திங்கள், 31 ஆகஸ்ட், 2020

"சொல்வது செயலாகுமா...?" (01.09.2020)


"சொல்வது செயலாகுமா...?" 


உலகில் மிக சுலபமான வேலை அறிவுரை கொடுப்பது மிகவும் கடினமான வேலை கொடுத்த அறிவுரையை கடைப்பிடிப்பது.

திருவள்ளுவர் காலத்திலிருந்தே தமிழில் இருக்கக்கூடிய அறிவுரை நூல்களுக்கு பஞ்சமில்லை அவற்றில் உள்ளவற்றை கடைபிடித்து இருந்தால் இன்று தமிழ்நாட்டில் ஒரு அயோக்கியன் கூட இருந்திருக்க முடியாது
என்பார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக இயேசு பலவிதமான நற்பண்புகளை மக்களுக்கு கற்பிக்கின்றார். கற்பிப்பதை தன் வாழ்விலும் செயல்படுத்தி காட்டுகின்றார். அவரையும் அவரது போதனையையும் கண்டு மக்கள் பலர் வியப்பில் ஆழ்ந்து போகின்றனர்.

 இன்று நாம் வாழக்கூடிய உலகில் அறிவுரைக்கும், அறிவுரை கொடுப்பவருக்கும் பஞ்சமில்லை.
பகிர்வு பற்றி பலமணிநேரம் சொற்பொழிவு ஆற்றியவரிடம் பசிக்குது என்றான் ஒருவன் அவனைப் பார்த்து வெளியே போடா என்று விரட்டினாராம் அந்த சொற்பொழிவாளர்.

இன்று நல்லதைப் பேசுபவர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் சொல்வதை செயல் வடிவமாக மாற்ற இன்று பலர் தேவைப்படுகிறார்கள். இயேசு தாம் வாழ்வில் அறிவித்ததை தம் செயலில்  வெளிப்படுத்தினார். நாமும் அவரைப்போல  சொல்வதை செயலில் வெளிகாட்ட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.

இந்த சமுதாயத்தில் இவர் சரியில்லை, அவர் சரியில்லை என்று சொல்வதை விட, மிகவும் முக்கியமானது நாம் என்ன சொல்கிறோம், நாம் சொல்வதை நாம் எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும்.

எனவே நாம் வாழக்கூடிய இந்த உலகில், அறிவுரைகளால் அடுத்தவர் வாழ்வில் மாற்றத்தை எதிர்பார்ப்பதை விட, நமது வாழ்வில் நாம் கொடுக்கக்கூடிய அறிவுரைகள் நமது வாழ்வில் மாற்றத்தை உருவாக்கக் கூடியதாக அமைய இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவின் துணையை வேண்டியவர்களாய் அவரை பின் செல்வோம். 


"சொல்வது செயலாகுமா...?" 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

"துன்பங்களுக்கு மத்தியில் துணிவோடு செயல்படுவோம்..." (31.08.2020)

"துன்பங்களுக்கு மத்தியில் துணிவோடு செயல்படுவோம்..."

இங்கிலாந்தில் கப்பற்படையினரிடம் ஒரு வழக்கம் காணப்படும் .
போர்க்கப்பல் ஒன்று ஆபத்துக்கள் சிக்க நேரிட்டால், படை வீரர் ஒருவர் 'அப்படியே நிற்க' என்ற ஒரு கட்டளையை இடுவார். உடனே அனைவரும் ஒரு சில வினாடிகள் அசையாமல் இருப்பர். அந்த ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு ஆபத்தை மேற்கொள்ளும் முயற்சியில் படைவீரர்கள் அனைவரும் இணைந்து ஈடுபடுவர்.
இந்த ஒரு சில வினாடிகள் பதற்றம் அடையாமல் எது சரியானதோ அதை சிந்தித்து அதை செய்வதற்கான தெளிவை கொடுக்கிறது என அங்குள்ள அனைவரும் கூறுவார்கள்.

இன்று நாம் வாழ கூடிய உலகில் எதிர்பார்ப்பே இல்லாமல் வாழக் கூடிய மனிதர்கள் இல்லை. வாழ்வில் எதிர்பார்ப்புகள் உள்ளவரை ஏமாற்றங்களுக்கு வாய்ப்புகள் உண்டு. ஏமாற்றங்கள் ஏற்படும் போது உடனே தொற்றுக் கொள்ளக் கூடிய நோய்தான் சந்தேகம். சந்தேகம் நம்மையும் வாழவிடாது பிறரையும் வாழ விடாது. இச்சந்தேகம் உறவில் விரிசல், ஒதுங்கி வாழுதல், வீண்பழி சுமத்தல், பிரிந்து போதல் என தொடர்ந்து கொண்டே இருக்கும். வாழ்விலே ஏமாற்றங்கள் ஏற்பட்டு விட்டால் அவற்றை அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்தில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளக்கூடிய பக்குவத்தை நாம் பெற வேண்டும். எச்சரிக்கை உணர்வு என்பது நமது அனுபவங்களிலிருந்து மட்டுமன்று பிறர் அனுபவங்களில் இருந்தும் கற்க வேண்டிய பாடமாகும்.


இன்றைய நற்செய்தி வாசகங்கள்  அடிப்படையில் இயேசுவின் வாழ்வில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.
இயேசு தனது சொந்த ஊர் மக்களால் வெருக்கப்படுகிறார். இயேசுவிடமிருந்து சொந்த ஊர் மக்கள் பலவிதமான அதிசயங்களை எதிர்பார்த்தனர். ஆனால் இயேசுவின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு தங்களின் வாழ்வை மாற்றிக் கொண்டு, அடுத்தவர்களுக்கு நன்மை செய்ய  அங்கு  யாரும் முன்வரவில்லை. தனது சொந்த ஊர் மக்களின் எண்ணத்தை அறிந்த இயேசு அவர்களின் நிலையை அவர்களுக்கு விளக்குகிறார். அதன் விளைவாக பலவிதமான இன்னல்களை சந்திக்கின்றார். இருந்தபோதும் மனம் மாறி அவர்கள் நற்செய்தியை  எடுத்துரைக்கவும், கடவுளின் உண்மைச் சீடராக அவர்கள் மாறிவிட வேண்டும், அவர்கள் வாழ்வை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு எசாயா சுருளேட்டை எடுத்து வாசித்த போது அதில் வாசிக்கப்பட்ட இறைவார்த்தையின் அடிப்படையில் கடவுளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.

திருக்குறளில் திருவள்ளுவர்...

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
 இன்பம் பயக்கும் வினை.

அதாவது ஒரு செயலின் முடிவில் இன்பம் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு ஒரு செயலைத் தொடங்கும் போது, துன்பங்கள் மிகுதியாக வந்தாலும், தளராத துணிவோடு நாம் அச்செயலை செய்யவேண்டுமென திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

இயேசுவும் இவ்வுலகில் வாழ்ந்த போது மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும், என்பதற்காக சொந்த மக்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும்,  தன் நிலை மாறாது இறையாட்சிக்கு வித்திட்டார். அதன் விளைவாக பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தாலும் தன் பணியில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.  அவரைப் போலவே நமது வாழ்வில் நாமும் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்கிட இயேசு காட்டிய பாதையில் பயணமாவோம். 

"துன்பங்களுக்கு மத்தியில் துணிவோடு செயல்படுவோம்..."

சனி, 29 ஆகஸ்ட், 2020

"உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக..." (30.8.2020)


"உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக..." 


ஒரு குட்டி குரங்கு படாதபாடு பட்டு ஒரு தோட்டம் போட்டது. செடிகள் வளர்ந்து மரமாகி பூத்துக் குலுங்கி காய்கனிகள் கொட்டும் ஆசையாசையாய் அள்ளி தின்னலாம் என்று கணக்குப் போட்டது. ஆனால் எதுவுமே முளைக்கவில்லை. ஆசை நிராசையானது. ஒரு நாள் மூத்து குரங்கிடம் சென்று ஆலோசனை கேட்டது. எதுவுமே முளைக்கவில்லை என்று ஒப்பாரி வைத்தது. சமாதானப்படுத்திய அந்த மூத்த குரங்கு விதை போட்டால் தண்ணி ஊத்தணும் நீ தண்ணி ஊத்தி இருக்க மாட்டாய் என்றது. ஆனால்  குட்டி குரங்கு இல்லை ஒரு விதைக்கு 8 வாளி தண்ணீர் ஊற்றுகிறேன் என்று கூறியது. உடனே மூத்த குரங்கு ஒரு விதைக்கு எட்டு வாளி தண்ணீர்  என்றால் கண்டிப்பாக அந்த விதை அழுகிப் போய் இருக்கும் என்று கூறியது. ஆனால் குட்டி குரங்கு இல்லை இல்லை ஒரு விதை கூட அழுகவில்லை என்று உறுதியாக கூறியது. அது எப்படி  உனக்கு தெரியும்? என்று மூத்த குரங்கு கேட்டபோது, குட்டி குரங்கு சொன்னது விதை முளைத்து இருக்கிறதா? இல்லையா? என்பதை அனுதினமும் நான் எடுத்துப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியது.

தினம் தினமும் விதையை எடுத்து பார்த்தால் விதை எப்படி முளைக்கும்? அது அதற்கு என்று ஒரு காலம் இருக்கிறது. அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டியது அவரவர் கடமையாகும். அதற்குத் தேவை பொறுமை.  இந்த குட்டி குரங்கை போலவே மனித வாழ்விலும் நாம் பெரும்பாலான நேரங்களில் மகிழ்ச்சி என்பதை தேடுகிறோம். அதற்காக துன்பம் என்பதை அறவே வெறுத்து ஒதுக்குகிறோம். இன்று நமது வாழ்வில் நிலவக்கூடிய துன்பமானது ஒருநாள் நம்மிடம் இருந்து அகளும், அதற்கான காலம் வரும் என அத்துன்பத்தை எதிர்கொள்ள கூடிய மனநிலையோடு காத்திருக்க கூடியவர்களாக நாம் இவ்வுலகில் இன்று இருப்பதில்லை.  மனித மனங்களில் எப்போதும் துன்பத்தை விரும்புவதில்லை, இன்பத்தை விரும்புகின்றன. ஆனால் இங்கு மறைபொருளாக இருப்பது என்னவென்றால், துன்பத்திலிருந்தே இன்பம் பிறக்கிறது. 


இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் தனது வாழ்வில் பலரால் எள்ளி நகையாடப்பட்ட நிலையில், அவமானங்களுக்கு மத்தியில், துன்பங்களுக்கு மத்தியில் கடவுளை நம்பி தான் ஏமாந்து போனதாக எண்ணி கடவுள் மீது கோபம் கொண்டவராக தன் நிலையை வெளிப்படுத்துகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில்  இயேசு தன் பணி வாழ்வில், தான் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் போது, அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக, பேதுரு அவரை தனியே அழைத்து,  நீர் ஏன் துன்பங்களை ஏற்க வேண்டும் அது உமக்கு கூடாது என கூறும்பொழுது, இயேசு அவரை என் கண் முன் நில்லாதே சாத்தானே என்று கூறி கடிந்து கொள்கிறார். மேலும் நாம் மனிதருக்கு உரியதை அல்ல, கடவுளுக்கு உரியதை என்ன வேண்டுமெனவும், என்னை பின்பற்ற விரும்பக்கூடிய எவரும் தன்னலம் துறந்து தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும் இதுவே கடவுளுடைய திருவுளம் என எடுத்துரைக்கிறார்.

இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில், உலகின் போக்கின் படி இல்லாமல் உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக அதனால் கடவுளின் திருவுளத்தை நீங்கள் கண்டு கொள்வீர்கள் என்று வாழ்வுக்கு வழி காட்டுகிறார்.  

இன்று எது கடவுளின் விருப்பம் என நாம் அனைவரும் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

துன்பங்களோடு கடவுளை (நல்லதை) பின்பற்றிச் செல்வது கடவுளுடைய திருவுளமாகும். துன்பங்கள் எனக்கு வேண்டாம் என்பவனால் வாழ்வில் இன்பத்தை காணமுடியாது.  சுவாமி விவேகானந்தர் அவர்கள் தன் வாழ்வில் இவ்வாறு குறிப்பிடுகிறார்...

"கடவுளிடம்  வலிமை கொடுங்கள் எனக் கேட்டேன்.
அவர் கொடுத்ததோ நெருக்கடியான சூழ்நிலைகள்.

 மகிழ்ச்சி கொடுங்கள் எனக் கேட்டேன்.
 மகிழ்ச்சியற்ற மனிதர்களை அறிமுகப்படுத்தினார்.

 அறிவு கொடுங்கள் எனக் கேட்டேன்.
 அவர் கொடுத்ததோ வாழ்வின் புதிர்கள்.

மனநிம்மதி கேட்டேன்.
மற்றவர்களுக்கு உதவச் சொன்னார்.

 சலுகைகள் கேட்டேன்.
 வாய்ப்புகள் கொடுத்தார்.

 நான் விரும்பியது எதையும் கடவுள் கொடுக்கவில்லை , ஆனால் எனக்குத் தேவையானவை எல்லாவற்றையும் அவர் கொடுத்தார்...." 

இன்று நமது வாழ்விலும் நாம் சந்திக்கக் கூடிய துன்பங்கள் அனைத்தும் கடவுள் நமக்கு கற்பிக்கக் கூடிய பாடத்திற்கான ஒன்று என்பதை உணர்ந்தவர்களாக நமது சிலுவையை (துன்பத்தை) சுமந்தவர்களாக ஆண்டவர் இயேசுவை பின் தொடர்வோம். 

"உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக..." 

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

"துன்பம் கண்டு துயரம் வேண்டாம் ..." (29.8.2020)


"துன்பம் கண்டு துயரம் வேண்டாம் ..." 

இயேசுவில் அன்புக்குரியவர்களே !
காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இன்றைய நாளில் நமது புனித திருமுழுக்கு யோவானின் பாடுகளையும், இறப்பினையும் நாம் நினைவு கூறுகிறோம்.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் சராசரி மனிதனாக வாழ்வது சாதாரண வாழ்வு. ஆனால் தன்னிலை உணர்ந்து எல்லோரையும் மதித்து வாழ்வது தெய்வீக வாழ்வு. 

ஒவ்வொருவரும் தனது வாழ்வின் நிலையில் தனக்கு விருப்பமான நலன்களை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் யார் துன்புற்றாலும், அல்லது துன்புறுத்தப்பட்டாலும் அதில் சிறிதேனும் அக்கறை காட்டாது தனது சுய விருப்பங்களை மட்டுமே நிறைவேற்றி வாழ்வது இழிவான வாழ்வு.

இன்றைய வாசகத்தில் ஏரோதியாள் அரச குடும்பத்தின் உறுப்பினராக இருந்தாலும் மக்களை காப்பாற்றும் அரச குடும்பத்தின் பண்பு எதுவும் அவளிடம் இல்லை. 
அவளின் தந்திரம் மிகுந்த சுயநல வாழ்வு, புனித திருமுழுக்கு யோவானின் உயிரை பலி வாங்கியது. ஆனால் புனித திருமுழுக்கு யோவான் தன்னிலை உணர்ந்து, தன்னையும் பிறரையும் நேர்மையின் பாதையில் வழி நடத்தினார். பிறரின் வாழ்வில் அக்கறை கொண்டார். திருமுழுக்கின் வழியாக பாவ மன்னிப்பு பெற்று மக்கள் அனைவரும் நேர்மையின் பாதையில் நடந்திட வழிகாட்டிய புனித திருமுழுக்கு யோவான் இன்றைய இறைவார்த்தையின் வழியாக அவர் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் அறிகிறோம். 

இன்றைய நாளில் நாமும் புனித திருமுழுக்கு யோவானைப் போல நமது துன்பங்களிலும் நேர்மையைக் கடைப்பிடிக்க உண்மையின் வழி நடக்க நம்மை நாமே உறுதிப்படுத்துவோம்!

"துன்பம் கண்டு துயரம் வேண்டாம் ..." 

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

திருமண திருப்பலிக்கான சிந்தனை- 2


"ஆண்டவர் படைத்த வெற்றியின் நாள் இதுவே!  
இன்று அக்களிப்போம் அகமகிழ்வோம்". 

மகிழ்ச்சி பொங்கும் மங்களகரமான இந்த நல்ல நாளிலே! மணமக்களை வாழ்த்தி அவர்களுக்காக ஜெபித்து இறையருளைப் பெற்றுத் தர வந்திருக்கும் குழருக்களையும், அருள் சகோதரிகளையும், உற்றார் உறவினர்களையும், நண்பர்களையும், நல்மனம் கொண்ட அனைவரையும் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க இயேசுவின் பெயரால் அன்புடன் வாழ்த்துகிறேன்.

திருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணையும் புனித நிகழ்வு. இப்புனித நிகழ்வு வழியாக புது உறவில் நுழையும் புதுமண தம்பதிகளான செல்வன்...... செல்வி .........இருவருக்கும் நம் அன்பின் வாழ்த்துக்களை மகிழ்வோடு தெரிவிப்போம்.

திருமணம் அது ஒரு உடன்படிக்கை. 

திருமணம் அது அன்பின் அருளடையாளம். 

திருமணம் அது இறை  உறவின் வெளிப்பாடு. 

அன்று 'யாவே' கடவுள் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்து கொண்டதுபோல இன்று உடன்படிக்கை வழியாக புதிய குடும்பத்தை ஏற்படுத்தவிருக்கும் இவர்கள் இருவருக்கும் இறை இயேசுவின் பெயரால் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

இறையருளால் வாழ்வோம் என்ற துணிச்சலுடன், பெரியோர் துணையுடனும் இணையவிருக்கும் இவர்கள் இருவரும் திருச்சபை வழியாய் இறைவன் தரும் திருமணத்தை ஏற்றுக்கொண்டு மகிழ்வோடு வாழ நாம் இவர்களுக்காக ஜெபிப்போம். 

இந்தப் புதிய உறவு மூலம் தங்கள் புது வாழ்க்கையை தொடங்கவிருக்கும் இவர்கள் இருவரையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும், அன்பின் சாட்சிகளாய் வாழ்ந்து திருகுடும்பமாய் இன்று மட்டுமல்ல என்றுமே திகழ்ந்திட  இவர்களுக்காக ஜெபிப்போம்.

இவர்கள் இருவரும் கொடியோடு இணைந்துள்ள கிளை போல ஒருவரையொருவர் முழுமையாக அன்பு செய்து, வாழ்வில் வருகின்ற ஏற்ற இறக்கங்களை அனுசரித்து, எல்லாவிதமான அருள் செல்வமும், பொருட் செல்வமும், குழந்தைச் செல்வமும், உடல் நலமும் பெற்று இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய் வாழவும், இயேசுவின் திரு குடும்பம் போல் என்றும் திகழவும்....

"இலக்குகளை அன்பால் கோர்த்து
 வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சமாய் 
பலரும் போற்றும் வகையில் எடுத்துக்காட்டாய் 
கருத்தொருமித்த தம்பதியினராய்
சுற்றமும் வியக்கும் வாழ்வை"

இவர்கள் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் வாழவும், வாழ்த்தி இவர்களுக்காக  இணைந்து தொடர்ந்து ஜெபிப்போம்.

ஆண்டவர் தம் திருத்தலத்திலிருந்து உங்களுக்கு ஆசி வழங்குவாராக.... உங்கள் கருத்துக்களை எல்லாம் நிறைவேற்றுவார் என்று ஆசி கூறி இவர்களுக்காக நாம் அனைவரும் இணைந்து ஜெபித்து இறையருளை தொடர்ந்து வழங்கிட இத்திருப்பலியில் பக்தியோடு இணைந்து மன்றாடுவோம் ...

"இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக..." 

திருமண திருப்பலிக்கான சிந்தனை - 1


கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாளில் திருமண தம்பதிகளாக இங்கு வந்திருக்கக்கூடிய உங்களை கடவுளின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.

ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் ஆறு அருள் சாதனத்தை தங்கள் வாழ்க்கையில் பெறுகிறார்கள்.
1. திருமுழுக்கு
2.  புதுநன்மை
 3. ஒப்புரவு 
4. உறுதிபூசுதல் என்ற நான்கு அருள் சாதனத்தையும் தனிமையில் பெற்றுக் கொண்ட நீங்கள், இப்போது ஐந்தாவது அருள் சாதனமான திருமணத்திற்காக இணைந்து வந்திருக்கிறீர்கள்.

 இன்று இந்த அருள் சாதனத்தை பெறுவதற்காக இணைந்து இருக்கக்கூடிய நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மூன்று காரியங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

1. உங்கள் திருமண வாழ்வில் நீங்கள் கடவுளோடு இணைந்து இருக்க வேண்டும்.

செல்வன்...... செல்வி...... என அழைக்கப்பட்டு கொண்டிருந்த  நீங்கள் இருவரும் இன்றைய நாளில் இருந்து இந்த திருமணம் என்னும் அருள் சாதனத்தை பெறுவதன் வழியாக, இன்று முதல் திரு........ திருமதி....... என்று அழைக்கப்படுகிறார்கள். 

உங்கள் திருமண வாழ்வை நீங்கள் கடவுளின் முன்னிலையில் துவங்குவதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள். திருமண வாழ்வை துவங்குவதற்கு மட்டும் கடவுள் முக்கியமல்ல உங்கள் வாழ்க்கையின் இறுதி உயிர் மூச்சு உள்ளவரை  கடவுளோடு நீங்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடவுளை சாட்சியாகக் கொண்டு திருமண வாழ்வில் இணையக் கூடிய நீங்கள் இருவரும் இறுதிவரை கடவுளோடு இணைந்திருக்க வேண்டும். கடவுள் உங்களுக்கு அருளுகின்ற குழந்தைகளை நல்ல முறையில் ஞானத்தோடும், இறை உணர்வோடும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு இச்சமூகத்தில் உங்களுக்கு   இன்று அதிகமாகிறது. எனவே கடவுளோடு இணைந்திருங்கள்.

2. உங்களுக்குள் இணைந்திருங்கள்.


கடவுளின் முன்னிலையிலும் இறைமக்களின் முன்னிலையிலும் இன்று நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என ஒருவருக்கு ஒருவர் கொடுக்கக்கூடிய வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளல்ல அவை செயல் வடிவம் பெற வேண்டும். அதற்கு நீங்கள் இருவரும் உங்களுக்குள் எப்போதும் இணைந்திருக்க வேண்டும்.

இன்று நாட்டில் பல இடங்களில் ஒலிக்கக் கூடிய வார்த்தைகள் தனித்திரு என்பதாகும். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் இணைந்திருங்கள்.

நீங்கள் இருவரும் இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என்று கூறவிருக்கும்  நீங்கள் கொடுக்கும்  வாக்குறுதியை செயலில் வெளிப்படுத்த கடமைப்பட்டிருக்கிறார்கள். உங்களுக்குள் கோபமோ, பொறாமையோ, சண்டையோ இருக்கக்கூடாது. 

உங்களுக்குள் விட்டுக்கொடுத்து கொள்ளுங்கள். ஆனால் யாரிடமும் உங்களை நீங்கள் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள். 

இறைவனின் முன்னிலையில் இணையக் கூடிய நீங்கள் இறுதிவரை இணைந்தே இருங்கள் எனவே உங்களுக்குள் எப்போதும் இணைந்திருங்கள்.

3. உறவுகளோடு இணைந்திருங்கள்

திருமணம் என்னும் இந்த திருவருள் சாதனத்தின் வழியாக கணவன் மனைவியாக மாறக்கூடிய  உங்கள் வழியாக பல உறவுகள் இன்று இணைகின்றன. உறவுகளின் மத்தியில் இன்று இணையக் கூடிய நீங்கள் இருவரும், இறுதிவரை உறவுகளோடு இணைந்திருக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். 

கணவனுக்கு மனைவி வழியாக பல உறவுகள் கிடைக்கின்றன. அந்த உறவுகளை தன் சொந்த உறவுகள் என்று எண்ணி எப்போதும் அவர்களோடு இணைந்து இருக்க வேண்டும். அதுபோலவே மனைவி என்பவளும் கணவன் வழியாக வருகின்ற அனைத்து உறவுகளையும் இன்முகத்தோடு எப்போதும் ஏற்றுக்கொண்டு, உபசரிக்க கூடிய நல்ல ஒரு மனைவியாக திகழ வேண்டும். 
இன்று உங்களுக்கு இந்த திருமணம் என்னும் அருள்சாதனத்தின் வழியாக கிடைக்கக்கூடிய புதிய உறவுகளை எப்போதும் இறைவன் தந்த பரிசு என்பதை உணர்ந்தவர்களாக உறவுகளோடு எப்போதும் இணைந்து வாழ அழைக்கப்படுகிறார்கள்.

எனவே அன்புக்குரியவர்களே திருமணம் என்னும் அருள்சாதனத்தால் இணைய வந்திருக்கக்கூடிய நீங்கள் இருவரும் கடவுளோடும், உங்களுக்குள்ளும், உறவுகளோடும் எப்போதும் இணைந்து ஒருவரோடொருவர் இன்புற்று வாழ இன்றைய நாளில் உங்களுக்காக இறையருளை நானும் இங்கு வந்து இருக்கக்கூடிய உறவினர்களும் இணைந்து இறைவனிடத்தில் ஜெபித்து மன்றாடுகிறோம். 

இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக....

"விழிப்போடு பயணிப்போம்"

"விழிப்போடு பயணிப்போம்" 

"எடுத்து வாசி" என்ற குரலைக் கேட்டு தன் தவறான வாழ்வை மாற்றி இறைவார்த்தை வழியில் தன் வாழ்வை அமைத்துக் கொண்ட புனித அகுஸ்தினார். இன்று திருஅவை அவரை நினைவு கூறுகிறது .

இன்றைய நற்செய்தி வாசகங்கள் நாம் விழிப்போடும், முன் மதியோடும் செயல்பட வேண்டும் என்பதை பத்து தோழியர் உவமை மூலம் இயேசு உணர்த்துகிறார்.

நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பென்சிலுக்கும் நம் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இன்று பென்சிலிடமிருந்து நாம் நம் வாழ்க்கைக்கான பாடத்தை புனித அகுஸ்தினார் மூலம் கற்கலாம்.

பென்சில் : இதற்குள்தான் அதனுடைய ஆற்றல் மறைந்திருக்கிறது.

அகுஸ்தினார் : நன்மையும் தீமையும் அவருக்குள் தான் மறைந்திருந்தன.

பென்சில் : வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை கூர்மைப்படுத்தி கொள்ள வேண்டும்.

அகுஸ்தினார் :  தீமையில் உழன்ற இவர் தன்னை இறைவார்த்தையின் அடிப்படையில் கூர்மைப்படுத்தியதன் விளைவாகத் தான் இன்று புனிதராக திகழ்கிறார்.

பென்சில் : அடுத்தவரின் கையில் இருக்கும் போது அது பயன்படுத்தப்படுகிறது.

அகுஸ்தினார் : ஆண்டவர் கையில் இருந்ததால் பலருக்கும் பயன்படக்கூடிய பல இறையியல் கருத்துகளை உருவாக்கக் கூடியவராக மாறினார்.

பென்சில் : தவறாக தனது தடத்தை பாதிக்கக்கூடாது. பதித்தால் அதை சரி செய்து கொள்ள இயலும் என்பதை உணரலாம்.

அகுஸ்தினார் : வாழ்வில் தவறிழைத்தவர் அதனை நாளடைவில் இறைவார்த்தை அடிப்படையில் சரி செய்து சரியான தடத்தை பதிித்தவர்.

புனித அகுஸ்தினாரைப் போல தவறு என்ற இருளில் வாழ்வை நாம் நகர்த்திக் கொண்டிருந்தாலும் இன்றைய நாளில் நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு விழிப்போடு இருக்க கூறுவதுபோல விழிப்போடு இருந்து, நமது வாழ்வை சரி செய்து கொள்ள இறைவனது அருளை நாடி  இயேசுவின் பாதையில் பயணிப்போம்...


"விழிப்போடு பயணிப்போம்" 


புதன், 26 ஆகஸ்ட், 2020

"பயணம் இனிதாகட்டும்..."


"பயணம் இனிதாகட்டும்..."

ஒரு ஊரில் கல்லூரி மாணவர்களுக்கு போட்டி ஒன்று வைக்கப்பட்டது. ஒரு நிலத்தில் யார் நேராக வளைவு இல்லாத கோட்டை வரைய முடியும் என்பதுதான் அந்த போட்டி. எல்லோருமே வரைவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். ஒரு மாணவனை தவிர மற்றவர்கள் அனைவரும் வரைந்த கோடுகள் வளைந்து நெளிந்து இருந்தன. அனைவரும் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்துக் கேட்டார்கள். எப்படி உன்னால் மட்டும் நேராக வரைய முடிந்தது? என்று. அதற்கு அந்த மாணவன் சொன்னான், கோட்டை வரைகின்ற போது உங்களது பார்வை அனைத்தும் உங்கள் கால்களுக்கு அருகில் தான் இருந்தது. ஆனால் நானோ நிலத்தின் மறுபுறம் இருந்த ஒரு இலக்கின் மீது என் கவனத்தை பதிய வைத்து விழிப்போடு அதனைத்தொடர்ந்தேன். இதுவே என் கோடு நேராக வருவதற்கான காரணம் என்று கூறினான்.

மனித வாழ்வில் இலட்சியம் என்பது அவசியம். இலட்சியம் இல்லாத வாழ்வு குறிக்கோள் இல்லாத ஒரு பயணமாகும். வாழ்வில் இலட்சியம் வேண்டும்.  இலட்சியத்தை அடைய குறிக்கோள் அவசியமானது. குறிக்கோளை அடைவதற்கு விழிப்போடு இருத்தல் மிகவும் அவசியமாகும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, பணியாளர்கள் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும்?  என்பது பற்றி கூறுகிறார்.  இலட்சியம் இல்லாத, குறிக்கோள் இல்லாத, விழிப்போடு செயல்படாத ஒரு பணியாளனால் என்ன விளைவுகள் ஏற்படும்? அதனால் அவனுக்கு வரும் துன்பங்கள் என்ன? என்பது பற்றி விழிப்பாய் இருக்க மறுத்த பணியாளர்களை பற்றி இயேசு இன்றைய நற்செய்தி வாசகங்கள் வழியாக நமக்கு உணர்த்துகிறார் . எனவே இன்றைய நாள் நற்செய்தி வாசகங்கள் வழியாக இவ்வுலகில் உள்ள அனைவரும் விழிப்போடு இருந்து இலட்சியத்தை நோக்கி பயணிக்க அழைக்கப்படுகிறோம்.

இன்று கொரனொ தொற்றுநோய் அச்சத்தின் காரணமாக அரசு கூட விழித்திரு....
 வீட்டிலிரு....
என்றுதான் முழங்குகின்றது.
வீட்டில் இருக்கக் கூடிய பணியாளர்கள், விழிப்போடு இருந்து வீட்டை காப்பது போல நமது வாழ்விலும் நாம் நமது வாழ்வின் இலட்சியத்தை மனதில் கொண்டு, அதை அடையும் குறிக்கோளை அனுதினமும் விழிப்போடு எதிர்கொண்டு வாழ்வில் இலட்சியத்தை அடைந்திட இறை அருளை நோக்கி ஆண்டவர் இயேசுவின் பாதையில் பயணிப்போம்.

 "பயணம் இனிதாகட்டும்..."

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

"இயேசுவையே பின்தொடர நமக்கு தேவையானது திறந்த மனமமே..." (26.08.2020)

"எங்கள் மூதாதையரின் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்..." என்று கூறும் பரிசேயரைப் போல நாங்கள் அங்கு இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டோம் என்று தங்கள் செயல்களில் எதுவும் இல்லாமல், வெறும் வீண் வார்த்தைகளால் அனைவரிடமும் தங்கள் குறைகளை மறைக்க பிறரின் செய்கையை தங்களிடம் காணப்பட்டாலும், தங்களை நல்லவர் போல காட்ட முயல கூடிய பரிசேயருடைய மனங்களில் காணப்பட்ட தாழ்வு மனப்பான்மையை இயேசு சுட்டிக்காட்டும் விதமாக உள்ளார்ந்த மாற்றம் பற்றிய நற்செய்தியை பரிசேயருக்கு அறிவிக்கின்றார்.

இன்று நாம் வாழும் உலகில் நீ அவளைப்போல் சிவப்பாய் இல்லையே ! " என்றும், நீ அவனைப் போல் நன்றாக படிப்பதில்லை என்றும் பிறரை  ஒப்பிட்டு ஒப்பிட்டுப் பேசி ஒருவரது ஆளுமையை சீர்குலைக்கும் பெற்றோர் இன்று இச்சமூகத்தில் அதிகம். இப்படிப்பட்ட நபர்கள் தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வார்கள். தங்களின் குழந்தைகளிடத்தில் தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்குகிறார்கள். இதனால் குழந்தைகள்  நான் திறமையற்றவன் , நான் அழகில்லாதவள் , நான் எதற்கும் லாயக்கற்றவன் .. போன்ற எண்ணங் களால் இவர்கள் தங்கள் உள்ளங்களைக் குத்திக் காயப்படுத்திக் கொள்வார்கள். இதன் பலனாக இவர்களின் வாழ்வின் வெற்றிகள் தோல்விகளாக மாறும் , வாய்ப்புகளை நழுவ விடுவார்கள் . தான் யாருக்கும் வேண்டாதவன் என்ற உணர்வுடனிருப்பார்கள் . இத்தகைய தாழ்வு மனப்பான்மையை ஒப்பிட்டு பேசுவதன் வாயிலாக குழந்தைகள் மனதில் விதைக்கிறோம்.
பிரபல உளவியலார் ஆட்லர் ( Adler ) கருத்துப்படி எல்லோரிடமும் தாழ்வு மனம் உண்டு . அதன் அளவுதான் வேறுபட்டிருக்கிறது . ஓர் அளவுக்கு மேல் அது நம்மிடம் இருந்தால் அது நம்மை ஆட்கொள்ளும் , அடிமைப்படுத்தும் , பாதிக்கும் . எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள் ( உரோ 6:16 ). இன்று நாம் வாழும் உலகில் பரிசேயர்களை போல வீண் பெருமைக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் அடிமையாகாமல் திறந்த மனம் கொண்டவர்களாக வாழ இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். 

கலீல் ஜிப்ரானின் அழகிய கதை ஒன்று உண்டு.

மனிதன் ஒருவன் சுற்றுலா சென்றான். அழகிய மலைகள் நிரம்பிய பகுதிக்குச் சென்றான். அவனுடைய புலன்கள் அனைத்தும் தங்களுக்குள் பேசத் தொடங்கின. கண் சொன்னது ஆஹா எவ்வளவு அழகான மலை. இப்படிப்பட்ட மலையை பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றது.
உடனே காது சொன்னது மலையா? எங்கே என்னால் ஒன்றுமே கேட்க முடியவில்லையே நீ ஏதோ பொய் சொல்கிறாய் என்றது. உடனே கை என் கையால் மலையை  தொட்டு உணர முயற்சிக்கின்றேன். ஏதோ கல் போல தான் தென்படுகிறது. சாதாரண கலை மலை என்று சொல்லி நம்மை கண் ஏமாற்றப் பார்க்கிறது. யாரும் ஏமாந்து விடாதீர்கள் என்றது. உடனே மூக்குச் சொன்னது மலைக்கு என்று ஏதாவது மனம் இருக்கவேண்டும். ஆனால் நான் எதையுமே நுகர முடியவில்லை. எனவே மலை என்ற ஒன்று இங்கு இருக்க வாய்ப்பே இல்லை என்றது.இவ்வாறு ஒவ்வொன்றும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டன. தங்கள் அனுபவத்திற்கு உள்ளே வராத ஒன்று இவ்வுலகில் இருக்க வாய்ப்பே இல்லை என்று ஐம்புலன்களும் சண்டையிட்டது போல தான் இன்று மனிதர்களில் பலர் செயல்படுகின்றனர்.
 
மனித வாழ்க்கையில் ஆழமான உயர்தரமான காரியங்கள் பல இருக்கின்றன. ஆனால் அவற்றை அனுபவபூர்வமாக உணரும் தன்மை நம்மிடம் இல்லாததன் காரணமாக அவற்றை நாம் மறுக்கின்றோம். நிறைவான நிலையான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை சாத்தியமில்லை என்று எண்ணுகின்ற எண்ணத்திற்கு அடிப்படைக் காரணமே, நமக்குள் இருக்கக்கூடிய தாழ்வு மனப்பான்மை ஆகும். 

இத்தகைய தாழ்வு மனப்பான்மையிலிருந்து மாற்றம் பெற்று திறந்த மனம் கொண்டவர்களாக நம்மை நாம் இனம் கண்டு கொள்ளவும், நம்மிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை அழித்துவிடவும்,  அடுத்தவருடத்தில் தாழ்வு மனப்பான்மையை விதைப்பதை தவிர்த்திடவும், திறந்த மனம் கொண்டவர்களாக இயேசுவை பின் தொடர்வோம். 

"இயேசுவையே பின்தொடர நமக்கு தேவையானது திறந்த மனமமே..." 

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

"உட்புறத்தை தூய்மையாக்கங்கள் அப்போழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்..." (25.08.2020)


"உட்புறத்தை தூய்மையாக்கங்கள் அப்போழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்..."
 

வாழ்க்கை என்பது வாழ்வதற்காகவே. வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று இருப்பவனுக்கு வாழ்க்கையில்லை. 

மனிதன் என்பவன் எல்லையற்ற ஆற்றல்களின் ஊற்று, கணக்கிட முடியாத திறமைகள் அவனுக்குள் புதைந்து இருக்கின்றன. தன்னிடம் மறைந்திருக்கக் கூடிய ஆற்றலை 10 விழுக்காடு கூட ஒருவன் பயன்படுத்துவதில்லை என்பது அறிவியல் வல்லுனர்களின் கணிப்பு.

உன்னையே நீ அறிவாய் என்றார் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மக்களிடம் காணப்பட்ட வெளிவேடத்தன்மையை சாடுகிறார். உள்ளத்தைத் தூய்மை செய்யாது, வெளியே வேடமிடுவதால் எதுவும் நிகழாது. உட்புறத்தை தூய்மையாக்கங்கள் அப்பொழுது அதன் வெளிப்புறம் தூய்மையாகும் என்கின்றார்.

நீருக்குள் நெருப்பை உண்டாக்கும் திறன் மறைந்திருக்கிறது. அதுபோல மண்ணுக்குள் மறைந்து இருப்பவைதான் பொன்னும், வயிரமும். ஆழ்கடலின் அடிவயிற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிப்பிக்குள் இருப்பதுதான் முத்து. இதனை கடுமையாக முயற்சித்து தேடி கண்டு பிடிப்பவர்கள் தான் அதனை உலகிற்கு வெளி காட்டுகிறார்கள்.

அது போலவே ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் நல்லவிதமான பல நன்மைகள் புதைந்து இருக்கின்றன. அவைகள் அதிகமாகும் போது அவைகள் இவ்வுலகத்தில் நம்முடைய செயல்கள் மூலம் வெளிப்படுகின்றன.  

உருவமற்ற கோடுகள் ஓவியனின் தூரிகை படப்பட ஓவியங்களாக மாறுகின்றன. அதுபோல நமது உள்மனத்தில் இருக்கக்கூடிய நல்ல விதமான எண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய செயல்களில் அது உயிரோட்டமாக  வெளிப்படுகிறது. 

ஒருவனின் உள்ளத்தில் இருக்கக்கூடிய நல்லெண்ணங்கள் அவருடைய செயல்பாடுகளில் வெளிப்படுவதன் வாயிலாக பலரின் முன்பாக அவன் தலை நிமிர்ந்து நிற்க அவை உதவுகின்றன.

அகத் தூய்மை ஒருவனின் வெளிப்புறத்தை தூய்மை படுத்துகின்றன.  ஒரு மனிதன் தன்னுடைய உள்மனதில் நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்வதும், அதிகமாக்கிக் கொள்வதும் மிகவும் அவசியமாகிறது.  இவைகள் அதிகமாகும்போது ஒரு மனிதன் விழிப்புணர்வு கொண்டவனாகவும், நன்மதிப்பு கொண்டவனாகவும் விளங்குகிறான். இத்தகைய குணநலன்களோடு வளரக்கூடிய ஒருவரின் மனதில், மற்றவர்களை போட்டியாக கருதும் மனப்பக்குவம் குறையும். மேலும் நல்ல தலைவர்களாக இச்சமூகத்தில் அவர்கள் உருவாகிடக் கூடியச் சூழல் ஏற்படும்.

திருவள்ளுவரும் திருக்குறள் வழியாக

"புறத்தூய்மை நீரான் அமையும், அகந்தூய்மை 
வாய்மையால் காணப் படும்".
என்கின்றார். அதாவது உடல் அழுக்கு நீங்கித் தூய்மையடைவது என்பது நீரால் உண்டாகும். உள்ளத்தில் தூய்மையாக இருத்தலை உண்மை கூறுதலால் அறியலாம். உள்ளத்தூய்மை எப்போதும் உண்மைக்கும், நன்மைக்கும்  வழிவகுக்கும்.

உலகை வென்ற மாவீரன் நெப்போலியன்  "ஒவ்வொருவரும் தம்மைத்தாமே வெற்றி கொள்ளுதலே மிகப்பெரிய வெற்றியாகும்..."என்று கூறுகின்றார். 

நம்மை நாமே வெற்றி கொள்ளுதல் என்பது அகத்தில் தூய்மையை உருவாக்குவதாலே நிகழும். அகத்தில் தூய்மையை உருவாக்கவும், அந்த உட்புறத்தில் ஏற்படக் கூடிய தூய்மை வெளிப்புறத்தை அழகாக்கும் என்பதை உணர்ந்தவர்களாக உள்ளத்தை தூய்மைப்படுத்தக் கூடிய இயேசுவின் உண்மை சீடர்களாக ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையோடு அடி எடுத்து வைத்து வாழ்க்கையில் முன்னேறவோம்.   


"உட்புறத்தை தூய்மையாக்கங்கள் அப்போழுது அதன் வெளிப்புறமும் தூய்மையாகும்..."
 

 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

"மனமாற்றம் உன்னை அறியவே..." (24.08.2020)


உன்னை அறிந்தால் -  நீ 
உன்னை அறிந்தால் 
உலகத்தில் போராடலாம்...

என்ற பாடல் வரிகள் ஒருவன்  வாழ்வில் சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கி நடப்பதற்கான பக்குவத்தை அடைய வேண்டும் என்றால், ஒருவன் தன்னை தானே புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. இன்று நம்மில் பலர் நம்மை பற்றி நாம் அறிவதை விட, அடுத்தவரை பற்றி அறிவதில் அதிக  ஆர்வம் காட்டுகின்றனர்.  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட பிலிப்பு நத்தானியேலிடம் இயேசுவைப் பற்றிக் கூறும் போது, நாசரேத்து ஊர் மக்களைப் பற்றிக் கொண்டிருந்த முன் சார்பு எண்ணத்தின் அடிப்படையில் நத்தானியேல் நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமா?.. என்கின்றார்.  பின் இயேசுவைக் கண்டு அவர்களுடன் உரையாடல் நடத்தி, அதன்பிறகு அவர் மீது நம்பிக்கை கொள்கின்றார்.
நல்லது யாவும் ஆண்டவரிடமிருந்து வருகிறது... என்கிறது யாக்கோபு புத்தகம்(1: 17).

இன்று நாம் வாழும் உலகில், நாம் முன் சார்பு எண்ணங்களை களைந்து நம்மை நாம் முதலில் நன்கு அறிந்தவர்களாக செயல்பட வேண்டும். நம்மை நாம் அறிந்திட மனமாற்றம் என்பது அவசியமாகிறது.

"மனமாற்றம்" இந்த வார்த்தையே சிலருக்கு வெறுப்பை கொடுக்கிறது. சிலருக்கு பயத்தைக் கொடுக்கிறது. சிலருக்கு கோபத்தை விளைவிக்கிறது. காரணம் "மனமாற்றம்" என்றாலே நமக்கு பிடித்த ஒன்றை, நாம் விரும்புகின்ற ஒன்றை இழக்க வேண்டும். அப்போதுதான் கடவுளுக்கு ஏற்றவர்களாக வாழ முடியும் என்ற செய்தி நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மனமாற்றத்தின் நோக்கம் அதுவல்ல. மனமாற்றம் என்பது நமக்கு பிடித்தவைகளை எல்லாம் விட்டுவிடுவது அல்ல, மாறாக நாம் உண்மையிலேயே யார்? என்பதை கண்டு கொள்வது .

நத்தானியேல் முன் சார்பு எண்ணம் கொண்டிருந்தார். இயேசுவைக் கண்டு அவருடன் உரையாடிய பின் முன் சார்பு எண்ணங்களை களைந்து இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டார்.  இவரே முதன்முதலில் இயேசுவை மெசியா என கண்டு கொண்டவர் (யோவான் 1: 49).

இன்று முன் சார்பு எண்ணங்களின் அடிப்படையில் நமது வாழ்வை நகர்த்தாமல், (அல்லது) முன்புசார்பு எண்ணங்களை நியாயப்படுத்திக் கொண்டு வாழ்க்கையை தொடராது, திறந்த மனதோடு உண்மையை ஏற்றுக் கொள்ள முயலுவோம். நம்மைப் பற்றி நாம் கொண்டுள்ள முன் சார்பு எண்ணங்களைப் பற்றி இன்றைய நாளில் சிந்திப்போம். 

நம்மைப் பற்றி நாம் கொண்டுள்ள முன் சார்பு எண்ணங்களின் அடிப்படையில் நம்மை புரிந்து கொள்வோம். நமது வாழ்க்கையில் நத்தானியலைப் போல மனமாற்றத்தின் அடிப்படையில் நம்மை நாம் அறிந்திட மாற்றத்திற்கு வித்திடுவோம்.

"மனமாற்றம் உன்னை அறியவே..." 

சனி, 22 ஆகஸ்ட், 2020

"நாம் ஒவ்வொருவரும் கடவுளின் பார்வையில் விலையேறப் பெற்றவர்கள்..." (23.08.2020)


"நாம் ஒவ்வொருவரும் கடவுளின் பார்வையில் விலையேறப் பெற்றவர்கள்..."

இன்றைய முதல் வாசகத்தில் எலியாக்கிமை ஆண்டவர் தேர்வு செய்து அதிகாரத்தை வழங்குவதை நாம் முதல் வாசகத்தில் வாசிக்க கேட்கின்றோம். அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பேதுருவின் மீது திரு அவையை கட்டி அவருக்கு அதிகாரம் வழங்குவததை நாம் வாசிக்கின்றோம்.

இஸ்ரயேல் மக்களிடையே பலவிதமான மக்கள் இருந்தபோதும் கடவுள் எலியாக்கிமை தேர்ந்தெடுத்து அதிகாரத்தை வழங்குகிறார். அதுபோலவே தன்னோடு பயணித்த சீடர்கள் பலருல் பேதுருவை மட்டும் தேர்வு செய்து அவர்மீது திரு அவையை எழுப்புகிறார். இதில் ஆண்டவர் ஏன் எலியாக்கிமையும், பேதுருவையும் அதிகாரத்திற்கு தேர்வு செய்தார்?என்ற கேள்வியை எழுப்பினால். அது கடவுளின் விருப்பம் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக நாம் உணரலாம். புனித பவுலடியார் உரோமையருக்கு எழுதிய கடிதத்தில் கடவுளின் மனதை அறிபவர் யார் ? என்ற கேள்வியை எழுப்புகிறார்.
உலகில் நடக்கக்கூடிய ஒவ்வொன்றும் கடவுளின் விருப்பத்தால் நடக்கின்றன.

ஒரு மனிதன் தன் கையில் இரண்டு குடங்களை வைத்திருந்தான். இரண்டு குடங்களை பயன்படுத்தி தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வருவது வழக்கம். அவ்வாறு ஒவ்வொரு நாளும் செய்து வந்தான். ஒரு நாள் அவரது கையில் இருக்கக்கூடிய ஒரு குடம் அவனிடத்தில் பேசத் தொடங்கியது. அந்த குடம் அவனிடத்தில் சொன்னது. நான் உங்களுடைய கையில் இருக்கிறேன். ஆனால் என்னிடம் சிறிய அளவு ஒரு துளையானது இருக்கின்றது. அந்த துளையின் காரணமாக நீங்கள் கடினப்பட்டு தண்ணீர் எடுத்துச் செல்லும் பொழுது பாதி நீரானது வெளியேறிவிடுகிறது. எனவே உங்களுடைய உழைப்புக்கான முழுமையான பலனை நீங்கள் அடைய முடியாமல் போகிறது. ஆனால் மறுபுறம் உள்ள குடமோ முழுமையாக தண்ணீரைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது என்று கூறி வருத்தப்பட்டது. ஆனால் அந்த நபர் அந்த குடத்தை பார்த்து உன்னில் இருக்கக் கூடிய சிறு துளையை நான் என்றோ கவனித்துவிட்டேன். இருந்த போதும் நான் உன்னை அப்படியே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். காரணம் நான் நாளை  தண்ணீர் எடுத்துச் செல்ல உன்னை பயன்படுத்தும்போது, நீ வரக்கூடிய பகுதிகளை உற்று நோக்கு என்று கூறினான். அந்த கூடமும் உற்று நோக்கியது. அப்போது அந்த ஓட்டை குடம் இருக்கக்கூடிய பகுதி மிகவும் வளமையாக இருந்தது. ஆனால் அதற்கு எதிர் பகுதி வளமையற்று இருந்தது. அப்போது அந்த குடம் அவனிடத்தில் எப்படி இது என்று கேட்டதற்கு அந்த நபர் கூறினார்.  உன்னுடைய ஓட்டைக் குடத்தில் இருந்து விழக்கூடிய நீர் படக்கூடிய இடங்களில், நான் சிறிய விதைகளை தூவினேன். அந்த விதைகள் எல்லாம் வளர்ந்து இன்று நிறைய பூக்களை தருகிறது. அந்த பூக்களை கொண்டு தான் நான் அனுதினமும் ஆலயத்தில் வழிபாடு செய்து வருகிறேன் என்று கூறினார்.

இன்று நாம் வாழக்கூடிய உலகில் நம்மிடத்தில் குறைகள் பல இருக்கலாம், ஆனால் அந்தக் குறைகளை எல்லாம் பல நேரங்களில் இறைவன் கண்டும் காணாமல் இருப்பதாக நமக்குத் தோன்றும். ஆனால் அதை பயன்படுத்தி இறைவன் இந்த உலகத்தில் பலவிதமான மாற்றங்களை உருவாக்குகிறார். 
உதாரணமாக 
ஹெலன் கெல்லர் என்பவர் அமெரிக்காவில் பிறந்தவர். பிறந்தது முதல் கண் தெரியாதவராக, காது கேட்க  இயலாதவராக இருந்தார். இந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருந்தால் வாழ்க்கையையும், கடவுளையும் நாம் வஞ்சித்து புலம்பிக் கொண்டிருப்போம். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் இத்தடைகளை எல்லாம் கடந்து பல சாதனைகளை படைத்தார். எழுத்தாளராகவும், அரசியலில் ஈடுபட்டாளராகவும், பேராசிரியராகவும் விளங்கினார். மேலும் ஏராளமான நிறுவனங்கள் உடல் ஊனமுற்றவர்களுக்காக ஏற்படுத்தினார். 

இவரைப் போலவே இரண்டு கைகளும், கால்களும் இல்லாத நிக் என்ற நபரைப் பற்றியும் நாம் அறிந்து இருக்கலாம். இன்று இவர் பலருக்கு தன்னம்பிக்கை தரும் சக்தியாக திகழ கூடியவர்.

இன்று  நம்மிடம் இருக்கக்கூடிய குறைகளை எண்ணி, நம்மை நாம் ஏற்றுக்கொள்ளாமல் அடுத்தவரோடு மதிப்பிட்டு பல நேரங்களில் இவ்வுலகில் நாம் இப்படிக் உருவானதற்கான காரணம் என்ன என்பதை அறியாதவர்களாகவே இருந்து செல்கிறோம்.

குறைகளோடு இருப்பினும் நாம் அனைவரும் கடவுளின் கையில் இருக்கக்கூடியவர்கள்.  கடவுள் நம்மை பயன்படுத்தி இச்சமூகத்திற்கு பலவிதமான நன்மைகளை செய்கின்றார். அதனடிப்படையில் இயேசுவோடு எத்தனையோ நபர்கள் இருந்தாலும், அவர்களுள் பேதுருவை தேர்வு செய்து அவரின் தலைமையில் திரு அவையை உருவாக்கினார். இந்த திரு அவையால் இவ்வுலகத்திற்கு எத்தனையோ நன்மைகள் ஏற்பட்டு இருக்கின்றன.

அனுதினமும் திருப்பலிகளில் கலந்து கொள்ளக்கூடிய நாம் அனைவரும் இந்த திருஅவையை வழிநடத்தக்கூடிய தலைவர்களுக்காக ஜெபிக்கிறோம். தொடர்ந்து திரு அவைக்காக  ஜெபிக்கவும், திருஅவையில் இருக்கக்கூடிய நிறை குறைகளை ஏற்றுக் கொள்ளவும், குறைகளை சரி செய்து நல்ல ஒரு சாட்சியை வாழ்வாக திருஅவையில் உள்ளவர்கள் விளங்கும், இந்த திருஅவை பல நல்ல விதமான முயற்சிகளை தொடர்ந்து செய்யவும் இன்றைய நாளில் சிறப்பாக திருஅவையில் வழிநடத்தக்கூடியவர்களுக்காக ஜெபிப்போம்.

திரு அவையின் தலைவராக நாம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்  என பலரை கூறினாலும், உண்மையில் திருஅவையின் தலைவர்கள் பொதுமக்களாகிய நாம் ஒவ்வொருவருமே. நாம் நமது வாழ்வை சரி செய்துகொள்ளவும் நம்மை வழிநடத்த தேர்வு செய்யக்கூடிய இந்த திருஅவை தலைவர்கள் நேரிய வழியில் செயல்படவும், நமது வாழ்வால் அவர்களுக்கு வழிகாட்டக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். ஏனெனில் திருஅவை தலைவர்கள் உருவாகுவது குடும்பங்களிலிருந்து. 
குடும்பங்களில் நல்ல நேர்மறையான பொதுநல சிந்தனை கொண்ட நல்ல  நபர்களாக நமது குழந்தைகளை உருவாக்கி திரு அவையை வழிநடத்த இறைவன் கையில் நம் குழந்தைகளை காணிக்கையாக ஒப்படைப்போம். 


"நாம் ஒவ்வொருவரும் கடவுளின் பார்வையில் விலையேறப் பெற்றவர்கள்..."

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

"ஆண்டவர் உ(ந)ம்மோடு இருக்கிறார்..." (22.08.2020)

இறைவனிடத்தில் ஒருவன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் எனக்குத் தாரும் என வேண்டினான். 
அவனிடம் கடவுள் இவ்வுலகில் உள்ள அனைத்திலும் மகிழ்ச்சியை காண்பதற்காகவே உனக்கு வாழ்க்கையை கொடுத்துள்ளேன். இதைவிட மேலாக உனக்கு என்ன வேண்டும்? என்றார். 
உடனே அந்த மனிதன் உம்மை போல எல்லாவற்றையும் அன்பு செய்யும் வரத்தையாவது எனக்குத் தாரும் என்றான். 
கடவுள் அவனிடம் வாழ்க்கையையும், மனிதர்களையும் அணுகுவதற்கான கொடை அன்பு. அதை உனக்கு நான் ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்று கூறினாராம்.

இவ்வுலக வாழ்க்கையில் அன்பு செய்து வாழ இறைவன் நம்மை அழைக்கின்றார். அந்த அன்பின் வெளிப்பாடே அன்னை மரியாவின் வழியாக இயேசு மண்ணில் பிறக்கின்றர்.

இயேசுவின் பிறப்பு மரியாவுக்குத் அறிவிக்கப்பட்டபோது மரியா அச்ச உணர்வு பல கேள்விகளை எழுப்பினால். ஆனால் கடவுளின் தூதர் தொடக்கத்திலேயே மரியாவிடம் "அருள்நிறை பெற்றவரே வாழ்க கடவுள்  உம்மோடு..." என்றார். இதுவே இறைவன் இன்று நமக்குத் தரும் செய்தியாக அமைகிறது.

1989 ஆம் ஆண்டு சீனாவை ஆண்ட கம்யூனிச அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் தியானன்மன் சதுக்கம் என்ற இடத்தில் ஒன்று கூடினர் . மாணவர்களின் பேரியக்கத்தை ஒடுக்க அரசு தன் இரும்பு கரத்தை பயன்படுத்தியது. கொடூரமாக மனிதநேயமற்ற முறையில் அவர்களை தாக்கியது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் புல்டேசர்களின் சக்கரங்களால் ஏற்றிக் கொள்ளப்பட்டனர்.  பலர் கொடூரமாக காயமுற்றனர். சீனா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமே இச்செயலைக் கண்டு திகைத்தது. இப்படிப்பட்ட கோர நிகழ்ச்சிகளைக் கண்ட போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்ற பல்கலைக் கழக மாணவர்கள் பயந்துபோய் போராட்டத்தில் இருந்து பின்வாங்கி விடவில்லை. தங்கள் நண்பர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு துக்கம் அடைந்தாலும், அவர்கள் சோர்ந்து போய்விடவில்லை. தாங்கள் வீட்டுக்குச் செல்ல மறுத்து விட்டனர். இப்படிப்பட்ட  நேரத்தில் அந்தப் போராட்டத்தின் தலைவர் சதுக்கத்தின் நடுவில் இருந்த மாணவர்களுக்கிடையே நின்று பேச ஆரம்பித்தார்.
உங்களுக்கு ஒரு கதை சொல்ல விரும்புகிறேன் ஒரு காடு தீப்பிடித்துக் கொண்டது. அப்போது காட்டின் ஒரு பகுதியில் வசித்த எறும்புகள் தங்களின் ஒட்டுமொத்த இனத்துக்குமே அபாயம் காத்திருப்பதை உணர்ந்தன. விரைந்து செயல்பட வேண்டிய நேரம் அது. எனவே தங்கள் தலைவரின் தலைமையில் ஒன்று கூடின. அப்போது ஒரு வயதான ஞானமிக்க எறும்பு பேசியது ஆபத்து நம்மை சூழ்ந்துள்ள நேரம் இது. நமக்கு முன்னே இரண்டே இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று தனித்தனியாக தீயை அணைக்க எதிர்கொள்வது. அப்படி செய்தால் அனைவருமே அழிந்து போவோம். இரண்டு நாம் அனைவரும் மிக நெருக்கமாக ஒன்று கூடி ஒரு பந்தைப் போலாகிக் கொண்டு நெருப்பை எதிர்கொள்வது. நெருப்பு நம்மை தாக்கும் போது வெளியில் உள்ளவர்கள் மட்டும் சாவார்கள் உள்ளே இருப்பவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். இதைக் கேட்ட மற்ற எறும்புகள் இரண்டாவது யோசனையை செயல்படுத்தின என்றான். இதைக் கேட்டதும் அங்கு இருந்தவர்கள் ஒன்றுகூடி சிலரின் தியாகத்தில் பலரும் உயிர் பிழைத்தனர்.

இன்று நாம் வாழக்கூடிய இச்சமூகத்தில் தியாகம் புரிய முன் வருவோரின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.  எந்த ஒரு சமூகத்தில் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தங்களை காத்துக்கொள்ள முயற்சிக்கின்ற நபர்கள் அதிகமாக இருக்கின்றார்களோ அச்சமூகம் அழிவதை யாரும் தடுத்து நிறுத்த இயலாது என்பார்கள்.

அன்று அன்னை மரியா வாழ்ந்த  சூழலில் திருமணத்திற்கு முன்பு ஒரு பெண் கருவுற்றால் அப்பெண்ணுக்கு இழைக்கப்படக்கூடிய அநீதிகளை அறிந்திருந்தும் மனுக்குலத்தின் மீது கொண்டிருந்த அன்பின் அடிப்படையில்,  இயேசுவை தன் வயிற்றில் சுமக்க முன்வந்த தியாகத்தாய் அன்னை மரியாவைப் போல தியாகம் கொண்ட வாழ்வாக நமது வாழ்வும் மாற வேண்டும்.

இன்று கோரோனோ தொற்றுநோய் காரணமாக அச்ச உணர்வால் தடுமாறும் நம்மிடையே தியாக உணர்வு அடியோடு அழிந்து வருகிறது.  

சமீபத்தில் கேரளாவில் உள்ள வெள்ளிமலை பகுதியில் வசித்து வரக்கூடிய   மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட பாஸ்கரன் என்பவருடைய குடும்பத்தில் 
சொந்தக் கணவரையே அச்ச உணர்வால் வீட்டுக்குள் ஏற்க மறுத்த மனைவி பிள்ளைகளின் செயல்பாட்டை செய்திகள் வழியாக  நாம் அறிந்திருக்கலாம். 

 இன்று நாளுக்கு நாள் நம்மிடமிருந்து மறைந்து வரக்கூடிய தியாக உணர்வை இனம் கண்டுகொள்ள அன்னை மரியாவின் வாழ்வு நமக்கு உதவியாக உள்ளது.

இயேசு இம்மண்ணில் மலர்ந்து தியாகத்தால் இன்று பல இடங்களில் மனம் பரப்பி திகழ்வது போல... நமது வாழ்வையும் தியாகத்தால் அடுத்தவர் நலனுக்கென அர்ப்பணிக்க அன்னை மரியாவை முன்னுதாரணமாகக் கொண்டு பயணிப்போம்... அப்போது  அன்னை மரியாவிடம் கூறியதுபோல வானதூதர்கள் நம்மிடமும் கூறுவார்கள் "ஆண்டவர் உ(ந)ம்மோடு இருக்கிறார்..." என்று.



வியாழன், 20 ஆகஸ்ட், 2020

"அன்பே தலைசிறந்தது..." (21.08.2020)

"அன்பே தலைசிறந்தது..."


"மானுடர் உழாவிடினும்
வித்து நடாவிடினும் 
வரம்பு கட்டாவிடினும் 
அன்றிநீர் பாய்ச்சாவிடினும் 
வானுலகு நீர்தருமேல் மண்மீது 
மரங்கள் வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமென்றே ? 
யானெதற்கும் அஞ்சுகிலேன் , 
மானுடரே , 
நீவிர் என்மதத்தைக் கைக் கொண்மின் ; 
பாடுபடல்வேண்டா ; 
ஊனுடலை வருத்தாதீர் ; உணவியற்கை கொடுக்கும் ; 
உங்களுக்குத் தொழிலிங்கே 
அன்புசெய்தல் கண்டீர்...."

அதாவது மனிதர் உழா விட்டாலும் வரப்பு காட்டாவிட்டாலும், மழை பொழிய வேண்டிய நேரத்தில் பொழியும். அதுபோலவே மரம், செ,டி கொடிகள் வளர வேண்டிய நேரத்தில் வளரும் இம்மண்மீது.. ஆனால் நான் அஞ்சுவது எதற்கு எனில்...
 மனிதரே!
மதம் என்னும் பெயரால் நீங்கள் செய்வதை கண்டு தான் அஞ்சுகிறேன். இந்த உலகில் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை அன்பு செய்வது மட்டுமே என்கிறார் பாரதி.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவை சோதிக்கும் நோக்குடன் தலைசிறந்த கட்டளை எது? என கேள்வியை எழுப்புகிறார்.
இயேசு அவரிடம் உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் கடவுளை நேசிப்பது என்கிறார்.  மேலும் உன்மீது அன்பு கூறுவது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை என்கின்றார்.  

விவிலியம் நம்மை இரண்டு வகையான நபர்களை அன்பு செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. ஒன்று நமக்கு அடுத்து இருப்போரை, மற்றொன்று நமது பகைவர்களை.
இந்த இரண்டு பேரும் பெரும்பாலும் ஒரே நபரேயன்றி. இரு நபர்கள் அல்ல. அதாவது நமது பகைவர்கள் அடுத்து இருப்பவர்களேயொழிய எங்கோ இருப்பவர்கள் அல்ல என்கிறார் ஆங்கிலக் கவிஞர் ஜி.கே. செஸ்டர்டன்.

நம்மில் பலருக்கு கடவுளை நேசிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. மனிதர்களை நேசிப்பதில் தான் அதிலும் குறிப்பாக அருகில் இருப்பவர்களை நேசிப்பது தான் பெரிய சிக்கலாக இருக்கிறது.

கண்ணில் காணும் மனிதரை அன்பு செய்ய இயலாத நம்மால், கண்ணில் காண இயலாத கடவுளை ஒருபோதும் அன்பு செய்ய இயலாது என்கிறார் அன்னை தெரசா.

சற்று ஆழமாக இறைவார்த்தைகளை உற்று நோக்கினோம் என்றால் "கடவுள் மனிதரை தன் உருவிலும் சாயலிலும் படைத்தார்" என விவிலியத்தில் தொடக்க நூல் கூறுகிறது. அப்படியாயின் உலகிலுள்ள ஒவ்வொருவரும் கடவுளின் உருவமே, கடவுளின் சாயல் மிக்கவர்களே. இவர்களை அன்பு செய்யாது கடவுளை அன்பு செய்ய நம்மால் இயலாது.எனவே கண்ணில் காணும் அடுத்த நபர்களை அன்பு செய்து வாழ நமது வாழ்வை மாற்றி விடுவோம்.

இன்றைய நமது சிந்தனையும், செயலும் நமது நாளைய வாழ்க்கையை வடிவமைக்கும் என்பார்கள்.   எனவே அடுத்தவரை அன்பு செய்யக்கூடிய அன்பின் உருவமாக, அகிலத்தில் திகழ்ந்திட... நமது சிந்தனையையும், செயலையும் மாற்றிட இறையருளை வேண்டி... காண்பவரை இன்முகத்தோடும், அன்போடும் நோக்கிட முயலுவோம்.

"அன்பே தலைசிறந்தது..."

புதன், 19 ஆகஸ்ட், 2020

கடமையா....? விருப்பமா....?

 
கடமையா....? விருப்பமா....? 

ஒரு தெருவில் சாக்கடை மூடி திறந்து கிடந்தது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 7 குழந்தைகள் அந்த சாக்கடை குழியில் விழுந்து விடுகிறார்கள். அதை கவனித்த அந்த குழந்தைகளுள் ஒரு தாய் வேகமாக ஓடிவந்து எல்லா குழந்தைகளையும் காப்பாற்றுகிறார். அத்தோடு அக்குழந்தைகளை அருகில் இருக்கக்கூடிய குழாய் அருகே அழைத்துச் சென்று அனைவரையும் கழுவினால். இதை கவனித்த மற்ற குழந்தைகளின் தாய்மார்கள் வேகமாக ஓடிவந்து நீ எங்கள் குழந்தைகளை காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் அனைத்து குழந்தைகளையும் கழுவிக் கொண்டு இருக்கிறாயே உன்னைப் போன்ற மனநிலை கொண்டவர்களாய் யாரும் இவ்வுலகில் இருக்கவே முடியாது என்றார்கள்.

 அதற்கு அந்த தாய் ஏ மா நீ வேற... எல்லா குழந்தைகளையும் கழுவினால் தான் என் குழந்தையை கண்டுபிடிக்க முடியும் என்றால்.

நகைச்சுவையாக தோன்றினாலும் இன்றைய உலகில் வாழக்கூடிய பலருக்கு பலவற்றை பற்றிய தெளிவான புரிதல் அவசியமாகிறது.
இன்று நாம் வாழக்கூடிய உலகில் நம்மில் பலருக்கு கடமை என்பது மிகவும் கடினமானதாக தோன்றும் காரணம் அது நமது விருப்பமாக இல்லாததே காரணமாகும்.

கடமை என்பது வேறு, விருப்பம் என்பது வேறு. விருப்பம் என்பது நாம் விரும்புவதை செய்வது. கடமை என்பது நாம் செய்ய வேண்டியவற்றை செய்வது.

இரண்டிற்குமிடையே ஒரு உறவுச் சிக்கல் இருந்து கொண்டுதான் இருக்கும். இவ்வுலகில் நாம் செய்யவேண்டியது ஒன்றாக இருக்கும். ஆனால் நாம் செய்வது ஒன்றாக இருக்கும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அரசர் ஒருவர் பலரை விருந்துக்கு அழைக்கிறார். ஆனால் அழைக்கப்பட்ட அனைவருமே அழைத்த இடத்திற்கு செல்ல விருப்பம் கொண்டவர்களாக இல்லை.  எனவே அரசர் சாலையில் காணும் அனைவரையும் விருந்துக்கு அழைக்கிறார். அரசரின் பணியாட்களின் அழைப்பையேற்று அழைக்கப்பட்ட பலர் விருந்துக்கு வருகிறார்கள்.  அவர்களுள் ஒருவன் திருமண ஆடையின்றி இருப்பதை அறிந்த அரசர் அவனை ஏன் திருமண ஆடையின்றி விருந்துக்கு வந்தாய்? என்ற கேள்வியை எழுப்பி அவனுக்கு தண்டனையை வழங்குகிறார். 


திருமண விருந்துக்கு வருவது ஒவ்வொருவரின் விருப்பம். ஆனால் திருமண விருந்துக்கு வரும் பொழுது திருமண ஆடை அணிய வேண்டும் என்பது அவர்களின் கடமையாகிறது. கடமையை செய்யாது விருப்பத்தை மட்டும் நிறைவேற்ற எண்ணி விருந்துக்கு வந்தான் அந்த திருமண ஆடையற்றவன்.

" கடமையை செய்தால் இன்பம் கிடைக்கும். அதையே கடமைக்காக செய்தால் துன்பமே கிடைக்கும்..." என்பது போல   திருமணத்திற்கு வரவேண்டுமென விரும்பியவன் திருமண ஆடையை அணிந்து வர வேண்டும் என்ற தன் கடமையை செய்யத் தவறிய போது அவனுக்கு துன்பமே விளைகிறது.  


நமது வாழ்வில் நாம் நமது கடமைகளை விருப்பமாக மாற்றும் போது அனைத்தும் சமநிலை பெறுகிறது.  கடமையை விருப்பமாக மாற்ற கடமையை முழு மனதுடனும், முழு அர்ப்பணத்துடனும் நாம் செய்ய வேண்டும்.  அதாவது திருமணத்திற்கு செல்ல விரும்புகிறோம் என்றால் திருமண ஆடையை அணிந்து கடமையை சரியாக செய்யக்கூடியவர்களாக நாம் செயல்படவேண்டும்.

இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது மனுகுலம்  வாழ்வு பெற வேண்டும் என்ற தன் கடமையை முழு ஈடுபாட்டுடனும்,  முழு அர்ப்பணத்துடனும்  செய்தார். எனவே இன்றுவரை பல நூற்றாண்டுகள் கடந்தும் அவரை நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  அந்த இயேசுவைப் பின்பற்றி வாழக்கூடிய நமது வாழ்விலும் இயேசுவிடம் காணப்பட்ட செயல்பாடுகளான அனைத்தும் நமது வாழ்வில் செயல்வடிவம் பெற வேண்டும்.

கடமையா...? விருப்பமா....? என்று கேள்வியை எழுப்பினால்.

கடமைகளை முழு விருப்பத்தோடு செய்யக்கூடியவர்களாக நாம் மாறிட வேண்டும். என்பதை தீர்வாகும்.

கடமையை முழு ஈடுபாட்டுடனும், முழு அர்ப்பணத்துடன் செய்திட முயலுவோம்... 

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

தன்னலமற்ற செயல்... அது நம்முடையதா?


"தன்னலமற்ற செயல்... அது நம்முடையதா?..."

ஒரு ஆசிரியர் வகுப்பில் வாழ்க்கையின் நோக்கம் என்ன?என்ற கேள்வியை எழுப்பினார்.
மாணவர்களின் பதில் இவ்வாறாக இருந்தது...
சிலர் 
கடவுளைத் தேடுவது என்றார்கள். 
சிலர் 
பிறருக்கு பணி செய்வது என்றார்கள்.
 சிலர் 
மனிதநேயத்திற்காக உழைப்பது என்றார்கள் .
ஓரளவிற்கு இவைகள் அனைத்தும் சரியான பதில்கள் என்றாலும், முழுமையான பதில் எதுவாக இருக்கும்? என்று ஆழ்ந்து சிந்திக்கும் போது....

வாழ்க்கைக்கு ஒரே ஒரு நோக்கம்தான் உண்டு. அது மகிழ்ச்சியாக இருப்பது.
 

ஒருவன் மகிழ்ச்சியாக இன்பமாக வாழ அவனது தேவைகள் எல்லாம் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். தேவைகளை நிவர்த்தி செய்ய பணம் அவசியமாகிறது. பணம் ஈட்டுவதற்கு உழைக்க வேண்டியுள்ளது. உழைப்பால் வரும் களைப்பு சிறிய வலியாகத் தோன்றினாலும் அந்த வலியே மகிழ்வின் அடிப்படையாகும்.

இன்று நற்செய்தி வாசகத்தில் ஒரு முதலாளி பேசிய பணத்தை தருவதாக கூறி தன் பணத்தை தன் விருப்பப்படி முதலில் வந்த நபர் தொடங்கி கடைசியில் வேலைக்கு வந்த நபர் வரை சமமாக கொடுக்கிறார். ஆனால் அவரின் பணம் வழங்கக்கூடிய செயல்பாட்டில் குறை காண்கின்றது ஒரு கூட்டம். நான் நல்லவனாய் இருப்பதால் உனக்கு பொறாமையா? என்று அந்த முதலாளி பணம் பெற்றுக் கொண்டு வேலை செய்தவர்களிடம் கேள்வியை எழுப்புகிறார்.

இன்று நாம் வாழும் உலகிலும் நமது பொருளை நம் விருப்பப்படி அடுத்தவருக்கு தருவதில் கூட தவறுகளை கண்டுபிடிக்கின்றனர் பலர்.

நமது தேவைகள் நிவர்த்தியடைவதோடு அடுத்தவர் தேவையும் நிவர்த்தியடைய வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்க வேண்டும். இதுவே இறைவனது விருப்பமாகும்.

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல.
(கடவுள் வாழ்த்து : 4)

அதாவது விரும்புதலும், வெறுத்தலும் இல்லாத இறைவனின் திருவடியை விடாது நினைப்பவருக்கு எக்காலத்திலும் துன்பம் உண்டாவதில்லை என்ற திருவள்ளுவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப, இறைவனது திருவடியை விடாது நினைத்துக் கொண்டிருக்கக் கூடியவர்களாகிய நாமும், இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெற்ற முதலாளியை போல தேவையில் இருப்பவருக்கு இருப்பதை பகிரக் கூடிய நல்ல மனிதர்களாக உருவாக வேண்டும். மேலும் தேவையில் இருப்பவருக்கு பகிரக் கூடிய நல்ல மனிதர்களை மதிக்கவும், அவர்களின் செயல்களை விமர்சிப்பதை விட, நமது செயல்களும் தன்னலமற்ற நற்செயல்களால் மாறிட, நமது வாழ்வை மாற்றிட முயலுவோம்



"தன்னலமற்ற செயல்... அது நம்முடையதா?
ஆம், 
நம்முடையதாக மாற்றிக்கொள்ள நமது வாழ்வை மாற்றிடுவோம்..."


திங்கள், 17 ஆகஸ்ட், 2020

எங்களுக்கு என்ன கைமாறு கிடைக்கும்?


எங்களுக்கு என்ன கைமாறு கிடைக்கும்?


அனைவருக்கும் வணக்கம் .
இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.

ஆடை இல்லாதவன் அரை மனிதன் என்பது பழமொழி 
பதவி இல்லாதவன் பாதி மனிதன் என்பது புதுமொழி 

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகில் எதை செய்தாலும் எங்களுக்கு கைமாறாக என்ன கிடைக்கும் பணமா? பதவியா? பொருளா? எனக் கேட்பவருக்கு பஞ்சமில்லை.

இன்று இவ்வுலகில் எதை செய்தாலும் கைமாறாக என்ன கிடைக்கும் ? என்ற எதிர்பார்ப்போடு செயல்படுபவர்களில் அதிகம்.
இதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் விதிவிலக்கு அல்ல.

"நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மை பின்பற்றியவர்களாயிற்றே எங்களுக்கு என்ன கிடைக்கும் ?" என்று இயேசுவிடம் சீடர்கள் கேட்டார்கள்.

பொதுவாக கடவுளின் கைமாற்றை எதார்த்தமாக இப்படி கூறுவது உண்டு.

அரசன்  தன் மந்திரியிடம் கடவுள் ஒரு திருடன் காரணம் ஆதாம் தூங்கும் போது அவனுக்குத் தெரியாமலேயே விலா எலும்பு ஒன்றை திருடி விட்டார் என்றான்.

அதைக்கேட்டு மந்திரியார் அரசே! வெளிப்படையாக பார்க்கும்போது நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை போலத் தெரியலாம். ஆனால் உண்மை அதுவல்ல உங்களிடம் உள்ள செப்பு குடத்தை ஒருவன் உங்களுக்கு தெரியாமல் எடுத்து விட்டு அதற்கு பதிலாக தங்க குடத்தை  கொடுத்தால் அவனை குறை சொல்வீர்களா? என்றார். 
அரசர் நிச்சயமாக இல்லை என்றார்.

உடனே மந்திரியார்  அது போலத்தான் கடவுளும் விலா எலும்பை எடுத்து கொண்டார். ஒரு பெண்ணை பரிசாக கொடுத்தார் என்று கூறினார்.

கடவுளோடு நாம் கொள்ளும் உறவின் தொடக்கத்தில் சிலவற்றை நாம் இழக்க நேரிடக் கூடும். ஆனால் இந்த இழப்பிற்கு யார் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே பல மடங்கு நன்மைத்தனத்தையும், வரங்களையும் வாழ்வில் அனுபவிக்க முடியும்.

கடவுளின் கைமாறு கணக்கிட முடியாதது. ஆனால் அவருக்காக அனைத்தையும் இழக்க நாம் தயாரா? என்ற கேள்வியை எழுப்பினால் தயார் என கூறக் கூடியவர்கள் பலர். ஆனால் ஆண்டவர் இயேசுவுக்காக அனைத்தையும் இழப்பவர்கள் மிகவும் குறைவு.

கடவுளின் இறையாட்சி கனவான அன்பு, நீதி, சமத்துவம், மனிதநேயம் இதற்காக தம்மையே இழந்தவர்கள் பலர். இதில் இயேசுவின் சீடர்களும் அடங்குவர். இவர்களின் உடல் இம்மண்ணை விட்டு அழிந்தாலும் இவர்களின் புகழ் இன்றளவும் அழியாமல் அனைவர் மனதிலும் நிலையாக பதிந்துள்ளது.

எரிந்துகொண்டிருக்கும் மெழுகு திரியைப் பார்த்து யாரும் அழிந்து கொண்டிருக்கிறது என கூறுவதில்லை.
அதுபோலவே ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி கனவுக்காக தன்னையே இழக்கக்கூடிய எவரும் அழிந்து போவதில்லை. 

நிலை வாழ்வுக்கு நாமும் தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்ள ஆண்டவர் இயேசுவுக்காக அற்பசுகங்களை கைவிட்டு இறையாட்சியின் மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவத்திற்காக சிறுசிறு காரியங்களை இழக்கத் தயாராவோம்.

என்ன கைம்மாறு  கிடைக்கும் ?என்பதை விட இயேசுவுக்காக எதை இழக்கத் தயாராக இருக்கிறோம்?என்று சிந்திப்போம்.



ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

பகிர்வு என்பது பேச்சில் மட்டுமல்ல செயலிலும் வேண்டும்.


"பகிர்வு என்பது பேச்சில் மட்டுமல்ல செயலிலும் வேண்டும்..."


 இன்றைய வாசகத்தில் இளைஞன் நிலை வாழ்வைத் தேடி வருகிறான். நிலை வாழ்வை அடைய என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும் எனக் கேட்கிறான். வாழ்வைப் பெறவும் நன்மைகள் செய்யவும் அவனுக்கு இருந்த ஆவலை தேடலாக இயேசுவிடம் வெளிப்படுத்துகிறான்.
      

    கட்டளைகளை கடைபிடித்து வாழ்ந்தாலே அது நன்மைகளை விளைவிக்கும் என்று இயேசு கூறுகிறார். கட்டளைகளை கடைபிடித்து வாழும் போது நம்மில் நமக்குள் ஒழுக்கமும் உறுதிப்பாடும் மேம்படும். நேர்மறை எண்ணங்களையும் நலம் தரும் செயல்பாடுகளையும் விளைவிக்கும். இவ்வாறு கட்டளைகளை கடைபிடித்து வாழும் பொழுது ஒரு மனிதன் தனக்குள்ளே நல்லவனாக வாழ்கின்றான்.

ஏழைகள் உயிர் வாழ்வதற்கு கூட வழி இல்லாது தவிக்கும் பொழுது தான் மட்டும் நல்லவனாக இருந்து வாழ்வது ஒரு சுயநல வாழ்வு. அது நிலை வாழ்வுக்கு இட்டுச் செல்லாது. இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து மனிதரையும் அன்பு செய்து அனைவரையும் வாழவைப்பது இயேசு கூறிய இறையாட்சி இதுவே நிலை வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும். இயேசு நம்மிடம் உள்ள பொருள்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து அவர்களுக்கு வாழ்வு கொடுத்து வாழ வைப்பதே நிலை வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்கிறார்.
          மனிதர்களை நேசியுங்கள் பொருட்களை பயன்படுத்துங்கள் என்று கூறுவார்கள். இன்றைய நாட்களில் நாம் பொருள்களை சேகரிப்பதற்காக மனிதர்களை பயன்படுத்துகிறோம்.
            இன்றைய நாளில் நாம் நம்மிடம் இருக்கின்ற பொருள்களை பயன்படுத்தி நமக்கு அருகில் உள்ள ஏழை எளியோரின் பசி நீங்க அவர்களின் வாழ்வு வளம் பெற செய்வோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உன்னிடம் உள்ளதை விற்று ஏழைகளுக்குக் கொடு என்கிறார். ஆனால் நிலை வாழ்வைத் தேடிய மனிதனுக்கும் தன்னிடம் உள்ளதை விற்று ஏழைகளுக்குக் கொடுக்க மனமில்லை. எனவே அவன் அமைதியாக இயேசுவை விட்டு விட்டுச் சென்றார் என இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம்.

பகிர்வு என்பது பேசும் பொருளல்ல அது நமது வாழ்வில் செயலாக்கப்பட வேண்டிய ஒன்று. இன்று பகிர்வை பற்றி பலர் பல மணிநேரங்கள் பேசுகிறார்கள் ஆனால் தங்களிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளவோ அவர்கள் மறுக்கிறார்கள். பகிர்வு என்பது பேச்சில் மட்டுமல்ல செயலிலும் வேண்டும். 

நிலைவாழ்வு என்பது தன்னலம் கருதாமல் பொது நலனுடன் வாழுவதை குறிக்கும். தனக்கு என சேர்த்துக்கொண்டு தன்னலம் கொண்ட மனிதர்களாக வாழாமல். இருப்பதை அடுத்தவரிடத்தில் பகிரக்கூடிய நல்ல மனிதர்களாக இயேசுவின் சீடர்களாக உருமாற இன்றைய நாளில் முயலுவோம்.

"பகிர்வு என்பது பேச்சில் மட்டுமல்ல செயலிலும் வேண்டும்..."


சனி, 15 ஆகஸ்ட், 2020

நம்பிக்கைக்குரிய சீடராவோம் ...

நம்பிக்கைக்குரிய சீடராவோம் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய  நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் ... என்ற கானானிய பெண்ணிடம் காணப்பட்ட நம்பிக்கை இன்று கொரோனா தொற்றுநோய் காரணமாக அச்சத்தில் வாழக்கூடிய ஒவ்வொருவருடைய மனங்களில் இருக்க வேண்டும் என்பது இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வழங்கும் செய்தியாக உள்ளது.

கானானியப் பெண் இயேசுவை நோக்கி தன் மகள் நலம்பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருந்தாள். அவளுடைய கதரலைக் கேட்ட சீடர்கள் இவளை அனுப்பிவிடும் என்று இயேசுவிடம் பரிந்து பேசினார்கள். ஆனால் இயேசுவோ அந்தப் பெண்ணை நிராகரிப்பது போல பேசினார். இருந்த போதும் அந்தப் பெண் தன்னை நாய்க்கு இணையாக தாழ்த்தி ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று மீண்டும் வேண்டினால். அவளின் நம்பிக்கையை கண்டு அவளுக்கு அவள் வேண்டியதை கொடுத்தார் இயேசு.

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகிலும் கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக இரத்த உறவுகள் கூட அருகில் வருவதற்கு அஞ்சக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இச்சூழலில் கானானிய பெண்ணிடத்தில் காணப்பட்ட நம்பிக்கை நம் ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தேவையாகும்.

கானானியப் பெண்ணின் கதறலை கண்டு அவள் மீது மனமிரங்கிய சீடர்களை போல கொரோனா தொற்றுநோய் காரணமாக நம்பிக்கை இழந்து இருக்க கூடியவர்களுக்கு ஆறுதல் தர கூடியவர்களாக நாம் உருவாக வேண்டும்.

அருகில் உள்ளவர்களின் துயரத்தைக் கண்டு அவர்களின் துயரத்தை துடைப்பதற்கு நம்மாலான முயற்சிகளை செய்யவும், கொரோனா நோய்த்தொற்று காரணமாக அச்ச உணர்வால் வருந்தக்கக்கூடிய ஒவ்வொரு மனங்களும் நம்பிக்கையோடு ஆண்டவர் இயேசுவை நாடவும் இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

கானானிய பெண்ணிடத்தில் காணப்பட்ட நம்பிக்கையை நமது உள்ளத்தில் விதைத்தவர்களாக, அடுத்தவர்களின் துயரத்தைக் கண்டு அதை ஆண்டவரிடத்தில் எடுத்துரைத்து அவர்கள் நலமடைய அவர்களுக்காகப் பரிந்து பேசக்கூடிய உண்மை சீடர்களாக நாம் ஒவ்வொருவரும் உருமாற இறைவனது அருளை வேண்டி இன்றைய நாளில் இயேசுவின் உண்மைச் சீடர்கள் என்பதை செயலால் வெளிப்படுத்த முயலுவோம்.

நம்பிக்கைக்குரிய சீடராவோம் ...

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

மாவீரன் செண்பகராமன் பிள்ளை


மாவீரன் செண்பகராமன் பிள்ளை

ஜெர்மானிய  சர்வாதிகாரி ஹிட்லரையே தனது நெஞ்சுரத்தால் மன்னிப்பு கேட்க வைத்தவர் மாவீரன் செண்பகராமன் பிள்ளை  , இவர் ஒரு தமிழர் என்பது சரித்திரப் பெருமை . இயாது பெற்றோர் சின்னச்சாமி பிள்ளை நாகம்மாள் . குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர்கள் . 

சின்னச்சாமி பிள்ளை திருவிதாங்கூர் அரசில் போலிஸ் ஏரட்டாக பணிபுரிந்தார் . பணி நிமித்தமாக திருவனந்தபுரத்துக்கு - குடிபெயர்ந்தனர் , செண்பகராமன் பிள்ளை 1891 - ம் ஆண்டு பிறந்தார் . திரு - வனந்தபுரம் தைக்காடு மாதிரிப்பள்ளி யில் படித்தபோதே அவரிடம் சுதந்திர தாகம் ஏற்பட்டது . " ஸ்ரீபாரதமாதாவாலியர் சங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்து சக மாணவர்களுடன் வந்தே மாதரம் பாடினார் .

 அப்போதுதான் , சுதந்திரப் போரின் தாரக மந்திரமான ' ஜெய்ஹிந்த் ' என்ற கோவும் அவரிடம் இருந்து பிறந்தது . இதனால் செண்பகராமன்பிள்ளையை அடையாளப்படுத்தும்போது , ஜெய் ஹிந்த் செண்பகராமன் ' என்று குறிப்பிட் டனர் . 

பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயில் , உறவினர் ஒருவர் மூலம் சர் வால்டர்வில் லியம் ஸ்ட்ரிக்லேண்ட் என்பவருடன் நட்பு ஏற்பட்டது . அவருடன் செண்பகராமன் பிள்ளையும் ஜரோப்பா சென்றார் . அப்போது அவருக்கு 15 வயது . அங்கு ஆஸ்திரியாவில் அவர் உயர்கல்வியை முடித்தார் . பின்னர் டிப்ளமோ என்ஜினியர் ஆனார்.

அடுத்து இந்திய சர்வதேச குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் , ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலேயருக்கு எதிராக பிரசாரம் செய்தார் . மேலும் பல நாடுகளுக்கு சென்று இந்தியாவின் சுதந்திரம் பற்றி பேசினார் . இதற்கிடையே , ஜெர்மன் நாட்டுப்படையில் அவர் சேர்ந்து இங்கிலாந்து நாட்டினருக்கு எதிராக போரிட்டார் .

 1914 - ம் ஆண்டு , முதல் உலகப்போர் மூண்டது . ' எம்டன் ' என்ற நீர்மூழ்கிக் கப்பலில் செண்பகராமன்பிள்ளை என்ஜி னியராக இருந்து , ஆங்கிலேயருக்கு தெரி யாமல் , அவர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவுக்கு வந்தார் . சென்னையில் ஆங்கிலேயரின் கோட்டையை நோக்கி அந்த நீர்மூழ்கிக் கப்ப லில் இருந்து குண்டு கள் பறந்தன . இந்த தாக்குதலை ஆங்கிலேயர் சற்றும் எதிர் பார்க்கவில்லை . நிலை குலைந்தனர் 


இதன் பின்னர் 1919 - ம் ஆண்டு வியன்னா மாநாடு நடந்தது . இதில் செண் பகராமன் பிள்ளை நேதாஜி சந்திப்பு ஏற்பட்டது . எம்டன் தாக்கு தலுக்கு பிறகு செண்பகராமன் பிள்ளையை நேதாஜி நன்கு அறிந்து வைத்திருந்தார் . அவரைப் போலவே நேதாஜிக்கும் , ' ஆயுதம் ஏந்தினால்தான் அன்னியரை சரணடைய வைக்க முடியும் ' என்ற எண்ணம் இருந்தது . இதனால் அதற்கான யுக்திகளை செண்பகராமனி டம் நேதாஜி கேட்டறிந்தார் . அதன் பிறகு தான் நேதாஜியும் “ ஜெய்ஹிந்த் ' கோஷத்தை எழுப்பினார் . 

நேதாஜியுடனான சந்திப்புக்கு பிறகு செண்பகராமன்பிள்ளைக்கு ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லருடன் அதிக நெருக் கம் ஏற்பட்டது . ஒருமுறை , ' இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தால் , நாட்டை ஆட்சி செய்யும் திறமை இந்தியருக்கு இருக் குமா என்பது சந்தேகமே ... ' என்று ஹிட்லர் தவறான கருத்தை பதிவு செய்தார் . இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த செண் பகராமன் , " இந்த கூற்றை தெரி வித்ததால் இந்தியர்களை அவ மதித்துவிட்டீர்கள் . எனவே , நீங்கள் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் ' என்று உறுதியுடன் குரல் எழுப்பினார் . இதனால் வேறு வழியின்றி ஹிட்லர் மன் னிப்பு கேட்டார் . அதுவும் எழுத் துப்பூர்வமாக எழுதிக் கொடுத் தார் . 


உலகையே நடுநடுங்க வைத்த ஒரு சர்வாதிகாரி , ஒரு இந்தியரிடம் மன்னிப்பு கேட்ட தகவல் ஹிட்லரின் ஆதரவாளர் களை திகைக்க வைத்தது . அவர்கள் செண்பகராமனின் உயிரையே பறித்துவிட்டனர் . 1934 - ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஒரு விருந்து நிகழ்ச்சியில் விஷம் கலந்த உணவை கொடுத்து நெஞ்சுரமிக்க அந்த மாவீரனை கொன்றுவிட்டார்கள் . இறப்பதற்கு 3 ஆண்டுக்கு முன்பு அவர் மணிப்பூரைச் சேர்ந்த லட்சுமிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார் . அவர்களுக்கு குழந்தை இல்லை.

மகாத்மா காந்தியின் மறைவின் போது....


மகாத்மா காந்தியின் மறைவின் போது....

சுதந்திரத்தை பெற்றுத்தந்த தேசப்பிதா காந்திஜி 1948 - ம் ஆண்டு ஜனவரி மாதம் 30 - ந்தேதி கோட்சே என்பவ னால் சுட்டுக்கொல்லப்பட்டார் , மகாத்மாவின் மரணச்செய் தியை தாங்க முடியாமல் இந்தியா கதறித்துடித்தது . உலக நாடுகள் கண்ணீர் வடித்தன . உலகத்தலைவர்களும் , இந்திய தலைவர்களும் மறைந்த மகாத் மாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள் . அப்போது உலகம் முழுக்க வெளியிடப் பட்ட செய்திகளின் விவரம் : 


ஆறாம் ஜார்ஜ் அரசரும் , அரசி யும் காந்தியடிகளின் பிரிவு கேட்டு நானும் அரசியும் வருந்தினோம் . பேரதிர்ச்சி அடைந்தோம் . இந்திய மக்களுக்கும் மனித சமுதாயத்திற்கும் ஏற்பட்டுள்ள  ஈடு செய்ய முடியாத பேரிழப்புக்காக எங்கள் உள்ளத்தில் வழியும் பரிவை இந்திய மக்களுக்கு உரித்தாக்குகிறோம் ' என்றார்கள் . 


வின்ஸ்டன் சர்ச்சில் , 

 இந்த பெரும் பாதக செயல் என்னை திடுக்கிடச் செய்தது ' என்றார் . 

மவுண்ட் பேட்டன் பிரபு , ( வானொலியில் ) , ' அமைதி வடிவான மனிதரும் , அண்ணலுமா கிய காந்திஜி பலாத்கார வெறியை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் அதற்காகவே வீர மரணம் எய்தியுள்ளார் . இந்த பலாத்கார நோய் தான் புதிதாக கிடைத்துள்ள இந்தியாவின் சுதந்திரத்தையே குலைத்து விட பார்க்கிறது . நம்மை எதிர்நோக்கி நிற்கும் நாட்டின் சீரமைப்பு வேலை என்னும் பெரும் பணியில் இந்தியா இறங்கும் முன்பு இந்த கொடிய புற்றுநோயை வேருடன் களைந்தாக வேண்டும் என்பதே காந்திஜியின் எண்ணமாக இருந்தது ' என்றார் . 



பெர்னார்ட்ஷா உள்ளம் நொந்து , அளவுக்கு மீறி நல்லவராக இருப்பது எவ்வளவு தீங்கானது என்பதை இது காட்டுகிறது ' என்றார் . 


பெருந்தலைவர் காமராஜர் , மகாத்மா மறைந்து விட்டார் . உலகமே அவருக்காக வருந்துகிறது . மகாத்மா எதற்காக நம்மிடம் இருந்து மறைந்தார் என்பதை கவனிக்க வேண்டும் . வேற்றுமை மனப்பான்மையை மக்களிடம் இருந்து ஒழிக்க அவர் பாடு பட்டார் . இறுதியில் அதற்காக உயிரை யும் தியாகம் செய்தார் . வேற்றுமையை போக்க நாம் இனி அவர் விட்டுச் சென்ற வேலையை தொடர்ந்து செய்யவேண்டும் . நம் மனதில் உள்ள வேற்றுமையை போக்கி நாட்டை பக்குவப்படுத்த வேண்டும் ' என்றார்.

நமது தேசத்தின் அடையாளம் , தேசியக்கொடி


நமது தேசத்தின் அடையாளம் , தேசியக்கொடி


ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட இந்திய மக்களுக்கு தேசியக்கொடி தேவைப்பட்டது . சுவாமி விவேகானந்தரின் சீடரான நிவேதிதா 1904 - ம் ஆண்டு ஒரு கொடியை உருவாக்கினார் . அது சிவப்பு வண்ணத்தில் சதுரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது . உள்ளே மஞ்சள் நிறமாகவும் , வஜ்ர மற்றும் வெள்ளை தாமரையை நடுவில் கொண்டும் அமைக்கப்பட்டது . அந்த கொடியில் வங்க மொழியில் வந்தே மாதரம் ' என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது . சிவப்பு நிறம் சுதந்திரப்போராட்டத்தையும் , மஞ்சள் நிறம் வெற்றியை யும் , வெள்ளை நிறம் தூய்மையையும் குறிப்பதாக விளக்கப்பட்டது . 


இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் , கொல்கத்தாவில் 1906 ஆகஸ்டு 7 - ந்தேதி நடைபெற்றவங்கப்பிரிவினை எதிர்ப்பு போராட்டத் தின்போது ஆரஞ்சு , மஞ்சள் , பச்சை போன்ற 3 வர்ண பாகங்களை கொண்ட மூவர்ணக்கொடி சிந்திரபிரசாத் போஸ் என்பவரால் ஏற்றப் பட்டது . அதிலும் ' வந்தே மாதரம் ' இடம்பெற்றிருந்தது . 


அடுத்து 1907 ஆகஸ்டு 22 - ந்தேதி பைக்கஜி காமா அம்மையார் வேறொரு மூவர்ணக்கொடியை ஜெர்மனி , ஸ்டுட்கார்ட் நகரில் ஏற்றி னார் . அந்த கொடியினை அவரோடு சேர்ந்து வீரசவர்க்கார் , சியாம்ஜி , கிருஷ்ணவர்மா ஆகியோர் வடிவமைத்து இருந்தனர் . 


1917 - ல் பாலகங்காதர திலகரும் , அன்னிபெசன்ட் அம்மை யாரும் தொடங்கிய சுயாட்சி போராட்டத்தில் 5 சிவப்பு நிற நீள் வடிவங்களும் , நான்கு பச்சை நிற நேர் கோல் நீள வடிவங்களும் கொண்டு , இந்துக்கள் புனிதமாக கருதும் சப்தரிஷி நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட கொடி ஒன்று பயன்படுத்தப்பட்டது . 


பின்பு இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவானதொரு கொடியை வடிவமைக்க ஆந்திராவை சேர்ந்த பிங்கலி வெங்கைய்யா என்பவர் முயற்சி மேற்கொண்டார் . சிவப்பு , பச்சை நிற கொடியை உருவாக்கி மகாத்மாவிடம் காண்பித்தார் . மகாத்மா அதில் முன்னேற்றத்தினை குறிக்கும் வகையில் சக்கரத்தினையும் , வெள்ளை நிறத்தையும் சேர்க்கும்படி வலியுறுத்தினார் . 


அதன்பிறகு வெள்ளை நிறமில்லாமல் சக்கரத்துடன் உள்ள சிவப்பு , பச்சை இரண்டு நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டது . அதனை காந்தி ஏற்காததினால் வெள்ளை , பச்சை , சிவப்பு என்ற வரிசையில் வர்ணங்கள் வைக்கப்பட்டு ஒவ்வொரு வர்ணத்திலும் சக்கரம் இருப் பதாக வடிவமைக்கப்பட்டது . இந்த கொடியும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை . அதை தொடர்ந்தும் பல்வேறு கட்டங்களாக பல்வேறு மாற்றங்கள் கொடியில் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டே இருந்தன . 


1947 ஜூன் 23 - ந் தேதி ராஜேந்திர பிரசாத் தலைமையில் மவுலானா அபுல்கலாம் ஆசாத் , கே.எம்.பணிக்கர் , சரோஜினி நாயுடு , சி.ராஜகோபாலச்சாரியார் , கே.எம்.முன்ஷி , பி.ஆர் . அம்பேத்கர் ஆகியோரை கொண்ட குழு தேசியக்கொடியை உருவாக்குவது பற்றி விவாதித்தது . தேசியக்கொடியில் எந்தவித மத சாயலும் இருக்கக் கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டது . 



இந்திய தேசியக்கொடி 1947 ஜூலை 22 - ந் தேதி தற்போதைய வடிவில் ஏற்கப்பட்டது . நீள் சதுர வடிவில் உள்ள இந்த கொடி மேலி ருந்து கீழாக சிவப்பு , வெள்ளை , பச்சை என்று 3 வண்ணங்களுடன் , நடுவில் நீல நிறத்தில் 24 ஆரங்களை கொண்ட அசோகச் சக்கரத்துடன் உள்ளது . 



1951 - ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத் துறையால் தேசியக் கொடிக்கு அளவு முறை நிர்ணயிக்கப்பட்டது . கொடியின் நீளம் , அகலம் , நிறங்களின் அளவு , அடர்த்தி , பரப்பளவு , துணியின் தரம் , கொடிக்கயிற்றின் தரம் ஆகியவற்றை அது விவரிக்கின்றது . 


கொடி தயாரிப்பதில் விதிகளை மீறுவது மிகப்பெரிய குற்ற மாகும் . தேசியக்கொடியை பயன்படுத்துவதற்கும் சட்ட விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன . 

மகாத்மாவின் வாழ்விலிருந்து...


மகாத்மாவின் வாழ்விலிருந்து...

ஆங்கிலேய பத்திரிகையாளர் ஒருவர் காந்திஜியை சந்தித்துப் பேசினார் . அவர் காந்தியடிகளை கிண்டல் செய்யும் எண்ணத்துடன் இந்திய மக்கள் ஏன் உங்களை பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டனர் . வேறு தலைவர்கள் அவர்களுக்கு கிடைக்க வில்லையா ? ' என்று கேட்டார் . காந்தியடிகள் சிரித்துக்கொண்டே ' உங்களை போன்றவர்களை சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத் திருக்கலாம் ' என்று பதிலடி கொடுத்தார் . 


காந்திஜி கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தை காண பன்னிரெண்டு வயது சிறுமி வந்திருந்தாள் . அவளுக்கு உட்கார இடம் கிடைக்காததால் மூன்று வயது நிரம்பிய தனது தம்பியை இடுப்பில் வைத்தபடி நின்று கொண்டு காந்திஜியின் பேச்சைக் கேட்டுக் கொண்டி ருந்தாள் . அதை கவனித்துவிட்ட  காந்திஜி , அந்த சிறுமியிடம் , ' ஏம்மா , இந்தக் கனத்தை தூக்கிக்கொண்டு பொறுமையாக உன்னால் நிற்க முடிகிறதா ? ' என்று கேட்டார் . அதற்கு அந்த சிறுமி , கனமா இது . இது என் தம்பி . எப்படி அவன் கனமாகத் தெரிவான் ' என்றாள் . சிறுமியின் பதிலில் இருந்த அன்பின் பெருமையை உணர்ந்து வியந்தார் , காந்திஜி

தியாகமே... சுதந்திரமானது...

"தியாகமே... சுதந்திரமானது..."

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய நாளிலே நான் ஒரு தாய் திரு அவையானது புனித அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழா கொண்டாடுகிறது. அதேசமயம் நமது நாடும் தனது 74வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது.

இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் இடம்பெறக்கூடிய மரியா ஏறக்குறைய ஆறு மாதங்கள் எலுசபெத்தோடு தங்கியிருந்த பின் வீடு திரும்பினார் என்ற இறுதி வார்த்தைகளின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நம் நாடு சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சுதந்திரம் என்பதன் உண்மையான அர்த்தத்தை உணராதவர்களாக தான் நம்மில் பலர் இருந்து கொண்டிருக்கிறோம்.

நம் நாட்டுக்கான சுதந்திரம் தானாக கிடைத்ததல்ல பல நல்ல மனிதர்களுடைய முயற்சியின் விளைவாக கிடைத்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த சுதந்திரத்தை நாம் அனுபவிப்பதற்கு காரணமாக இருந்த தியாகிகளை இன்றைய நாளில் நினைவு கூற நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய ஒவ்வொருவருமே அன்னை மரியாவை போல தனக்காக வாழாமல் அடுத்தவருக்காக வாழ்ந்தவர்கள்.

மரியா கருவுற்றிருந்த காலத்திலும் ஏற்கனவே எலிசபெத் என்ற பெண்மணி கருவுற்று இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து அந்த பெண்மணிக்கு உதவி செய்வதற்காக அந்த பெண்மணியை தேடிச்சென்று ஏறக்குறைய ஆறு மாதங்கள் தங்கியிருந்து அப்பெண்மணிக்கு உதவி செய்து அதன் பிறகு தன் வீடு திரும்பினார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்டோம் .

அன்னை மரியாவை போலவே நமது நாட்டிலும் பல தியாகிகள் இந்த சுதந்திரத்தை தாம் அனுபவிக்க விட்டாலும் பரவாயில்லை நமது வருங்கால சந்ததியினர் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சுதந்திரத்திற்காக போராடி உயிர் இழந்தார்கள்.

எலிசபெத்தின் வாழ்த்தொளியை கேட்டதும் அன்னை மரியா கடவுளை நோக்கி ஆண்டவரை என் உள்ளம் ஏற்றிப் போற்றிப் பெருமைப்படுகிறது... எனக்கூறி பாடியது போல நாமும் பலரின் தியாகத்தால் நமக்கு கிடைத்த இந்த சுதந்திரத்தை பெற காரணமாக இருந்து உயிர் நீத்த தியாகிகளை நன்றியோடு நினைவு கூர்ந்து அவர்கள் வழியாக நமக்கு கிடைத்த இந்த சுதந்திரத்தை பேணி பாதுகாத்து, நமக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்கும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம்.  

இன்று நாளுக்கு நாள் பல விதமான சூழ்ச்சிகளால் நமது சுதந்திரமானது அடியோடு பாறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அனுதினமும் சிலர் மக்கள் மனதில் நஞ்சை விதைத்து பலர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் மனதில் நோய் பயத்தை உருவாக்கி மனிதனை மனிதன் தொட மறுக்க  கூடிய சூழல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை தந்தது மக்கள் என்பதை மறந்து மக்களை மட்டமாக நினைக்கக்கூடிய நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சுதந்திர நாட்டில் சுதந்திரமாக பேசவும் எழுதவும் தடை விதிக்கக் கூடிய சூழல்கள் உருவாகின்றன.

 நாளுக்கு நாள் மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசினால் பாறிக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றன.

வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் பெற்றுக் கொண்ட நாம் என்று பலவிதமான சூழ்ச்சிகளால் பலவித சூழ்ச்சிகாரர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையிலிருந்து நாம் அனைவரும் மாற்றம் பெற சுதந்திரக்காற்றை சுதந்திரமாக சுவாசிக்க கூடிய நிலை நம் நாட்டில் உருவாக வேண்டும் என்பதே இன்றைய நாளில் நாம் அனைவரும் உணர வேண்டிய ஒன்றாகும்.

இது எளிதான காரியம் அல்ல இதற்கான முயற்சியில் ஈடுபடும் போது நாம் பலவிதமான இன்னல்களை சந்திக்க நேரலாம் பல நேரங்களில் உயிரையும் இழக்க நேரலாம்.

ஆனால் மனம் தளராது தன்னலத்தை நாடாது பொது நல நோக்கத்தோடு செயல்பட்ட நமது நாட்டுக்காகப் போராடிய தியாகிகளை போல நாமும் நமது வாழ்வை அர்ப்பணித்து, நமது வருங்கால சந்ததியினர் சுதந்திரத்தோடு சுதந்திர இந்தியாவில் வாழ்வதற்கான உரிமைகளை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பும், கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை இன்றைய நாளில் உணர்ந்துகொள்ள இன்றைய வாசகங்கள் அழைக்கின்றன.

தன்னலம் கருதாது பொதுநலம் நோக்கத்தோடு அடுத்தவருக்கு உதவி செய்து வாழ்ந்த அன்னை மரியாவை போல ... தனக்காக இல்லாவிட்டாலும் அடுத்தவரின் நலனுக்காக சுதந்திரத்திற்காக தன் உயிரை விட்ட தியாகிகளை போல ... நமது வாழ்வும் தியாகம் கொண்ட நல்ல வாழ்வாக அமைந்திட இறைவனது அருளை வேண்டி தியாகத்தின் உருவாக இம்மண்ணில் இருக்கக்கூடிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உண்மை சீடர்களாக அவரைப் பின்தொடர்ந்து செல்வோம்.

"தியாகமே... சுதந்திரமானது..."

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

"வாக்குறுதிகள் வாழ்வாக வேண்டும்..."


"வாக்குறுதிகள் வாழ்வாக வேண்டும்..."

இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய நாள் நற்செய்தி வாசகங்கள் அனைத்தும் நமது குடும்ப உறவுகளை பற்றி சிந்திக்க நம்மை அழைக்கின்றன.

இனி அவர்கள் இருவர் அல்ல ஒருவர் என்ற இயேசுவின் வார்த்தைகள் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுப்பதும், இருப்பதை பகிர்ந்து கொள்வதும் அனுதினமும் குடும்பங்களில் மட்டுமே நடக்கக்கூடிய தொடர் நிகழ்வாக உள்ளது.

இன்றைய நாளிலே திருமணத்தின்போது கணவனும் மனைவியும் இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என்று கூறிய வாக்குறுதிகளை  நினைவு கூற அழைக்கப்படுகிறோம்.

வாக்குறுதிகள் என்பது வெறும் வாய் வார்த்தைகள் மட்டுமல்ல அது வாழ்வாக படவேண்டியவை.

உயிருள்ளவரை இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என்று கூறிய வாக்குறுதிகளை வாழ்வாக்க கணவன்-மனைவி இருவருக்கும் சம உரிமையும், கடமையும், பொறுப்பும் உள்ளது. இதையே  இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

ஒருவர் மற்றவருக்காக தன்னையே அர்ப்பணித்து வாழக்கூடிய புனித உறவான குடும்ப உறவுக்காக இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு நன்றிகளை சமர்ப்பிப்போம்.

திருமணத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை ஏற்றவண்ணம் நமது வாழ்வு இருக்குமாயின் கடவுளுக்கு நன்றி கூறுவோம். ஒருவேளை வாக்குறுதிகளை மறந்து தடம்மாறி இருக்கக்கூடிய வாழ்க்கையில் நாம் இருப்போமாயின் நமது செயல்களை மாற்றி அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.

கணவன்-மனைவி பிரிந்து இருப்பதை கடவுள் விரும்புவதில்லை.கடவுள் விரும்பாத ஒன்றை நாமும் நமது வாழ்வில் செயல்படுத்தாமல் இருக்க வேண்டும். 

ஆண்டவர் இயேசுவை பின் செல்லக்கூடிய நாம் நமது குடும்பங்களில் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி கனவான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை தழைத்தோங்கிட குடும்பம் என்பது ஒரு குட்டி திருஅவை என்பதை மனதில் கொண்டவர்களாக, நமது குடும்பங்களை அமைத்துக்கொள்ள இறையருளை நாடி இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடராக அவரை பின்தொடர்ந்து செல்லும் குடும்பத்தினராக நமது குடும்ப செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள உறுதியேற்போம்.

"வாக்குறுதிகள் வாழ்வாக வேண்டும்..."


இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!    இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ...