வெள்ளி, 29 ஜூலை, 2022

புனித மார்த்தா நினைவு....(29.7.2022)

புனித மார்த்தா நினைவு....(29.7.2022)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

இன்று தாய்த்திரு அவையானது புனித மார்த்தாவை பற்றி நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

மார்த்தாவை  பற்றி விவிலியத்தின் துணைகொண்டு ஆய்வு செய்கின்றபோது லூக்கா நற்செய்தி 10 ஆம் அதிகாரத்தில் மார்த்தாவின் வீட்டிற்கு இயேசுவும் அவரோடு சீடர்களும் வருவதை நாம் வாசிக்க கேட்கலாம்.

இந்நிகழ்வில் மார்த்தா வீட்டிற்கு வந்த ஆண்டவர் இயேசு உபசரிக்க வேண்டும் என்பதில்  மட்டும் நிலைத்திருக்கக் கூடியவராக,  பற்பல பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

அதனைத் தொடர்ந்து மார்த்தாவினை விவிலியத்தில் யோவான் நற்செய்தி 11 ஆம் அதிகாரத்தில் 
 நாம் வாசிக்க கேட்கலாம்.
இந்த இடத்தில் இறந்து போன லாசருடைய வீட்டிற்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருகிற போது மார்த்தா அவரை எதிர்கொண்டு, நீர்  எங்களோடு இருந்திருந்தால் எங்கள் சகோதரன் ஆன லாசர் இறந்திருக்க மாட்டான் என எடுத்துரைக்கக் கூடியதை நாம் வாசிக்க கேட்கலாம். 

        அச்சமயத்தில் மார்த்தா இயேசுவினிடத்தில், நீர் விரும்பி கேட்பதை எல்லாம் இறைவன் தருவார் என்பதை நாங்கள் அறிவோம் என கூறுகிறபோது கடவுள் மீது அவர் எந்த அளவிற்கு நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவ்வார்த்தைகள் வெளிப்படுத்துவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

    அதனை தொடர்ந்து மார்த்தாவை யோவான் செய்தி 12 ஆம் அதிகாரத்தில
 நாம் காணலாம். 

லாசரின் உயிர்ப்புக்குப் பிறகாக இயேசுவுக்கும் அவரோடு இருந்தவர்களுக்கும் உணவு விருந்தை  மார்த்தா பரிமாறுவதை குறித்து இப்பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. 

மொத்தத்தில் மார்த்தாவின் வாழ்வு ஆண்டவரை புரிந்து கொண்ட ஒரு வாழ்வாக, தம்மை நாடி வருகின்றவர்களை எல்லாம் உபசரிக்கின்ற ஒரு வாழ்வாக அமைந்தது என்பதை, விவிலியத்தின் பின்னணியோடு நாம் அறிந்து கொள்ள முடியும். 

வரலாற்றை சற்று திருப்பிப் பார்க்கிறபோது, இயேசுவின் இறப்பிற்கு பிறகு, இந்த மார்த்தா, மரியா, லாசர் மூவரையுமே ஒரு துடுப்பு இல்லாத படகில் வைத்து, யூதர்கள் கடலில் அனுப்பி வைத்ததாக வரலாறு கூறுகிறது. அப்படி கடலில் சென்றவர்கள் கடவுளின் அருளால் பிரான்ஸ் நாட்டு பகுதிக்குச் சென்று கரை இறங்குகிறார்கள். 

மக்களுக்கு இயேசுவை குறித்து அறிவித்து லாசர் ஆயராக செயல்பட்டார். அங்கு மரியா ஒரு குகையில் சென்று தவ வாழ்வை மேற்கொண்டு தன் வாழ்வை கழித்துக் கொண்டதாகவும், மார்த்தா பெண்களுக்கென ஒரு துறவு மடத்தை நிறுவி, தன் வாழ்வை கழித்துக் கொண்டதாகவும், வரலாற்றின் அடிப்படையில் அவர்களைப் பற்றி பதிவு செய்கின்றார்கள்.

    இன்று நாம் நினைவு கூருகின்ற இந்த மார்த்தாவின் வாழ்வோடு நமது வாழ்வை ஒப்பிட்டு பார்க்கிற போது நம்மை நாடி வருகிற ஒவ்வொருவரையுமே நாம் உபசரிக்கின்ற மனிதர்களாக இருப்பதற்கான ஒரு அழைப்பை இறைவன் தருகிறார். 

அதே சமயம் உபசரிப்பு மற்றும் நிலையானது அல்ல. வந்திருக்கின்ற விருந்தினர்களோடு, வருகின்ற நபர்களோடு, அமர்ந்து உரையாடுவதும் அவர்ளுக்கு செவி கொடுப்பதும், அவர்களின் இன்ப துன்பத்தை கேட்டு நமது உடன் இருப்பை வழங்குவதும் அவசியம் என்பதை இன்றைய நாள் இறைவார்த்தையின் வழியாக, நாம் நினைவு கூருகின்ற புனிதரின் வாழ்வு வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். 

      இறைவன் உணர்த்தும் இந்த வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, இறைவனை நோக்கிய பாதையில் நாமும் அவரை பின்தொடர்ந்து பயணம்  செய்வோம்.  இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...