ஞாயிறு, 6 மார்ச், 2022

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண....(7.3.2022)

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது.

என்று வள்ளுவர் கூறுவார். 
நாம் ஒருவருக்கு உதவி செய்வதால் நமக்கு என்ன கிடைக்கும் என்பதை எதிர்பாராமல் ஒருவருக்கு செய்கின்ற உதவி, மற்றும் நாம் உதவி செய்கின்ற நபர் பெரியவரா? சிறியவரா? என்ற வேறுபாடு எதனையும் எண்ணாமல் கைமாறு கருதாமல் ஒருவர் செய்கின்ற உதவி கடலை விட மிகப் பெரிய பயனை விளைவிக்கும் என்று குறிப்பிடுகிறார்.

   இன்றைய உலகில்  பணம், பொருளை  செலவு செய்து தனக்கு நற்பெயரைத் தேடுவதில் ஆர்வம் கொள்ளும் மானுடச் சமூகம், தன் அருகில் இருக்கும் சின்னஞ்சிறியவர்களை கண்டு  கொள்ளாது இருக்கிற சூழல், இன்று அதிகம்.  சின்னஞ்சிறிய என் சகோதர சகோதரிகளுக்கு செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள் என இன்றைய வாசகத்தின் வழியாக இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார். 

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. 
    என்னும் பழமொழிக்கு ஏற்ப நாமும் குழந்தை உள்ளம் கொண்டவர்களாக குழந்தை மனநிலையில் நமது அண்டை அயலாரின் தேவைகளை கண்டுணர்ந்து உதவிகள் செய்யக் கூடிய மனித
 நேயம் கொண்ட மணிதர்களாக ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணக் கூடியவர்களாக நான் வாழ்ந்திட இன்றைய நாளில் இத்திருப்பலியில் இணைந்து ஜெபிப்போம்.

சனி, 5 மார்ச், 2022

சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்...(6.3.2022)

இறைவன் இயேசுவில் அன்பு உறவுகளே..... 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ....
 

இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே இந்த தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளவிருக்கின்ற ஜெபம் தவம் தர்மச் செயல்கள் அனைத்திலும் நாம் சந்திக்கக்கூடிய சோதனைகளுக்கு மத்தியிலும் தளரா மனதோடு நிலைத்திருந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பிற்கு நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கின்றன.


 இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய இன்ப துன்பங்களில் தங்களோடு உடன் இருந்து தங்களை வழிநடத்தி, மீட்டு வந்து, பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டில் குடியேற வைத்த இறைவனது வல்ல செயல்களை நினைவுகூர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள். இந்த இஸ்ரயேல் மக்களைப் போலவே தான் நாமும் நமது வாழ்வில் பல நேரங்களில் பலவிதமான இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உட்பட்டிருந்த சூழ்நிலையில், முன்பின் தெரியாத பல நபர்கள் வழியாக இறைவன் நம் துன்பத்தில் நமக்கு துணை நின்று நம் துன்பத்தை நம்மிடமிருந்து அகற்றியுள்ளார். பல நேரங்களில் அந்த இறைவனை நாம் கண்டுகொண்டது உண்டு. ஆனால் சில நேரங்களில் துன்பம் மறைந்தவுடன் துணைநின்ற இறைவனையும் மறந்தவர்களாக நாம் இருந்திருக்கலாம்.

     இன்றைய முதல் வாசகம் இறைவனை நம்மோடு உடனிருந்த நேரங்களை நினைவுகூர நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது வாழ்வில் நமக்கு துணை நின்ற இறைவனை நினைவுகூர்ந்து அவர் செய்த நன்மைகளுக்கு நன்றி கூற இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.

அது போலவே இன்றைய இரண்டாம் வாசகம் நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. நம்புகிறவருக்கு எல்லாம் கூடும் என்ற விவிலிய வார்த்தைகளுக்கு ஏற்ப நம்பிக்கையில் நாம் நாளும் வளரக்கூடிய மனிதர்களாக இருக்க நமக்கு அழைப்பு தருகிறது. தவக்காலத்தில் இந்த 40 நாட்களில் நாம் மேற்கொள்ளுகின்ற தவ முயற்சிகளை நாம் பின்பற்ற இயலுமா? இயலாதா? என்ற எண்ணங்கள் உள்ளத்தில் எழுகின்ற போதெல்லாம், முடியும் என்ற எண்ணத்தோடு ஜெபத்திலும் தவத்திலும் தரும செயலிலும் நாம் ஈடுபட இந்த நாள் நமக்கு வலியுறுத்துகிறது.

நல்லதை செய்ய எண்ணும் பொழுது வாழ்வில் பலவிதமான தடைகளை சந்திக்க நேரும் என்பதற்கு இயேசுவின் வாழ்வு ஒரு முன் உதாரணமாக அமைகிறது.

      இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் தனது வாழ்வில் மூன்று சோதனைகளை எதிர் கொள்கிறார். இந்த மூன்று சோதனைகளும் தொடக்க காலத்தில் ஆதாம்-ஏவாள்  வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளுக்கு இணையானவையே ....

தொடக்க நூலில் நாம் வாசிக்கலாம், ...உண்ணக்கூடாது என இறைவன் உரைத்த மரத்தின் கனியை உண்ண பாம்பு அவர்களைத் தூண்டியது .... பாவத்தை குறித்து, அந்த மரத்தின் கனியை குறித்து விவிலியத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது ...

தொடக்க நூல் 3:6

அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும், கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும், அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்.


மரத்தின் கனி 
சுவையானதாக , 
கண்களுக்கு களிப்பூட்டுவதாக, 
விரும்பத்தக்கதாக இருந்தது என விவிலியம் நமக்கு எடுத்துரைக்கிறது...

இந்த மூன்று செயல்பாடுகளும் இயேசுவின் சோதனையிலும் இடம்பெறுகின்றன.  

முதலில் கல்லை அப்பமாக மாற்றச் சொன்ன போது உணவு... சுவை...இதை மையப்படுத்திய சோதனையாக அது அமைந்தது. உண்பதற்கு சுவையானதாகவும் இருந்தது. எனது முதல் பெற்றோர் விலக்கப்பட்ட கனியை உண்டு பாவம் செய்தனர். ஆனால் இயேசுவோ பசியாய் இருந்த நிலையிலும் உணவினால் மட்டும் மனிதன் உயிர் வாழ்வதில்லை என்பதை எடுத்துரைக்கக் கூடியவராய் இருக்கின்றார்.

 முதல் பெற்றோர் விலக்கப்பட்ட கனி கண்களுக்கு களிப்பூட்டுவதாக இருக்கிறது என எண்ணி அதனை உண்டு பாவம் செய்தார்கள். ஆனால் உலகச் செல்வங்களையெல்லாம் அலகை இயேசுவுக்கு காட்டியபோது அவர் அதற்கு மயங்கவில்லை... மாறாக நிலையற்ற செல்வங்களை விட நிலையானவர் இறைவன் ஒருவரே.  அவர் ஒருவருக்கே பணிந்து நட என அலகைக்கும் பாடம் கற்பித்தார்.

ஆதிப் பெற்றோர் அறிவைப் பெற விரும்பத்தக்கதாக இருக்கிறது என எண்ணி, விலக்கப்பட்ட கனியை உண்டு பாவம் செய்தார்கள். அதுபோலவே அலகையும் இயேசுவிடம்,  மேலிருந்து கீழே குதி, உன்னைத் தாங்கும்படி தம் தூதர்களுக்கு அவர் கட்டளையிடுவார் என விவிலியத்தில் உள்ளது என்பதை மேற்கோள்காட்டி, அறிவை பயன்படுத்தி ஆண்டவரைத் தக்க வைக்க முயன்றபோது கூட இயேசு அதை விரும்பாத ஒரு நபராக, "உன் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்க வேண்டாம்" என விவிலியத்தில் உள்ளதை மேற்கோள்காட்டி அலகையை வெற்றி கொள்கிறார்.


ஆதிப் பெற்றோரைப் போலவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் சோதிக்கப்பட்டார். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சோதனைகளின் போது சோதனைகளை சாதனைகளாக மாற்றினார். நாமும் இந்த 40 நாட்கள் தவக்காலத்தில் நமக்கும்- கடவுளுக்கும், நமக்கும்- நமது செயல்களுக்கும், நமக்கும்- பிறருக்கும் இடையேயான உறவை குறித்து இன்னும் ஆழமாக சிந்தித்து, முறிந்து போன உறவுகளை முறைப்படுத்திக் கொள்ள முயலுகின்ற இந்த தவக்காலத்தில் பலவிதமான தடைகளை சந்திக்க நேரிடலாம். தடைகளை சந்திக்கின்ற போது மனம் தளராது, துணிவோடு இயேசுவைப்போல அதனை எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் பெற்ற மனிதர்களாக நீங்களும் நானும் இருக்க வேண்டும் என்பதை இன்றைய நாள் இறைவார்த்தை நமக்கு விளக்குகிறது.

இறைவன் தருகின்ற இந்த வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் இருத்தியவர்களாய்... வாழ்வில் இடர்களை சந்திக்கின்ற நேரங்களிலெல்லாம் 

1பேதுரு 5:8-11 கூறுவதுபோல,  

அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது.

அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?

எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. 

                      என்ற இறை வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாய் சோதனைகளை சாதனைகளாக மாற்றிக்கொண்டு,  ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடியவர்கள் நாம் என்பதை நமது செயல்களால் வெளிக்காட்டிட இறையருளை இந்த திருப்பலி வழியாக தொடர்ந்து வேண்டுவோம்.

வெள்ளி, 4 மார்ச், 2022

இயேசுவும் - அழைப்பும்....(5.3.2022)

இயேசுவும் - அழைப்பும்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள் இறைவார்த்தையின் வழியாக  பாவி என கருதப்பட்ட  லேவியை கடவுள் தன்னை பின்பற்ற அழைப்பது குறித்து நாம் வாசிக்க கேட்டோம்.  அன்றைய யூத சமூகத்தில் இஸ்ரேல் மக்களை ரோமையர்கள் ஆட்சி செய்து வந்தார்கள்.  உரோமையர்கள் மக்களிடமிருந்து வரி வசூலிப்பதற்காக சிலரை நியமித்தார்கள். அவர்கள் மக்களிடமிருந்து நியாயமற்ற முறையில் வரியை வசூலித்து அதை உரோமை அரசுக்கு தரக் கூடியவர்களாக இருந்தார்கள். இத்தகைய பணியினை செய்யக்கூடிய மனிதர்களை அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் திருடர்களையும் கொள்ளையர்களையும் வெறுப்பது போல இந்த வரி வசூலிப்பவர்களை வெறுத்து ஒதுக்கினார்கள்.  நியாயமான முறையில் வரி வசூலிக்கக் கூடிய மனிதர்களுக்கு சில இடங்களில் சிலைகளை வைத்து இருந்த அதே மக்கள் அநியாயமான முறையில் வரி வசூலிக்க கூடிய நபர்களை வெறுக்கக்கூடியவர்களாகவும் அவர்களைப் பாவி என முத்திரை குத்தக் கூடியவர்களாக இருந்தார்கள் என வரலாறு நமக்கு கற்பிக்கிறது.

     இந்த வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையில் நோக்குகின்ற போது இந்த லேவி எனப்படக்கூடிய மத்தேயு,  பாவியாக சித்தரிக்கப்பட்ட ஒரு நபர்.  இது அவர் அநியாயமான முறையில் மக்களிடம் வரியை வசூலித்தார் என்பதை வெளிப்படுத்துகிறது.  மக்களின் பார்வையில் பாவி என கருதப்பட்ட ஒருவரை இயேசு தேடி செல்லக்கூடிய ஒரு மனிதராக இருந்தார். அவரை தன்னை பின்பற்ற வருமாறு அழைத்தார்.  அவரது வீட்டிற்குச் சென்று அவரோடு அமர்ந்து உணவருந்தினர். இதை பார்த்த மக்கள் அனைவரும் இயேசுவின் செயலில் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள். இவர் பாவிகளோடு உறவு கொள்கிறார் என இயேசுவின் செயலை குற்றப்படுத்தினார்கள்.  ஆனால் இயேசு அவர்களுக்கு நான் நேர்மையாளரை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன் எனக் குறிப்பிட்டார்.

     கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே சமமானவர்கள். நாம் எந்நிலையில் இருந்தாலும் கடவுள் நம்மை தன் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.  அவரது பிள்ளைகளாகிய நாம் பல நேரங்களில் நமது ஊனியல்புகளின் அடிப்படையில் தவறான வழிகளில் செல்லுகிற போது கூட நம்மை  கண்டித்து திருத்தக்கூடிய ஒரு நபராகத் தான் கடவுள் நம்முள் இருக்கிறாரே ஒழிய,  நாம் செய்கிற செயல் தவறு எனக் கருதி நம்மை விட்டு நகர்ந்து நிற்பவர் அல்ல கடவுள். 


      அந்த அடிப்படையில் தான் பாவி என மக்கள் கருதுகின்ற அளவிற்கு தன் செயல்களை அமைத்துக் கொண்டிருந்த மத்தேயுவை இயேசு தேடிச் சென்றார். அவரை தனது சீடராக மாற்றனார். 
.

             இன்று இந்த இறைவார்த்தைப்பகுதி தருகின்ற நமது வாழ்வுக்கான பாடம் என்ன? என சிந்திக்கின்ற போது, இந்த தவக்காலத்தில் நாம் நமது செயல்களை குறித்து சிந்திக்கிறோம்.  பல நேரங்களில் நாம் பல இடங்களில்  நமது வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது பல நேரங்களில் நமது ஊனியல்புகளின் அடிப்படையில் சிந்திக்கின்ற போது,  நாமும் இந்த மத்தேயுவைப் போல, பாவிகளாக இச்சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

நாம் செய்த குற்றங்கறைகளை
நினைவு கூர்ந்து,  மனம் வருந்தி மனமாற்றம் பெற்ற மத்தேயுவைப் போல நாமும் மனமாற்றம் பெற வேண்டும் என்பது தான் இந்த தவக்காலம் நமக்கு வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடம்.  தவக்காலத்தில் நாம் மேற்கொள்கின்ற தவ முயற்சிகள் வழியாகவும், அறச்செயல்கள்  வழியாகவும்,  நாம் செய்து வந்த தவறுகளை நாம் கண்டு கொள்ளவும், அதை சரி செய்து கொள்ளவும்,  சரி செய்து கொண்டவர்களாய் ஆண்டவர் இயேசுவின் பின்னால் அவரை நம்பி பயணம் செய்யக்கூடியவர்களாகிய சீடர்களாக மாற, இறைவன் அழைப்பு தருகிறார்.  ஏதோ இறைவன் அழைக்கிறார் என்ற சொல்லியவதைக்  கேட்டுவிட்டு, நகர்பவர்களாக நாம் இல்லாமல்,    நமது செயல்களை இன்றைய நாளில் அமைதியில் அமர்ந்து சிந்தித்துப் பார்த்து, சரி செய்ய வேண்டியவற்றை சரி செய்து இறைவனின் பாதையில் பயணம் செய்ய  நம்பிக்கையில் ஊனறியவற்றை கொண்டவர்களாய், இறையருளை வேண்டுவோம் இந்த திருப்பலி வழியாக.

வியாழன், 3 மார்ச், 2022

நமது வாழ்வும்...நோன்பும்...(4.3.2022)

நமது வாழ்வும்...நோம்பும்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் வாசகங்கள் நோன்பை குறித்து சிந்திக்க நமக்கு அழைப்பு தருகின்றன.
   யோவானுடைய சீடர்கள் இயேசுவினிடத்தில் நாங்கள் அதிகமாக நோன்பு இருக்க உமது சீடர்கள் நோன்பு இருக்கவில்லை எனக் கூறுகிறார்கள்.  யோவானுடைய சீடர்கள் நோன்பு இருப்பதற்கான பின்னணி என்ன? என ஆராய்கின்ற போது, யோவான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூழலில் இந்த உரையாடல் நடக்கிறது. எனவே, தங்களுடைய வழிகாட்டியாக இருந்த திருமுழுக்கு யோவான் சிறையில் இருப்பதால் வருத்தத்தோடும், முகவாட்டத்தோடும், நோன்பினை மேற்கொள்ளக் கூடியவர்களாக யோவானுடைய சீடர்கள் இருந்தார்கள். 

     அவர்களைப் போல இந்த நோன்பு முயற்சிகளை இயேசுவின் சீடர்கள் பின்பற்றவில்லை, என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்தது. நாம் செய்கின்ற ஒரு செயலை அடுத்தவரும் செய்தாக வேண்டும் என எண்ணுவது ஏற்புடைமை ஆகாது. ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் இருந்து நல்ல செயல்களை, தர்மச் செயல்களை, தவச் செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார்.

      இன்றைய வாசகங்களில் இயேசு,  தன்னுடைய சீடர்கள் நோன்பு இருக்க மாட்டார்கள் எனக் கூறவில்லை. மணமகன் தங்களோடு இல்லாதபோது அவர்களும் நோன்பு இருப்பார்கள் என்பதை வலியுறுத்துகிறார். 

 சபை உரையாளர் புத்தகம் மூன்றாம் அதிகாரம் 1 ஆம் வசனம் கூறுகிறது,  

"ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு"  என்று.

 அவ்வார்த்தைகளின் அடிப்படையில் ஆண்டவர் இயேசுவின் அன்பை உணர்ந்த நாம் அவரை விட்டுப் பிரிந்து போன நேரங்களை நினைத்துப் பார்ப்பதற்கான ஒரு காலமாகவே இந்த தவக்காலம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.  இந்தத் தவக்காலத்தில் உண்ணாதிருப்பதன் வாயிலாக நாம் கடவுளின் உடனிருப்பை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.  நாம் செய்கின்ற உண்ணா நோன்பானது,  இறைவனுக்கும் நமக்கும் இடையேயான உறவை குறித்து சிந்திக்க நமக்கு வழி வகுக்கிறது.  இறைவனது உடனிருப்பை, நாம் தவறிய நேரங்களை,  நினைவுகூர, நம்மை ஒறுத்து அவரோடு உள்ள உறவை சரி செய்து கொள்ள இந்த தவக்காலம் நமக்கு அழைப்புத் தருகிறது.  இவ்வார்த்தைகளின் அடிப்படையில் நாம் ஆண்டவரோடு கொண்டுள்ள உறவு குறித்து சிந்திப்போம்.  உண்ணாநோன்பு இருப்போம்.  

     நாம் நோன்பு என்ற பெயரில் உண்ணாது இருக்கின்ற உணவை,  இல்லாதவரோடு பகிர்வோம்.  நம்மை நாம் ஒறுத்து செய்கின்ற தவ முயற்சிகளால் தர்மச்  செயல்களுக்கு வழிவகுப்போம்.  நாம் உண்ணாத உணவை மற்றவரும் உண்ணக்கூடாது   என எண்ணுவதை விட, நாம் உண்ணாத உணவை மற்றவர் உண்ண,   தர்ம செயல்களை மேற்கொள்ள, இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.  அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய்  நம்மை நாம் சரி செய்து கொள்ள முயல்வோம்.

புதன், 2 மார்ச், 2022

தன்னலம் துறக்க!...(3.3.2022)

தன்னலம் துறக்க!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
        இயேசுவைப்பின்பற்ற வேண்டுமானால் ....
ஒருவர் தன்னலம் துறக்க வேண்டும்,
 நாள்தோறும் சிலுவையைத்தூக்க வேண்டும். 

தன்னலம் என்பது தன்னை முன்னிறுத்துவது. தன் நலனுக்கான காரியங்களை மட்டும் செய்வது. தன் நலனுக்காக  மற்றவர்களைப் பயன்படுத்துவது. தனக்கு எந்த துன்பமும் வரக்கூடாது, தான் மட்டும் நன்றாக இருந்தால் போதுமானது, மற்றவர்களைப்பற்றிய கவலையும், அக்கறையும் இல்லாத மனநிலை தன்னலம். 

இயேசுவைப் பின்பற்ற வேண்டுமானால் இந்த தன்னலத்தை துறக்க வேண்டும். அதாவது, தன் ‘நலம்’ துறந்து மற்றவர் நலன் காக்க வேண்டும். 

இயேசுவைப் பின்பற்ற  ஒவ்வொருநாளும் நாம் சிலுவையைத் தூக்க வேண்டும். 

இயேசுவின் சீடனாக வாழ  சிலுவையைச் சுமப்பதைத் தவிற வேறு வழி இல்லை. இயேசுவுக்காக வாழ்வதே அச்சிலுவை. இயேசுவின் போதனையின்படி வாழ்வதே அச்சிலுவை. இயேசுவின் போதனை விசித்திரமான போதனை அல்ல, மனிதத்துக்கு முரணான போதனை அல்ல. மனிதன் தன் நல்வாழ்வுக்காக கடைபிடிக்க வேண்டிய அன்றாட வாழ்க்கை நடைமுறை.
 
    நமது வாழ்வில்   தினமும் தனித்தனி சிலுவைகள் போல பல பிரச்சனைகள்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை என்ற சிலுவை தொடர்கிறது.
 தினமும் நம் வாழ்வின் சுமைகளை மகிழ்வோடு ஏற்று சுமக்க வேண்டும் , அதுவே உண்மைச் சீடனின் பண்பாகும். 

தன்னலத்தை துறந்து நமது சிலுவைகளை நாமே சுமந்து கொண்டு ஆண்டவர் காட்டுகின்ற பாதையில் பயணம் செய்து அவரது உயிர்ப்பு பெருவிழாவிற்கு நம்மை நாம் தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொள்ள இறைவனிடத்தில்  அருள் வேண்டுவோம் 


செவ்வாய், 1 மார்ச், 2022

தவக்காலம்....(02.02.2022)

தவக்காலம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  
இன்று நாம் தவக்காலத்தினை துவங்குகிறோம்.  தவக்காலத்தின் துவக்கமாக இன்று  நமது நெற்றியில் பூசப்படுகின்ற சாம்பலானது  மண்ணில் இருந்து விழுந்த நாம் மண்ணுக்கு உரியவர்கள் என்பதை நினைவூட்டுகிறது.  இந்த தவக்காலம் என்பது துக்கத்தின் காலமா? மகிழ்ச்சியின் காலமா? என்ற கேள்வி உள்ளத்தில் எழுமாயின்  இது இரண்டும் கலந்த ஒரு காலம்.  இங்கு தீமைகளையும் நமது நல்ல செயல்களையும் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து நாம் தீயவற்றை விலக்கி, நன்மையானவற்றை நமது வாழ்வில் தொடர நமக்கு நாமே சுய ஆய்வு செய்து கொண்டு வாழ அழைப்பு தருகின்ற ஒரு காலம்.

       இந்த ஒரு காலத்தில் ஆண்டவரின் இரக்கத்தை நாம் அதிகமாக உணர அழைக்கப்படுகிறோம்.  அந்த ஆண்டவரோடு ஜெபத்திலும், தவத்திலும், தர்மச் செயல்கள் மூலமாகவும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே திருஅவை நமக்கு வலியுறுத்துகிறது.
 இதையே இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.  

        ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை பின்பற்றக்கூடிய நாம் ஜெபத்திலும், தவத்திலும், தர்ம செயலிலும் ஈடுபட வேண்டும். இறைவனோடு நாம் கொண்டுள்ள உறவை இன்னும் ஆழமாக சிந்தித்து பார்க்க, அவரோடு உரையாட, அவரது உரையாடலுக்கு நாம் செவி கொடுக்க, இந்த காலம் நமக்கு ஒரு அழைப்பினை தருகிறது.  தவ முயற்சிகளை நாம் மேற்கொண்டு,  அந்த தவ முயற்சிகள் மூலமாக,  நாம் இந்த சமூகத்தில் எப்படி வாழ்கிறோம்? நம்மைச் சுற்றி உள்ளவர்களோடு எப்படி இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்? ஆண்டவரின் வார்த்தைகளை நமது வாழ்வாக மாற்றிக் கொள்ள நாம் எடுத்த செயல்பாடுகள் என்ன? நாம் புறம் தள்ளிய நமது  சுய விருப்பு வெறுப்புகள் எவை? என்பதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து, நாம்  கடவுள் விரும்பாதவைகளை நமது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொண்டிருப்போமாயின்,  அவைகளை எல்லாம் விலக்கி ஒரு தவ வாழ்வை மேற்கொள்ள, இந்த காலம் ஒரு அழைப்பினை தருகிறது. அது போல  தர்மச் செயல்களில் நாம் நிறைந்திருக்க வேண்டும் என்பது இறைவன் விரும்புகிற ஒன்று.  இயேசு சென்ற இடமெல்லாம் நன்மை செய்துகொண்டே சென்றார் என விவிலியத்தில் நாம் வாசிக்கிறோம்.  நாமும் இயேசுவைப் போல கண்ணில் காணும் மனிதர்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்களாக, தேவையில் இருப்போரின் தேவையை நிவர்த்தி செய்யக் கூடியவர்களாக, நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிரக் கூடிய  மனிதர்களாக அறச் செயல்களில் அனுதினமும் ஈடுபட அழைப்பு தருகின்ற  காலமே இந்த தவக்காலம். 

    புதிதாக துவங்கியுள்ள இந்த தவக்காலத்தில் நாம் இறைவனோடு ஜெபத்திலும், நம்மோடு தவத்திலும், அயலாரோடு தர்ம செயலிலும் ஈடுபட்டு வாழ அழைக்கப்படுகிறோம்.  மற்றவர்கள் அறிய வேண்டும் என்ற எண்ணத்தோடு இவைகளை முன்னெடுத்தல் ஆகாது என்பதை இன்றைய வாசகங்கள் வலியுறுத்துகின்றன.  நாம் செய்கின்ற இந்த அறச்செயல்கள்  ஆண்டவர் மட்டுமே அறியக் கூடியதாக இருக்க வேண்டும்.  நாம் அறச்செயல்களை நமது செயல்களாக மாற்றிக் கொண்டு,  ஆண்டவரின் வார்த்தைகளை நமது வாழ்வாக மாற்றிட இந்த நாளில் அழைக்கப்படுகிறோம். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய்,  இந்த தவக்காலத்தில் இறைவனோடு உள்ள உறவில் இன்னும் ஆழமாக நாம் வளர,  நமது வாழ்வில் அனுதினமும் செயலாற்றுகின்ற அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நாம் இன்னும் அதிகமாக கண்டுகொள்ள இந்த நாளில் அழைக்கப்படுகிறோம்.  அழைக்கும் இறைவனின் குரல் கொடுத்தவர்களாய் நாம் இறைவனின் அன்பில் நாளும் வளர,   நம்மைச் சுற்றி உள்ளவர்களோடு நல்லுறவில் நாம் நமது வாழ்வை தொடர இறையருள் வேண்டி இணைந்து இந்த திருப்பலியில் ஜெபிப்போம்.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

வார்த்தைகளை வாழ்வில் செயலாக்குவோம்...(28.02.2022)

 வார்த்தைகளை வாழ்வில் செயலாக்குவோம்...




    நாம் இந்த உலகத்தில், தகுந்த தயாரிப்போடு, தகுந்த முறையில், ஆண்டவரது வார்த்தைகளை வாழ்வாக்கும் போது மட்டுமே நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும். 

    ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வாக்காமல், வெறுமனே கடமைக்காக, பத்தோடு ஒன்று பதினொன்று, அத்தோடு நான் ஒன்று என்று, நாம் வழிபாடுகளிலும் அறச் செயல்களிலும் ஈடுபடுபவர்களாக இருந்தால், கண்டிப்பாக நிலை வாழ்வு என்பது எட்டாக் கனியாகவே இருக்கும், என்று கூறினாராம். இன்றைய நாள் வாசகத்திலும் கூட நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள ஒருவன் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். கட்டளைகளைக் கடைபிடி என்றார். கடைபிடிக்கிறேன் என்றான்.

    ஆனால் உன்னிடம் இருப்பதை எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு என்ற போது, அந்த அறச்செயல்களில் ஈடுபட அவனது மனம் இடம் கொடுக்காததால், அவன் திரும்பிச் சென்று விட்டான். இன்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு கற்பித்த இறையாட்சியின் விழுமியங்களை, வாழ்வில் பின்பற்றத் தயங்குகிறோம். அதனை செயல்படுத்துவதற்கு மனம் இல்லாதவர்களாக இச்சமூகத்தில் பயணிக்கிறோம். 

    ஆண்டவரது வார்த்தைகளை இச்சமூகத்தில் செயலாக்கப்படுத்த இயலாத போது, நிலை வாழ்வு என்பது எட்டாக் கனியாகவே இருக்கும் என்ற பாடம் இன்று நமக்குத் தரப்படுகிறது. ஆண்டவரது வார்த்தைகளை வாழ்வில் செயலாக்குவோம். நிலை வாழ்வை உரிமையாக்குவோம்.





சனி, 26 பிப்ரவரி, 2022

வார்த்தை வாழ்வாகட்டும்....(27.2.2022)

வார்த்தை வாழ்வாகட்டும்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. 
யோவான் 1:1


 வார்த்தையான இறைவன் அனுதினமும் நம்மோடு பல வழிகளில் உரையாடுகிறார்.... 


கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
எபிரேயர் 4:12 நாம் வாசிக்கிறோம்...
 இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளை குறித்தும் நமது உள்ளத்து எண்ணங்களை குறித்தும் சிந்திக்கவும் சீர்தூக்கி பார்க்கும் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.  

U
உள்ளத்தின் நிறைவை வாய் பேசும். (லூக்கா 6:45) என்ற விவிலிய வார்த்தைகளுக்கு ஏற்ப,  ஒரு மனிதனின் எண்ணங்களே அந்த மனிதனை இச்சமூகத்தில் எத்தகைய குணம் கொண்ட  மனிதன் என்பதைப் பிரதிபலிக்கிறது.  

நமது வார்த்தைகளைக் கொண்டே நாம் அறியப்படுவோம் என்பதை இன்றைய முதல் வாசகம் சல்லடையில் சலிக்கின்ற  போது தூசி தங்குவது போல நமது சொற்களில் இருக்கும் மாசுக்களும் நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் மூலம் வெளிப்படுகின்றன என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றன.


எலும்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பதற்கிணங்க நேரத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப மாற்றி மாற்றி பேசக்கூடிய, மாசுபடிந்த வார்த்தைகளை உதிர்க்கும்  போக்கானது இன்று மனிதர்கள் மத்தியில் வளர்ந்துக் கொண்டே வருகிறது... 


திருவள்ளுவர் குறிப்பிடுவதுபோல ...

 "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.

தீயினால் சுட்ட புண் ஆறிவிடும் ஆனால் நாவினால் உண்டாக்கிய வழிகள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.

நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் இந்த சமூகத்தில் வெறும் வார்த்தைகளாக மட்டுமே இருந்து விடுவது அல்ல. நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் இந்த உலகத்தில் பலவிதமான மாற்றங்களை உருவாக்குகின்றன. வார்த்தைகளால் நாம் ஒருவரை குணப்படுத்தவும் முடியும் இரணப்படுத்தவும் முடியும் ...

பல நேரங்களில் போர்க்கருவிகள் தருகின்ற வலியை விட வார்த்தைகள் தருகின்ற வலியே தாங்க இயலாத ஒன்றாக உள்ளது. 


 நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் அழிவை உண்டாக்காமல் ஆன்மாவை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும்....என்பதையே இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடமாக உள்ளது.

நாம் பின்பற்றுகின்ற இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு இதைத்தான் நமக்கு வலியுறுத்துகின்றன. இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது அவரது வார்த்தைகள் இந்த மண்ணில் இருந்த பலருக்கு ஆறுதலைத் தந்தது... சமூகத்தால் புறம்தள்ளப்பட்ட அவர்களுக்கு புத்துணர்வைத் தந்தது...பாவி என்று ஓரம் கட்டப் பட்ட மக்களை சமூகத்தோடு ஒன்றிணைக்க செய்தது ...   ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை போலவே நமது வார்த்தைகளும் அனுதினமும் அமைய வேண்டும் ... 


 ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். (லூக்கா 6:44) இவ்வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வார்த்தைகளாள் நாம் யாரை இந்த சமூகத்தில் பிரதிபலிக்கிறோம் என்பது அறியப்படுகிறது. நமது வார்த்தைகள் ஆண்டவர் இயேசுவை இந்த சமூகத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் இந்த நாளின் மையச் செய்தியாக உள்ளது....

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை போலவே இந்த சமூகத்தில் நாம் நமது வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக பல நேரங்களில் பார்வையற்றவர் பார்வையற்ற இன்னொருவருக்கு வழி காட்டுவது போலவும், தன் கண்ணில் மரக்கட்டையை வைத்துக்கொண்டு அடுத்தவர் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்க முயல்பவர் போலவும் தான் பல நேரங்களில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்...

பல நேரங்களில் இறைவனது வார்த்தைகளை நமது வார்த்தைகளாக மாற்றி கொண்டு பயணிப்பது என்பது எளிதான காரியமல்ல என நாம் என்னலாம்....  
சுவாமி விவேகானந்தர் கூட தான் இறைவனோடு உரையாடியதாக இவ்வாறு குறிப்பிடுவார்கள்.... 



நான் இறைவனிடம் எனக்கு வலிமை தாரும் என்று கேட்டேன்.  ஆனால் அவர் கொடுத்ததோ நெருக்கடியான சூழ்நிலைகள். 

 நான் எனக்கு மகிழ்ச்சியைத் தாரும் எனக் கேட்டேன். அவரோ மகிழ்ச்சியற்ற மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்.


அறிவைத் தாரும் எனக் கேட்டேன். அவரோ வாழ்வின் புதிர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். 


எனக்கு நிம்மதியை தாரும் எனக் கேட்டேன். ஆனால் அவரோ பிறருக்கு உதவச் சொன்னார்.

சலுகைகளை தாரும் எனக் கேட்டேன். அவரோ வாய்ப்புகளை வழங்கினார். 


நான் விரும்பியது எதையும் கடவுள் எனக்கு தரவில்லை. ஆனால் எனக்கு தேவையானதை எல்லாம் இறைவன் தந்தார் என்ற விவேகானந்தரின் வார்த்தைகளுக்கு ஏற்ப பல நேரங்களில் நாம் நினைப்பதற்கு மாறாக பலவற்றை இறைவன் நமது வாழ்வில் நமக்கு தரலாம்  ஆனால் நாம் எல்லா சூழ்நிலையிலும் இறைவனது வார்த்தைகளை வெளிப்படுத்த மனிதர்களாக இச்சமூகத்தில் விளங்க வேண்டும் ...

எனவே இந்த நல்ல நாளில்  நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளை குறித்து சிந்திக்கவும், சீர்தூக்கிப் பார்க்கவும் இந்த நாளில் இறைவன் அழைப்பு தருகிறார் ...என்பதை உணர்ந்து கொள்வோம்.  இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து இனிய வார்த்தைகளால் இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் இன்புற்று வாழ இனிய வார்த்தைகளை நமது வார்த்தைகளாகிக்கொண்டு பயணிக்க இறையருள் வேண்டுவோம்.



இயேசுவைப்போல பயணிப்போம்...(27.02.2022)

 

இயேசுவைப்போல பயணிப்போம். 



    மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் மரணம் என்பதை சந்தித்தே தீர வேண்டும். நாம் பிறந்த நாளில் இருந்து மரணத்தை சந்திக்கும் நாளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தில் எவ்வாறு வாழ்கிறோம் என்று சிந்திக்கின்ற பொழுது, ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களாக இருந்தாலும், பலரிடத்திலும் பல விஷயங்கள் பொதுவாக இருக்கின்றன. குறிப்பாக தன்னைவிட அடுத்தவர்கள் குறைவானவர்கள் என்ற எண்ணம். அந்த அடிப்படையில்தான் பல நேரங்களில் பல அறிவுரைகளை வழங்குபவர்களாக இருக்க ஆசைப்படுகிறார்கள். வழங்கும் அறிவுரைகளை அவர்கள் பின்பற்றுகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பும் பொழுது, இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கப்பட்டது போல, தன்னுடைய கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்காது, அடுத்தவன் கண்ணில் இருக்கக்கூடிய மரக்கட்டையை எடுப்பவர்களாகத் தான் நம்மில் பலர் இருந்து கொண்டிருக்கிறார்கள். 

    ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், இந்த சமூகத்தில் நாம் எதையெல்லாம் விதைக்க விரும்புகிறோமோ, அதை எல்லாம் நாம் முதலில் விதைக்க கூடியவர்களாக இருப்போம். நமது வாழ்வில், நமது சொல்லில், நமது செயலில், அதனை வெளிப்படுத்துவோம். அதன்பிறகு அடுத்தவர் வாழ்விலும் அவை வெளிப்பட வேண்டும் என்பதை நாம் கற்பிக்கலாம். பொதுவாக வார்த்தைகளில் கற்பிப்பதை விட, செயல்களில் ஈடுபடுவது தான் சிறந்தது எனக் கூறுவார்கள். நாம் நேர்மையாளர்களாக இருந்தால், நம்மைப் பார்க்கின்றவர்கள் நேர்மையாளர்களாக உருவாவார்கள். நாம் ஒரு காரியத்தில் நேர்மையானவர்கள் என்ற பெயரைப் பெறும் பொழுது, நம்மை நாடி வருபவர்கள் நம்மிடம் நேர்மையற்ற முறையில் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு வரமாட்டார்கள். இவர் நேர்மையானவர். எனவே நாமும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவ்வாறு தான் இந்த உலகத்தில் இருந்தார். தான் எதையெல்லாம் செய்ய வேண்டும்? இந்த உலகம் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என அறிவித்தாரோ, அதனை அவர் வெறும் வார்த்தைகளாக அறிவித்து விட்டுச் செல்லவில்லை. அவர் அறிவித்தவைகளை தன் வாழ்வில் கடைப்பிடித்தார். அவர் எதை எல்லாம் கற்பித்தாரோ, அதை எல்லாம் வாழ்வாக வாழ்ந்து காண்பித்தார். 


    எனவே தான் அந்த ஆண்டவர் இயேசுவை பலரும் பின்பற்றக் கூடியவர்களாக இன்று மாறி இருக்கிறார்கள். நாமும் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றுகிறோம். ஆனால் பல நேரங்களில் நாம் அனைவரும் நம்மிடம் இருக்கும் குறைகளை சரி செய்து கொள்ளாது, நமது குறைகளை மறைத்து, பிறரின் குறைகளை பெரிதுபடுத்தக் கூடியவர்களாகத் தான் இருக்கிறோம். அவ்வாறு செயல்படாது, பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இந்த காலங்களிலே, நாம் இந்த சமூகத்தில் நல்ல மனிதர்களாக இயேசுவைப்போல பயணிப்போம். 




வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

குழந்தை மனம் கொண்டவர்களாய்....(26.02.2022)

 

குழந்தை மனம் கொண்டவர்களாய்....




    சிறு குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இந்த சமூகத்தில் ஏராளம். சிறுவர்கள் என்றால் எதுவும் தெரியாதவர்கள் என்று நாம் கூறுவது உண்டு. இன்னும் வளரவில்லை, வளர்ந்த பிறகு கூறு, என்று கூறி அவர்களை மட்டப்படுத்துவதும் உண்டு. ஆனால் சிறு பிள்ளைகளை ஆண்டவர் இயேசு உயர்வாக கூறுகிறார். அவர்களை தன்னிடம் வரவழைக்கின்றார். அவர்களை ஏற்றுக் கொள்ளக் கூறுகின்றார். ஏனென்றால் அவர்களிடத்தில் காணப்படக் கூடிய பண்பு நலன்கள், நாளுக்கு நாள் வளர வளர பெரிதாகின்ற நம்மிடம் மறைந்து போகின்றது. 


    சிறுவயதில் நம்மிடம் இருந்த பல நற்பண்புகள், நாம் வளர்ந்த பிறகு நம்மிடமிருந்து மறைந்து போகின்றன. அவை மறைந்து போகக் கூடியது அல்ல. மாறாக, உனக்குள் புதைந்துள்ள உனது இயல்பைக் கண்டு கொள் என்ற பாடத்தை உணர்த்தும் வண்ணமாகத் தான் சிறுபிள்ளைகளை ஆண்டவர் இயேசு தன்னிடம் வரவழைத்து, அவர்களிடம் இருந்து பாடம் கற்பிக்க அழைக்கின்றார். 


    சிறுபிள்ளைகள் தன்னலம் கருதாது தன்னிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். சிறுபிள்ளைகள் கோபப்பட்டாலும் அதனை மறந்து அனைவருடனும் இணைந்து விளையாடக் கூடியவர்களாக இருப்பார்கள். சிறுபிள்ளைகள் எளிதில் தன்னைக் காயப்படுத்தியவர்களை  மறந்து மன்னித்து விட்டு, அவர்களோடு நட்பு பாராட்டுவதை விரும்புவார்கள். 


    நாமும் வயது ஆக ஆக நம்மிடம் இருக்கும் இத்தகைய நற்பண்புகளை எல்லாம் புதைத்துவிட்டு, நாம் பகைமையையும் கசப்பு உணர்வுகளையும் மட்டுமே முதன்மைப்படுத்தி உறவுகளிடம் இருந்து பிரிந்து வாழ்கின்றோம். ஆனால், அனைத்தையும் புறம்தள்ளி இணைந்து வாழ்ந்த சிறு குழந்தைகளைப் போல, நாமும் இப்போதும், குழந்தை மனம் கொண்டவர்களாய் வாழ இறைவன் அழைக்கின்றார். அவரது அழைப்பை உணர்ந்து கொண்டு குழந்தை மனம் கொண்டவர்களாய் சமூகத்தில் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொண்டு இணைந்து வாழ இறையருள் வேண்டுவோம்.




வியாழன், 24 பிப்ரவரி, 2022

இணைந்து வாழ...(25.02.2022)

 இணைந்து வாழ...


    


    நாளுக்குநாள் விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டிருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில்ஆண்டவர் இணைந்து வாழ இன்றைய வாசகங்கள் வழியாக அழைப்பு தருகிறார்.


    கடவுள் ஆணும் பெண்ணுமாக படைத்தார் அவர்களை ஒருவரோடு ஒருவர் இணைத்து வைத்தார் அந்த இணைப்பில் பலவிதமான கருத்து வேறுபாடுகள் முரண்பாடுகள் இருந்தாலும் அனைத்திற்கு மத்தியிலும் இணைந்து இச்சமூகத்தில் வாழவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. 

    கடவுள் இணைந்திருப்பதை தான் விரும்புகிறார், தனித்திருப்பதை அல்ல. நாம் ஆண்டவரோடு இணைந்து இருக்க வேண்டும். இச்சமூகத்தில் நாம் அடுத்தவரோடு இணைந்திருக்க வேண்டும். கணவன் மனைவியோடு இணைந்திருக்க வேண்டும். மனைவி கணவனோடு இணைந்திருக்க வேண்டும். பெற்றோர் பிள்ளைகளோடும், பிள்ளைகள் பெற்றோரோடும் இணைந்திருக்க வேண்டும். 

    இணைந்து வாழ்வதில் பலவிதமான இன்னல்கள் வந்தாலும் அனைத்தையும் புறந்தள்ளி, தனித்து வாழ்வதை தவிர்த்து, இணைந்து, இன்புற்று, ஒருவர் மற்றவரை புரிந்து கொண்டு, ஒருவர் மற்றவரின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய இயேசுவின் பணியாளர்களாய், ஒருவர் மற்றவரை தாங்கக் கூடியவர்களாக இச்சமூகத்தில் உருவாக்கிட இறையருளை வேண்டுவோம்.




Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...