செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

இறைவன் நம்மை வழி நடத்துகிறார்...(2-8-2022)

இறைவன் நம்மை வழி நடத்துகிறார்...(2-8-2022)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 கற்பனைக்கு அடக்க இயலாத கடவுளைப் பற்றி இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம். 

       இன்றைய நாள் முதல் வாசகத்தின் வாயிலாக இஸ்ராயேல் மக்கள் தவறிய வாழ்வை வாழ்ந்த போது பலவிதமான துன்பங்களின் வழியாக அவர்கள் செல்லுகின்ற பாதை தவறு என்பதை சுட்டி காண்பித்து, மீண்டுமாக இந்த மக்களை தம்மை நோக்கி அழைத்து வரக்கூடிய கடவுளாக இறைவன் இருப்பதை நாம் உணர முடிகிறது. கண்டிக்கின்ற கடவுள் ஆகவும் அவர் தென்படுகின்றார். அதேசமயம் இரக்கத்தை காட்டி பாசத்தை பொழிகின்ற ஒரு தந்தையான இறைவனாகவும் அவர் செயல்படுவதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. 

           பல நேரங்களில் நாம் கடவுளின் அன்பை புறக்கணித்துச் செல்லுகிற போதெல்லாம், நம்மை மீண்டும் மீண்டுமாக தேடி வந்து அரவணைப்பதை, நாம் நமது வாழ்வை சீர்தூக்கி பார்க்கின்ற போது உணர்ந்து கொள்ள முடியும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது. 

             இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட,  இயேசுவோடு உடனிருந்த சீடர்கள் இயேசுவை பற்றி இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள இயலாதவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் கண்கூடாக காண முடிகிறது. 

                கடல் என்பது தீமைகளின் ஒட்டு மொத்த உருவமாக பார்க்கப்படுகிறது. கடலில் தீய ஆவிகள் குடியிருக்கும் என யூதர்கள் எண்ணினார்கள். அந்த மனநிலையை இயேசுவின் சீடர்களும் கொண்டிருந்தார்கள். எனவே, தான் கடல் மீது நடந்து வந்த இயேசுவை, அவர்கள் தீய ஆவி என எண்ணினார்கள்; அஞ்சினார்கள்; கலங்கினார்கள். 

                   ஆனால் கடவுள் அவர்களின் கலக்கத்தை போக்கி, நம்பிக்கையை கொடுத்து அவர்களை மீண்டுமாக தன் பாதையில் வழி நடத்திச் செல்வதை இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்திக் கூறுகின்றன. இந்த வாசகங்களின் பின்னணியோடு, நாம் நமது வாழ்வை சீர்தூக்கி பார்க்கின்ற போது, பல நேரங்களில் கடவுளுக்கு தகாத காரியங்களை நாம் முன்னெடுத்துச் சென்றாலும், கடவுள் நமக்கு ஆசி வழங்குவதிலிருந்து பின் வாங்கவில்லை. அவர் தொடர்ந்து நமக்குத் தேவையானதை கொடுத்து, நம்மை கரம் பிடித்து வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் நமது வாழ்வில் அடிப்படையில் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். இறைவன் நம்மை வழி நடத்துகிறார் அவர் நமது கடவுளாக எப்போது இருக்கிறார்கள். 

         நாம் நமது கடவுளின் மக்களாக இருப்பதை இன்றைய நாள் வாசகங்கள்  வழியாக நமக்குத் தருகிறார். கடவுளின் அழைப்பிற்கு செவி கொடுத்தவர்களாக நாம் அவரின் மக்களாக, அவரை நோக்கி பயணப்பட நாம் இறையருள் வேண்டுவோம் இன்றைய நாளில். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...