புதன், 31 மே, 2023

அப்பங்களை பகிர்ந்து அளித்தார்! மக்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது! (21-4-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

           ஆண்டவருக்கு உகந்த காரியங்களை நாம் செய்ய வேண்டும் என்பதை இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது நமக்கு கற்றுக் கொடுத்தார். ஐயாயிரம் பேருக்கு இயேசு உணவு கொடுத்த நிகழ்வை இன்று நாம் வாசிக்க கேட்டோம். நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பதை ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்லித்தருகின்ற விதத்தில் இந்நிகழ்வு அமைந்ததாக விவிலிய அறிஞர்கள் குறிப்பிடுவார்கள். இயேசு இருப்பதை பகிர்ந்து உண்ண கற்றுக் கொடுத்தார். இந்த பகிர்வு மனப்பான்மை தான் தொடக்க கால கிறிஸ்தவர்களிடத்தில் காணப்பட்டது என்பதை விவிலியத்தின் துணைகொண்டு நாம் அறிந்து கொள்ளுகிறோம். இயேசுவின் வார்த்தைகளை பின்பற்றுகின்ற மனிதர்களை குறித்து பலரும் அஞ்சினார்கள். எங்கே இந்த புதிய நெறியை இயேசு என்ற மனிதனை பின்பற்றுகின்ற புதிய நெறியை பின்பற்றி பலர் சென்றுவிடுவார்களோ என்ற ஐய உணர்வு அவர்களுக்குள் எழுந்த போது, கடவுளுக்கு உகந்ததாக இது இல்லையென்றால் காலப்போக்கில்  மறைந்து போகும் என்று சொல்லக்கூடியவராக கமாலியல் என்ற மனிதர் இருப்பதை இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.

        காலங்கள் பல கடந்தும் இந்த இயேசுவைப் பற்றி இன்றும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் உண்மையின் வடிவமாகவும் இந்த சமூகத்திற்கு தேவையானதையும் தன் வாழ்வால் வெளிகாட்டியவர் இந்த இயேசு என்பதை நீங்களும் நானும் உணர்ந்து கொண்டு இன்னும் அதிகமாக இந்த இயேசுவின் வாழ்வுக்கான பாடங்கள், அவர் நமக்கு கற்றுக் கொடுத்தவைகளை நமது வாழ்வில் பிரதிபலிப்பதற்கான ஆற்றலை இறைவன் நமக்கு தர வேண்டுமாய் இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...