புதன், 13 ஜூலை, 2022

ஆண்டவரின் பாதையில் பயணம் செய்ய....(13.07.2022)

ஆண்டவரின் பாதையில் பயணம் செய்ய....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
 இன்றைய முதல் வாசகமானது இறைவாக்கினர் எசாயா நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் அசிரியப் படையெடுப்புக்கு உள்ளான போது, தாங்கள் செய்த தவறின் விளைவாக இந்த அசிரிய படை எடுப்புக்கு அவர்கள் உள்ளாகப்பட்டிருக்கிறார்கள் என்பதை இறைவாக்கினர் எசாயா எடுத்துரைத்து கடவுளை விட்டு தவறிச் செல்லுகின்ற போதெல்லாம் இது போன்ற துன்பங்களை வாழ்வில்? சந்திக்கின்றோம்.  எனவே, கடவுளோடு இணைந்த ஒரு வாழ்வை வாழ வேண்டும் என்ற சிந்தனையினை இறைவாக்கினர் எசாயா இஸ்ரயேல் மக்களுக்கு வழங்குவதை நாம் இன்றைய முதல் வாசகமாக வாசிக்கக் கேட்டோம். 

     இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட மனிதர்களாகிய நாம் குழந்தைகளை போல இருப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறோம். பல ஞானிகளுக்கு மறைத்து பலவற்றை குழந்தைகளுக்கு கடவுள் வெளிப்படுத்தி இருப்பதாக நாம் இன்று வாசிக்கக் கேட்ட இறை வார்த்தை பகுதி  நமக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது, சிறுவயதில் இருந்த போதோ அல்லது குழந்தைகளாக நாம் இருந்தபோதோ,  நம்மிடம் இருந்த பலவிதமான  நற்பண்புகளை வளர வளர புறம் தள்ளிவிட்டு, மனிதன் என்ற முறையில், வளர்ந்து விட்டோம் என்ற பெயரில், பலவிதமான இறுக்கமான மனநிலை கொண்டு நாம் இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  ஆனால் குழந்தைகளை போல கள்ளம் கபடமற்ற மனிதர்களாக நாம் ஒவ்வொரு நாளும் வாழ வேண்டும் என்ற சிந்தனையினை  இறைவன் இன்று வலியுறுத்துகிறார். 

      ஞானிகளுக்கு பலவற்றை மறைத்து குழந்தைகளுக்கு பலவற்றை கடவுள் வெளிப்படுத்தியதாக கூறப்படக்கூடிய வார்த்தைகள், குழந்தைகளிடம் இருக்கக்கூடிய நற்பண்புகளை சுட்டிக் காண்பிக்கின்றன. நம்மிடமும் இந்த நற்பண்புகள் நாம் குழந்தைகளாக இருந்தபோது நம்மில் இருந்தவை தான்.  வளர்கிறபோது அதை நாம் புறம் தள்ளி இருக்கிறோம். ஆனால் குழந்தைகளுக்குரிய மனநிலை கொண்டவர்களாக, கடவுளோடு இணைந்திருக்க கூடியவர்களாக, எப்போதும் கள்ளம் கபடமற்ற மனிதர்களாக, அடுத்தவரை அன்பு செய்யக் கூடியவர்களாக, அனைவரையும் மன்னிக்கும் மனம் படைத்தவர்களாக வாழ இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகிறார்.  இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக வாழ்வில்  துன்பங்களை சந்திக்கின்ற போதெல்லாம் நமது தவற்றை உணர்ந்து திருந்தியவர்களாக ஆண்டவரின் பாதையில் பயணம் செய்ய இறையருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...