புதன், 18 ஜனவரி, 2023

முடக்குவாதமுற்றவரை இயேசு குணப்படுத்தினார்! (13-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

   கடவுள் தருகின்ற வாக்குறுதிகளின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நாம் நாளும் வளர வேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகின்றது.

     இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, இந்த இயேசு கிறிஸ்துவை பற்றி கேள்விப்பட்ட பலர், முடக்குவாதமுற்ற ஒரு மனிதனை சுமந்து கொண்டு, இயேசுவை சந்திக்க செல்கிறார்கள். கூட்ட மிகுதியின் காரணமாக, வீட்டின் மேல் கூரையை பிரித்து, அந்த முடக்குவாதமுற்ற மனிதனை கட்டிலோடு இயேசுவின் முன்னிலைக்கு கொண்டு செல்கிறார்கள். இவர்களின் நம்பிக்கை அங்கிருந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியது. இந்த மனிதனை குணமாக்க வல்லவர் இந்த இயேசு கிறிஸ்து என்று அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை அத்தனை கூட்டத்திற்கு மத்தியிலும் அந்த முடக்குவாதமுற்ற மனிதனை இயேசுவின் முன்னிலையில் கொண்டு போய் நிறுத்தியது.

    இயேசு அவர்களது நம்பிக்கையின் நிமித்தமாக அவர்கள் விரும்பி வந்த அந்த நலனை செய்வதை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். 

   இந்த வாசகத்தின் பின்னணியில் நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். கடவுள் மீதான ஆழமான நம்பிக்கையில் நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்கிறோமா? நம்பிக்கையோடு இந்த கடவுளை தேடி செல்கிறோமா என்ற கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம் ‌. இன்னும் நாம் கொண்டு இருக்கிற நம்பிக்கையில் ஆழப்படவும், நம்பிக்கையோடு அனுதினமும் ஆண்டவரை நாடிச் செல்லுகிற மனிதர்களாக, நீங்களும் நானும் இருப்பதற்கான ஒரு அழைப்பு இன்றைய இறைவார்த்தை வழியாக நமக்கு தரப்படுகிறது. இந்த இறைவார்த்தைக்கு ஏற்ற வகையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவரை நாடிச் செல்ல இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...