டிக்காட்டுகின்றார். வழிபாட்டிற்கான இடமும், பொருளும், காணிக்கைகளும், பலிகளும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மனிதர்களை மகிழ்விக்குமேயன்றி, இறைவனை மகிழ்விக்காது. “ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரிபலிகள், பிற பலிகள் செலுத்துவதா? அவரது குரலுக்குக் கீழ்ப்படிவதா? கீழ்ப்படிதல் பலிகளைவிடச் சிறந்தது” (1 சாமு 15:22) எனும் இறைவார்த்தை பலிகளைவிட, இறைவனுக்கு ஏற்ற வாழ்வு வாழ்வதே சிறந்தது என உரைக்கின்றது. ஆனால் யூதர்களும் சமாரியர்களும் தங்களுடைய பகைமையால் கடவுளையும் பிரித்து பார்த்து தங்களுக்கென்று தனி கோவில்கள்  அமைத்துக் கொண்டு உண்மை அறியா நிலையில் வழிபாட்டிலும் ஏழைகளாக விளங்கினர்.

உலகத்தோடு இணைந்த வழிபாடு வெளியடையாளங்கள் ஆகும். ஆனால் உள்ளத்தோடு இணைந்த வழிபாடு என்பது நமது அனுபவத்திலிருந்து வெளிப்படும். வெளியடையாளங்களில் தன்னடையாளங்களை இழக்கச் செய்கின்றது. உலக வழிபாடு என்பது உள்ளத்தோடு இணைந்த வழிபாடுதான். இவ்வழிபாடு அனுபவங்களைக் கொடுத்து, இழந்த நமது அடையாளங்களை மீண்டும் தருகின்றது. இதை உணர்த்தவே உள்ளத்தில் வழிபட இயேசு சமாரியப் பெண்ணை அறிவுறுத்துகிறார். இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட சமாரியப்;பெண் இயேசுவை கிறிஸ்து என்னும் மெசியா எனக் கண்டுக் கொண்டு அதனை அனைவருக்கும் அறிவிக்கும் சீடராகிறார். 

2.5 நற்செய்தியில் ஏழ்மை

சமாரியர்கள் முகவரியற்றவர்கள். இவர்களிடம் இறைவாக்கினர்கள் இல்லை. யூதர்களிடத்தில் தங்களை மீட்பதற்கு மெசியா வருவார் என்ற கருத்து நிலவி கொண்டிருந்தது. யூதர்களுக்கு மட்டுமே மொசியாவின் வருகை பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படும் என்ற ஆழமான மனப்பாங்கு ஒவ்வொருவரிடமும் காணப்பட்டது. அதன் அடிப்படையில் இயேசு யூதர்களுக்கு மட்டுமே மீட்பராக இருப்பார் என்ற சிந்தனை மேலோங்கி காணப்பட்டது. மோசியா வருகையும் அதுப்பற்றிய நற்செய்தியும் தங்களுக்கானது என யூதர்களும் நெடுங்காலமாக கூறிவந்தனர். இதனால் சமாரியர்கள் இயல்பாகவே தங்களுக்கு மெசியாவின் வருகை மீட்பைத் தருமா? முதலில் மொசியா பற்றிய நற்செய்தி தங்களுக்கு அறிவிக்கப்படுமா? என்ற கேள்விகளோடுத்தான்; வாழ்ந்து வந்தார்கள். ஆனாலும் அவர்களும் தங்களை மீட்க மெசியா வருவார் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.  இயேசு சமாரியப் பெண்ணோடு உறவாடும் போது அப்பெண்ணுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார். இயேசுவோடு உரையாடும்போது இயேசுவை மெசியா எனக் கண்டுகொண்ட அந்த பெண் தன்னுடைய இனத்தவர்களான சமாரியர்களிடம் சென்று மெசியாவை கண்டதை அறிவிக்கிறார.; அப்பெண்ணின் வார்த்தைகளுக்கு செவிதிறந்த சமாரியர்கள் மெசியாவை காண வந்தனர். இயேசுவுடன் உரையாடி அவரை இவர்தான் உண்மையான மெசியா என கண்டு கொள்கிறார்கள். பொதுவாகவே நற்செய்தி யூதர்களுக்கு மட்டும் என்ற பார்வையிலிருந்து இங்கு மாற்றம் பெற்றிருப்பதை இயேசுவின் செயல்பாடுகள் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் மெசியாவின் வருகை என்பது குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமானது என்ற ஒரு பார்வையில் உழன்று கொண்டிருந்த மக்கள் அந்த அறிய நிலை என்னும் நற்செய்தி சார்ந்த ஏழ்மைல் இருந்து மீட்டு நற்செய்தி அனைவருக்குமானது என்பதனை இந்த பகுதியானது விளக்கிக் காட்டுகிறது.

முடிவுரை: 

அன்றைய சூழலில் சமாரியர்கள் என்றாலே பாவிகள் புறந்தள்ளப்பட்ட மக்கள், மேலும் பல்வேறு தளங்களில் அடிமைபடுத்தப்பட்ட மக்கள் என்பதை நாம் அறிகிறோம். அவர்களின் ஏழ்மையானது அனைத்து தளங்களிலுமே இருந்தது என்பதை இந்த அலகின் மூலம் நாம் காண முடிகிறது.


அலகு – 3

3. நமது வாழ்வுச் சூழலில் சமாரியப்பெண்கள் ஓர் இறையியலாக்கம்

முன்னுரை

கலாச்சாரத்தின் வழி காலந்தோறும் பெண்கள் மிகவும் கவனமுடன் அடிமைப்படுத்தப்பட்டுக்கொண்டே வருகிறார்கள். கற்பைப் பாதுகாப்பதே பெண்களுடைய வாழ்வின் குறிக்கோளாக இலக்கியங்கள் காட்டுகின்றன. பெண்மையை இழிவுபடுத்தும் பத்திரிக்கைகள், விளம்பரங்களுக்கு இந்நாட்டில் பஞ்சமில்லை. கணவனுக்கு அடங்கி வாழ்வதே பெண்ணுக்கு அழகு என்ற கருத்து திரைப்படங்கள் வழி இன்னும் வலியுறுத்தப்படுகிறது. திரைகளில் பெண்களை அரை நிர்வாணமாக்கித் தம் பணப்பெட்டிகளை நிரப்பிக் கொள்ளும் கும்பல் ஒருபுறம். ஆபாசமான பாடல்களினாலும், ஆடல்களாலும் இளைஞர்களின் சிந்தனை சக்தியை மழுங்கடிக்கும் கூட்டம் மறுபுறம். பெண்களை விளம்பர பொருளாக தொடர்புபடுத்தும் வானொலி, தொலைக்காட்சி விளம்பரக் கலாச்சாரமும் அடிமைத்தனத்தைத் தக்கவைக்கின்றன. எல்லாச் சமயங்களுமே பெண்களை இரண்டாந்தரமாகவே நடத்துகின்றன. பெரும்பாலான சமயநூல்கள் அனைத்தும் ஆண்களால் ஆணாதிக்கப் பின்னணியில் எழுதப்பட்டவை. திருச்சபையின் அமைப்பிலும் வாழ்வு முறையிலும் பெண்கள், பெண் துறவியர் வெறும் பார்வையாளர்களே.  இச்சூழலில் நாம் சமாரியப்பெண்ணை பற்றிய ஆழமான புரிதலை வளர்க்க வேண்டும். ஏனெனில் தொடக்கத்தில் இருந்தே பெண்கள் படும்பாடு அளவிட முடியாது. அதிலும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பெண்ணை பற்றிய ஆழமான புரிதல் இக்கால பெண்ணியம் பற்றிய புரிதலில் ஆழப்பட வழிவகுக்கும்.

3.1 இன்றையச் சமுதாயத்தில் பெண்கள் 

பெண்ணிய ஆன்மீகத்தை விவிலியத்திற்குள் மட்டும் அடக்கி விட முடியாது.  விவிலியம் கடந்து வாழ்வில் வெளிப்பட வேண்டும். வரலாற்றில் எத்தனையோ பெண்கள் தனியாகவும் குழுவாகவும் பல புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர்.  நாடும், வீடும் இன்று ஆண்கள் கைகளில் இருக்கின்றன. ஆளும் வர்க்கமும், ஆண் ஆதிக்கமும,; அரசியல், அதிகாரம் என அனைத்தையும் தன்னகத்தே தக்க வைத்துக்கொண்டுள்ளது. பெண்களுக்குச் சாதகமான சட்டங்கள் தரும் உரிமைகள் கூட ஆண் மைய அரசால் மறுக்கப்படுகின்றன. தாயைத் தெய்வமாகவும், தெய்வம் குடியிருக்கும் கோவிலாகவும் போற்றும் வழக்கம் இவ்வுலகில் உண்டு. ஆனால் அதே தாய்த் தெய்வங்களின் கருவறைகள் சமாதிகளாக ஆக்கப்படும் நிலையும் இங்குண்டு. பெண்சிசுக்கொலை, பெண் கல்வி மறுப்பு, பெண்குழந்தைத் தொழில் ஆகிய இச்சமுதாயத் தீமைகள் தினமும் இந்நாட்டில் வளர்ந்து கொண்டே போகின்றன. பால் உணர்வைத் தூண்டும் ஒரு பொருளாகவே ஆண் சமுதாயம் இளம் பெண்களைப் பார்க்கின்றது. குடிகாரக் கணவர்களிடம் நித்தம் அடியும் மிதியும் வாங்கும் பெண்கள் நிலை நாளுக்கு நாள் உயர்வதை கவனிக்க இன்று யாரும் இல்லை. இரண்டு ஆண்களுக்கிடையே நடக்கும் சாதாரண சண்டைகளில் கூடப் பெண்கள் எவ்வளவு மட்டமான கொச்சை வார்த்தைகளுக்குப் பலியாகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. சாதிச் சண்டையில் பாலியல் பலாத்காரமும், வன்முறையும் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன. பாதுகாப்பைத் தேடிக் காவல்நிலையம் சென்றால் காவலர்கள் காமுகர்களாக மாறிவிடும் நிலை இன்றும் தொடர்கிறது. இச்சமூகத்தில் பெண்ணின் உழைப்பு உயர்வாக மதிக்கப் படவில்லை. அவள் ஊதியத்தின் மீதே அவளுக்குச் சொந்தம் பாராட்ட முடிவதில்லை. நம் நாட்டின் மக்கள் பெருக்கம், பொருளாதாரப் பிரச்சனை இவைகளைக் குறைக்க அரசு எடுக்கும் முயற்சிகள் கூட பெண்களைத்தான் அதிகம் பாதிக்கின்றன. இதில் பெண்ணின் உடல், உயிர், உணர்வு அனைத்தும் துச்சமாக எண்ணப்படுகின்றன.  அதிலும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பெண்களின் நிலை அதிலும் கொடுமையானது. உடல் தாகத்தை போக்குவதற்காக மட்டுமே பலர் இவர்களை பயன்படுத்தினர். ஆனால் இயேசுவோ சமாரியப் பெண்ணின் உள்ளத்தாகத்தை போக்கும் தண்ணீரே மிகச்சிறந்தது என்பதை அப்பெண்ணுக்கு உணர்த்துகிறார். ‘சாதாரண தண்ணீரை குடிப்பவருக்கு மீண்டும் தாகம் எடுக்கும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரை குடிப்பவருக்கு தாகமே எடுக்காது. நான் கொடுக்கும் தண்ணீர் அதைக்குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்’ என்கிறார். அப்பெண்ணும் ஆசையோடு ‘எனக்கும் அந்த தண்ணீரை கொடும்’எனக் கேட்கிறார். எப்போது அந்த பெண் ஆசையோடு இயேசுவிடம் உரையாட ஆரம்பித்தாரோ அப்போதே அவருடைய இன்னல்கள் நீங்கிவிட்டது. இயேசு அந்த பெண்ணின் உள்ள தாகத்தை தீர்த்து வைக்கிறார்.

3.2 பெண் ஓடுக்கப்படுதல் இறையியல் தேடல்

அன்றாட வாழ்க்கையில் பெண்கள் மணவாழ்விலும், குடும்பத்திலும், சமூகத்திலும் அதிகாரத்திற்கும், அடக்குமுறைக்கும் தொடர்ந்து ஆளாகின்றனர். இந்த பரிசேயத்தனத்தால் நம் சமுதாயத்தில், பெண்களின் அவலங்களும், பெண்ணடிமைத்தனமும் தொடர் கதையாகின்றன. பெண் கருவிற்குத் தாயின் வயிறே இன்றும் பிணக்குழியாகின்றது. குழந்தை பிறந்தவுடன் ஆணா, பெண்ணா என்று ஆர்வமுடன் எழுப்பும் கேள்வியும் பெண் என்றவுடன் எரிச்சல், ஏமாற்ற உணர்வும், மகிழ்ச்சியான வரவேற்பில்லா குடும்பத்திலேயே வேண்டா விருந்தாளியாய் பெண் குழந்தை நுழைகின்றது, வாழ்கின்றது. பெண் கருக்கழிப்பும், பெண் சிசுக் கொலையும் உசிலம்பட்டிக்கே உரியது என்ற நிலைமாறி, இன்று பணமும், படிப்பும், பதவியும் கொண்ட மேட்டுக் குடியினரிடமும் திரைமறைவில் இக்கொடுமைகள் நடத்தத் தொடங்கியுள்ளனர்.  ஆனால் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட உயர்ந்த இஸ்ராயேல் குலமானது கி.மு 722-க்கு பின் சமாரியர் என்ற தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆசிரிய அரசன் திக்லக் பிலேசர் காலத்தில் இஸ்ராயேல் மக்களும், அசீரிய மக்களும் பெண் கொடுத்தும், பெண் எடுத்தும் வந்தனர். இப்படி கலப்பினத்தில் பிறந்தவர்கள் தான் சமாரியர்கள் என அழைக்கப்பட்டனர். கலப்பினமில்லாத யூதர்கள் இந்த கலப்பின மக்களோடு உறவுகள் வைத்துக் கொள்வது கிடையாது. இதனால் தான் இயேசுவிடம் சமாரியப் பெண் “நீ யூதர், நான் சமாரியன் என்னிடம் எப்படி குடிக்க தண்ணீர் கேட்பது எப்படி என்று” கேட்கிறார்.; இது ஒரு வரலாற்று அடிமை நிகழ்வு. இந்த சமாரியர்களுக்கு எப்படியாவது இந்த அடிமைத்தனத்தில் இருந்து வெளிவந்து நாங்களும் கடவுளின் பிரதிநிதிகள், கடவுளாhல் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்று அழைக்கப்பட வேண்டும் என்ற தாகமானது சமாரியர் அனைவரிடமும் வெளிப்பட்டது. இவர்களின் தாகத்தை போக்கி வரலாற்றை மீண்டும் இணைக்க கடவுள் இவர்களை தேடி வருகிறார். தன் தேடலை செயலாக்க இயேசு ஆண் பெண் வேறுபாடுகளை கடந்து சமாரியப் பெண்ணை தம் பணியில் இணைக்கிறார்.

முடிவுரை

அன்றைய சூழலில் சமாரியர்கள் என்றாலே புறந்தள்ளப்பட்ட மக்கள். அதிலும் சமாரியப் பெண்களின் நிலையானது ஒரு பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பதை நாம் பார்க்கமுடிகிறது. அவர்களின் நிலையானது அனைத்துத் தளங்களிலுமே பிரதிபலித்தது. இன்றைய காலக்கட்டத்தில் நமது பெண்களின் நிலையானது சிறிது நவீனப்படுத்தப்பட்டு இருந்தாலும் அனைத்து உரிமைகளும் பெற்றதாக ஒரு பிம்மம் இருந்தாலும் இன்றைக்கும் நமது பெண்கள் ஒரு அழகு பொருளாக, வியாபரப் பொருளாக இருக்கக்கூடிய நவீனமயக்கப்பட்ட அடிமைநிலையையே நாம் கண்டுகொண்டு இருக்கிறோம். இயேசு எவ்வாறு அந்த பெண்ணோடு, சமூகத்தோடு உறவாடி எவ்வாறு ஒரு முகவரி கொடுத்தாரோ நமது பணியும் முகவரியற்ற அடிமைநிலையிலுள்ள புறந்தள்ளப்பட்ட விளிம்புநிலையிலுள்ள ஏழ்மையிலுள்ள மக்களையும் தேடிச்சென்று பணிசெய்ய இந்த ஆய்வுக்கட்டுரையானது ஒரு தூண்டுகோலாக உள்ளது. 


இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...