இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
சட்டம் என்பது மனிதனுக்காக உருவாக்கப்பட்டது. எந்த மனிதனும் சட்டத்திற்காக உருவாக்கப்படவில்லை என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு வலியுறுத்துகின்றார். பலவிதமான சட்டங்களைச் சொல்லி அந்த சட்டங்களுக்கு ஏற்றபடி தான் வாழ வேண்டும்; இல்லை என்றால் கடவுளின் சாபத்திற்கும் உள்ளாவார்கள் என்று சொல்லி மனிதர்களை சட்டத்தின் பெயரால் நசுக்கிக் கொண்டிருந்த அந்த யூத சமூகத்தில், ஆண்டவர் இயேசு கிறிஸ்து, ஓய்வு நாள் சட்டத்தை சுட்டிக் காண்பித்து, மனிதனுக்காகவே இது உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்திற்காக மனிதன் உருவாக்கப்படவில்லை என்பதை எடுத்துரைத்து, நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நாம் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை இறைவன் வலியுறுத்துகின்றார். இந்த வலியுறுத்தலை இதயத்தில் இருத்தியவர்களாக நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நாளும் ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழ்வதற்கான ஆற்றலை கடவுளிடத்தில் கேட்போம். நாம் இந்த உலகில் இருப்பதே இணைந்து இன்புற்று வாழ்வதற்காகவே. காணும் பொங்கலை கொண்டாடக் கூடிய இன்றைய நாளில் நாம் பல உறவுகளை கண்டு, அவர்களோடு உறவை புதுப்பித்துக் கொண்டு, நாளும் நமது வாழ்வை கடவுளுக்கு உகந்த வாழ்வாக மாற்றுவோம். நம் தேவைகளுக்கு எனச் சொல்லி, மனிதர்களை பயன்படுத்துவதை விட, நாம் அனைவரும் இந்த சமூகத்தில் கடவுளின் பிள்ளைகளாக இருப்பதற்கு உருவாக்கப்பட்டோம் என்பதை உணர்ந்தவர்களாக அனைத்து உறவுகளோடும் உறவை புதுப்பித்துக் கொண்டு, மனிதநேயத்தை முன்னிறுத்திய மனிதர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக