வியாழன், 27 ஆகஸ்ட், 2020

திருமண திருப்பலிக்கான சிந்தனை- 2


"ஆண்டவர் படைத்த வெற்றியின் நாள் இதுவே!  
இன்று அக்களிப்போம் அகமகிழ்வோம்". 

மகிழ்ச்சி பொங்கும் மங்களகரமான இந்த நல்ல நாளிலே! மணமக்களை வாழ்த்தி அவர்களுக்காக ஜெபித்து இறையருளைப் பெற்றுத் தர வந்திருக்கும் குழருக்களையும், அருள் சகோதரிகளையும், உற்றார் உறவினர்களையும், நண்பர்களையும், நல்மனம் கொண்ட அனைவரையும் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க இயேசுவின் பெயரால் அன்புடன் வாழ்த்துகிறேன்.

திருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றிணையும் புனித நிகழ்வு. இப்புனித நிகழ்வு வழியாக புது உறவில் நுழையும் புதுமண தம்பதிகளான செல்வன்...... செல்வி .........இருவருக்கும் நம் அன்பின் வாழ்த்துக்களை மகிழ்வோடு தெரிவிப்போம்.

திருமணம் அது ஒரு உடன்படிக்கை. 

திருமணம் அது அன்பின் அருளடையாளம். 

திருமணம் அது இறை  உறவின் வெளிப்பாடு. 

அன்று 'யாவே' கடவுள் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்து கொண்டதுபோல இன்று உடன்படிக்கை வழியாக புதிய குடும்பத்தை ஏற்படுத்தவிருக்கும் இவர்கள் இருவருக்கும் இறை இயேசுவின் பெயரால் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

இறையருளால் வாழ்வோம் என்ற துணிச்சலுடன், பெரியோர் துணையுடனும் இணையவிருக்கும் இவர்கள் இருவரும் திருச்சபை வழியாய் இறைவன் தரும் திருமணத்தை ஏற்றுக்கொண்டு மகிழ்வோடு வாழ நாம் இவர்களுக்காக ஜெபிப்போம். 

இந்தப் புதிய உறவு மூலம் தங்கள் புது வாழ்க்கையை தொடங்கவிருக்கும் இவர்கள் இருவரையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும், அன்பின் சாட்சிகளாய் வாழ்ந்து திருகுடும்பமாய் இன்று மட்டுமல்ல என்றுமே திகழ்ந்திட  இவர்களுக்காக ஜெபிப்போம்.

இவர்கள் இருவரும் கொடியோடு இணைந்துள்ள கிளை போல ஒருவரையொருவர் முழுமையாக அன்பு செய்து, வாழ்வில் வருகின்ற ஏற்ற இறக்கங்களை அனுசரித்து, எல்லாவிதமான அருள் செல்வமும், பொருட் செல்வமும், குழந்தைச் செல்வமும், உடல் நலமும் பெற்று இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாய் வாழவும், இயேசுவின் திரு குடும்பம் போல் என்றும் திகழவும்....

"இலக்குகளை அன்பால் கோர்த்து
 வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சமாய் 
பலரும் போற்றும் வகையில் எடுத்துக்காட்டாய் 
கருத்தொருமித்த தம்பதியினராய்
சுற்றமும் வியக்கும் வாழ்வை"

இவர்கள் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் வாழவும், வாழ்த்தி இவர்களுக்காக  இணைந்து தொடர்ந்து ஜெபிப்போம்.

ஆண்டவர் தம் திருத்தலத்திலிருந்து உங்களுக்கு ஆசி வழங்குவாராக.... உங்கள் கருத்துக்களை எல்லாம் நிறைவேற்றுவார் என்று ஆசி கூறி இவர்களுக்காக நாம் அனைவரும் இணைந்து ஜெபித்து இறையருளை தொடர்ந்து வழங்கிட இத்திருப்பலியில் பக்தியோடு இணைந்து மன்றாடுவோம் ...

"இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக..." 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...