திங்கள், 15 டிசம்பர், 2025
திங்கள், 1 டிசம்பர், 2025
திங்கள், 20 அக்டோபர், 2025
ஒருவரால் அழிவு - ஒருவரால் வாழ்வு (21.10.2025)
அன்புள்ள சகோதரர் சகோதரிகளே,
இன்றைய வாசகங்களில் திருத்தூதர் பவுலும், நம் ஆண்டவராகிய இயேசுவும், ஒரே மையக்கருத்தை நமக்குக் கூறுகின்றனர் — ஒருவர் வழியாக வந்த அழிவு, மற்றொருவர் வழியாக வந்த வாழ்வு.
ஒருவரின் குற்றம் – அனைவருக்கும் சாவு
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதும்போது, ஆதாமின் கீழ்ப்படியாமையின் விளைவாக பாவமும் சாவும் மனித இனத்தில் புகுந்ததாக நினைவுபடுத்துகிறார்.
ஒரு மனிதனின் தவறால் உலகமே அழிந்தது. அதே போல, ஒரு மனிதனின் (இயேசுவின்) கீழ்ப்படிதலால் உலகமே மீட்கப்பட்டது.
இவரே “புதிய ஆதாம்” என்ற நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையின் மையத்தை இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது.
பாவம் நம்மை கடவுளிடமிருந்து பிரித்தது. ஆனால் இயேசுவின் சிலுவை நம்மை மீண்டும் கடவுளோடு இணைத்தது.
பாவம் நம் வாழ்வில் இருளை கொண்டு வந்தது; அருள் அந்த இருளை வென்றது.
“பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது” — இதுவே நம் நம்பிக்கையின் அடித்தளம்.
விழிப்புடன் இருப்பது – நம் கடமை
“உங்கள் இடையை வரிந்துகட்டிக்கொள்ளுங்கள்; விளக்குகள் எரிந்துகொண்டிருக்கட்டும்.”
அதாவது, விழிப்புணர்வுடன் வாழுங்கள் — கடவுள் எப்போது வருவார் என்று தெரியாது.
அவர் திரும்பி வரும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள் என்று ஆண்டவர் கூறுகிறார்.
இது வெறும் உடல் விழிப்பல்ல, மன விழிப்பும், ஆன்ம விழிப்பும் ஆகும்.
நம் வாழ்க்கையில் பாவம், சோம்பல், கவனக்குறைவு ஆகியவை நம்மை விழிப்பிலிருந்து தள்ளி வைக்கும்.
ஒரு பணியாளர் எப்போதும் தன் தலைவரின் வருகைக்காக தயாராய் இருப்பதைப் போல,
ஒரு கிறிஸ்துவர் எப்போதும் இயேசுவின் வருகைக்காக தயாராய் இருக்க வேண்டும்.
விழிப்பு = விடுதலைக்கான வழி
ஆதாம் விழிப்பின்றி சோதனையில் விழுந்தார்.
ஆனால் இயேசு கெத்சிமானியில் விழிப்புடன் ஜெபித்தார் .
ஒருவர் வழியாக பாவம் நுழைந்தது; மற்றொருவர் வழியாக அருள் நுழைந்தது.
எனவே நாம்
அருளின் வாழ்க்கையில் விழிப்புடன் இருங்க்க அழைக்கப்படுகின்றோம் ....
பாவத்தின் தூக்கத்தில் அல்ல, ஜெபத்தின் விழிப்பில் நாம் இருக்க வேண்டும் .
வாழ்க்கையின் சோதனைகளிலும் கடவுளின் திட்டம் நிறைவேற நம்பிக்கையுடன் நாம் பயணிக்க வேண்டும் .
எனவே அன்பானவர்களே,
கிறிஸ்துவின் கீழ்ப்படிதலால் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களானோம்.
அவரின் அருள் நம்மை விடுவித்தது.
இப்போது நம் செய்ய வேண்டியது விழிப்பாகவும், நம்பிக்கையுடனும், அருளுடனும் வாழ்வது மட்டுமே ....
அந்த விழிப்போடு அனுதினமும் பயணிக்க இறையருள் வேண்டி இணைந்து ஜெபிப்போம் ...
அன்புடன்
அருள் பணி. ஜே. சகாயராஜ்
திருச்சி மறை மாவட்டம்
புதன், 8 அக்டோபர், 2025
நம்பிக்கையோடும் தொடர் ஜெபத்தோடும் இந்த நாள் அமையட்டும் ...(9.10.2025)
“கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்”
அன்பான சகோதர சகோதரிகளே,
இன்றைய இறைவார்த்தையில் இரண்டு செய்திகளை இறைவன் நமக்குத் தருகிறார்:
- இறைவனுக்கு அஞ்சித் நடக்கும் நம்பிக்கையாளர் ஒருபோதும் மறக்கப்படமாட்டார் (மலாக்கி)
- விண்ணகத் தந்தை நமக்குத் தூய ஆவியைக் கொடுப்பதில் தாமதமோ, குறைவோ இல்லை (லூக்கா). இந்த இரு சிந்தனைகளையும் இதயத்தில் இருத்தி சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்...
கடவுளுக்கு ஊழியம் வீண் அல்ல
மலாக்கி இறைவாக்கினரின் காலத்தில் மக்கள் மனம் தளர்ந்து, “கடவுளுக்குச் சேவை செய்வது வீண் என எண்ணினார்கள். ஆனால் தீயோர் வளமுடன் வாழ்கிறார்கள்” என்று முறையிட்டனர். ஆனால் இறைவன் சொல்கிறார்:
👉 “என் பெயருக்கு அஞ்சிப் பணிவிடை செய்பவர்கள் எனக்கு விலை உயர்ந்த சொத்து.” என்றும்
👉 நீதியின் கதிரவன் எழுந்து அவர்களுக்கு நலம் தருவான்.என்றும் குறிப்பிடுகிறார் .
நாம் வாழ்க்கையில் பல நேரங்களில் கேட்பது கிடைக்கவில்லை என்று தோன்றலாம். ஆனால் இறைவன் அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிறார். மனிதர்களின் பார்வையில் நம்முடைய நல்ல செயல்கள் மறக்கப்பட்டாலும், இறைவனின் நினைவு நூலில் அது எழுதப்பட்டிருக்கிறது. என்பதை இதயத்தில் நிறுத்தி நாளும் இறைவனுக்கு உகந்தவர்களாக வாழ நாம் அழைக்கப்படுகிறோம் .
விடாமுயற்சியுடன் கேளுங்கள்
நற்செய்தியில் இயேசு கூறும் உவமை மிக எளிமையானது:
ஒரு நண்பர் நள்ளிரவில் கதவைத் தட்டுகிறான். நண்பன் என்பதற்காக இல்லாவிட்டாலும், அவன் விடாமுயற்சியின் காரணமாக அவன் தேவையை நிறைவேற்றப்படுகிறது .
👉 அதேபோல் நாம் தொடர்ந்து ஜெபித்தால் இறைவன் நிச்சயம் நம் ஜெபத்தைக் கேட்கிறார் என்ற உறுதிபாடு நம் உள்ளத்தில் உதயமாக வேண்டும்.
👉 “கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் – நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் – உங்களுக்குத் திறக்கப்படும்.” என்ற வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக நாம் நமது செயல்களை அமைத்துக் கொள்ள வேண்டும் .
இயேசு இன்றைய இறை வார்த்தை வழியாக எளிய எடுத்துக்காட்டைக் கூறுகிறார்:
- பிள்ளை மீனைக் கேட்டால் தந்தை பாம்பைக் கொடுப்பாரா?
- முட்டையைக் கேட்டால் தேளைக் கொடுப்பாரா?
👉 தீயோர்களாகிய நாம் கூட பிள்ளைகளுக்கு நல்லதை அளிக்கிறோம் என்றால், நம்முடைய விண்ணகத் தந்தை எத்துணை நன்மைகளைத் தருவார்!
👉 அவர் தருகின்ற விலை உயர்ந்த பரிசு – தூய ஆவி.
எனவே அன்பானவர்களே,
இன்று இறைவார்த்தை நமக்குச் சொல்லும் மூன்று உண்மைகள்:
- கடவுளுக்கு ஊழியம் செய்வது ஒருபோதும் வீண் வீண் போகாது.
- விடாமுயற்சியுடன் ஜெபித்தால் இறைவன் நிச்சயம் நம் வேண்டுதலை கேட்பார்.
- நமக்கு நன்மை செய்வதில் தாமதமோ, தவறோ செய்யாத அன்புத் தந்தை நம் விண்ணகத் தந்தை அவரைப் போல நாமும் இயன்ற நன்மைகளை செய்து வாழ்வோம்
ஆகையால் நாம் மனம் தளராமல், நம்பிக்கையோடும் தொடர் ஜெபத்தோடும் இறைவனின் அருளை இன்றைய நாளில் வேண்டுவோம் ...
செவ்வாய், 7 அக்டோபர், 2025
மன்னிப்பில் நிலைத்திருப்போம்...(8.10.2025)
அன்பான சகோதர சகோதரிகளே,
இன்றைய வாசகங்களில் கடவுள் இரக்கம் மிகுந்தவர்; அவர் மன்னிப்பு அளிக்க விரும்புபவர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
யோனாவின் மனநிலை
யோனா நினிவே மக்களுக்கு கடவுளின் தண்டனை அறிவிக்க அனுப்பப்பட்டார். ஆனால், மக்கள் மனந்திரும்பியதால் கடவுள் அவர்களை மன்னித்தார். இதைக் கண்டு யோனா சினம் கொண்டார்.
- “நான் சொன்னதே இதுதான்! நீர் இரக்கமுள்ள கடவுள். அழிக்க நினைப்பீர்; பிறகு மனம் மாறுவீர்” என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
- யோனா மனித பார்வையில் நீதி வேண்டுகிறார்; ஆனால் கடவுள் தமது அன்பு, கருணை, பொறுமை என்பதை வெளிப்படுத்துகிறார்.
ஆமணக்கு செடியின் பாடம்
ஆண்டவர் யோனாவுக்கு ஒரு ஆமணக்கு செடியை வளரச் செய்து நிழல் தந்தார். அதனால் யோனா மகிழ்ந்தார். மறுநாள் அந்தச் செடி காய்ந்து போனபோது, யோனா உயிரே போய்விடும் அளவுக்கு சினம் கொண்டார்.
- அந்தச் செடியை வளர்க்க அவர் எதுவும் செய்யவில்லை; ஆனால் அதை இழந்ததால் வருந்தினார்.
- கடவுள் அதைக் கொண்டு யோனாவுக்கு பாடம் கற்றுக்கொடுத்தார்:
- “செடிக்காக நீ இவ்வளவு இரக்கப்படுகிறாயானால், என் கைகளால் படைக்கப்பட்ட, தவறுதலாக வாழும் ஆயிரக்கணக்கான மனிதர்களையும் கால்நடைகளையும் நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?”
இதில் வெளிப்படும் உண்மை: கடவுளின் இரக்கம் எல்லையற்றது.
இன்றைய நற்செய்தியில் சீடர்கள், “ஆண்டவரே, எங்களுக்கும் ஜெபிக்க கற்றுக்கொடும்” என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு, விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே என்ற ஜெபத்தை கொடுத்தார்.
இந்த ஜெபம் முழுவதும் ஒரு மைய சிந்தனையை வெளிப்படுத்துகிறது: அது கடவுள் நம் தந்தை; அவர் இரக்கம் மிகுந்தவர். இதனை மனதில் நிறுத்தி நமது வாழ்வுக்கான பாடங்களை இன்றைய இறை வார்த்தை வழியாக பெற்றுக்கொள்வோம் ...
- யோனாவைப் போல நாமும் பல நேரங்களில் நீதியைக் காட்டிலும் பழி வாங்குதல் என்ற மனநிலையோடு இருப்போம்.
- ஆனால் ஆண்டவர் நமக்கு கற்றுக்கொடுக்கிறார்: “நீங்கள் மன்னிப்பது போல, நான் உன்னை மன்னிப்பேன்”. என்று தன் ஜெபத்தின் வழியாக நமக்கு கற்பிக்கிறார்.
- கிறிஸ்தவ வாழ்வு என்பது பழிவாங்கும் மனதை விடுத்து, மன்னிப்பில் நிலைத்திருப்பது.
அன்பானவர்களே,
- கடவுள் நினிவே மக்களை இரக்கத்துடன் காப்பாற்றினார்.
- அதேபோல் இன்று நம்மையும் இரக்கத்துடன் நடத்துகிறார்.
- நாமும் பிறரை மன்னித்து, கருணையுடன் நடந்துகொள்ளும்போது, கடவுளின் உண்மையான பிள்ளைகளாக வாழ்கிறோம்.
இறைவனின் வார்த்தைகளின் படி வாழ இன்றைய நாளில் இதயத்தில் உறுதி ஏற்போம் இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்...
திங்கள், 6 அக்டோபர், 2025
ஜெபமாலை – மரியாளோடு இணைந்து இயேசுவின் வாழ்வை தியானிக்கும் வழி...(7.10.2025)
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே,
இன்று நாம் தூய ஜெபமாலை அன்னையின் விழாவை கொண்டாடிட திருஅவை நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த விழா, ஜெபத்தின் வல்லமையையும், அன்னை மரியாளின் துணையையும் நமக்கு நினைவூட்டுகிறது.
- திருத்தூதர் பணிகள் 1:12-14 இல், இயேசு விண்ணேற்றம் அடைந்தபின், திருத்தூதர்கள் தாய் மரியாளோடும், பெண்களோடும், இயேசுவின் உறவினரோடும் சேர்ந்து ஒரே மனத்தோடு ஜெபித்தார்கள் என்று வாசிக்கிறோம். இதனால் தொடக்க கால திருஅவை ஜெபத்தின் மேல், மரியாவின் துணையின் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தது தெரியவருகிறது.
- லூக்கா 1:26-38 இல், மரியாவிற்கு வானதூதர் கபிரியேல் அளித்த அறிவிப்பில், “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று மரியா முழுமையாக இறைவனுக்குச் அர்ப்பணிக்கின்றார்.
இந்த இரண்டு வாசகங்களும் நமக்கு தரும் பாடம்: மரியாள் எப்போதும் ஜெபத்தில் இறைவனோடு இணைந்து வாழ்ந்தார்; அதனால் அவர் ஜெபத்தின் அன்னையாகத் திகழ்கிறார்.
ஜெபமாலை – மரியாளோடு இணைந்து இயேசுவின் வாழ்வை தியானிக்கும் வழி
ஜெபமாலை என்பது வெறும் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்வது அல்ல. அது:
- இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை, மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை மரியாளின் கண்களால் தியானிப்பதாகும்.
- நம் மனமும், ஐம்புலன்களும் சேர்ந்து இறைவனில் கவனம் செலுத்தும் ஒரு ஆழ்ந்த ஜெபமுறையே ஜெபமாலை ஜெபிப்பது .
அதனால்தான் வீரமாமுனிவர் ஜெபமாலையை “மானிடர்களை மீட்க வானவர் விடுகின்ற வடம்” என்று அழைக்கிறார்.
ஜெபமாலை குறித்து வரலாறு நமக்கு தரும் சாட்சி
1571 ஆம் ஆண்டு லெபந்தோ யுத்தத்தில், கிறிஸ்தவர்கள் ஜெபமாலை கொண்டு அன்னை மரியாளிடம் வேண்டியபோது, அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
அதேபோல், 1917 ஆம் ஆண்டு பாத்திமாவில், மரியா மூன்று சிறுமிகளுக்கு தோன்றி, “ஜெபமாலை ஜெபியுங்கள், அதுவே உலகிற்கு அமைதி தரும் வழி” என்று கூறினார்.
இதனால், ஜெபமாலை என்பது வரலாறே சாட்சி சொல்லும் ஒரு வல்லமைமிக்க ஜெபமுறை என்று நாம் உணர்ந்து கொள்ள இன்று அழைக்கப்படுகிறோம்.
எனவே அன்புக்கு உரியவர்களே ,
- நாம் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும் ஜெபமாலை சொல்லுகிறோமா?
- எதிர்பாராத சிரமங்களில், நோய்களில், சோதனைகளில், அன்னை மரியாவின் துணையோடு நம் ஜெபிக்கின்றோமா? இன்று நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம் ...
ஜெபமாலை ஜெபிப்பவர்களுக்கு அன்னை மரியா அளித்த வாக்குறுதிகளை இன்று நாம் நினைவு கூறுவது சாலச் சிறந்தது:
- ஜெபமாலை சொல்வோர் என் மகனின் சகோதர சகோதரிகளாக இருப்பர்...
- அவர்களுக்கு பாதுகாப்பும், அருளும் கிடைக்கும்...
- அவர்களின் வாழ்வு தூய்மையிலும் நற்செயல்களிலும் வளர்ச்சி பெறும்...
- இறக்கும் வேளையில் அவர்கள் விண்ணக மகிமை அடைவார்கள்....
எனவே அன்பான சகோதர சகோதரிகளே,
இன்று ஜெபமாலை அன்னையின் விழாவில் இனிவரும் நாட்களில்
“ஜெபமாலை சொல்வோம் – வெற்றி பெறுவோம்.” என உறுதி ஏற்போம் ...
நம் குடும்பத்தில் தினமும் ஜெபமாலை ஜெபிக்கும் ஒரு பழக்கத்தை உருவாக்குவோம். அன்னை மரியாளின் துணையோடு இயேசுவின் வாழ்வை தியானித்து, அவரது மீட்பை பெறுவோம்.
சனி, 4 அக்டோபர், 2025
கிறிஸ்தவ வாழ்வின் அடையாளம் எது தெரியுமா...? (06.10.2025)
“அஞ்சாமை, கீழ்ப்படிதல், அன்பு – நம் கிறிஸ்தவ வாழ்வின் அடையாளம்”
சகோதர சகோதரிகளே,
இன்றைய வாசகங்கள் நம் வாழ்வின் மூன்று முக்கிய உண்மைகளை நினைவூட்டுகின்றன:
- கடவுளிடமிருந்து யாரும் தப்பிச் செல்ல முடியாது உதாரணம் யோனா.
- உண்மையான அடுத்திருப்பவர் இரக்கத்தோடும் அன்போடும் வாழ்பவர் உதாரணம் நல்ல சமாரியர்.
- உண்மைக்காக அஞ்சாமல் வாழ வேண்டும் உதாரணம் இன்றைய புனித புருனோவின் வாழ்க்கை.
1. யோனாவின் ஓட்டமும் கடவுளின் திட்டமும் (யோனா 1:1-17)
யோனாவிடம் கடவுள் நினிவே மக்களை நோக்கி அறிவிக்கச் சொன்னார். ஆனால் யோனா தப்பிச் செல்ல நினைத்தார்.
- கடவுளிடமிருந்து ஓட முடியாது; அவர் எங்கு சென்றாலும் நம்முடன் இருக்கிறார் என்பதை யோனாவின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது .
- யோனாவின் கீழ்ப்படியாமையால் அவர் மட்டுமல்ல, அவருடன் கப்பலில் இருந்த மக்கள் கூட ஆபத்தில் சிக்கினர்கள்.
- ஆனால் யோனாவை கடவுள் கைவிடவில்லை; மீன் வயிற்றுக்குள் மூன்று நாள் வைத்துப் பின் மீண்டும் பணி செய்யச் அனுப்பி வைத்தார்.
இந்த முதல் வாசகம் நமக்குத் தரும் வாழ்வுக்கான பாடம்: கடவுள் நம்மை அழைக்கும் பணியில் இருந்து நாம் விலகிட விரும்பினாலும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்கு அவர் நமக்கு உறுதுணையாக இருப்பார் என்பதை உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்...
2. நல்ல சமாரியர் – உண்மையான அடுத்திருப்பவர் (லூக்கா 10:25-37)
- திருச்சட்ட அறிஞர் “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று கேட்கிறார்.
- இயேசு நல்ல சமாரியரின் உவமையால், உண்மையான அடுத்திருப்பவர் பிறருக்கு இரக்கம் காட்டுபவர் என்பதை வெளிப்படுத்தினார்.
- குருவும், லேவியரும் தேவையில் இருப்பவரை பார்த்தும் புறந்தள்ளினர்; ஆனால் அந்நியராக கருதப்பட்ட சமாரியர் உயிரோடும் மனமோடும் உதவினார்.
இந்த உவமையை நமக்குத் தரும் வாழ்வுக்கான பாடம்: அடுத்திருப்பவர் என்பது என் இரத்த உறவினர் மட்டுமல்ல; தேவையில் இருப்பவர் யாராயினும் அவர்கள் நமக்கு அடுத்திருப்பவர். கிறிஸ்தவ அன்பு எல்லைக்குட்பட்டதல்ல எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்வோம்...
3. தூய புருனோவின் சாட்சியம்
- அதிகாரம், எதிர்ப்பு, அழுத்தம் ஆகியவற்றுக்கு அஞ்சாமல், திரு அவைக்காக நின்றவர்.
- உண்மையை உரக்கச் சொன்ன துணிவாளர்.
- துறவற சபையை நிறுவி, இறை வார்த்தையை பாதுகாத்து, வருங்கால சந்ததிக்காக ஒளி விட்டுச் சென்றார்.
இவரது வாழ்வு நமக்குத் தரும் வாழ்க்கை பாடம்: கிறிஸ்துவுக்காக அஞ்சாமல், துணிவோடும் நேர்மையோடும் வாழ்ந்திட வேண்டும்.
இன்றைய இறை வார்த்தைகள் நம் வாழ்வுக்குத் தரும் அழைப்பு
- யோனா போல் ஓடாமல், கடவுளின் திட்டத்திற்கு கீழ்ப்படிவோம்.
- நல்ல சமாரியர் போல், மதம், இனம், மொழி என பாகுபாடு பார்க்காமல் அன்போடும் இரக்கத்தோடும் வாழ்வோம்.
- புனித புருனோ போல், உண்மைக்காக அஞ்சாமல் துணிவோடு நிற்போம்.
நம்பிக்கையால் வாழ்வோம்...(5.10.2025)
“நம்பிக்கையால் வாழ்வோம்”
அன்பான சகோதர சகோதரிகளே,
இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம்பிக்கை என்ற ஒரே செய்தியை நமக்கு வழங்குகின்றன:
👉 நம்முடைய நம்பிக்கைதான் நம்மை உயிர்ப்பிக்கிறது,
👉 நம்முடைய நம்பிக்கைதான் நம்மை வல்லவர்களாக ஆக்குகிறது,
👉 நம்முடைய நம்பிக்கைதான் கடவுளுக்கு உண்மையான பணியாளர்களாக வாழ வழிநடத்துகிறது.
1. அபக்கூக்கு தீர்க்கதரிசி – நம்பிக்கையினால் வாழ்வோர்
முதல் வாசகத்தில் (அபக் 1:2-3; 2:2-4) தீர்க்கதரிசி கேட்கிறார்:
“ஆண்டவரே! எத்தனை நாள்கள் அழுகிறோம், கூப்பிடுகிறோம்? ஏன் நீர் அமைதியாக இருக்கிறீர்?” என்கிறார்.
👉 இது நம் வாழ்க்கையிலும் உண்மைதான்.
நாம் பல நேரங்களில் — நோய், பிரச்சனை, அநியாயம், வன்முறை, வேலைவாய்ப்பு குறைவு, குடும்ப சிக்கல் — என்று பல சோதனைகளில், “ஏன் ஆண்டவர் மௌனமாக இருக்கிறார்?” என்று கேட்கிறோம்.
இக்கேள்விக்கு இறைவன் தரும் பதில்:
“நேர்மையுடையவர் தம் நம்பிக்கையினால் வாழ்வார்.”
இதன் அர்த்தம் — பிரச்சனைகள் இருந்தாலும், சிரமங்கள் இருந்தாலும், இறுதி வெற்றி நம்பிக்கையுடையவருக்கே என்பதாகும் ...
2. திருத்தூதர் பவுல் – துணிவின் ஆவி
இரண்டாம் வாசகத்தில் (2 திமொ 1:6-14), பவுல் திமொத்தேயுவை ஊக்குவிக்கிறார்:
“நமக்குக் கொடுக்கப்பட்டது கோழைத்தனத்தின் ஆவி அல்ல; வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட ஆவியே.”
👉 கிறிஸ்தவர்களாக வாழ்வது எளிதல்ல. பவுல் சொல்வது போல, சான்று சொல்லும் போது துன்பம் வரும். நம்முடைய நம்பிக்கைக்காக சில சமயம் பழிச்சொல், துன்பம், ஒதுக்கல் கூட வரலாம். ஆனால் அனைத்திற்கும் மத்தியிலும் ஆண்டவருக்காகச் சான்று சொல்ல நம்மை பவுல் தம் வார்த்தைகளின் வழியாக அழைக்கிறார்.
இன்று நாம் கிறிஸ்தவர்களாகத் திறந்த மனதோடு நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோமா?
அல்லது உலகம் சிரிக்குமோ என்று வெட்கப்படுகிறோமா? கேள்வியை உங்கள் முன்வைக்கிறேன். அவரவர் மனதின் அடிப்படையில் நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் ...
3. கடுகளவு நம்பிக்கை
லூக்கா 17:5-10-ல் திருத்தூதர்கள் கேட்கிறார்கள்:
“ஆண்டவரே, எங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள்.”
👉 இயேசு கூறுகிறார்: “கடுகளவு நம்பிக்கை இருந்தால் போதும்.”
அந்தச் சிறிய நம்பிக்கையும் மலையை அசைக்கும் வல்லமை பெறுகிறது.
👉 அதே சமயம் இயேசு நினைவுறுத்துகிறார்:
நம்பிக்கையில் வல்லவர்களாயினும், நாம் அடிமைத்தனத்தோடு கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும்.
“நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையை செய்தோம்” எனச் சொல்லும் பணிவு வேண்டும். நம்பிக்கை இருக்கிறது என்பதால் கடவுள் என் தலையை செழிப்பதில் அலட்சியம் இருக்கலாகாது ...இரக்கத்தின் கடவுள் தான் எனவே அவர் நம்மை பெரிதாக கண்டுகொள்ள மாட்டார் என்ற மனநிலையோடு நாம் பயணித்தாலும் கூடாது ...என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது ...
இன்றைய இறைவா வார்த்தை வாழ்வுக்குத் தரும் வாழ்க்கை பாடம்
- நம்பிக்கை = இருள் சூழ்ந்தாலும், ஒளியை நம்புவதை குறிக்கும்.
- நம்பிக்கை = கடவுள் மௌனமாக இருந்தாலும், அவர் செயலில் இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்வதை குறிக்கும்.
- நம்பிக்கை = நம்முடைய சிறிய ‘கடுகு’ அளவு நம்பிக்கையையும் கடவுளிடம் வைத்தால், அவர் அதிசயங்களைச் செய்வார் என்பதை இதயத்தில் இருத்த அழைப்பு விடுகிறது.
அன்பானவர்களே,
- அபக்கூக்கு தீர்க்கதரிசி சொல்வது போல, நம்பிக்கையினால் வாழ்வோம்....
- பவுல் சொல்வது போல, வல்லமையும் அன்பும் நிறைந்த ஆவியோடு நம்பிக்கையோடு சான்று சொல்லுவோம்...
- இயேசு சொல்வது போல, சிறிய நம்பிக்கையைக் கூட பெரிதாக வாழ்வில் வெளிப்படுத்துவோம்...
ஆகையால், நம் வாழ்வு முழுவதும்:
👉 நம்பிக்கையில் வாழ,
👉 நம்பிக்கையில் வல்லவர்களாகிட,
👉 நம்பிக்கையில் பணிவுடன் கடவுளுக்குச் சேவை செய்ய நம்மை ஆண்டவரிடம் ஒப்படைப்போம்.
இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் ...
வெள்ளி, 3 அக்டோபர், 2025
என் பெயர் எழுதப்பட்டிருக்குமா? (4.10.2025)
அன்புடைய சகோதரர் சகோதரிகளே,
இன்றைய முதல் வாசகத்தில் (பாரூக்கு 4:5-12, 27-29) இறைவன் நமக்கு ஒரு ஆறுதல் செய்தி தருகிறார். இஸ்ரவேல் மக்கள் தங்கள் பாவங்களினால் அடிமைப்பட்டனர், துன்பங்கள் பலவற்றை அனுபவித்தனர், ஆனாலும் கடவுள் அவர்களை விட்டுவிடவில்லை. “நீங்கள் என்னை விட்டுப் போவதற்கு முன்பாக ஆர்வமாய் இருந்தது; இப்போது அதைவிடப் பெரும் ஆர்வத்துடன் என்னைத் தேடுங்கள்; நான் உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் தருவேன்” என்று ஆண்டவர் வாக்குத்தருகிறார்.
அதேபோல் நற்செய்தியில் (லூக்கா 10:17-24) சீடர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பி வந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்களும் எங்களுக்கு அடிபணிகின்றன” என்று சொல்கின்றனர். ஆனால் இயேசு அவர்கள் மகிழ்ச்சியை வேறு திசைக்கு திருப்புகிறார்:
“அதற்காக மகிழ வேண்டாம்; மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பதற்காகவே மகிழுங்கள்” என்று.
1. நமக்கான முக்கியமான மகிழ்ச்சி
நாம் உலகத்தில் பல சாதனைகளை அடையலாம் – நல்ல வேலை, பணம், நிலம், அதிகாரம், புகழ். ஆனால் இயேசு சொல்லுகிறார்: இவை எல்லாம் தற்காலிகம். உண்மையான மகிழ்ச்சி – நம் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கிறதே என்பதில்தான். அதாவது, கடவுள் நம்மைத் தன் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்; நம் வாழ்வு அவருடைய அன்பில் நிலைபெற்றிருக்கிறது என்பதே பெரிய மகிழ்ச்சி.
2. தூய பிரான்சிஸ் அசிசியாரின் சாட்சியம்
இன்றைய தினம் நாம் நினைவுகூரும் தூய பிரான்சிஸ் அசிசியார் (1182–1226) இதற்கான அழகிய எடுத்துக்காட்டு.
அவர் செல்வச் செழிப்பில் வளர்ந்தவர். ஆனால், அவர் செல்வம், புகழ், அதிகாரம் – இவை எல்லாம் மறைந்து போகும். உண்மையான மகிழ்ச்சி, கிறிஸ்துவோடு இணைந்த வாழ்க்கையில் இருக்கிறது என்பதை உணர்ந்தவர்....
அவர் தந்தையின் செல்வத்தையும், ஆடைகளையும் துறந்து, நிர்வாணமாக ஆயரின் முன் நின்றார். “இனி எனக்கு ஒரே தந்தை – வானத் தந்தை” என்றார்.
அவர் ஏழைகளுக்காக வாழ்ந்தார், இயற்கையை நேசித்தார், பறவைகளிடம் கூட “சகோதர சகோதரிகள்” என்று பேசியார்.
அவர் வாழ்வு நமக்கு நினைவூட்டுகிறது: உலகப் பெருமையல்ல, விண்ணகத்தில் எழுதப்பட்ட பெயர்தான் முக்கியம்.
3. கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
- ஏழைகளிடத்தில் அன்பு: பிரான்சிஸ் சொன்னார்: “நம்மை விட வறியவரைக் கண்டால், அவருக்கு நம்மிடம் இருப்பதை கொடுக்காவிட்டால் அது பெரிய பாவம்.”
- எளிமையான வாழ்க்கை: நமக்கு எவ்வளவு கிடைத்தாலும், சிக்கனமாக வாழ்ந்து, பிறருடன் பகிர்ந்துகொள்வது.
- இயற்கையை நேசித்தல்: பூமி, சூரியன், நிலா, காற்று – அனைத்தையும் கடவுளின் வரமாக ஏற்றுக்கொண்டு, பாதுகாப்பது.
- நற்செய்தியை அறிவித்தல்: பிரான்சிஸ் தனது வாழ்வின் சாட்சியத்தால் நற்செய்தியை அறிவித்தார்.
ஒரு சிறுவன் தந்தையிடம் கேட்டான்: “என் வாழ்க்கையில் யாருக்காக அக்கறை கொள்ளவேண்டும்?” தந்தை பாலை காட்டி, அதில் சக்கரையை கலந்து, “சமூக அக்கறை என்னும் சக்கரை இல்லாமல் வாழ்க்கை இனிக்காது” என்றார். அதேபோல், அடுத்தவருக்கு அன்பும் அக்கறையும் இல்லாமல் நம் வாழ்க்கை இனிப்பில்லை என்றார்...
இன்று நம் பெயர் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டுமெனில்:
- கடவுளை நோக்கி திரும்ப வேண்டும்.
- பாவத்திலிருந்து விலகி, அன்பில் நிலைநிற்க வேண்டும்.
- ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும்.
- இயற்கையை நேசிக்க வேண்டும்.
இவ்வாறு வாழ்ந்தால், நம் பெயர்கள் நிச்சயம் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கும்.
அன்புடைய சகோதரர் சகோதரிகளே,
தூய பிரான்சிஸ் அசிசியாரின் விழாவைக் கொண்டாடும் இந்நாளில், நாமும் அவரைப் போல எளிமையில் வாழ்ந்து, அடுத்தவருக்காக தியாகம் செய்து, இயற்கையை நேசித்து வாழ்வோம்.
அப்பொழுது ஆண்டவர் இயேசு சொல்லுவார்:
“உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன” என்று.
இதுவே நமக்கு உண்மையான மகிழ்ச்சியை கொடுக்கும்...
புதன், 1 அக்டோபர், 2025
குரலைக் கேட்டு மனம் மாறுவோம்...(03.10.2025)
அன்பான சகோதர சகோதரிகளே,
இன்றைய வாசகங்களில், மக்கள் கடவுளுக்கு கீழ்ப்படையாமலும், அவரது குரலைக் கேட்காமலும் நடந்ததால் தலைகுனிவும், தண்டனையும், சாபமும் அவர்களை வந்தடைந்தது என்பதை இறைவாக்கினர் பாரூக்கு நமக்கு நினைவூட்டுகிறார். “ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம்” என்று மக்களே ஒப்புக்கொள்கிறார்கள்.
அதேபோல, இயேசுவும் இன்று நற்செய்தியில், தம்முடைய அற்புதங்களையும் அழைப்பையும் புறக்கணித்த நகரங்களைத் திட்டுகிறார்: “உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார்; என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்.”
இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்ன சிந்திப்போம்?
-
கீழ்ப்படிதல் மற்றும் மனமாற்றம்
- மனிதரின் பெரிய பிழை கடவுளின் குரலைக் கேட்காமல் தன் மனப்போக்கில் நடந்துகொள்வதே.
- எப்பொழுது நாம் நம் சுய விருப்பங்களில் மட்டும் நடந்துகொள்கிறோமோ அப்பொழுது ஆண்டவரின் ஆசீர்வாதத்தை இழக்கிறோம்.
-
கடவுளின் குரல் நமக்குள்
- திருவிவிலியம், திருச்சபையின் போதனை, நம் மனசாட்சி – இவைகளில் ஆண்டவர் தொடர்ந்து பேசுகிறார்.
- அதை புறக்கணிப்பது, கடவுளையே புறக்கணிப்பதாகும்.
-
மனமாற்றம் – ஆசீர்வாதத்தின் வழி
- பாரூக்கின் காலத்தில் மக்கள் தங்கள் பாவத்தை ஏற்றுக்கொண்டார்கள். அதுவே மீட்பின் முதல் படியாகும்.
- நாமும் நம்முடைய பலவீனங்களை உணர்ந்து, மனம் மாறினால், ஆண்டவரின் கருணையால் நம்மை மீட்டுக் கொள்வார்.
அன்பானவர்களே,
இன்று இறைவார்த்தை வழியாக இறைவன் நம்மிடமும் சொல்லுகிறார்:
“உங்கள் வாழ்வில் நான் செய்த நன்மைகளையும், அற்புதங்களையும் புறக்கணிக்க வேண்டாம். என் குரலைக் கேளுங்கள். மனம் மாறுங்கள். அப்பொழுது தண்டனை அல்ல, ஆசீர்வாதமே உங்களுக்குக் கிடைக்கும்.”
ஆகையால், நம் வாழ்க்கையில் தினமும் ஆண்டவரின் குரலைக் கேட்டு, அதன்படி நடப்போம். பாவத்தை விட்டு விலகி, கருணைமிகு கடவுளின் ஆசீர்வாதத்தில் வாழ்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாராக ...
அன்புடன்
அருள்பணி உங்கள் சகா...
காவல் தூதரின் இருப்பை உணர்ந்து, அவர்களை நம்புவோம்...(02.10.2025)
இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே ...
இன்றைய வாசகங்கள் நமக்கு கடவுளின் வார்த்தையின் வலிமையையும், இறையாட்சியின் நெருக்கத்தையும், காவல் தூதர்களின் பாதுகாப்பையும் வெளிப்படுத்துகின்றன.
1. இறைவாக்கின் வலிமை (நெகேமியா 8:1-12)
இஸ்ரயேல் மக்கள் எஸ்ரா திருநூலை வாசிக்கும்போது எழுந்து நின்று, “ஆமென், ஆமென்” என்று பதில் அளித்து, இறைவனுக்கு வணங்கினர்.
- இதன் மூலம் நம் வாழ்வில் திருவிவிலியத்தின் மகிமை எவ்வளவு பெரியது என்பதை அறிகிறோம்.
- இறைவனின் வார்த்தையை கேட்பதால் மனம் மாறி மகிழ்ச்சி அடையலாம்.
- “ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்று சொல்லப்பட்டதைப் போல, கடவுளின் வார்த்தை நம்மை ஆற்றலூட்டுகிறது.
2. தாழ்மையும் சிறியோரின் மதிப்பும் (மத்தேயு 18:1-5,10)
இயேசு சீடர்களிடம், “சிறிய குழந்தை போல இல்லாவிட்டால் சொர்க்கத்தில் நுழைய முடியாது” என்கிறார்.
- இது நமக்குக் கற்றுத்தருவது, தாழ்மையான மனம், எளிமை, நம்பிக்கை என்பன சொர்க்கத்திற்கு வழிகாட்டும் என்பதே.
- குழந்தையின் நம்பிக்கை தந்தையை முழுமையாக நம்புவது போல, நாம் கடவுளை முழுமையாக நம்ப வேண்டும்.
- மேலும், “சிறியோரில் ஒருவரை அலட்சியம் செய்யாதீர்கள்; அவர்களின் காவல் தூதர்கள் எப்போதும் விண்ணக தந்தையின் முகத்தைப் பார்க்கிறார்கள்” என்கிறார். இது காவல் தூதர்களின் பணியை வெளிப்படுத்துகிறது.
3. காவல் தூதர்களின் பணி
இன்றைய திருநாள் நமக்கு நினைவூட்டுவது – ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதர் இருக்கிறார்.
- அவர்கள் நம்மைக் காக்கின்றார்கள் (திருப்பாடல் 91:11)
- நல்வழியில் நடத்துகின்றார்கள் (விடுதலைப் பயணம் 23:20)
- நமக்காக இறைவன் முன் பரிந்துரைக்கின்றார்கள் (யோபு 33:24-26)
தூய எரோனிமுஸ் சொல்வதுபோல், “நம்முடைய ஆன்மா மிகவும் மதிப்புமிக்கது; அதனால் கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் காவல் தூதரை நியமித்திருக்கிறார்.”
4. இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் கற்றுக்கொள்ளவேண்டியது
- இறைவனின் வார்த்தையை மதிப்போம். அது நம் வாழ்வை மாற்றுகிறது.
- குழந்தை போன்ற தாழ்மையை வளர்த்துக்கொள்வோம். அதுவே சொர்க்கத்திற்கு வழி.
- காவல் தூதரின் இருப்பை உணர்ந்து, அவர்களை நம்புவோம். அவர்கள் நமக்காக இரவு பகலாக ஜெபிக்கிறார்கள், நம்மைக் காப்பாற்றுகிறார்கள்.
எனவே அன்பான சகோதர சகோதரிகளே,
இன்று காவல் தூதர்களின் திருநாளில், நாம் அவர்களின் பாதுகாப்புக்கு நன்றி சொல்லுவோம். நம்மோடு எப்போதும் பயணிக்கும் நம் காவல் தூதரை உணர்ந்து, அவர்களுடன் இணைந்து இறைவேதலை முன்னெடுப்போம் ... இனி வருகின்ற நாட்களில் எல்லாம் இறைவனுடைய வார்த்தைகளை நாம் வாழ்வாக்க அருள் வேண்டுவோம் ....
செவ்வாய், 30 செப்டம்பர், 2025
தெரசா எதற்கு முன்னுரிமை கொடுத்தார் தெரியுமா?... (01.10.2025)
அன்புடைய சகோதர சகோதரிகளே,
நெகேமியா நம் முன்னோர்களின் கல்லறைகளை நினைத்து, தனது பூர்விக ஊரான எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டிட வேண்டும் என்ற ஆவலோடு ஜெபித்து, மன்னரிடம் வேண்டினார். இறைவன் அருளால் மன்னர் அனுமதித்தார். இது எதைச் சுட்டிக்காட்டுகிறது? நம் வாழ்வில் ஏற்படும் சவால்களை நாம் தனியாகச் செய்ய முடியாது; ஆனால் இறைவனை நாடும்போது, அற்புதமான வாயில்கள் திறக்கப்படும் என்பதை இது காட்டுகிறது.
நற்செய்தியில், ஒருவர் இயேசுவிடம், “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்று சொல்கிறார். அதற்கு இயேசு, "மானிட மகனுக்கோ தலை சாய்க்க இடமில்லை" என்று பதில் அளிக்கிறார். இன்னொருவர் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வருவேன் எனக் கேட்டார்; இன்னொருவர் வீட்டாரிடம் விடைபெற்று வருவேன் என்றார். ஆனால் இயேசு அவர்களுக்கு, இறையாட்சியை முன்னுரிமை கொடுங்கள் என்கிறார். ஆம், ஆண்டவரைப் பின்பற்றுவோர், எந்தக் குறுக்கீடும் இல்லாமல் முழுமையான ஒப்புக்கொடுத்தலோடு இறையாட்சியின் விழுமியங்களை பின்பற்ற வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
இன்றைய நாளில் நாம் கொண்டாடும் சிறுமலர் குழந்தைத் தெரசாவின் வாழ்வு, இந்த வாசகங்களோடு மிகச் சிறப்பாக பொருந்துகிறது.
தெரசாவின் வாழ்க்கை எளிமையானது. அவர் “சிறிய வழி – The Little Way” என்பதைக் கடைப்பிடித்தார். அதாவது, பெரிய காரியங்களைச் செய்ய முடியாவிட்டாலும், சிறிய காரியங்களை அன்போடு செய்வதே இறைவனுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வழி என்பதை அவர் காட்டினார்.
தெரசா நமக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள்
-
துன்பத்தை பொறுமையோடு ஏற்றுக்கொள்ளல்
தெரசா எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டபோதும், அதனை வரமாகவே பார்த்தார். அவர் சந்தித்த விமர்சனங்களையும் இகழ்ச்சிகளையும், இயேசுவின் சிலுவையை நினைத்து அமைதியோடு ஏற்றுக்கொண்டார்.
அன்பானவர்களே, நாமும் நம் வாழ்க்கையில் வரும் துன்பங்களை கடவுளின் வரமாகப் பார்த்து, பொறுமையோடு தாங்குகிறோமா? -
குழந்தை உள்ளம்
தெரசா குழந்தை உள்ளம் கொண்டவராய் வாழ்ந்தார் – கள்ளமில்லா மனம், எளிமை, தியாகம். ஆண்டவர் சொல்வார்: “சிறுபிள்ளைகள் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்” (மத் 18:3).
நாமும் குழந்தை உள்ளத்தோடு வாழ்கிறோமா? சிந்திப்போம் ... -
ஜெபம் மற்றும் மறைபரப்பு பணி
தெரசா துறவியாய் இருந்தபோதும், உலகம் முழுவதும் மறைபரப்புச் செய்யும் குருக்களுக்காக ஜெபித்து வந்தார். அவர் “மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலி” எனக் கருதப்படுகிறார்.
நாமும் நம் ஜெபங்களில் திருச்சபையின் பணி, குருக்கள், மறைபரப்பு ஆகியவற்றைக் கவனிக்கிறோமா? சிந்திப்போம் ...
அன்பான சகோதர சகோதரிகளே,
சிறுமலர் தெரசா, எளிமையான வாழ்வின் வழியாக மகத்தான புனிதையாக உயர்ந்தார். அவர் போல நாமும்:
- நமக்குக் கிடைக்கும் துன்பங்களை பொறுமையோடு ஏற்றுக்கொள்வோம்,
- குழந்தை உள்ளத்தோடு தூய்மையாய் வாழ்வோம்,
- சிறிய காரியங்களை அன்போடு செய்து, இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.
அப்படிச் செய்தால் நம் வாழ்க்கையே ஒரு மணமிக்க மலராய், இறைவனுக்கு இனிய பலியாக மாறும்.
“இயேசுவே, உம்மை நான் அன்பு செய்கிறேன்” என்று சொல்லியபடி தெரசா தனது உயிரை அர்ப்பணித்தார். அதுபோல நாமும் நம் வாழ்நாளின் இறுதிவரை ஆண்டவருக்கே உரியவர்களாய் இருப்போம்.
இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்...
என்றும் அன்புடன்
அருள்பணி ஜே. சகாய ராஜ்
திருச்சி மறைமாவட்டம்
திங்கள், 29 செப்டம்பர், 2025
இறைவார்த்தையை நேசிப்போம்...(30.9.2025)
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
இன்றைய முதல் வாசகத்தில் (செக்கரியா 8:20-23) இறைவன் மக்களிடம் அளிக்கும் ஒரு பெரிய வாக்குறுதியைக் கேட்கிறோம். “மக்களினங்கள் பலவும் வலிமை வாய்ந்த வேற்றினத்தாரும் படைகளின் ஆண்டவரை நாடவும், அவரது அருளை மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்” என்று இறைவன் சொல்லுகிறார். எருசலேம், கடவுளின் இல்லம், அனைவருக்கும் திறந்த கதவுகளாகிறது. வேற்றினத்தாரும் கூட “கடவுள் உங்களோடு இருக்கின்றார்” என்று சொல்லி, இஸ்ரவேலருடன் சேர்ந்து இறைவனைத் தேட விரும்புகிறார்கள்.
இதில் நாம் காண்கிறோம்: இறைவன் யூதர் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்களை தம் அருகில் அழைக்கிறார்.
இன்றைய நற்செய்தியில் (லூக்கா 9:51-56), இயேசுவின் உறுதியான தீர்மானம் நம்மைத் தீண்டுகிறது. “இயேசு எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்தார்”. அவர் குறிக்கோள் தெளிவு—அவர் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காக சிலுவையையே நோக்கிச் செல்கிறார். சமாரியர்கள் அவரை நிராகரித்தாலும், யாக்கோபும் யோவானும் கோபத்தில் தீ இறக்க வேண்டுமா? என்று கேட்டாலும், இயேசு அமைதியாகக் கடிந்து சொல்லி, வேறு ஊருக்குச் செல்கிறார். பழிவாங்கும் மனப்பான்மையை இயேசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் காட்டும் வழி, இரக்கம், பொறுமை, அன்பின் வழி.
அன்புள்ளவர்களே, இன்றைய தினம் நாம் நினைவுகூரும் புனிதர் ஜெரோம், இந்த வாசகங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்திய ஒரு மாபெரும் மறைவல்லுநர். அவர் எருசலேமை நேசித்தார். அங்கு வாழ்ந்து, இறைவார்த்தையை ஆழ்ந்து ஆராய்ந்து, மொழிபெயர்த்தார். “திருவிவிலியத்தை அறியாமை, கிறிஸ்துவை அறியாமையே” என்று அவர் புகழ்பெற்ற சொற்களை விட்டுச்சென்றார்.
ஜெரோம் அவர்களின் வாழ்வு நமக்கு இரண்டு முக்கிய பாடங்களைத் தருகிறது:
- இறைவார்த்தையை நேசிக்க வேண்டும் – பைபிள் வெறும் புத்தகம் அல்ல; அது வாழும் வார்த்தை. அதை வாசிக்கும் போது, கடவுள் நம்மோடு பேசுகிறார்.
- இயேசுவை பின்பற்றத் தீர்மானமாக இருக்க வேண்டும் – அவர் எருசலேமை நோக்கிச் சென்றது போல, நாமும் நம் நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும். நிராகரிப்பு, சிரமம், சோதனை வந்தாலும், கடவுளின் சித்தத்தை நிறைவேற்ற நம் வாழ்க்கை ஒரு சாட்சியாக வேண்டும்.
புனிதர் ஜெரோம் போல, நாமும் இறைவார்த்தையோடு ஆழ்ந்த உறவு கொண்டு, அதை நம் குடும்பத்தில், சமூகத்தில் பகிர்ந்தால், பலரும் எருசலேம் நோக்கிச் செல்லும் அந்த வேற்றினத்தாரைப் போல, நம்மோடு சேர்ந்து, “கடவுள் உங்களோடு இருக்கின்றார்” என்று சொல்ல வருவார்கள்.
எனவே அன்பானவர்களே, இன்றைய தினம் நாம் புனித ஜெரோம் அவர்களை நாடி, “இறைவார்த்தையை நேசிக்கும் மனதை, அதைக் கற்றறிந்து வாழும் ஆற்றலை” பெறுவோம்.
ஆண்டவரின் அருளும் அமைதியும் எப்போதும் உங்களோடு இருப்பதாக...
சனி, 27 செப்டம்பர், 2025
நம்பிக்கையோடு நிற்கும் மனநிலை நமதாகட்டும் ...(29.09.2025)
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
இன்றைய தினம் நாம் அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல் ஆகியோரின் விழாவைக் கொண்டாடுகிறோம்.
1. வானதூதர்கள் நம் முன்மாதிரி
தானியேல் புத்தகத்தில் நாம் வாசிக்கின்றோம் ...
“பல கோடி வானதூதர்கள் இறைவனுக்கு சேவை செய்கின்றனர், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் போது நூல்கள் திறக்கப்படுகின்றன.”
இந்த வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுவது: வானதூதர்கள் எப்போதும் இறைவன் முன் நிற்கின்றனர். அவர்கள் ஆற்றல், அறிவு மற்றும் நம்பிக்கையுடன் இயேசுவின் மகத்தான செயல்களை நிறைவேற்றுகின்றனர்.
2. மிக்கேல் அதிதூதர் – தீமைக்கெதிரான போராட்டம்
மிக்கேல் அதிதூதர் சாத்தானோடு போராடி வெற்றியடைந்தார். இது நமக்கு ஆன்மிகப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டே இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது. வாழ்க்கையில் நமக்கு எதிராக வரும் லஞ்சம், வன்முறை, சாதி பிரிவுபாடு போன்ற தீமைகளையும் நாம் அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும் என்பதை இவரின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது.
3. கபிரியேல் மற்றும் ரபேல்
- கபிரியேல், நற்செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் உதவுகிறார்.
- ரபேல், நோய்கள் மற்றும் தீமைகளிலிருந்து காப்பாற்றுகிறார்.
இவர்கள் இருவரும் நமக்கு பண்பும் சேவையும் வாழ்க்கையின் முக்கியத் தூண்கள் என்பதை நினைவூட்டுகிறார்கள்....
4. நமது வாழ்வு மற்றும் சோதனைகள்
அதிதூதர்களைப் போல, நாம் வாழ்க்கையில் நல்லதை செய்து தீமையை எதிர்த்து போராட வேண்டும். இது லஞ்சம், வன்முறை, ஏற்றத்தாழ்வு போன்ற தீமைகளுக்கு எதிரான நமது ஆன்மிகப் போராட்டமாகும்.
இத்தகைய போராட்டத்தில் நமது நம்பிக்கை, ஜெபங்கள், மற்றும் கடவுளின் உடனிருப்பு இவைகள் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.
5. இன்றைய நாள் இறை வார்த்தைகள் நமக்குத் தரும் வாழ்வுக்கான பாடம்
- தீமையை எதிர்த்து நம்பிக்கையுடன் போராட வேண்டும்.
- இறைவன் வழியில் நாளும் பயணிக்க வேண்டும்.
- அதிதூதர்களைப் போல மக்களுக்கு உதவும், சேவை செய்யும், நீதி மற்றும் நற்செய்தியை பரப்பும் வாழ்க்கையை நமது வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
"அன்புள்ள சகோதர சகோதரிகளே... இன்று நாம் அதிதூதர்களைப் போன்று ஆன்மிகப் போராட்டத்தில் நின்று, இறைவனின் ஆதிக்கத்தை உலகில் நிலைநாட்டுவோம். மேலும் தீமையை எதிர்த்து நம்பிக்கையுடன் நிற்கும் மனத்தை நாம் பெற்றிட இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இன்றைய நாளில் ஜெபிப்போம் ....
வெள்ளி, 26 செப்டம்பர், 2025
பகிர்வை மையமாக கெண்ட வாழ்க்கை...(28.9.2025)
“பகிர்வை மையமாக கெண்ட வாழ்க்கை வாழும் போது நாம் கடவுள் தரும் நிலை வாழ்வில் பங்கேற்க முடியும்....”
- கடவுள் நமக்கு ஆசீர்வாதங்களைத் தந்திருக்கிறார் – உணவு, உடை, வீடு இன்னும் பல.....
- ஆனால் அந்த ஆசீர்வாதங்களை நாம் மட்டும் வைத்துக் கொண்டால் அது வீண்.....
- நம்மைச் சுற்றி “இலாசர்” மாதிரி ஏழை, பசியோடு இருப்பவர்கள் ஏராலமாக உள்ளார்கள்.
- அவர்களிடம் கருணையில்லாமல் இருந்தால், கடவுளின் முன் நம்மை நியாயப்படுத்த முடியாது...
- அதனால், நாம் பெற்ற ஆசீர்வாதங்களைப் பகிர்ந்து கொண்டு, நீதியுடனும் இறைபற்றுடனும் வாழ வேண்டும்.
- ஆமோஸ் இறைவாக்கினர் நமக்குச் சொல்கிறார்: “வசதியோடு இன்பத்தில் மூழ்கியவர்கள் ஏழைகளை மறந்தால், அவர்களுக்குப் பெரிய கேடு வரும்.” என்று...
- பவுல் நமக்கு நினைவுபடுத்துகிறார்: “செல்வம் அழியும்; ஆனால் நித்திய வாழ்வை பற்றிக்கொள்.” என்று...
- இயேசுவின் உவமை நமக்குச் சொல்லுகிறது: செல்வர் புறக்கணித்த இலாசர், கடவுளின் மடியில் ஆறுதல் பெற்றார். கருணை இல்லாத செல்வம் நித்திய வாழ்வுக்கு வழிவகுக்கவில்லை.
- இன்று நம் வாழ்வில் உள்ள சவால்:
- நம் வீட்டு வாசலில் இருக்கும் “இலாசரை” நாம் கவனிக்கிறோமா? இல்லையென்றால் நிலை வாழ்வில் நமக்கும் இடமிருக்காது....
- நமக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களில் எவ்வளவு பகிர்கிறோம்?
எனவே சிந்திப்போம் :
👉 “நான் பெற்ற செல்வங்களில் எந்த அளவு நான் அடுத்தவருக்கு பகிர்கிறேன்...?”
👉 “என் வாழ்க்கையில் யார் யார் ‘இலாசர் என்ற இடத்தில் இருக்கிறார்கள்... ?”
வியாழன், 25 செப்டம்பர், 2025
ஏழைகளின் சேவையில் இறை பணி (27.9.2025)
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
இன்றைய வாசகங்களும் நற்செய்தியும், மேலும் நாம் கொண்டாடும் தூய வின்சென்ட் தே பவுலின் விழாவும் ஒரு ஆழ்ந்த செய்தியை நமக்கு அளிக்கின்றன....
1. இறைவாக்கினர் செக்கரியாவின் செய்தி
- ஆண்டவர் சொல்கிறார்: “இதோ நான் வருகிறேன்; உன் நடுவில் குடிகொள்வேன்.”
- எருசலேமின் மக்கள் மதிலும் பாதுகாப்பும் இல்லாமல் இருந்தபோதும், ஆண்டவர் சொன்னார்:
- “நான் நெருப்புச் சுவராய் இருப்பேன்.”
- “நான் உன் நடுவே தங்குவேன்.”
- அதாவது உண்மையான பாதுகாப்பும் மாட்சியும், வெளிப்புற மதில்களிலும் செல்வங்களிலும் இல்லை; இறைவனின் இருப்பில் தான் இருக்கிறது... என்பதை வலியுருத்துகிறது...
2. இன்றைய நற்செய்தியில்...
- இயேசு சீடர்களிடம், “மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்” என்று அறிவிக்கிறார்.
- சீடர்கள் புரியாமல் அஞ்சினார்கள்.
- ஆனால் இயேசு காட்டிய பாதை, தியாகத்தின் பாதை.
- உண்மையான இரட்சிப்பு என்பது வலி, சிலுவை, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் வழியே வருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
3. தூய வின்சென்ட் தே பவுல் – வாழ்வின் சாட்சி
- வறுமையில் பிறந்தவர்; இருந்தும் கற்றலுக்கும் குருத்துவத்திற்கும் இறைவன் வழி செய்தார்.
- அவர் தனது வாழ்வை முழுவதும் ஏழைகள், அனாதைகள், நோயாளிகள், கைவிடப்பட்டோர் ஆகியோருக்காக அர்ப்பணித்தார்.
- சிறையிலும் அடிமைத்தனத்திலும் சோதனைகளைச் சந்தித்தபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை.
- பாரிஸ் நகரில் தெருக்களில் கிடந்த குழந்தைகளைத் தூக்கிச் சென்று பராமரித்தார்.
- "ஏழைகள், இரக்கச்செயல்கள்" என்ற பணி அவரிடம் தனிப்பட்ட தொண்டு அல்ல; அது கடவுளின் பணி என்று அவர் உணர்ந்தார்.
- அவர் கூறிய முக்கியமான போதனை:
- “ஏழைகளை பராமரிப்பது என்றால் இயேசுவையே பராமரிப்பற்கு சமம்.” என்கிறார்...
4. நம் வாழ்விற்கு இன்றைய இறை வார்த்தை தருகின்ற செய்தி
- கடவுள் எப்போதும் நம் நடுவே இருக்கிறார் – நாம் அவரை அழைத்தால்.
- அவர் நம் குடும்பத்தை, நம் சமூகத்தை, நம் பங்குத்திருச்சபையை நெருப்புச் சுவராய் பாதுகாப்பார்.
- ஆனால் நாம் அவரைச் நம் வாழ்வில் நாம் பிரதிபலிப்பதற்கான வழி ஏழைகளின் சேவை வழியே.
- நம் விசுவாசம் நெஞ்சில் மட்டும் அல்ல; அது நம் செயல்களில் வெளிப்பட வேண்டும்.
- வின்சென்ட் தே பவுல் போல நாமும் சிறிய செயல்களின் வழியே, உதவும் கைகளின் வழியாக, பிறருக்குச் சேவையாற்றி, கடவுளை நம் நடுவே வாழ வைக்க இன்று என் நாளில் உறுதி ஏற்போம் இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்....
கேள்வியும் அதற்கான பதிலும் ...(26.9.2025)
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
இன்றைய வாசகங்களில் இரண்டு ஆழமான உண்மைகளை நாம் கேட்கிறோம்.
1. ஆகாய் தீர்க்கதரிசி வாயிலாக கடவுள் கூறுவது:
- “இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்” என்று ஆண்டவர் உறுதியளிக்கிறார்.
- மக்களுக்குள் அச்சமும் விரக்தியும் இருந்தது. பழைய ஆலயத்தின் பெருமையை அவர்கள் நினைத்தபோது, புதிய ஆலயம் எளிமையானதாகத் தோன்றியது.
- ஆனால் கடவுள், “மன உறுதியுடன் இருங்கள், நான் உங்களோடு இருக்கிறேன்” என்று மக்களை ஊக்குவித்தார்.
- உண்மையான மாட்சி வெள்ளி, பொன்னில் இல்லை; கடவுள் தங்கியிருக்கும் இடம்தான் மாட்சியால் நிரம்பியதாகும்.
- எனவே நம் வாழ்விலும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், நம் உள்ளம் ஆண்டவர் தங்கும் ஆலயமாக இருந்தால் அது மாட்சியால் நிரம்பும்.
2. நற்செய்தியில் இயேசு சீடர்களிடம் கேட்பது:
- “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? … ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?”
- பேதுரு திடமாகச் சொல்கிறார்: “நீர் கடவுளின் மெசியா.”
- ஆனால் உடனே இயேசு உண்மையான மெசியாவின் வழியை வெளிப்படுத்துகிறார் — “மானிடமகன் துன்பப்படவும், நிராகரிக்கப்படவும், கொலை செய்யப்படவும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழவும் வேண்டும்.”
- அதாவது மாட்சி என்பது வெளிப்புறப் பொலிவில் அல்ல; தியாகம், துன்பம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலம் வெளிப்படும்.
நம் வாழ்விற்கான செய்தி:
- சில சமயம் நம் வாழ்க்கை எளிமையாகவும், பிறர் பார்வையில் சிறியதாகவும் தோன்றலாம். ஆனால் அங்கே கடவுள் தங்கியிருப்பார் என்றால் அது மாட்சியால் நிரம்பும்.
- கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வெறும் புகழும் வெற்றியும் அல்ல. அது சிலுவையின் பாதை. இயேசுவைப் போல நாமும் துன்பத்தையும் சோதனையையும் கடந்து உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சியை அடைய வேண்டும்.
- எனவே நாம் இன்று இயேசுவிடம் நம்முடைய பதிலை சொல்லுவோம்: “நீர் என் வாழ்வின் ஆண்டவரும் மெசியாவும்.”
- அப்போதுதான் நம் இதயம் உண்மையான ஆலயமாகி, ஆண்டவர் தரும் நலமும் சமாதானமும் அதில் நிலைத்திருக்கும்.
செவ்வாய், 23 செப்டம்பர், 2025
உடலாகிய ஆலயத்தை புதுப்பிப்போம் ... (25.9.2025)
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
இன்றைய வாசகங்களில் இரு வித்தியாசமான சூழ்நிலைகளை நாம் கேட்கிறோம்:
- ஆகாய் தீர்க்கதரிசியின் வாயிலாக, கடவுள் தம் மக்களிடம் “என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்” என்று அழைக்கிறார்.
- நற்செய்தியில், ஏரோது மன்னன் குழம்புகிறான்; யோவானின் தலையை வெட்டச் செய்துவிட்டு, இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டபோது பயத்திலும் குழப்பத்திலும் மூழ்குகிறான்.
1. கோவிலை மீண்டும் கட்ட அழைக்கும் இறைவன்
ஆகாய் தீர்க்கதரிசியின் காலத்தில், மக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வையும் சீர்செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் ஆண்டவரின் இல்லம் பாழடைந்து கிடந்தது.
- கடவுள் அவர்கள் மனதைத் திருப்புகிறார்: “உங்கள் வசதிக்காக மட்டும் வாழ்வது போதுமா? என் இல்லம் பாழடைந்து கிடக்கும் போது நீங்கள் உங்கள் வீடுகளை அலங்கரிக்கிறீர்களா?”
- இங்கே கோவில் என்பது வெறும் கட்டிடமல்ல; அது கடவுளின் இருப்பின் அடையாளம்.என்பதை நாம் உணர வேண்டும்.
- கடவுள் சொல்லுகிறார்: “என் இல்லத்தை மீண்டும் கட்டுங்கள்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்.”
- இன்று நம் வாழ்க்கையிலும் ஆண்டவர் அதேபோல் அழைக்கிறார். நம் உள்ளங்கள், நம் குடும்பங்கள், நம் சமூகங்கள் – இவை அனைத்தும் கடவுளின் ஆலயமாக இருக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் பாவம், சுயநலம், கவலைகள் ஆகியவை காரணமாக அந்த ஆலயம் பாழடைகிறது. அதை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இதுவே முதல் வாசகம் நமக்குத் தருகின்ற அழைப்பாக உள்ளது
2. ஏரோது – மனச்சாட்சியின் குழப்பம்
நற்செய்தியில் ஏரோது மனம் குழம்புகிறான்.
- யோவானின் தலையை வெட்டச் செய்ததால், அவன் குற்ற உணர்ச்சி கொண்டிருந்தான்.
- இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டதும், “இவர் யாரோ?” என்று கேட்கிறான்.
- இயேசு நம்மை சந்திக்கும் போது, நாமும் இரண்டு விதமாகப் பிரதிபலிக்கலாம்:
- ஏரோது போல பயத்துடனும் குழப்பத்துடனும் விலகலாம்.
- அல்லது எஸ்ரா, ஆகாய், சீடர்கள் போல மனம் திருந்தி, இறைவனுக்கு இடம் கொடுத்து வாழலாம்.
இன்றைய இறை வார்த்தை நமக்குத் தரும் அழைப்பு
- இன்று ஆண்டவர் நமக்குச் சொல்லுகிறார்: “உன் இதயத்தை மீண்டும் கட்டியெழுப்பு; அது என் இல்லமாக இருக்கட்டும்.”
- நாம் தேவாலயங்களை மட்டுமல்ல, நம் குடும்பத்தையும் சமூகத்தையும் ஆண்டவரின் ஆலயமாக மாற்ற வேண்டும்.
- ஏரோதுவைப் போல குற்ற உணர்ச்சியில் குழம்பாமல், மனமாற்றத்துடன் இயேசுவைச் சந்தித்து, அவரை நம் வாழ்க்கையின் மையமாக்க வேண்டும்.
- எனவே அன்பர்களே ...
- மனம் – பாவத்தால் பாழடைந்த இடம்; ஜெபம், மனமாற்றம், அன்பு ஆகியவற்றால் அதை மீண்டும் கட்ட வேண்டும்.
- குடும்பம் – சண்டை, சுயநலம், புரிதல் இல்லாமை காரணமாக சிதைகிற குடும்பங்களை, பொறுமை, மன்னிப்பு, அன்பு மூலம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.
- சமூக வாழ்வு – வறியோரை மறக்காமல், ஒற்றுமையுடன் வாழ்ந்து, இறையாட்சியின் சாட்சிகளாக இருக்க வேண்டும்.
அன்புடையவர்களே,
கடவுள் இன்று நமக்குச் சொல்லுகிறார்:
“என் இல்லத்தை மீண்டும் கட்டுங்கள்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்.”
இந்த ஆலயம் வெறும் கல், சுண்ணாம்பு கொண்டு ஆன கட்டிடம் அல்ல; நம் இதயம், நம் குடும்பம், நம் சமூகமே அந்த ஆலயம்.
ஆகவே, நம் உள்ளங்களையும் உறவுகளையும் மீண்டும் கட்டியெழுப்புவோம். அப்போதுதான் கடவுள் நம்மிடையே மகிமையுடன் வெளிப்படுவார்.
நம் செயல்கள் சான்றாகட்டும் ...(24.9.2025)
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் ...
1. எஸ்ராவின் ஜெபம் – பாவத்தில் இருந்தும் கருணை
எஸ்ரா தீர்க்கதரிசி, தம் மக்களின் பாவங்களையும் குற்றங்களையும் ஆண்டவரின் முன்னிலையில் ஒப்புக்கொண்டு, “நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்குக் கையளிக்கவில்லை” என்று சொல்கிறார்.
- எவ்வளவு பாவம் செய்தாலும், கடவுள் எங்களை முற்றிலும் தள்ளிவிடாமல், சிறிது நம்பிக்கையையும் ஒளியையும் தருகிறார்.
- அடிமைத்தனம் என்பது பாவத்திற்கான அடையாளமாகும். பாவம் நம்மைச் சங்கிலியால் கட்டி வைத்தாலும், ஆண்டவர் கருணை நம்மை விடுதலை செய்யும்.
- நாமும் நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில் பாவத்தின் சுமையால் சோர்ந்து விடுகிறோம். ஆனால் இறைவனின் கருணை எப்போதும் நம்மை எழுப்புகிறது.
2. இயேசு – அதிகாரமும் அனுப்புதலும்
நற்செய்தியில், இயேசு தம் சீடர்களுக்கு வல்லமையையும் அதிகாரத்தையும் அளித்து, இரு முக்கிய பணிகளுக்குப் பணித்தார்:
- இறையாட்சியைப் பறைசாற்றுதல்
- நோயாளிகளை குணப்படுத்துதல்
இயேசுவின் சீடர்கள் வெறும் வார்த்தைச் சாட்சிகள் அல்ல; அவர்கள் செயலால், குணமளிப்பதாலும், அன்பால் நற்செய்தியை வாழ்வாக்கினார்கள்.
- சீடர்கள் எதையும் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டாம் என்று இயேசு சொன்னது, அவர்களின் நம்பிக்கை முழுவதுமாக இறைவனிடமே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
- உண்மையான சீடர்கள், தங்கள் பாதுகாப்பு, நலன், வசதி ஆகியவற்றைக் கவலைப்படாமல், இறைவனின் பணியை செய்வதற்காகவே வாழ்கிறார்கள்.
இன்றைய இறை வார்த்தை நமக்குத் தரும் அழைப்பு
- நாமும் எப்போதும் குற்றம் சாட்டும் மனப்பான்மையுடன் அல்ல, எஸ்ராவைப் போல மனமாற்றத்தோடும் தாழ்மையோடும் ஆண்டவரை அணுக வேண்டும்.
- இயேசுவின் சீடர்களைப் போல, நாமும் நற்செய்தியை அறிவிக்கும் சாட்சிகளாக இருக்க வேண்டும். அதற்காக வார்த்தை மட்டும் போதாது; அன்பின் செயல்கள், நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறுதல், துன்பத்தில் இருப்போருக்கு துணையாக இருப்பது போன்ற சாட்சிகள் தேவை.
எனவே நாம் ...
- நம் பாவங்களிலிருந்து விடுதலை அளிக்கும் கடவுளின் கருணைக்கு நன்றி சொல்ல வேண்டும்.
- நாமும் பாவத்தால் அடிமைகளாக இல்லாமல், சுதந்திரமான கடவுளின் பிள்ளைகளாக வாழ வேண்டும்.
- சீடர்களைப் போல, நாம் செல்கின்ற இடமெல்லாம் “இறையாட்சி நெருங்கியுள்ளது” என்று நம் செயல்களால் காட்ட வேண்டும்.
திங்கள், 22 செப்டம்பர், 2025
வாழ்வாக்கப்படும் வார்த்தை ...(23.9.3025)
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
இன்றைய இறைவார்த்தை நம்மை இரண்டு முக்கியமான செய்திகளை இதயத்தில் நிறுத்திக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது ...
முதலாவது, எஸ்ரா நூலில் நாம் கேட்பது போல, யூதர்கள் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்தபோது, அவர்கள் முதன்மையாகக் கவனம் செலுத்தியது என்னவென்றால் இறைவனின் கோவிலை மீண்டும் கட்டி முடித்து, பாஸ்கா திருவிழாவை கொண்டாடுவது. இது இறைவனின் மக்களாக வாழ்வதற்கு, எப்போதும் கடவுளுக்கு உரிய இடத்தை நம் வாழ்வில் முதன்மை அளிக்க வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது... கோவில் இல்லா நகரில் குடியிருத்தல் ஆகாது என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப அடிமைத்தனத்திலிருந்து வந்த மக்கள் ஆண்டவரின் ஆலயத்தை முதலில் கட்டி எழுப்ப வேண்டும் என முன்னுரிமை கொடுத்தது கடவுளுக்கு அவர்கள் கொடுக்கின்ற முன்னுரிமையின் அடையாளமாக காண்பிக்கப்படுகிறது .
இரண்டாவது, லூக்கா நற்செய்தியில் இயேசு சொல்வதை கேட்கிறோம்:
“இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்.”
இயேசுவின் வார்த்தைகளால் இன்று நமக்குத் தெளிவான வாழ்க்கை பாடத்தை சுட்டிக் காட்டுகிறது இயேசுவின் குடும்பத்தில் இருக்கிறவர் (அவரது சகோதர சகோதரிகள் அல்லது அவரை அறிந்தவர்கள்) என்பது இரத்தத்தால் மட்டும் அல்ல; இறைவார்த்தையை வாழ்வாக்குவதால் தான் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதற்கான ஒரு மிகச் சிறந்த முன் உதாரணமாக நம் முன் நிற்கிறார் இன்று நாம் நினைவு கூறுகிற புனித பியோ.
புனிதர் பியோ அவர்கள் தனது வாழ்நாளை முழுவதும் இறைவார்த்தையை கேட்டு அதன்படி வாழ்ந்தவர்.
- அவர் தியானம், ஜெபம், ஒப்புரவு அருட்சாதனம் ஆகியவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை கடவுளின் அருளுக்கு நெருங்கச் செய்தார்.
- இயேசுவின் துன்பங்களை தனது உடலில் பெற்றுக் கொண்டு ஐந்துகாயங்களை சுமந்து, இயேசுவின் சிலுவைப்பாதையில் ஒன்றித்து வாழ்ந்தவர்.
- மக்கள் துன்பங்களை அறிந்து, ஆறுதல் கூறி, கடவுளை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றவர்.
புனித பியோ அவர்களின் வாழ்வு நமக்கு நமக்குத் தரும் பாடம்
இறைவார்த்தையை கேட்பது மட்டும் போதாது; அதை வாழ்வாக்க வேண்டும்.
இன்று நம் வாழ்வில் இறை வார்த்தைகள்...
சகோதர சகோதரிகளே,
நாம் அனைவரும் இயேசுவின் குடும்பத்தில் இடம்பிடிக்க விரும்புகிறோம். அவரின் உறவினர்களாக அவரை அறிந்தவராக அவரது சகோதர சகோதரிகளாக நாம் இருக்க விரும்புகிறோம் என்றால் அதற்கான வழி:
- நம் வீட்டை, குடும்பத்தை, இறைவனின் ஆலயமாகமாற்றுவது.
- தினசரி ஜெபத்திலும்,இறை வார்த்தை மற்றும் புனிதர்களை பற்றிய வாசிப்பிலும் ஈடுபடுவது.
- நமக்கு அருகிலுள்ளவர்களுக்கு ஆறுதல், உதவி, அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை நம் செயல்களால் வெளிப்படுத்துவது ...
இவ்வாறு வாழும்போது தான் நாம் இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்குகிறோம்... அப்போதுதான்
“இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்.” என்ற வார்த்தை நிறைவு பெறும் ....
ஞாயிறு, 21 செப்டம்பர், 2025
விளக்கு தண்டின் மீது வைக்கப்பட்ட விளக்காக ...(22.9.2025)
சனி, 20 செப்டம்பர், 2025
கடவுளா...? செல்வமா...?(21.09.2025)
அன்பான சகோதர சகோதரிகளே,
இன்றைய வாசகங்களில் மூன்று முக்கியமான செய்திகள் நமக்கு கிடைக்கின்றன:
1. ஏழைகளை ஒடுக்காதீர்கள் (ஆமோஸ் 8:4-7)
கடவுள் சொல்கிறார்:
"செல்வர்களின் அநியாயச் செயல்களை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்."
இன்று நம்முடைய வாழ்க்கையில் வறியோரைச் சுரண்டாமல், உண்மையுடனும் கருணையுடனும் வாழ வேண்டும்.
2. எல்லோரும் மீட்பைப் பெறவேண்டும் (1 திமொ 2:1-8)
திருத்தூதர் பவுல் நமக்குச் சொல்கிறார்:
- எல்லாருக்காகவும் ஜெபியுங்கள்.
- கடவுள் விரும்புவது: அனைவரும் மீட்பைப் பெற்று, உண்மையை அறிவதையே.
நம் ஜெபங்கள் சுயநலமாக அல்லாமல், உலகமெங்கும் உள்ளவர்களுக்காக இருக்க வேண்டும்.
3. கடவுளுக்கும் செல்வத்துக்கும் இரண்டுக்கும் சேவை செய்ய முடியாது (லூக் 16:1-13)
இயேசு சொல்கிறார்:
"நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது."
செல்வம் நமக்குத் தேவையானது, ஆனால் அது கடவுளை விட மேலானது அல்ல...
4. மத்தேயுவின் வாழ்க்கை...
- வரிவசூலிப்பாளராக இருந்த மத்தேயு, இயேசுவின் அழைப்பை கேட்டவுடன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு பின்தொடர்ந்தார்.
- கடவுள் கொடுத்த எழுத்தாற்றலை நற்செய்தி எழுதுவதற்குப் பயன்படுத்தினார்.
- இறுதியில் நற்செய்திக்காக மரண சாட்சியாகிறார்...
நாமும் நமக்குக் கிடைத்த திறமைகளை கடவுளின் மகிமைக்காக பயன்படுத்தவேண்டும்.
இன்று தூய மத்தேயுவின் விழாவில், நாம் இதயத்தில் தீர்மானங்களை ஏற்றுக் கொள்வோம்:
- அநீதியான செயல்களில் இருந்து விலகுவோம்.
- எல்லோருக்காகவும் ஜெபிப்போம்.
- கடவுளையே ஒரே தலைவராக ஏற்றுக்கொள்வோம்.
- நமக்குக் கொடுக்கப்பட்ட திறமைகளை நற்செய்தி அறிவிப்புக்காகப் பயன்படுத்துவோம்.
அப்பொழுது நம்முடைய வாழ்க்கையும் கடவுளின் மகிமை விளங்கும் கருவி ஆகும்.
வியாழன், 18 செப்டம்பர், 2025
பலன் தருவோம் ...(20.9.2025)
அன்பான சகோதர சகோதரிகளே,
இன்றைய வாசகங்கள் நமக்கு இரண்டு முக்கியமான செய்திகளை தருகின்றன:
- இறைவனின் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடிக்க வேண்டும் (1 திமொத்தேயு 6).
- இறைவார்த்தை விதை போன்றது; அது பலன் தர வேண்டுமெனில் நம் உள்ளம் நல்ல நிலமாக இருக்க வேண்டும் (லூக்கா 8).
1. "குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை கடைப்பிடித்து வா"
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவிடம் சொல்லும் வார்த்தைகள் நமக்கும் ஒரு அழைப்பாகின்றன.
- கிறிஸ்தவர்கள் நம் வாழ்வில் நம்பிக்கையைக் காக்கும் நல்ல சாட்சியாக இருக்க வேண்டும்.
- இயேசு கிறிஸ்து தம் வாழ்க்கையில் உண்மையைப் பேணிச் சாட்சியம் அளித்தார். பொந்தியு பிலாத்துவின் முன்பும் அவர் தனது விசுவாசத்தை விட்டு விலகவில்லை.
- நாமும் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாய் சோதனைகளிலும், சிரமங்களிலும் நம்பிக்கையை விடாமல் இருக்க வேண்டும்.
2. "விதைப்பவர்" உவமை
இயேசு ஒரு விதைப்பவர் நிகழ்வை எடுத்துக் கொண்டு, நம் உள்ளத்தைப் பற்றி பேசுகிறார்.
- வழியோரம் விழுந்த விதை: வார்த்தையைக் கேட்கிறார், ஆனால் சாத்தான் அதை மனதிலிருந்து பறித்து விடுகிறான்.
- பாறைமீது விழுந்த விதை: ஆரம்பத்தில் நம்பிக்கை கொண்டவர்; ஆனால் சிரமம் வந்தவுடன் உடைந்து போகிறார்.
- முட்செடிகளில் விழுந்த விதை: கவலைகள், செல்வ ஆசை, இன்பங்கள் அனைத்தும் வார்த்தையை நெருக்கி, பலன் தராமல் செய்கின்றன.
- நல்ல நிலத்தில் விழுந்த விதை: சீரிய உள்ளத்தோடு வார்த்தையை கேட்டு, அதை காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்.
இன்று இவ்வார்த்தைகள் நமக்கு தருகின்ற அழைப்பு
- என் மனம் எந்த நிலம் போல இருக்கிறது?
- நான் இறைவார்த்தையை கேட்டு, சில நாட்களில் மறந்துவிடுகிறேனா?
- நான் துன்பங்களில் நம்பிக்கையை விட்டுவிடுகிறேனா?
- உலகின் கவலைகள், ஆசைகள், இன்பங்கள் எனது நம்பிக்கையை அடக்குகிறதா?
அல்லது, - நான் இறைவார்த்தையை நல்ல நிலத்தில் பேணி, அதை வாழ்வில் நடைமுறைப்படுத்தி, பலன் தருகிறவர்களுள் ஒருவனாக இருக்கிறேனா?
சிந்திப்போம்... வாழ்வில் நடைமுறை படுத்த முயல்வோம் ...
- நம் ஜெபங்கள், நம் நம்பிக்கை, நம் நல்ல செயல்கள் அனைத்தும் நல்ல நிலமாக நம் உள்ளத்தை தயார் செய்யட்டும்.
- திருப்பலியில் நாம் கேட்கும் இறைவார்த்தை, கேட்டு மறந்து போகாமல்,
வேரூன்றி வளர்ந்து, பலன் தரும் விதை ஆவோம்....
இன்றைய வாசகங்கள் அடிப்படையில் ...
- இறைவனின் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடிக்கவும்.
- இறைவார்த்தையை நல்ல நிலத்தில் விழுந்த விதை போல காக்கவும், பலன் தரவும்....இதயத்தில் உறுதி ஏற்போம் இறைவன் நம்மை நிறைவாக ஆசிர்வதிப்பார் ...
பணி செய்யபாலினம் ஒரு தடை அல்ல (19.09.2025)
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
இன்றைய வாசகங்களில் திருத்தூதர் பவுல் நமக்கு சொல்லுகிறார் – "நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு" என்று. அடுத்ததாக லூக்கா நற்செய்தி நமக்கு நினைவூட்டுகிறது – இயேசுவோடு பன்னிரு திருத்தூதர்கள் மட்டுமல்லாமல், பல பெண்களும் அவரோடு இருந்து தங்கள் உடைமைகளைக் கொண்டு சேவை செய்தார்கள் என்று... இந்த இறை வார்த்தை பகுதிகள் ...இன்று நமக்குத் தரும் செய்திகள்.
1. இயேசுவின் குழுவில் ஆண்கள் மட்டும் அல்ல....
“என் பணி பாலினத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பதை ஏற்று உலகிற்கு எடுத்துரைத்தார் நம் செய்திகளின் வழியாக ... இயேசுவின் வாழ்வை உற்று நோக்குகிற போது மகதலா மரியாள், யோவன்னா, சூசன்னா – இவர்களெல்லாம் இயேசுவோடு நடந்தார்கள். இயேசுவின் பணி வாழ்வில் தங்களால் இயன்ற உதவிகளை முன்வந்து செய்தார்கள்...
2. செல்வ ஆசை vs. சேவை ஆசை
பவுல் சொல்லுகிறார் – “பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர்.”
இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த பெண்கள் தங்கள் வாழ்வில் பொருள் ஆசையை தவிர்த்து சேவை செய்யும் ஆசையை வளர்த்துக் கொண்டு பல்வேறு சேவைகளால் இயேசுவின் பணிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
3. நீதியும் நம்பிக்கையும் – தினசரி பயிற்சியாகட்டும்...
பவுல் இன்றைய வாசகங்கள் வழியாக “விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு.” என்று அழைப்பை விடுகிறார்.
வாழ்க்கை என்றால் எளிதல்ல. சிலர் சொல்வார்கள் – “நம்பிக்கை வைக்கிறேன், ஆனா சோதனைகள் எப்போதும் வந்துகொண்டே இருக்கிறது.”
அதற்கு பதில்: சோதனை இல்லாமல் இருந்தால், நாம் பலவீனமானவர்களாகவே தென்படுவோம். சோதனைகளில் தான் நாம் பலம் பெறுகிறோம் .
4. பணிவு – வெற்றியின் ரகசியம்
நாம் எவ்வளவு தெரிந்தாலும், பணிவு இல்லையெனில் அது சும்மா “Wi-Fi இல்லாத phone” மாதிரி தான்.
அழகானது, விலை உயர்ந்தது – ஆனாலும் பயன் இல்லை.
ஆனால் இயேசுவால் தேர்ந்தெடுத்தவர்கள் – மீனவர்கள், வரி வசூலிப்பவர்கள், பெண்கள் – எல்லோரும் சாமானியர்கள். ஆனால் பணிவோடு இயேசுவைப் பின்தொடர்ந்ததால், உலகையே மாற்றும் ஆற்றல் கொண்டவர்களாக திகழ்ந்தார்கள் ...
எனவே அன்புக்கு உரியவர்களே இயேசு தன் பணி வாழ்வில் பாலினத்தை பார்க்கவில்லை ... ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், யாராக இருந்தாலும் – நீதியும், இறைப்பற்றும், நம்பிக்கையும், மன உறுதியும், பணிவையும் நாடுபவர்கள்தான் ஆண்டவரின் பணியை செய்ய முடியும். எனவே பாலினத்தை அடிப்படையாக வைத்து ஆண்டவரின் பணியை செய்வதிலிருந்து நம்மை நாமே சுருக்கிக் கொள்ளாமல் எப்போதும் இறைவனுக்கு உகந்த பணிகளையும் முன்னெடுத்து இறைவன் விரும்புகிற மக்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் ...
செவ்வாய், 16 செப்டம்பர், 2025
“அன்பிலும், நம்பிக்கையிலும், முன்மாதிரியாய் இருங்கள்”(18.9.2025)
“அன்பிலும், நம்பிக்கையிலும், முன்மாதிரியாய் இருங்கள்”
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
இன்று நாம் கேட்ட வாசகங்களில், இரண்டு மிக ஆழமான உண்மைகள் வெளிப்படுகின்றன.
- திருத்தூதர் பவுல் திமொத்தேயுவிடம் கூறுகிறார் – “உன் போதனையைப் பற்றியும் உன்னைப் பற்றியும் கருத்தாயிரு; அப்பொழுது நீயும் மீட்படைவாய்; உனக்குச் செவிசாய்ப்போரும் மீட்படைவர்” (1 திமொத்தேயு 4:16).
- இயேசு பாவியான பெண்ணைப் பார்த்து கூறுகிறார் – “இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்புகூர்ந்தார்” (லூக்கா 7:47).
நாம் வாழ்விலும் போதனையிலும் தூய்மையாய், அன்பில் செழித்தவர்களாய் இருந்தால் நாமும் மீட்படைவோம்; நம்மைச் சந்திக்கும் மனிதர்களும் மீட்படைவார்கள்.
1. இளைஞனாகிய திமொத்தேயுவின் முன்மாதிரி
- பவுல் திமொத்தேயுவிடம் கூறுகிறார்: “பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை ஆகியவற்றில் முன்மாதிரியாய் விளங்க வேண்டும்.”
- இது கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் சொல்லப்பட்ட செய்தியாக உணரலாம்.
- உலகம் உங்களை “இன்னும் சிறுவர்களாகவும், அனுபவமில்லாதவர்” என்று பார்ப்பதுண்டு. ஆனால் இறைவன் உங்களை நம்பிக்கை, தூய்மை, அன்பு செயல்கள் வழியாகச் சாட்சி சொல்ல அழைக்கிறார்.
- நமது பேச்சு அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
- நமது நடத்தை நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டும்.
- நமது தூய்மை தான் கடவுளின் ஆலயமாக நம்மை நிலைநாட்டும்.
2. பாவி ஆனாலும் அன்பில் செழித்த பெண்
- லூக்கா நற்செய்தியில் பாவியான பெண், இயேசுவின் காலடிகளில் கண்ணீர் சிந்தி, அன்பு காட்டினார்.
- சமூகத்தில் அவளை பாவியானவள் என நிராகரித்தார்கள். ஆனால் இயேசு அவளது அன்பை கண்டார்.
- மனிதர்கள் குற்றம் பார்த்தாலும், இயேசு மனந்திரும்பும் இதயம் மற்றும் அன்பை பார்த்து மீட்பு அளிக்கின்றார்.
- இயேசு சொன்னார்: “உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க.” இப்பகுதி வழியாக இன்று நாம் நமது வாழ்வுக்கான பாடமாக அறிந்து கொள்ள வேண்டியவை ....
- அன்பு: பாவம் எவ்வளவு இருந்தாலும், அன்பு மிகுந்தால் கடவுளின் கருணை பெரிதாகிறது.
- நம்பிக்கை: நம்பிக்கை நம்மை மீட்கிறது; நம்பிக்கை இல்லாமல் மனிதன் வெறுமை.
- போதனை: நம்முடைய வாழ்க்கைதான் எங்கள் போதனை; நாமே எங்கள் நண்பர்களுக்கான நற்செய்தியாக இருக்க முடியும்.
- மீட்பு: நாம் அன்பிலும் நம்பிக்கையிலும் வாழும்போது நாமே மீட்படைவோம்; நம்மைச் சந்திப்பவர்களும் அந்த மீட்சியில் பங்கெடுப்பார்கள்.
அன்பான சகோதர சகோதரிகளே,
- திமொத்தேயுவைப் போல நம்முடைய இளமையில் கூட நம்பிக்கையில் உறுதியாய் நிற்கவேண்டும்.
- தன் குற்றங்களை உணர்ந்து இயேசுவின் கால்நடையில் அமர்ந்திருந்த அந்த பெண்ணைப் போல நம்முடைய பாவங்களை உணர்ந்து மனந்திரும்பி, இயேசுவிடம் அன்பை செலுத்த வேண்டும்.
- அப்பொழுது இறைவன் நமக்கு “உமது நம்பிக்கை உம்மை மீட்டது” என்று கூறுவார்.
இவ்வாறு அன்பிலும் நம்பிக்கையிலும் நாம் நாளும் வளர இறையருள் வேண்டும்.
திங்கள், 15 செப்டம்பர், 2025
நம் வாழ்வு எதில் வேரூன்றப்பட வேண்டும் ...(17.9.2025)
அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே,
நமது அடித்தளம்...
திருத்தூதர் பவுல் கிறிஸ்துவின் மறைநிகழ்வுகளை மிகச் சிறிய சொற்களிலே மிகப் பெரிய இரகசியமாக வெளிப்படுத்துகிறார்:
- மானிடராய் வெளிப்பட்டவர்,
- தூய ஆவியால் மெய்ப்படுத்தப்பட்டவர்,
- வானதூதருக்குத் தோன்றியவர்,
- பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டவர்,
- உலகினரால் நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ளப்பட்டவர்,
- மாட்சியோடு விண்ணேற்றம் பெற்றவர்.
இவை அனைத்தும் நமது நம்பிக்கையின் அடித்தளமாகும்.... கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல், விண்ணேற்றம்—all these form the mystery of faith.
திருச்சபை அறிவுறுத்துகிற இது அனைத்தும் நம் வாழ்வின் அடித்தளமாகும்...ஒவ்வொரு நம்பிக்கையாளரும் இந்த உண்மையை தம் வாழ்வில் ஏற்று சான்று பகரும் போது, கிறிஸ்துவின் வாழ்வில் நாமும் பங்கு பெறுகிறோம் என்பது உண்மையாகிறது.
மக்கள் ஏற்றுக்கொள்ளாத செய்தி
இன்றைய நற்செய்தியில் (லூக்கா 7:31-35) இயேசு சொல்கிறார்: “நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை.”
அதாவது, கடவுளின் தூதர்கள் – யோவான், இயேசு – மக்கள் மனம் திரும்ப அழைத்தபோதும் அவர்கள் செவிகொடுக்கவில்லை. யோவானைப் பார்த்து “பேய் பிடித்தவன்” என்றார்கள். இயேசுவைப் பார்த்து “பெருந்தீனிக்காரன், குடிகாரன்” என்றார்கள்.
உண்மையைப் பார்ப்பதற்கு பதில், அவர்கள் தங்கள் சிந்தனைக்கேற்ற குற்றச்சாட்டை மட்டும் பார்த்தார்கள்.
இன்றைய காலத்திலும் இதே நிலை தொடர்கின்றது. திரு அவை நம் வாழ்வுக்கான உண்மையைப் போதிக்கிறது; நற்செய்தி நம்மை மனமாற்றத்துக்கு அழைக்கிறது; ஆனால் பல நேரங்களில் நாம் செவிமடுக்காமல் போய்விடுகிறோம்.
- நம் வாழ்க்கையில் திரு அவை உணர்த்தும் மறை உண்மையை ஏற்றுக்கொள்ளுகிறோமா?
- கிறிஸ்துவின் சாட்சியாக வாழ்கிறோமா?
- உலகின் குரல் கேட்டு தவறிப்போகிறோமா? சிந்திப்போம் ....
இயேசு சொல்கிறார்: “ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று.”
அன்புள்ளவர்களே, நம் நம்பிக்கை வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல. அது நம் செயல்களில், அன்பில், கருணையில், நேர்மையில் வெளிப்பட வேண்டும். அதுவே நம்மை உண்மையிலேயே கிறிஸ்துவின் சீடர்களாக ஆக்கும்.
எனவே “நமது கிறிஸ்தவர் நம்பிக்கை உயர்வானது” எனும் பவுலின் வார்த்தைகள், கிறிஸ்துவை வாழ்வின் மையமாக வைக்க நம்மை அழைக்கின்றன.
நாம் உலகம் எதைச் சொன்னாலும், குற்றஞ்சாட்டினாலும், கிறிஸ்துவின் மறை உண்மையை நம் வாழ்வில் ஏற்று இயேசுவுக்கு சாட்சியாய் வாழ்ந்து காட்டுவோம்.
அப்படியிருக்கையில், நம் வாழ்க்கை இறைவனுக்கு உகந்த வாழ்வாக அமையும் ...இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்...
என்றும் அன்புடன்
அருள் பணி ஜே. சகாயராஜ்
திருச்சி மறை மாவட்டம்
ஞாயிறு, 14 செப்டம்பர், 2025
நம்முடைய வாழ்வு மற்றவர்களுக்கு சான்றாகட்டும் (16.9.2025)
அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே,
இன்று நாம் வாசிக்க கேட்கவிருக்கும் இறை வார்த்தைகள் இரண்டு முக்கியமான செய்திகளை நமக்கு வழங்குகின்றன.
ஒன்று — சபையில் தலைமை, சேவை, பொறுப்பு பற்றிய பவுலின் அறிவுரை;
மற்றொன்று — இயேசுவின் உயிர்தரும் பரிவு பற்றிய நற்செய்தி.
1. சபைத் தலைவர்களின் அழைப்பு (1 திமொத்தேயு 3:1-13)
திருத்தூதர் பவுல் தெளிவாகக் கூறுகிறார்: சபையை நடத்தும் பொறுப்பு என்பது ஒரு சாதாரணப் பொறுப்பு அல்ல, அது ஒரு மேன்மையான பணி.
- தலைவர்கள் குறைசொல்லுக்கு ஆளாகாதவர்கள் ஆக வேண்டும்.
- கட்டுப்பாடு, அறிவுத் தெளிவு, விருந்தோம்பல், கற்பிக்கும் ஆற்றல் ஆகியவற்றில் உறுதியானவர்கள் ஆக வேண்டும்.
- குடும்பத்தை நன்றாக நடத்துவோர் மட்டுமே கடவுளின் சபையையும் கவனிக்க முடியும்.
- திருத்தொண்டர்கள் கூட உண்மையிலும், கண்ணியத்திலும், நம்பிக்கையின் மறைபொருளைக் காத்து நடக்க வேண்டும்.
இதனால் இப்பகுதி நமக்கு உணர்த்துவது சபையில் உள்ள ஒவ்வொரு பொறுப்பும் அதிகாரத்திற்காக அல்ல, சேவைக்காக. உண்மையான தலைமை என்பது — பணிவுடனும், பரிவுடனும், நேர்மையுடனும் நடத்தும் சேவையே என்பதை இதயத்தில் நிறுத்திக் கொள்ள நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம் ...
2. இயேசுவின் உயிர்த்தரும் பரிவு (லூக்கா 7:11-17)
நயீன் ஊரில் நடந்த நிகழ்வு, இயேசுவின் இதயத்தைக் காட்டுகிறது.
- கணவன் இல்லாத கைம்பெண் தன் ஒரே மகனை இழந்தார்.
- அந்தத் துயரத்தைப் பார்த்த இயேசு, “அழாதீர்” என்று சொன்னார்.
- இறந்த இளைஞனை உயிர்த்தெழச்செய்தார்.
- மக்கள், “கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லி கடவுளைப் புகழ்ந்தனர்.
இப்பகுதி நமக்கு உணர்த்தும் செய்தி ... இயேசு உயிரைக் கொடுக்கும் ஆண்டவர். அவர் நம் துக்கத்தையும், வலியையும், தனிமையையும் புறக்கணிப்பதில்லை. மாறாக, எப்போதும் பரிவு கொண்டு நம்மை பாதுகாத்து வருகிறார்.
இந்த இரண்டு வாசகங்களிலும் ஒரு பொதுவான கருத்து உள்ளது:
- சபைத் தலைவர்கள் மக்களுக்கு ஆன்மீக வாழ்வு கொடுக்க அழைக்கப்படுகிறார்கள்.
- இயேசு, நயீன் இளைஞனை உயிர்ப்பித்தது போலவே, தலைவர்களும் கிறிஸ்துவின் பரிவுடன் மக்களை எழுப்பும் பணியை செய்ய வேண்டும்.
ஒரு நல்ல தலைவன் — சொற்பொழிவால் மட்டுமல்ல, உயிர்ப்பிக்கும் செயல்களால் மக்களை உயிர்ப்பிக்க வேண்டும்.
எனவே அன்பானவர்களே,
இன்று நம்மில் ஒவ்வொருவரும் நாம் சார்ந்திருக்கின்ற துறவற சபையிலும் குடும்பங்களிலும் பொறுப்போடு வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.
- குடும்பத்தில் பெற்றோரே தலைவர்களாக இருக்கிறார்கள்.
- துறவற சபையில் யாரேனும் ஒருவர் பொறுப்பில் இருக்கிறார்கள்.
- ஆனால் சமுதாயத்தில் நாம் ஒவ்வொருவரும் சிறிய தலைவர்களே.
அதனால் நாம் இயேசுவைப் போல பரிவோடு நடந்து, பவுல் சொன்னதுபோல் நற்பண்புகளில் நிலைத்து இருந்தால், நம்முடைய வாழ்வு மற்றவர்களுக்கு உயிர்த்தரும் சாட்சியாக மாறும்.
வியாழன், 11 செப்டம்பர், 2025
துயரங்களை நம்பிக்கையோடு ஏற்போம்...(15.9.2025)
அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே,
இன்றைய திருவிழா அதிதூய வியாகுல அன்னை திருவிழா. கன்னி மரியாள் தம் வாழ்நாளில் அனுபவித்த துயரங்களை நாம் நினைவு கூர்ந்து, அவற்றில் இருந்து நம் வாழ்வுக்கான பாடங்களை கற்றுக்கொள்ளும் நாளாகும்.
“எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென கடவுள் விரும்புகிறார்.” (1 திமொத்தேயு 2:4)
இந்த உண்மையை முதலில் தம் வாழ்வில் அனுபவித்தவர் மரியாள். ஏனெனில், கடவுளின் மீட்பு திட்டத்தில் அவர் தாயாக அழைக்கப்பட்டார். ஆனால் அந்த அழைப்பு மகிழ்ச்சியோடு மட்டுமல்ல, மிகுந்த துயரங்களுடனும் இணைந்திருந்தது.
மரியாளின் ஏழு வியாகுலங்கள்
திருச்சபை மரியாளின் ஏழு துயரங்களை நினைவுகூர்கிறது. அவை:
- சிமியோனின் இறைவாக்கு – “உமது உள்ளத்தையும் ஓர் வாள் ஊடுருவும்” என்ற செய்தி.
- எகிப்துக்குத் தப்பிச் செல்வது.
- 12 வயது இயேசு கோவிலில் காணாமல் போனது.
- சிலுவையை சுமந்து சென்ற இயேசுவை பார்க்கும் வேதனை.
- சிலுவையின் அடியில் தம் மகன் இறக்கின்றதை காணுதல்.
- சிலுவையிலிருந்து இறங்கிய இயேசுவின் உடலை மடியில் தாங்குதல்.
- இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்வது.
ஒவ்வொரு துயரமும் மரியாவின் இதயத்தை நொறுக்கிய வியாகுலங்களே. ஆனால் அந்த துயரங்களின் நடுவில் கூட மரியாள் இறைத் திருவுளத்தில் நம்பிக்கை வைத்து நின்றார்.
ஆம் அன்புகளே,
இன்றைய உலகிலும் நம்முடைய வாழ்விலும் பல துயரங்கள், சோதனைகள் இருக்கின்றன.
- குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்,
- நோய்கள்,
- அன்பானவர்களை இழக்கும் வேதனைகள்,
- வேலை, படிப்பு, வாழ்வாதாரம் தொடர்பான சிரமங்கள்…
இந்த அனைத்தும் நம்மை பலமுறை உடைத்துவிடுகிறது. ஆனால் வியாகுல அன்னை நமக்குச் சொல்வது:
“துயரத்தின் நடுவிலும் கடவுளின் திட்டம் நிறைவேற்ற வேண்டும். துயரத்தை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வதே மீட்பின் பாதை.”
மரியாளின் முன்மாதிரி
- மரியாள் துயரத்தில் கூட அமைதியாகவும் பொறுமையுடனும் இருந்தார்.
- எதுவும் புரியாத போதிலும் இறைவனின் திட்டத்தில் நம்பிக்கை வைத்தார்.
- சிலுவையின் அடியில் நின்றது, விசுவாசத்தில் அமைதியான உறுதியின் உச்சம்.
நாம் அனைவரும் நமது துயரங்களில் மரியாளை நோக்கி, அவரைப் போல பொறுமையுடன் நம்பிக்கையுடன் நிற்க வேண்டும்.
அன்புகளே,
நாம் வியாகுல அன்னையின் பிள்ளைகள். அவருடைய மன்றாட்டின் மூலம், துயரங்களை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டு, கடவுளின் திட்டத்தில் வாழ்வோம்.
புதன், 10 செப்டம்பர், 2025
திருச்சிலுவை உற்று நோக்குவோம் ...(14.9.2025)
“மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்” (யோவான் 3:14)
அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே,
இன்று தாய் திரு அவை திருச்சிலுவையை நினைவு கூற நமக்கு அழைப்பு விடுக்கிறது ... திருச்சிலுவை கிறிஸ்தவ நம்பிக்கையின் இதயமாகும். சிலுவை வெறும் துன்பத்திற்கும் அவமானத்திற்கும் அடையாளமல்ல; அது மீட்ப்பின் சின்னமும், கடவுளின் அன்பின் சிகரமும் ஆகும்.
1. உயர்த்தப்பட்ட வெண்கலத் தூண் – உயிருக்கு வழிகாட்டியது
எண்ணிக்கை நூலில் நாம் வாசிக்கலாம்:
இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் கடவுளுக்கு எதிராக முறையிட்டார்கள். அப்போது கொள்ளிவாய்ப் பாம்புகள் அவர்களைத் தாக்கின. ஆனால் கடவுள், வெண்கலப் பாம்பை கம்பத்தில் உயர்த்தும்படி மோசேயிடம் கட்டளையிட்டார். அதை நோக்கியவர்கள் உயிர்பெற்றனர்.
இப்பகுதி நம்பிக்கையின் அடிப்படையில் நம் வாழ்வு அமைகிற போது உயிர் பெற முடியும் என்பதை உணர்ந்து கொள்ள வலியுறுத்துகிறது...
மோசே உற்று நோக்கச் சொன்னபோது அவர் சொன்னதை அனைவரும் நம்பினர் அந்த நம்பிக்கையோடு உற்று நோக்கினார்கள் உயிர் பிழைத்தார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள இன்றைய இரவு வார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது.
2. கிறிஸ்து – தாழ்மையால் உயர்ந்தவர்
இதையே இரண்டாம் வாசகத்தில் பிலிப்பியருக்கான திருமுகத்தில் பவுல் சொல்லுகிறார்.
இயேசு, “தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று, சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்தார்.”
இந்தத் தாழ்மையே அவரை உயர்வுக்கு இட்டுச் சென்றது.
நாம் உலகில் பெருமை, புகழ், ஆடம்பரத்தில் உயர்ந்திட நினைக்கிறோம். ஆனால் உண்மையான உயர்வு, சிலுவையை ஏற்ற இயேசுவின். தாழ்மையில்தான் உள்ளது என்று உண்மையை உணர்ந்து செயல்பட நாம் அழைக்கப்படுகின்றோம்.
சிலுவை – கடவுளின் அன்பின் அடையாளம்
இதையே என்ற எனச் செய்தி வாசகத்தில் இயேசு கூறுகிறார்...
“மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்.”
அந்த சிலுவை உயர்வு, தண்டனையல்ல, மாறாக மீட்பின்ன் பாதை.
- சிலுவை, பாவத்தை குணப்படுத்துகிறது.
- சிலுவை, நம் வாழ்வின் துன்பங்களுக்கு அர்த்தம் தருகிறது.
- சிலுவை, கடவுளின் அன்பின் உச்ச சின்னமாகிறது:
“உலகை இவ்வளவு அன்பு கூர்ந்த கடவுள், தம் ஒரே மகனை அளித்தார்.” (யோவான் 3:16) என்ற வார்த்தைகள் அதற்கு சான்று பகர்கின்றன ...
இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் பெறுகின்ற அழைப்பு ...
அன்புக்குரியவர்களே ,
- சிலுவையை நம்முடைய வாழ்விலும் ஏற்றுக்கொள்வோம்.
- சோதனை, துன்பங்கள், அவமானம் என எதுவாக இருந்தாலும், சிலுவை வாழ்வின் வழியாக உள்ளது என்பதை நினைவில் கொள்வோம்.
- சிலுவை நம்மைத் தாழ்மையிலும் சேவையிலும் வாழ அழைக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம் ...
எனவே திருச்சிலுவையை நினைவு கூறும் இந்நன்னாளில் திருச்சிலுவையை நாமும் பார்க்க வேண்டும் — வெண்கலப் பாம்பைப் பார்த்த இஸ்ரயேலர் போல.
ஆனால் சிலுவையில் வெளிப்பட்ட அன்பைப் நாமும் பற்றிக்கொண்டு நம் வாழ்வை அடுத்தவருக்காக நம்மை முழுவதும் அர்ப்பணிக்கின்ற ஒரு வாழ்வாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
சிலுவையை ஏற்ற கிறிஸ்து நம்மை மீட்டார்; நாமும் சிலுவையை ஏற்றுக்கொண்டு அவருக்குச் சாட்சியமாய் வாழ்வோம்...
என்றும் அன்புடன்
அருள்பணி ஜே. சகாயராஜ்
திருச்சி மறை மாவட்டம்
சாட்சிய வாழ்வை நம் வாழ்வாக மாற்றிட...(13.9.2025)
சாட்சிய வாழ்வை நம் வாழ்வாக மாற்றிட...
அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே,
இன்று தாய் திரு அவையோடு இணைந்து நினைவு கூறுகின்ற புனித யோவான் கிறிசோஸ்தோம் அவர்களின் வாழ்வும், இன்றைய வாசகங்களும் ஒரு உண்மையை நமக்கு நினைவூட்டுகின்றன...
கிறிஸ்துவை அறிந்தவர், அவர் வார்த்தைகளை மட்டும் கேட்பதல்ல; அவற்றை வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.
1. கிறிஸ்து வந்த நோக்கம் பற்றிய பவுலின் பார்வை...
திருத்தூதர் பவுல் தெளிவாகச் சொல்லுகிறார்:
“பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.”
அந்தப் பாவிகளுள் தானும் முதன்மையானவர் என்று பவுல் தன்னைத் தாழ்த்திக் கூறுகிறார்.
இங்கே அவர் தன் பலத்தைப் புகழவில்லை; கடவுளின் கருணையையே வெளிப்படுத்துகிறார்.
இப்பகுதி என்று நமக்குத் தரும அழைப்பு ... நம்முடைய பலவீனங்களை ஒப்புக்கொண்டு, கடவுளின் கருணையோடு புதிய மனிதர்களாய் நாம் பிறப்பெடுக்க வேண்டும்...
இப்போதைய பிறப்புக்கு மிகவும் அவசியமான ஒன்று அதையே என்ற எனர் செய்தி வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது ...
2. வார்த்தை மட்டும் போதாது
இயேசு நம்மை சவாலுடன் கேட்கிறார்:
“நான் சொல்வதைக் செய்யாமல் என்னை ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்?” (லூக் 6:46)
ஆண்டவரின் வார்த்தையை கேட்பதோடு நிறுத்தாமல், அதன்படி வாழ வேண்டும்.
நல்ல கனிகள் தரும் நல்ல மரம் போல,
நம் வாழ்க்கையும் நற்செயல்கள் மூலம் நம்பிக்கையை நாம் வெளிப்படுத்த வேண்டும்.
புனித யோவான் கிறிசோஸ்தோம் – நம் முன்மாதிரி
இன்று நாம் தான் திரு அவையோடு இணைந்து நினைவு கூறுகின்ற புனித யோவான் கிறிசோஸ்தோம்
- சிறந்த மறைபோதகர், “தங்கவாய்” (Golden Mouth) போதகர் என்று இவரை அழைப்பதுண்டு.
- கல்வியிலும் தவ வாழ்விலும் சிறந்தவர்.
- ஆடம்பர வாழ்க்கையைத் துறந்து, ஏழைகளுக்குச் சேவை செய்தவர்.
- அநீதிக்கு முன்பாக அஞ்சாமல் உண்மையைப் பேசியவர்.
அதற்காகவே அரசர்களால் துன்புறுத்தப்பட்டு நாடுகடத்தப்பட்டார்.
ஆனால் கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வாக்கி கிறிஸ்தவ வாழ்வுக்கு சான்று பகர்ந்தவர் .
இன்றைய இறைவாத்தை நமக்குத் தரும் அழைப்பு...
- கிறிஸ்துவின் வார்த்தையை கேட்டு மட்டும் நகர்ந்து விடாமல் அதை செயலில் நிறைவேற்ற வேண்டும்.
- வாழ்வில் சவால்களும் துன்பங்களும் வந்தாலும், உண்மையை விட்டுவிடாமல் பின்பற்றி வாழ வேண்டும்.
- ஏழை, தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நிற்கும் தைரியம் நம் வாழ்வில் மேலோங்க வேண்டும்.
எனவே அன்பிற்குரியவர்களே,
பவுலைப் போல தாழ்மையுடன் கடவுளின் துணையை நம்பி,
இயேசுவின் வார்த்தையைச் வாழ்வாக்கி,
புனித யோவான் கிறிசோஸ்தோம் போல சாட்சிய வாழ்வை நம் வாழ்வாக மாற்ற முயல்வோம் ...
செவ்வாய், 9 செப்டம்பர், 2025
பிறருக்குப் பாதையாக...(12.9.2025)
அன்பான சகோதரர் சகோதரிகளே,
இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்...
இன்றைய வாசகங்கள் பவுலின் வாழ்வையும் இயேசுவின் போதனையையும் இணைத்து பார்க்க நமக்கு அழைப்பு விடுக்கிறது
1. பவுலின் வாழ்வும்...
திருத்தூதர் பவுல் தன் வாழ்க்கையை நினைவுகூர்கிறார்.
- ஒருகாலத்தில் அவர் கிறிஸ்துவை பழித்துரைத்தார், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார்,
- ஆனால் ஆண்டவர் அவர்மேல் இரக்கம் காட்டி அவரை ஆட்கொண்டார்.
- கிறிஸ்துவோடு இணைந்த நம்பிக்கையிலும் அன்பிலும் அவர் மாற்றப்பட்டார்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது: எவ்வளவு பெரிய தவறுகள் நாம் செய்து இருந்தாலும் நம்மை ஆண்டவர் விட்டுவிடுவதில்லை. நாம் மனம் திரும்பும்போது அவர் நம்மைத் தம் கரங்களில் தாங்கிக் கொள்கிறார்.
2. இயேசுவின் போதனையும்
இயேசு கூறுகிறார்:
- பார்வையற்றவன் பார்வையற்றவனை வழிநடத்த முடியாது.
- பிறரின் குறையைச் சுட்டிக்காட்டும் முன், நம் குறைகளைப் பார்க்க வேண்டும்.
இதன் பொருள்: நாம் நம் வாழ்வை சுத்திகரிக்காமல், பிறருக்குக் கற்பிக்க முடியாது.
நாம் சுயபரிசோதனை செய்யாமல், பிறரைக் குறைசொன்னால், அது போலித்தனம் ஆகிவிடும் என்பதை வலியுறுத்துகிறது.
இரு வாசகங்களையும் இணைக்கும் செய்தி
பவுல் தன் குற்றங்களை உணர்ந்து, தன்னை மாற்றிக்கொண்டார். அதனால் தான் அவர் பிறருக்கு ஒளியாக இருக்க முடிந்தது.
அதேபோல், நாமும் முதலில் நம்மையே நமது தவறான செயல்களில் இருந்து சரி செய்து கொண்டால், பிறருக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.
அன்புள்ளவர்களே,
இன்றைய வாசகங்கள் நமக்கு சொல்லுவது:
- பாவத்தில் இருந்தாலும் ஆண்டவர் இரங்குகிறார் (பவுலைப் போல).
- நம்மை திருத்தினால் தான் பிறருக்குப் பாதையாக இருக்க முடியும் (இயேசுவின் போதனைபோல).
இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது நடைமுறை வாழ்வில் நாம் சில காரியங்களை பின்பற்றலாம் ....
- வீட்டில், சமுதாயத்தில், திருச்சபையில் — பிறரை குறை பேசுவதற்குப் பதிலாக, நம்முடைய குறைகளை நீக்க முயலெல்லாம் .
- குறைகளைப் பார்க்காமல் அன்பைப் பார்ப்பதும், இதன் வழியில் அடுத்தவரை வழி நடத்துவதுமே கிறிஸ்தவத்தின் அடையாளம் இதை உணர்ந்து நம் வாழ்வில் அன்பை பிரதிபலிப்போம் ...
எழு! ஒளிவீசு!... 4.1.2026
“எழு! ஒளிவீசு!” – காணிக்கைத் திருநாளின் மறையுரை.... அன்பான சகோதரர் சகோதரிகளே, இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, ஒரு சக்திவாய்ந்...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...