வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

திறந்த மனதோடு உண்மையை ஏற்போம்

திறந்த மனதோடு உண்மையை ஏற்போம்

“உண்மை உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32)

அன்புக்குரியவர்களே ,

நாம் இன்று சிந்திக்கப்போகும் தலைப்பு “திறந்த மனதோடு உண்மையை ஏற்போம்” என்பதாகும்...  இத்தலைப்பை நாம் விரிவாக  புரிந்துகொள்ள புனித லொயோலா இஞ்ஞாசியார் அவர்களின் வாழ்க்கையை உற்று நோக்குவோம்....

1. உண்மையை ஏற்க ஒரு மனம்:

இஞ்ஞாசியார் தனது இளமை காலத்தில் உலகப் புகழையும் வீரத்தையும் விரும்பியவர். போரில் காயமடைந்தபோது அவரது வாழ்வில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. தனது மீட்புக் காலத்தில் ஆன்மீக நூல்களை வாசித்ததினால், உலகப் புகழ் வெறும் பொய்மையே என்பதை உணர்ந்து, உண்மையான வாழ்வுக்கு அவர் திரும்பினார் .

அவர் மனதை திறந்து வைத்ததால்தான் இறை வார்த்தையின்  வெளிச்சம் அவரை மாற்றியது. இதுவே உண்மையை ஏற்கும் திறந்த மனதின் ஆரம்பம்.

2. உள்மன உறுதி – உண்மைக்கு இணையாக வாழும் துணிவு:

இஞ்ஞாசியார் உலகத்தின் பாராட்டிற்காக அல்ல; இறைவனுக்கு மட்டுமே வாழத் தீர்மானித்தார். சிரமங்கள், தவிப்புகள், அழுகைகள் – இவையெல்லாம் இருந்தபோதும், அவர் உறுதியுடன் இதை வார்த்தையின் அடிப்படையில்  உண்மையை பின்பற்றி நடந்தார்.

உண்மையை ஏற்கும் மனம் என்பது உண்மையாக  வாழும் மனதாக மாற வேண்டும். அப்படி இருந்தால்தான் அது உண்மையான ஏற்றுக்கொள்பாகும்.

3. உண்மையை பகிரும் மனம்:

இஞ்ஞாசியார் தம் வாழ்வையே ஒரு அறிவு பள்ளியாக மாற்றினார். இவர் தொடங்கிய யேசு சமூகம் – Jesuits – உலகெங்கும் கல்வி, ஆன்மீகம், சமூகநீதி ஆகியவற்றில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இது அவர் உண்மையை தனக்குள்ளே வைத்துக்கொள்ளாமல், பிறருடன் பகிர்ந்ததினால்.உருவான மாற்றம் என உற்று நோக்கலாம் ...

இன்றைய நம்மையும் ஆண்டவர் அழைக்கிறார்:

  • நம் குற்றங்களையும், பிழைகளையும் உண்மையாக ஏற்க.
  • நம் மனதை திறந்து, இறைவனின் வார்த்தைக்கு  இடமளிக்க.
  • பிறருடன் நம் அனுபவங்களை பகிர்ந்து, அவர்களையும் உண்மையின் வழியில் நடத்த உறுதிகளை ஏற்று இந்த நாளை இனிய நாளாக மாற்றலாம் ...

அன்புக்குரியவர்களே ,
உண்மை எப்போதும் சவாலை தருவதாக இருக்கும். ஆனால் புனித இஞ்ஞாசியார் போல் நாம் மனதை திறந்து வைத்தால், அந்த உண்மை நம்மை மாற்றும். நம்மை விடுவிக்கும். நம்மை தூய்மைப்படுத்தும்.

வாழ்வின் எந்த கட்டத்திலும் நாம் உண்மையை எதிர்கொண்டு வாழத் துணிந்தால், இறைவனோடு நெருக்கமாக இருக்கிறோம் என்பதற்கே அது சான்றாகும்.

அதனால்தான், இஞ்ஞாசியாரைப் போல நாம் சொல்லிக்கொள்வோம்

"எல்லாம் ஆண்டவருடைய மகிமைக்காகவே!" 

என்றும் அன்புடன் 

அருள்பணி  ஜே. சகாயராஜ் 

திருச்சி மறைமாவட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...