திருவருகைக்கால மெழுகுவத்திகளை ஏற்றும் வழிமுறை
இறை இயேசுவில் பிரியமானவர்களே ! இன்று திருவருகை காலத்திற்குள் காலடி வைக்கிறோம் . இக்காலம் , இறை மகனின் வருகைக்காக நம்மை தயாரிக்கின்ற காலம் . விழித்திருந்து நம் மீட்பரை சந்திக்க நம்மை அழைக்கின்ற காலம் . இருளின் பிடியில் இருந்தும் , அடிமையின் பிடியில் இருந்தும் , அழிவில் இருந்தும் , துன்பத்தல் இருந்தும் காத்துக்கொள்ள மானிட மகனை சந்திப்பதற்காக அவரை நம் உள்ளத்தில் ஏற்று அவரையே அணிந்து கொள்ள அழைக்கும் அன்பின் காலம் . இஸ்ராயேல் மக்கள் மெசியாவின் வருகைக்காக காத்திருந்தது போல நாமும் காத்திருப்போம் . விளக்குகளுடன் அன்று இயேசு மொழிந்த பத்து தோழியர் உவமையில் அக்கன்னியர் காத்திருந்தனர் . அவர்களை போல நாமும் விளக்குகள் ஏற்றி மணமகனின் வருகைக்காக நம்மையே தயார் செய்வோம் .
முதல் வாரம் :
எதிர்நோக்கு இது தான் எதிர்நோக்கின் மெழுகுவத்தி . இது மீட்பரின் வருகைக்காக காத்திருந்த நம் முதுபெரும் தந்தையர்களான - ஆபிரகாம் , ஈசாக்கு , யாக்கோபு ஆகியோரை குறிக்கின்றது . " கவணமாய் இருங்கள் . விழிப்பாய் இருங்கள் ஏனெனில் அந்நேரம் எப்போது வருமென உங்களுக்கு தெரியாது " - மாற்கு 13:33 , ஆண்டவர் நம்மை விழிப்புடன் காத்திருக்கும்படி கேட்கின்றார் . ஆனால் நாமோ உலக கவலைகளிலும் , உலக கவர்ச்சிகளிலும் நம் மனங்களை செலுத்தி வாழ்ந்து வருகிறோம் . இனியாவது " ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கின்றேன் ' என்று கூறி அவரின் வருகைக்காக நம்மையே ஆயத்தப்படுத்துவோம் .
செபம் : இம்மானுவேலே இயேசு கிறிஸ்துவே ! எல்லா நாடுகளும் எதிர்பார்க்கும் ஆண்டவரே ! அனைத்து மக்களின் மீட்பரே வந்து எங்களிடையே தங்கும் .
இரண்டாம் வாரம் :
அமைதி இதுதான் அமைதியின் மெழுகுவத்தி . மீட்பரின் வருகை , வரும் காலம் , அவரின் இயல்புகள் போன்ற அனைத்து செய்திகளையும் தந்த இறைவாக்கினர்களான எசாயா , எரேமியா , தானியேல் போன்றோரை குறிக்கின்றது . " மனம் மாறுங்கள் , ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது " - மத்தேயு 3 : 1 இறைவாக்கினர்கள் அனைவரும் மீட்பரின் வருகைக்காக நாம் எவ்வகை தயாரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்துள்ளனர் . நாம் அனைத்தையும் அறிந்திருந்தும் நம் வலுவின்மையாலும் , விசுவாச குறைவாலும் மீண்டும் மீண்டும் ஆண்டவரை விட்டு விலகி செல்கிறோம் . இனியாவது அவரில் நம்பிக்கை கொண்டு அவரை நாடி தேடுவோம் .
செபம் : ஓ இயேசு கிறிஸ்துவே அனைத்து உலகங்களின் அரசரே ! எல்லா இதயங்களின் மகிழ்ச்சியே ! விரைவில் வந்து உம் மக்களை மீட்டருளும் .
மூன்றாம் வாரம் :
மகிழ்ச்சி இது தான் மகிழ்ச்சியின் மெழுகுவத்தி . இது மீட்பரின் முன்னோடியான புனித திருமுழுக்கு யோவானை குறிக்கின்றது . ' பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது . ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாகுங்கள் ; அவருக்காக பாதையை செம்மையாக்குங்கள் , பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பபடும் ; மலை , குன்று யாவும் தாழ்த்தப்படும் ; கோணலானவை நேராக்கப்படும் ; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும் . மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பை காண்பர் " - லூக்கா : 3 : 4-5 நாம் மீட்பின் காலத்தை நெறுங்கிவிட்டோம் . திருமகன் கிறிஸ்துவை அறச்செயல்கள் நிறைந்த வாழ்வினால் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றோமா ? அவர் வரும்போது அவரது வலப்பக்கம் நிற்கவும் , விண்ணரசை அடையவும் ஏற்புடையவர்களாவோம் .
செபம் : உலகத்தின் ஒளியே உண்மையின் சுடரே ! இயேசு கிறிஸ்துவே ! வந்து எம்மை தேற்றும் .
நான்காம் வாரம் :
அன்பு இது அன்பின் மெழுகுவர்த்தி . அன்னை மரியாவையும் அவர் கணவர் புனித யோசேப்பையும் குறிக்கின்றது . அவர் பெரியவராய் இருப்பார் . உன்னத கடவுளின் மகன் எனப்படுவா -லூக்கா 1 1 : 32-33 மீட்பரை சந்திக்க அன்னை மரியாவும் புனித யோசேப்பும் எவ்வாறு ஆயத்தமாய் இருந்தனரோ அவர்களைப்போல் நம்மை மீட்க வந்த பாலகனை வரவேற்க நம்மை தயார்படுத்த இதுவே வாய்ப்பு . அன்னையின் எதிர்நோக்கையும் , புனித யோசேப்பின் நேர்மைத்தனத்தையும் கொண்டு வாழ முயல்வோம் .
செபம் : உலகை கடந்த ஞானமே ! உண்மை கடவுளின் வார்த்தையே ! இயேசுகிறிஸ்துவே ! வந்து மீட்பின் பாதையை எமக்கு காட்டும்
திருவருகைக் காலத்தின் ஒவ்வொரு வரத்தையும் அர்த்தமுள்ள விதத்தில்ஆண்டவரின் வருகைக்காக நமது உள்ளத்தை தயாரிக்க தாங்கள் கொடுத்த கருத்துக்கள் மிகவும் உன்னதமானவை. தங்களின் மேலான கருத்துக்களுக்கு எங்களது உளம் கனிந்த நன்றிகள்!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பதிலளிநீக்கு