புதன், 30 ஜூன், 2021
தந்தையின் விருப்பம் நமது விருப்பமாக... (1.7.2021)
செவ்வாய், 29 ஜூன், 2021
நிராகரிப்பு.... (30.6.2021)
திங்கள், 28 ஜூன், 2021
அனைவரும் சமம்...(29.6.2021)
ஞாயிறு, 27 ஜூன், 2021
மனித நேய செயல்களை கட்டி எழுப்புவோம்... (28.6.2021)
சனி, 26 ஜூன், 2021
நம்பிக்கையோடு நலமா பணிகளை முன்னெடுப்போம்... (27.6.2021)
வெள்ளி, 25 ஜூன், 2021
இறைவனுக்கும் அடுத்தவர்க்கும் மகிழ்வைத்தர... (26.6.2021)
இறைவனுக்கும் அடுத்தவர்க்கும் மகிழ்வைத்தர...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு ஊரில் ராஜா ரவி என்ற இரு நண்பர்கள் தமது பள்ளி பருவத்திலிருந்தே நல்ல நண்பர்களாக இருந்தனர். இருவரும் ஒன்றாக படித்து ஒரே இடத்தில் வேலைக்கும் சேர்ந்தனர். வழக்கமாக ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து மாலையில் அவரவர் வீட்டுக்கு வந்தவுடன் மனைவி தருகின்ற காப்பியை குடிப்பது வழக்கம். அன்று ராஜாவின் மனைவி அவனுக்கு காபி கொடுத்த பொழுது, அதில் ஒரு எறும்பு இறந்து கிடந்தது. உடனே ராஜா மனைவியை பார்த்து உனக்கு ஒரு காப்பி கூட போட தெரியாதா? இதில் ஒரு எறும்பு செத்து கிடைக்கிறது. இதை உனக்கு கவனிக்கத் தெரியாதா? என்று கத்தத் துவங்கினான். உடனே மனைவியும் பதிலுக்கு கத்த அங்கே மிகப் பெரிய சண்டை நடந்தது.
அது போலவே ரவி தன் மனைவியிடமிருந்து காப்பியை பெற்றுக் கொண்டவுடன் கவனித்தான், அவனது காப்பியிலும் ஒரு எறும்பு இறந்து கிடந்தது. உடனே ரவி தன் மனைவியைப் பார்த்து சொன்னான். நான் தான் உனது காப்பிக்கு மிகப்பெரிய ரசிகன் என்று நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு முன்பாகவே ஒரு ரசிகன் உனது காப்பிக்கு மயங்கி தனது உயிரை விட்டான். இதோ பார் என்று கூறி காப்பியை காண்பித்தான். மனைவியும் சிரித்துக்கொண்டே அந்த எறும்பை எடுத்து வெளியே போட்டாள். அன்று முதல் என்றுமே அவளது காப்பியில் எறும்பு ஏதும் சாகவில்லை.
இரண்டு பேரின் நோக்கமும் ஒன்றுதான். இருவரும் தங்கள் மனைவியிடம் சொல்ல வந்த கருத்து எதிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இருவரும் சொன்ன விதம்தான் வேறு. ராஜா பயன்படுத்திய வார்த்தைகளால் குடும்பத்தில் பிளவு உண்டானது. ரவி பயன்படுத்திய வார்த்தைகளால் மகிழ்ச்சி இரட்டிப்பாக மாறியது. வார்த்தைகளுக்கு வலிமை மிகவும் அதிகம். நமது வார்த்தைகளை குறித்து சிந்திக்க இன்றைய வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகிறோம்.
ஆண்டவர் இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது பலவித வார்த்தைகளைப் பேசினார். அவரது வார்த்தைகள் ஆறுதல் அற்றவர்கள் அனைவருக்கும் ஆறுதலைத் தந்தன. இன்றைய முதல் வாசகத்தில் கூட வயது முதிர்ந்த நிலையில் குழந்தையின்றி தவித்த ஆபிரகாமுக்கும் சாராவுக்கும், கடவுளின் வார்த்தைகள் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தந்தது.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் பலர், தங்களுக்காகவும், தங்கள் குழந்தைகளுக்காகவும், ஆண்டவர் இயேசுவிடம் உதவி வேண்டி வந்த போது, தன் வார்த்தைகளால் அவர்களுக்கு ஆறுதலைத் தந்தவர் இயேசு. இயேசுவின் வார்த்தைகள் ஆறுதலைத் தந்த போதும், இயேசுவும் அடுத்தவரின் வார்த்தைகளால் ஆறுதல் அடைந்தார் என்பதே உண்மை. நூற்றுவர் தலைவன், இயேசுவிடம் என் மகனை குணமாக்கும் என்று கேட்ட போது, நான் உனது வீட்டிற்கு வருகிறேன்" என்றார் இயேசு. ஆனால் நூற்றுவர் தலைவன் சொன்னான், நான் பணியாளனை வா என்றால் வருகிறான், போ என்றால் போகிறான். நீர் இங்கிருந்து ஒரு வார்த்தை சொல்லும். என் மகன் குணம் அடைவான் என்றார். அவரது நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை கேட்ட போது ஆண்டவர் இயேசு உள்ளம் பூரிப்படைந்தவராய், இஸ்ரயேலில் உன்னை போன்ற நம்பிக்கை நிறைந்த ஒருவரை நான் கண்டதில்லை என்று அவனை பாராட்டியதோடு, அவனது நம்பிக்கையின் பொருட்டு தன் வார்த்தைகளால் அவனது தேவையை நிறைவு செய்கின்றார் இயேசு கிறிஸ்து.
ஆண்டவரின் வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை. வல்லமை நிறைந்தவை. நமது வார்த்தைகளும் பல நேரங்களில் வலிமையானதாகவும் வல்லமை நிறைந்ததாகவும் இருக்கிறது. அந்த வார்த்தைகளை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது குறித்து சிந்திப்போம். நூற்றுவத் தலைவன் மற்றும் இயேசுவின் வார்த்தைகளைப் போல நமது வார்த்தைகள் இறைவனுக்கும் அடுத்தவர்க்கும் மகிழ்வைத்தர இன்றைய நாளில் இறையருளை இணைந்து வேண்டுவோம்.
வியாழன், 24 ஜூன், 2021
நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க... (25.6.2021)
நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கும் பொழுது கடவுள் அனைத்தையும் நிறைவேற்றுவார். அந்த கடவுளால் முடியாதது என்பது இந்த உலகில் எதுவும் இல்லை, என்ற வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில் தான், இன்றைய முதல் வாசகத்தில் முதிர்ந்த வயதில் இருந்த ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் குழந்தைப் பேறு நிச்சயம் என்ற வாக்குறுதியை இறைவன் தருகிறார். இறைவன் கொடுத்த வாக்குறுதியை ஆழமான நம்பிக்கையோடு, தங்கள் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு, அந்த நம்பிக்கையோடு தொடர்ந்து பயணித்ததன் அடிப்படையில், ஆண்டவரின் வார்த்தைகள் அவர்களின் வாழ்வில் செயலாக்கப்படுகிறது. அவர்களுக்கு இஸ்மாயேல் என்ற குழந்தையானது பிறக்கிறது. கடவுளால் ஆகாதது எதுவுமில்லை. கடவுளால் எதையும் செய்ய இயலும். அதற்கு நமக்கு ஆழமான நம்பிக்கை அவசியமாகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இந்த இயேசுவால் என்னை குணப்படுத்த முடியும் என்று நம்பியதன் அடிப்படையில் ஒரு தொழுநோயாளர் இயேசுவிடம் வந்து, நீர் விரும்பினால் என்னை குணப்படுத்தும் என்கிறார். அவரது நம்பிக்கையை கண்டு இயேசுவும் நான் விரும்புகிறேன் எனக்கூறி, அவரை குணமாக்குகிறார். இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், எந்த ஒரு செயலையும் நாம் செய்வதற்கு முன்பாக, இதையெல்லாம் நம்மால் செய்ய இயலாது என்ற எண்ணத்தோடு நாம் பயணிப்போம் என்றால், கண்டிப்பாக நம்மால் அச்செயலில் வெற்றியை ஈட்ட முடியாது.
இந்த உலகத்தில் நம்மால் முடியாது என்று சொல்லிக் கொண்டிருப்பதை எங்கு யாரோ ஒருவர் செய்து கொண்டிருக்கிறார். யாரோ ஒருவர் செய்து கொண்டிருப்பதை ஏன் என்னால் செய்ய முடியாது? என்ற கேள்வியை உங்களுக்குள் எழுப்புங்கள் என்ற அப்துல் கலாம் அவர்களுடைய வார்த்தைகளின் அடிப்படையில் நாம் முடியாது என்ற எண்ணத்தை புறம் தள்ளிவிட்டு, எந்த ஒரு செயலையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம். நாம் நம்பிக்கையோடு பயணிக்கும் பொழுது கடவுள் நமது நம்பிக்கையின் பொருட்டு நமது உள்ளத்து எண்ணங்களை அறிந்தவராய், அதனை அடைவதற்கான வழியில் நம்மை அழைத்துச் செல்வார். அந்த ஆண்டவரால் அனைத்தையும் இவ்வுலகத்தில் செய்ய முடியும். அதற்கு நமது நம்பிக்கை என்பது அவசியமான ஒன்றாகும்.
இன்றைய நாளில் நம்பிக்கையோடு நமது வாழ்வை நகர்த்தவும் நலமான பணிகளை முன்னெடுத்துச் செல்லவும் உள்ளத்தில் உறுதி ஏற்போம். நமது உள்ளத்தில் நிறைந்திருக்கும் நம்பிக்கையை காணுகின்ற இறைவன், நமது நம்பிக்கையின் அடிப்படையில் நம்மை வாழ்க்கை பாதையில் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வார். ஆண்டவர் இயேசு அழைத்துச் செல்லக்கூடிய பாதையில் நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க, இறையருளை இணைந்து வேண்டுவோம்.
புதன், 23 ஜூன், 2021
திருமுழுக்கு யோவான் வழியாக வழிகாட்டுவோம்... (24.6.2021)
திருமுழுக்கு யோவான் வழியாக வழிகாட்டுவோம்.
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று நம் தாய்த் திருஅவையாக இணைந்து புனித திருமுழுக்கு யோவானை நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம். திருமுழுக்கு யோவான் என்றாலே எதையும் நேரடியாக சரி என்றால் சரி எனவும் தவறு என்றால் தவறு எனவும் சொல்லக் கூடியவர் என்ற பண்பு தான் முதலில் மனதில் வந்து நிற்கின்றது. இந்த திருமுழுக்கு யோவானின் பெயரை தாங்கி இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் இன்றைய நாளில் நாம விழா வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் இணைக்கின்ற ஒரு பாலமாக இருந்த இறைவாக்கினர் யார் என்றால், அவர் திருமுழுக்கு யோவான் ஆவார். அந்த திருமுழுக்கு யோவானிடமிருந்து நாம் வாழ்க்கைக்கான பல பாடங்களை கற்றுக்கொள்ள முடியும்.
எளிமையான வாழ்வு. ஆண்டவர் இயேசுவை எதிர்பார்த்த ஒரு வாழ்வு. ஆண்டவருக்காக வழியை தயாரித்து வைக்கக்கூடிய ஒரு வாழ்வு. தன்னை மெசியா என்று ஒரு கூட்டம் நம்பிய போதும் கூட, நான் அல்ல மெசியா. எனக்குப்பின் வருபவர்தான் மெசியா என்று, உண்மையை துணிவோடு எடுத்துரைக்க கூடிய ஒரு பண்பு. அவரது மிதியடி வாரை அவிழ்க்கக் கூட நான் தகுதியற்றவன் என தாழ்ச்சியின் உருவமாகவும் இவரை நாம் காண முடியும். இன்னும் எத்தனையோ நற்பண்புகளை இவரிடத்தில் நாம் கூறிக்கொண்டே செல்லலாம். இந்த திருமுழுக்கு யோவானிடம் காணப்பட்ட நற்பண்புகள் நமது வாழ்வில் வெளிப்பட வேண்டும் என்பது தான் இன்றைய நாள் நமக்கு உணர்த்தக் கூடிய செய்தி.
பொதுவாகவே நம்மை யாராவது ஒருவர் புகழ்ந்து பேசினால் வெறும் புகழ்ச்சியை கேட்டு மயங்கி விடாது, நமது வாழ்வில் உண்மையை நோக்கி நகரக் கூடியவர்களாக, சரியை சரி என்றும் தவறை தவறு என்றும் சுட்டிக்காட்டக் கூடியவர்களாக வாழ திருமுழுக்கு யோவானின் வாழ்வு நமக்கு வலியுறுத்துகிறது.
திருமுழுக்கு யோவானை திருஅவை இன்று நினைவு கூருகிறது என்று கூறிவிட்டு, நாமும் இன்றைய நாளை வழக்கம் போல கடந்து செல்லாமல், திருமுழுக்கு யோவானிடத்தில் காணப்பட்ட நற்பண்புகளுள் ஏதேனும் ஒன்றை நமது வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, அதைப் பின்பற்றக் கூடியவர்களாக நாம் மாறிட முயல்வோம். இதற்காகவே இந்நாளில் திருஅவை திருமுழுக்கு யோவானை நினைவு கூருகிறது. திருமுழுக்கு யோவானிடம் காணப்பட்ட நற்பண்புகளை நமது பண்புகளாக மாற்றிக் கொள்ளவும், இவரின் நற்பண்புகளின் அடிப்படையில் நமது குழந்தைகள் வளர்ந்திடவும் வழிகாட்டுவோம். இதன்வழி இயேசுவின் உண்மை சீடர்களாக இச்சமூகத்தில் பயணிக்க இறையருளை இணைந்து வேண்டுவோம்.
செவ்வாய், 22 ஜூன், 2021
உண்மை பணியாளர்களாக மாறிட... (23.6.2021)
உண்மை பணியாளர்களாக மாறிட...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமது சொல்லையும் செயலையும் சீர்தூக்கி பார்க்க நமக்கு அழைப்பு தருகின்றார். இன்று நாம் வாழ்கின்ற இந்த உலகத்தில் பலர் பலவற்றை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லுவது எல்லாம் வாழ்வில் செயலாக்கப்படுத்தப் படுகிறதா? என்று சிந்தித்துப் பார்க்கும் பொழுது, அதை நீரில் எழுதப்பட்ட வார்த்தைகளாகத் தான் பெரும்பாலும் இருந்து கொண்டிருக்கின்றன என்பது வெள்ளிடை மலையாக உள்ளது.
ஒருமுறை ஒரு மேடையில் ஒருவன் தர்மம் செய்வது பற்றி பேசிக் கொண்டிருந்தான். உங்களிடம் இருப்பதில் பகிர்ந்து கொடுங்கள் என்றான். சற்று நேரம் கழித்து உங்களிடம் இருப்பதையே கொடுத்துவிடுங்கள் என்று கூறினான். மிகவும் அருமையாக பகிர்தலை பற்றி உரையாற்றிய அவனது உரையைக் கேட்டு, பலரும் வியந்து போனார்கள். உரையாற்றியவன் உரையாற்றிய பின்பு வெளியே வந்தான். அவனிடம் ஒரு பெண்மணி, ஐயா, பசிக்கிறது! என்றாள். உனக்கு கை கால் நன்றாகத்தானே இருக்கிறது. உழைத்து சாப்பிடு என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்றான்.
பகிர்தலை பற்றிப் பேசிய மனிதனால், இருப்பதில் பகிரவும், இருப்பதை பகிரவும், மனம் இல்லாதவனாக, கடந்து சென்றான். இதுதான் இன்றைய எதார்த்த நிலை. பல நேரங்களில் பல அறிவுரைகளை நாம் வழங்குகிறோம். ஆனால் நாம் அவைகளை பின்பற்றுகிறோமா என கேள்விகளை எழுப்பும்போது தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகளாகத் தான் நமது வார்த்தைகளும் பல நேரங்களில் இருக்கின்றன.
ஆனால் இன்றைய நாளில் இயேசு கிறிஸ்து போலி இறைவாக்கினர்களைக் குறித்து பேசுகின்றார். போலி இறைவாக்கினர் என்பவர்கள் சொல்வார்கள் ஆனால் செயலில் காட்ட மாட்டார்கள். அவர்கள் செய்கின்ற செயல்களைக் கொண்டே அவர்கள் உண்மையான இறைவாக்கினர்களா? அல்லது போலியான இறைவாக்கினர்களா? என்பதைக் கண்டுகொள்ள முடியும் என இயேசு கற்பிக்கிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் மரத்தை உவமையாக இயேசு பயன்படுத்துகிறார். ஒரு மரத்தின் கனியை கொண்டு அந்த மரத்தின் தன்மை அறியப்படுகிறது.
இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் மரத்தின் கனி கொண்டு மரத்தின் தன்மை அறியப்படுவது போல, நமது செயல் கொண்டே நமது வார்த்தையின் உண்மை தன்மை அறியப்படுகிறது. நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நல்லதைச் சொல்வோம். நல்லதைச் சொல்வதோடு நிறுத்திவிடாமல் சொல்வதை செயலாக மாற்றுவோம். அவ்வாறு மாற்றும்பொழுது ஆண்டவர் இயேசுவின் உண்மையான இறைவாக்கினர்களாக இந்த உலகத்தில் நாம் விளங்க முடியும். நமது செயல்களால் நமது சொல்லுக்கு வடிவம் கொடுத்து, நாம் இயேசுவின் உண்மை பணியாளர்களாக மாறிட இறையருளை இணைந்து வேண்டுவோம்.
திங்கள், 21 ஜூன், 2021
நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்... (22.6.2021)
நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதையே நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள். இதுவே இன்றைய நாளின் மையச் செய்தியாக அமைந்திருக்கிறது.
ஒரு கிராமத்திலே சிறுவன் ஒருவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். மலையடிவாரத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அவனுக்கு தனக்கு எதிரே இருக்கக்கூடிய மலையில் யாரோ இருப்பது போன்ற ஒரு உணர்வு. எனவே அவன் இருந்த மலையின் உச்சிக்கு ஏறி, அந்த மலையில் இருந்த வண்ணம் தனக்கு எதிரே இருந்த மலையை நோக்கி அழைத்தான். யாராவது இருக்கிறீர்களா? என்று குரல் எழுப்பினான். அதே குரலோசை மீண்டும் அவனுக்கு கேட்டது. ஆஹா நமக்கு யாரோ ஒருவர் பதில் தருகிறார் என்ற எண்ணத்தில், நீ நன்றாக இருக்கிறாயா? எனக் கேட்டான். உடனே அந்த மலையிலிருந்து நீ நன்றாக இருக்கிறாயா? என்று பதில் குரல் வந்தது. உடனே பெருமிதத்தின் மிகுதியால் அவன், நான் சொன்னதையே திரும்ப சொல்கிறாயே உனக்கு அறிவு இருக்கிறதா? எனக் கேட்டான். மீண்டுமாக உனக்கு அறிவு இருக்கிறதா? என்ற வார்த்தைகளே மீண்டும் அவனது காதுகளை வந்தடைந்தன. கோபத்தின் உச்சிக்குச் சென்றவனாக கத்த துவங்கினான். அவன் கத்திய வார்த்தைகள் திரும்பவும் அவனிடத்திலே வந்து சேர்ந்தன. தாயிடம் வேகமாக ஓடிச்சென்று சொன்னான், அந்த மலையில் இருக்கின்ற ஒருவன் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டான் என்று.
தாய் அங்கு நடந்ததை புரிந்து கொண்டவளாய், அந்த மகனைப் பார்த்து சொன்னாள், நாளைக்கு மீண்டும் அதே மலைக்குச் சென்று உன்னிடம் பேசியவனிடம் நன்றாக இருக்கிறாயா? எனக்கேள். என் வீட்டிற்கு உணவருந்த வா என அழைத்து வா என்றாள். உடனே தாயின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்தவனாய் மலைக்கு ஓடினான். நன்றாக இருக்கிறாயா? எனக் கேள்வி எழுப்பினான். அதே வார்த்தைகள் அவனுக்குத் திரும்பக் கிடைத்தன. மீண்டும் என் வீட்டிற்கு உணவருந்த வா என்று அழைத்தான். அதே குரலோசை மீண்டும் அவனுக்கு கேட்க, மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றவனாய், தாயிடம் வந்து, இன்று அவன் என்னை வீட்டிற்கு உணவருந்த அழைத்தான் என்று கூறினான். அப்போது தாய் அவனுக்கு விளக்கினாள். அழைத்தது அடுத்த மலையில் இருந்தவர்கள் அல்ல. நீ எந்த வார்த்தைகளை பயன்படுத்தினாயோ அதே வார்த்தைகள் தான் உனக்கு எதிரொலியாக திரும்பி வந்தது என்ற உண்மையையும் கற்பித்தாள். நீ எதை இந்த சமூகத்தில் விதைக்கின்றாயோ, அதைத்தான் அறுவடை செய்வாய் என்ற பாடத்தையும் அந்த சிறுவனுக்கு அந்த தாய் கற்பித்தாள்.
இறைவனால் அழைக்கப்பட்டு, அவரது வார்த்தைக்கு செவி கொடுத்து வழி நடந்தவர் தான் ஆபிரகாம். ஆபிரகாமின் பணியாளர்களுக்கும் லோத்தின் பணியாளர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. ஆனால் ஆபிரகாம் லோத்துக்கு தீங்கு செய்ய வேண்டும் என எண்ணவில்லை. எனவே தான் லோத்திடம் சென்று, நீ இடப்பக்கம் சென்றால், நான் வலப்பக்கம் செல்கிறேன். நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்கிறேன் நம்மிடையே உறவு தொடர வேண்டும். பிரிவு வரக்கூடாது, சண்டை வரக்கூடாது என்பதை, இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க கேட்டொம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட
பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். மத்தேயு 7: 13; வாசிக்கின்றோம்.
நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நாம் எதை விதைக்கிறோமோ அதை தான் அறுவடை செய்ய முடியும். நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ அதையே தான் திரும்ப அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறோம். எப்போதுமே மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருமே பிறர் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் பிறர் நல்லது செய்ய வேண்டும் என விரும்பக்கூடிய நாம் நமது வாழ்வில் நாம் செய்கின்ற செயல்கள் அனைத்தும், அடுத்தவர் நன்மையை மையப்படுத்தியதாக அமைந்திருக்க வேண்டும். நாம் அடுத்தவருக்கு தீங்கு செய்துவிட்டு, அடுத்தவர் மட்டும் நமக்கு நன்மையே செய்ய வேண்டும், என எதிர்பார்க்க கூடியவர்களாக இருந்தால், அது ஒரு அர்த்தமற்ற வாழ்வாக கருதப்படுகிறது. ஒரு மாமரத்தின் விதையை நிலத்தில் விதைத்து விட்டு பலா மரம் முளைக்க வேண்டுமென எதிர்பார்ப்பது எவ்வாறு முறையற்றதோ, அதுபோலத்தான் நாம் தீமையை விதைத்துவிட்டு நன்மையை எதிர்பார்ப்பதும்.
நாம் நல்லதை விதைக்கவும் நல்லதை அறுவடை செய்யவும் அழைக்கப்படுகின்றோம். இதையே இயேசு கிறிஸ்து, "பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதை நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்" என்கிறார். இயேசுவின் வார்த்தைகளை நமது வாழ்வாக மாற்றிக் கொண்டு, இன்றைய நாளிலே அடுத்தவர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என எண்ணுகிறோமோ அதையெல்லாம் அடுத்தவருக்கு நாம் செய்யக்கூடியவர்களாக மாறிட இறையருளை வேண்டுவோம்.
ஞாயிறு, 20 ஜூன், 2021
நல்ல அளவையால் பிறரை அளப்போம்... (21.6.2021)
நல்ல அளவையால் பிறரை அளப்போம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
உளவியல் அறிஞரான ஜோ ஹாரி என்பவர், மனிதர்களை நான்கு வகையில் வகைப்படுத்தி ஒரு உளவியல் கொள்கையை உருவாக்கினார்;.
முதல் வகை மனிதர்கள், நான் சரி. அடுத்தவர் தவறு என சொல்லக் கூடியவர்கள்.
இரண்டாம் வகை மனிதர்கள் அடுத்தவர் சரி. நான் தான் தவறு என சொல்லக் கூடியவர்கள்.
மூன்றாம் வகை மனிதர்கள் நானும் தவறு, அடுத்தவர்களும் தவறு என சொல்லக் கூடியவர்கள்.
நான்காம் வகை மனிதர்கள் நானும் சரி, அவர்களும் சரி என சொல்லக் கூடியவர்கள்.
இந்த நான்கு வகையில் எந்த வகையைச் சார்ந்தவர்களாக நாம் இருக்கிறோம் என்பதைக் குறித்து சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை பிறரை தீர்ப்பிடாது வாழ அழைக்கின்றார். நாம் எந்த அளவையால் பிறரை அளக்கின்றோமோ, அதே அளவையால் நமக்கும் அளக்கப்படுவோம் என்பதை இயேசு சுட்டிக் காட்டுகின்றார்.
இன்றைய நாளின் முதல் வாசகத்தில் கூட ஆபிரகாம் ஆண்டவருடைய வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவருடைய வார்த்தைகளின்படி தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்டவர் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட மனிதனாக ஆண்டவர் கூறிய வார்த்தைகளின் அடிப்படையில் தனது பயணத்தை தொடர்கின்றார்.
தன்னுடைய வார்த்தைகளை நம்பிக்கையோடு ஏற்றுக் கொண்டு பயணிக்கின்ற ஆபிரகாமின் நம்பிக்கையைக் கண்டு இறைவனும் வியந்து போனவராய், அவருக்கு தருவதாகக் கூறிய அனைத்து விதமான ஆசிகளையும், நிறைவேற்றுகிறார். நாம் எந்த அளவையால் அளக்கின்றோமோ, அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும். நாம் எப்படி பிறரை மதிக்கின்றோமோ, அதே அளவையால் நாமும் மதிக்கப்படுவோம். பல நேரங்களில் கோபத்தில் நாம் கூறுவோம், "மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக்கொள்" என்று. மனிதர்களுள் பலர் தன்னை எப்படி அடுத்தவர் நடத்துகிறார்களோ, அப்படியே அவர்களையும் தாங்கள் நடத்த வேண்டும் என இயல்பாக எண்ணி பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், பலவிதமான போட்டிகளும் பலவிதமான இன்னல்களும் இடையூறுகளும் நிறைந்து இருக்கக்கூடிய இந்த உலகத்தில் நிதானத்தோடு அடுத்தவரை ஊக்கப்படுத்தவும், அடுத்தவரை ஏற்றுக் கொள்ளவும், பாராட்டவும் கூடிய மனிதர்களாக நாம் பயணிக்க வேண்டும். அவ்வாறு நாம் பயணிக்கின்ற போது, நம்மைச் சுற்றி இருக்கின்ற நபர்களும் நம்மை பாராட்டக்கூடிய நல்வழிப்படுத்தக்கூடிய ஊக்கமூட்டக்கூடிய நபர்களாக இருப்பார்கள்.
நல்ல அளவையால் பிறரை அளப்போம், நாமும் நல்ல அளவையால் அளக்கப்படுவோம். எனவே அடுத்தவரை நேர்மறையான எண்ணங்கள் கொண்டு அணுகவும், நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நம்மை நேர்மறையான எண்ணத்தோடு அணுகவும், நமது சொல்லும் செயலும் அதற்கு ஏற்ற வகையில் அமைந்திடவும், இன்றைய நாளில் இறையருளை வேண்டி தொடர்ந்து பயணிப்போம்.
சனி, 19 ஜூன், 2021
நம்பிக்கையோடு பயணிக்க... (20.6.2021)
நம்பிக்கையோடு பயணிக்க...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு அரங்கத்தில் கைத்தட்ட கூடிய போட்டி நடைபெற்றது. அங்கு யார் அதிக நேரம் விடாமல் கைதட்டிக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு தருவதாக அறிவிக்கப்பட்டது. அங்கு அதிக நபர்கள் வந்திருந்தார்கள். அந்த போட்டியில் கலந்து கொள்ள வந்த நபர்களால் அந்த அரங்கமே நிறைந்திருந்தது. கதவுகளை எல்லாம் சாத்திவிட்டு விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டார்கள். மேலே ஒரு சூழல்விளக்கு மட்டும் எரிந்து சுடர்விட்டுக் கொண்டிருக்கும். இறுதிவரை யார் விடாமல் கைதட்டி கொண்டிருந்தார்களோ அந்த நபர்களை நோக்கியதாக அந்த விளக்கின் ஒளி செல்லும். இதுவே போட்டியின் நடைமுறைகள். போட்டி ஆரம்பமானது. அனைவரும் கை தட்டினார்கள். ஐந்து மணி நேரம் கழித்து இறுதியாக அந்த ஒளி ஒரு குறிப்பிட்ட பகுதியில் வந்து நின்றதாம். இறுதியில் நடுவர்கள் அந்த நபரை நோக்கி வாழ்த்துக்கள் நீங்கள் மேடைக்கு வாருங்கள் என்று அழைத்தார்கள். அப்போது இருவர் மேடையை நோக்கி வரத் துவங்கினார்கள். அந்த இருவரையும் பார்க்கும் பொழுது அரங்கத்தில் சூழ்ந்திருந்த அனைவருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த இருவரில் ஒரு நபருக்கு வலதுகை இல்லை மற்றொரு நபருக்கு இடதுகை இல்லை. ஆனால் இருவரும் சேர்ந்து கரங்களில் தட்டியதால் இறுதியில் வெற்றி பெற்றார்கள். கைத்தட்டல் போட்டியில் கரங்கள் இல்லாத ஒரு நபர் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததே அவரது வெற்றியின் அடையாளம். அது, பாராட்டுதலுக்குரியது. இவர்களின் முயற்சி இன்று நமக்கு கூறுவது நமது வாழ்வில் வலதுகை இல்லாவிட்டாலும் அல்லது இடது கை இல்லாவிட்டாலும் நம்பிக்கை மட்டும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே. இந்த நம்பிக்கையே அவர்களை கைத்தட்டும் போட்டிக்கு அழைத்துச் சென்றது, மிகப்பெரிய வெற்றியையும் தேடித் தந்தது.
மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரிடமும் நம்பிக்கை என்பது இருக்கிறது. நமது வாழ்க்கைப் பயணம் வெற்றியடைய நம்பிக்கை அவசியமாகிறது. என்றும் நம் உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் உறுதியாக இருந்தால், எதிலும் நம்பி, கை வைக்கலாம்.
இயேசு தந்தையின் மீது அதீத நம்பிக்கை கொண்டு தம் பணியைத் தொடர்ந்தர்.இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் மீதும், நலம் தரும் நல்ல செயல்கள் மீதும், அவர் ஆற்றிய புதுமைகள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இயேசுவின் காலத்தில் இயேசுவோடு உடன் பயணித்தவர்களே இயேசுவின் சீடர்கள். அவர்கள் இயேசுவோடு இணைந்து வாழ்ந்தவர்கள். அவரைப்பற்றி முற்றிலுமாக அறிந்தவர்கள். இரவு பகல் என்று எல்லா நேரத்திலும் இயேசுவுடனே தங்கி இருந்தவர்கள். இயேசு சென்றவிடமெல்லாம் அவரைப் பின்பற்றி சென்றவர்கள். ஆனால் அவர்கள் வாழ்விலும் நம்பிக்கையின்மை காணப்பட்டது.
நம்மிடம் இருக்கும் பொழுது எதையும் பொதுவாக நாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இயேசுவின் சீடர்கள் இயேசுவின் புதுமைகளையும், அருஞ்செயல்களையும், அற்புதங்களையும் கண்டிருந்தாலும் கூட, ஒரு துன்பம் என்று வருகின்ற பொழுது நம்பிக்கை இழந்தவர்களாக இயேசுவின் சீடர்கள் இருந்தார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.
இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து கப்பலிலேயே பயணம் செய்கிறார். கீழ்தளத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். புயல் காற்று வீசுகிறது. கப்பல் அலைக்கழிக்கப்படுகிறது. என்ன செய்வதென தடுமாற்றம். இயேசுவை எழுப்பிய சீடர்கள், ஆண்டவரே இதை சரி செய்ய முடியுமா என்று கேட்கவில்லை. மாறாக, ஆண்டவரே! நாங்கள் எல்லாம் சாகப் போகிறோமே! உமக்கு கவலை இல்லையா? இவ்வாறு உறங்கிக் கொண்டிருக்கிறீரே என்றார்கள்.
இந்த சீடர்கள் எல்லாம் இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது இயேசுவின் அரும் செயல்களை உடனிருந்து பார்த்தவர்கள். பல ஆண்டுகளாக முடக்குவாதமுற்றிருந்த ஒருவரை கட்டிலோடு தூக்கி வந்து இயேசுவின் முன் கிடத்தி அவரை நலம் தரச் சொல்லி வேண்டிய போது அவர் நலமளித்ததை கண்ணார கண்டவர்கள். பல ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் அவதிப்பட்ட ஒரு பெண்மணி, இயேசுவின் ஆடையைத் தொட்டாலே நான் குணம் பெறுவேன் என்று நம்பிக்கையோடு இயேசுவிடம் வந்து குணம் பெற்று சென்றாதை உடனிருந்து அறிந்தவர்கள். சமூகத்தால் புறம்தள்ளப்பட்ட கானானியப் பெண்ணும் கூட, மேசையில் இருந்து விழும் துண்டுகளை நாய்கள் உண்ணுமே. ஏன்று கூறி தன்னை தாழ்த்திக்கொண்டு எங்களுக்கு நீர் உதவ வேண்டும் என்று கூறி தன் மகளின் நோயிலிருந்து விடுதலை பெற்றுச் சென்றதை கண்கூடக கண்டவர்கள். இப்படி எத்தனையோ நபர்கள் நம்பிக்கையோடு இயேசுவைத் தேடி வந்த போதும். இந்த சீடர்களை இயேசு தம் பணிக்கென தேர்ந்தெடுத்தார். தான் தேர்ந்தெடுத்த சீடர்கள், தன்னோடு பயணிப்பவர்களின நம்பிக்கை இன்று உடைபடுகிறது. தங்கள்; வாழ்வில் துன்பம் என்று வந்தபோது, அவரை மறந்து போனார்கள். அவர் செய்த புதுமைகளை மறந்தார்கள். அவர் கற்பித்ததை மறந்தார்கள். அனைத்தையும் மறந்துவிட்டு அவரையே எழுப்பி, ஆண்டவரே! நாங்கள் சாகப் போகிறோம். உமக்கு கவலை இல்லையா? என்றார்கள்.
பல நேரங்களில் நாமும் நமது வாழ்வில் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். நம்பிக்கையை பற்றி பலருக்கு பாடம் எடுத்திருப்போம். நம்பிக்கையோடு பயணியுங்கள். துன்பத்தைக் கண்டு துவண்டு விடாதீர்கள் என வீரவசனம் பேசி இருப்போம். ஆனால் நமது வாழ்வில் துன்பம் நேரும் போது, நமது வாழ்வில் சோகங்கள் உருவாகும் போதும் நாம் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்து விட்டு, நாம் நம்பிக்கையற்றவர்களாக இருந்திருப்போம் பல நேரங்களில். இது மனித வாழ்வில் எதார்த்தமாக நடக்கக்கூடிய ஒன்று. ஆனால் நாம் நமது துன்ப நேரத்தில் நம்பிக்கையோடு பயணிக்க அழைக்கப்படுகிறோம்.
இயேசுவின் சீடர்கள் அன்று தடுமாறினார்கள். ஆனால் இயேசு அவர்களுக்கு பாடம் கற்பித்தார். இன்னும் என்னை நம்பவில்லையா? என்ற கேள்வி எழுப்பினார். காற்றையும் கடலையும் அதட்டினார். அவரது வார்த்தைகளைக் கேட்டு காற்றும் கடலும் அமைதியாக இருந்தன என்று இறை வார்த்தையை வாசிக்க கேட்டோம். அந்த இயேசு கிறிஸ்துவின் வார்த்தையினால் வலிமை பெற்றவர்களாக, ஆண்டவர் இயேசுவின் மீது தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையை புதுப்பித்துக் கொண்டவர்களாக, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்தையும் சரி செய்யக் கூடியவர்களாக, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் தம் பணியைத் தொடர்ந்தார்கள். எப்படி இன்றைய நற்செய்தி வாசகத்தில், துன்புற்று அஞ்சி நடுங்கிய சீடர்களுக்கு இயேசு தம் வார்த்தைகளால் துணிவை கற்றுக் கொடுத்தாரோ, அதுப்போல நமக்கும் கற்றுத்தருகிறார். அந்தத் துணிவை கற்றுக்கொண்ட சீடர்கள் அதன்பிறகு ஆண்டவர் இயேசுவை பற்றிய நற்செய்தியை அறிவித்த போது எத்தனையோ இன்னல்கள,; இடர்பாடுகளை சந்தித்தபோது, துன்பத்தைக் கண்டு அஞ்சவில்லை. மாறாக புயலுக்கு பின் அமைதி என்பது போல துன்பத்திற்குப் பின் இன்பம் என்ற செய்தியை கண்டு கொண்டார்கள்.
ஆனால், இன்று நிலவும் தொற்றுநோய் காரணமாக உலகமே உச்சத்தில் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு சில தன்னார்வ பணியாளர்களும், மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கள் உயிரைத் துச்சமென கருதாது போராடிக் கொண்டிருக்கிறார்கள். நமக்காக பணியாற்றுகிறார்கள் அவர்களது நம்பிக்கையின் பொருட்டு, நம்பிக்கையோடு உழைத்துக் கொண்டிருக்கின்ற அவர்களது ஓயாத பணியின் பொருட்டு தான் இன்று பலரும் குணம் பெறுகிறார்கள் என்றால் அது மிகையில்லை.
இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கப்பட்ட யோபு துன்பத்தில் துவளாத மனிதர். விவிலியத்தில் நம்பிக்கை இழக்காத நபராக நாம் பலரை காணலாம். அவர்களுள் ஒருவர்தான் யோபு. ஏராளமான சொத்துக்களோடு இருந்தவர், அனைத்தையும் இழந்த நிலையிலேம் கூட கடவுள் மேல் கொண்டிருந்த நம்பிக்கையில் அசைவுறாதவராக இருந்தார். நமது வாழ்வில் துன்பம் வரும்போது நமது நம்பிக்கையை நாம் இழந்துவிடக்கூடாது நம்பிக்கை இழக்கும்போது பயம் ஒன்றுகூடிக் கொள்கிறது. அந்த பயம் தான் நம்மை நிலைகுலையச் செய்து விடுகிறது. ஆனால்,
இந்த யோபுவை போல நாமும் நமது துன்ப நேரங்களில் நமது நம்பிக்கையை சீர்தூக்கி பார்க்க அழைக்கப்படுகிறோம். துன்பம் நேரும் போது துவண்டு விடாமல் ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டுமென்ற பாடத்தை இறைவன் நமக்கு கற்றுத் தருகிறார். அவர் கற்பிக்கும் இந்த பாடத்தை நம் வாழ்வில் ஏற்றுக்கொண்டு துன்பம் ஏற்படுகின்ற நேரங்களில் எல்லாம் துவண்டு போய் விடாது, அந்த ஆண்டவரை இறுகப்பிடித்துக்கொண்டு யோபுவைப்போல அனைத்தையும் பல மடங்கு பெறக் கூடியவர்களாக நாம் மாற வேண்டும்.
இயேசுவின் சீடர்கள் தம் பணி வாழ்வில், பல துன்பங்களை ஏற்றுக்கொண்டாலும் ஆண்டவர் இயேசுவை அறியாதவர்கள் அறிந்து கொண்டார்கள் என்ற மன நிறைவோடு பயணித்தார்கள். இன்றைய நாளில் நாமும் நமது வாழ்வில் பலவிதமான இன்னல்களை துன்பங்களை சந்திக்கின்ற பொழுது, நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை இழந்து விடாது உறுதியான நம்பிக்கையோடு பயணிக்க அழைக்கப்படுகின்றோம். எனவே வாழ்வில் துன்பம் வருகின்ற நேரங்களில் எல்லாம் நம்பிக்கையை இழக்காது 1 பேதுரு 5:6-7
“கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்”.
1 பேதுரு 5:6-7 இந்த இறைவார்த்தைகளை மனதில் இருத்துங்கள். நம்பிக்கை என்பது வேறு எங்கும் இல்லை. நமது கைகளில் தான் இருக்கிறது. துன்பம் வரும்போது நமது கவலைகளை தாங்குபவராக ஆண்டவர் இயேசு இருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டு நம்பிக்கையோடு பயணிக்க இறையருளை இறைஞ்சி வேண்டுவோம்.
வெள்ளி, 18 ஜூன், 2021
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து! (19.6.2021)
வியாழன், 17 ஜூன், 2021
செல்வம் எங்கே! உள்ளம் அங்கே!...(18.6.2021)
புதன், 16 ஜூன், 2021
தந்தையிடம் தயக்கம் ஏன்? (17.6.2021)
செவ்வாய், 15 ஜூன், 2021
அறுவடை செய்ய.... (16.6.2021)
திங்கள், 14 ஜூன், 2021
இழக்கக்கூடிய மக்களாக மாறுவோம்... (15.6.2021)
ஞாயிறு, 13 ஜூன், 2021
நீங்கள் எதை விட்டு விட்டு எதை தூக்கிச் செல்கிறீர்கள்?....(14.6.2021)
சனி, 12 ஜூன், 2021
வாழ்க்கை அர்த்தமுள்ள வகையில்.... (13.6.2021)
வாழ்க்கை அர்த்தமுள்ள வகையில்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஒருமுறை ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பில் வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்வியை கேட்டார். அப்பொழுது மாணவன் ஒருவன் எழுந்து நின்று சார் ஒரு அறை விட்டு மற்றொரு அறைக்கு அழைத்துச் செல்வது தான் வாழ்க்கை என்று கூறினான். உடனே ஆசிரியர் அவனை பார்த்து இந்த ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு அழைத்துச் செல்வது தான் வாழ்க்கையா? என்று கேட்டார். உடனே அந்த மாணவன் இல்லை சார் கருவறையிலிருந்து கல்லறை செல்வது தான் வாழ்க்கை என்று கூறினான். அடுத்தபடியாக ஒரு மாணவி எழுந்து நின்று நம்பிக்கை தான் வாழ்க்கை என்று கூறினாள். மற்றொரு மாணவன் எழுந்து நின்று பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இடைவெளி தான் வாழ்க்கை என்று கூறினான். இவ்வாறு வாழ்க்கையை பற்றி பலர் பலவிதமான புரிதல்களை கொண்டிருந்தாலும் வாழ்க்கை வாழுவதற்க்காகவே…. ஆனால் நாம் யாருக்காக வாழ்கிறோம் நமக்காக வாழ்கிறோமா? அல்லது மற்றவருக்காக வாழ்கிறோமா? நம் வாழ்வின் நோக்கம் என்ன? என்பதை சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. பொதுவாக வாழ்க்கையை பத்து பத்தாக பிரிப்பர்….
10 வயதில் குழந்தை
20 வயதில் இளைஞன்
30 வயதில் முறுக்கு
40 வயதில் பொறுப்பு
50 வயதில் ஆசை
60 வயதில் ஓய்வு
70 வயதில் ஏக்கம்
80 வயதில் எதிர்ப்பார்ப்பு
90 வயதில் நடுக்கம்
100 வயதில் அடக்கம்
ஏன்பார்கள் ஆனால் இன்று 60 தொடுவதே அபுற்வமாக பார்க்கப்படுகிறது. வாழும் வரை நாம் இவ்வுலகில் எப்படி வாழ்கிறோம்?
இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து நமக்கு முன்மாதிரியாக காண்பித்து சென்றார். இன்றைய நாள் வாசகங்களில் விதையையும் அந்த விதையிலிருந்து உருவாகக்கூடிய மரத்தையும் உவமையாகக் கொண்டு வாழ்க்கை பாடம் கற்பிக்கிறார்கள். மரம் என்பது பலன் தருவதற்காக. அது நிழலாக இருக்கலாம், அல்லது கனியாக இருக்கலாம், அல்லது அதிலிருந்து கிடைக்கும் மருந்து பொருளாக இருக்கலாம், அல்லது அது காய்ந்தபின் எரிப்பதற்கு பயன்படும் விறகாக இருக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் அந்த மரமானது தான் வளர்க்கப்பட்டதின் நோக்கத்தை நிறைவு செய்கிறது.அதுபோலவே மரத்தை விட மகத்துவமான மனிதனும் தான் இம்மண்ணில் பிறந்த நோக்கத்தை கண்டுகொள்ள அழைக்கப்படுகின்றோம்.ஆனால் அதை கண்டுகொள்ள முயலாமல் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என வாழ்ந்து கொண்டு இருப்போமானால் அது அர்த்தமற்ற வாழ்வாகும். இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் கூறுகிறார், “உயர்ந்த கேதுரு மரத்தின் கிளை ஒன்றை எடுத்து வந்து நானே அதை நடுவேன் என்கிறார். அது தளைத்து கனி தந்து சிறந்த கேதுரு மரமாகத் திகழும்” என்கிறார்.
நம்மையும் இம்மண்ணில் இறைவன் படைத்திருக்கிறார் என்றால் நாம் மகத்துவமான தலை சிறந்த மனிதர்களாக விளங்க வேண்டும். குழந்தை ஒன்று இவ்வுலகத்தில் பிறக்கிறது என்றால், அது கடவுள் இந்த உலகத்தை மீண்டும் மீண்டும் அன்பு செய்து கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம் என்று கூறுவார்கள். நெடுங்காலமாகவே இந்த உலகத்தில் தொடரக்;கூடியது எது? எனக் கேட்டால் பிறப்பும் இறப்பும் தான் என்பார்கள். இது நெடுங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனியும் தொடரக் கூடியது தான். பிறந்த ஒவ்வொருவரும் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இறப்புக்கு முன்பாக நாம் எதை செய்தோம்? எதை இந்த சமூகத்தில் விட்டுச் செல்கிறோம்? என்ற கேள்வியை நாம் எழுப்பி பார்க்க வேண்டும். நட்டு வைக்கக் கூடிய மரமானது தனது பணியை செய்கிறது என்றால், மரத்தை விட மேன்மை வாய்ந்த மனிதர்களாகிய நாம், நமது படைப்பின் நோக்கத்தை கண்டுக்கொண்டு அதை இவ்வுலகத்தில் செய்தாக வேண்டும் என்பது இன்றைய நாளில் நமக்குத் தரப்படுகின்ற அழைப்பாக இருக்கின்றது. விதை மண்ணில் விழுந்து மடிந்தால் தான் அது கனி தரமுடியும் என இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறப்படுகிறது.
ஒரு சிறிய கடுகு விதையானது மண்ணில் விழுந்து மடிந்து முளைத்து மிகப்பெரிய விருச்சமாக வளரும். அதிலிருந்து பல பறவைகள் வந்து பயனடைகின்றன என்ற ஒர் உருவகத்தை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கிறோம். ஒரு சிறிய கடுகு விதை ஒரு பெரிய விருட்சமாக மாறி பல உயிரினங்களுக்கு வாழ்வு தருகிறது என்றால், படைப்பின் சிகரமான மனிதர்களாகிய நம்மால் பலன் தர முடியாதா? என்ன? நமது சொல்லிலும் செயலிலும்; நாம் பிறந்ததன் நோக்கம் என்ன? என்பதை ஆராய தொடங்குவோம். நமது வாழ்வில் நாம் இறப்பதற்குள்ளாக ஏதேனும் ஒன்றை இச்சமூகத்துக்கு விட்டுச்செல்ல முயற்சிகளில் ஈடுபடுவோம்.
அப்துல் கலாம் அவர்கள் கூறுவார், "வாழ்வது ஒரு முறை! வாழ்த்தட்டும் தலைமுறை" என்று. அந்த வார்த்தைகளை சற்று மாற்றிக் "வாழ்வது ஒருமுறை! வாழவைப்போம் ஒரு தலைமுறையையாவது" என்று நமது சொல்லிலும் செயலிலும் இயேசுவைப் போல பிறர் நலனை முன்னிறுத்தும் செயல்களில் ஈடுபடுவோம். மனிதனாக இம்மண்ணில் நாம் மலர்ந்ததன் பலனை இம்மண்ணில் விதைத்திட முயல்வோம்.
இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நம்மை பார்த்து வளரக்கூடிய குழந்தைகளுக்கும், நமது அருகாமையில் உள்ளவர்களுக்கும், அவர்கள் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நல்ல செயல்களைச் செய்யவும், அவர்கள் நலமான வாழ்வை அடையவும் நாம் வழிகாட்டக் கூடியவர்களாக மாறுவோம். வழிகாட்டுதல் என்றால், அறிவுரை கூறுவது என்று அர்த்தம் அல்ல. மாறாக நமது வாழ்வைக் கண்டு அவர்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள முயல வேண்டும் என்பதே அர்த்தமாகும்.
இன்று உலகில் பலருக்கு சொல்பவர்களை விட செய்து காட்டுபவர்கள் தான் அதிகம் தேவைப்படுகிறார்கள். இப்படி இரு! அப்படி இரு என சொல்வதைவிட, எப்படி பிறர் இருக்க வேண்டும் என நாம் எண்ணுகிறோமோ அவ்வாறாக நாம் இருப்போம். விவிலியத்திலும் இறைவன் இதனை அழகாகக் கூறுவார், “பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பார். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருமே அடுத்தவரைச் சார்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அடுத்தவர் நமக்கு உதவ வேண்டும் என எண்ணுகிறோம். நமது தேவையில் நம்முடன் இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். நாம் செய்கின்ற சின்னஞ்சிறு செயல்களையும் அடுத்தவர் பாராட்ட வேண்டும் என எண்ணுகிறோம். நாம் தோல்வியுறும் போதும், துன்பத்தில் வாடும் போதும், வந்து நம்மை தட்டிக்கொடுக்க வேண்டும், ஆறுதல் கூற வேண்டும் என எண்ணுகிறோம். ஆனால் எண்ணுகின்ற எல்லாவற்றையும் நாம் அடுத்தவருக்கு செய்கின்றோமா? என்ற கேள்வியை எழுப்புவோம். இதுவே நமது பிறப்பின் நோக்கமாக இருக்கலாம். தேவையில் இருப்பவரை தேடிச்சென்று உதவுவதும், ஆறுதல் தருவதும், அன்பாக பேசுவதும், அர்த்தமுள்ள வகையில் வாழ்ந்து காட்டுவதும் தான் நமது பிறப்பின் நோக்கமாக இருக்கலாம். நம் பிறப்பின் நோக்கம் என்ன? என்பதை ஆராய்ந்து பார்ப்போம். இந்த சமூகத்தில் இயேசு கற்பித்த விழுமியங்களை நமது வாழ்வாக மாற்றிக் கொண்டு, அந்த விழுமியங்களின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்வது தான் நமது வாழ்வின் நோக்கம் என்பதை கண்டு கொள்வோம். மனிதர்களாகிய நாம், இம்மண்ணில் வாழுகின்ற காலத்தில், பலன் தரக் கூடியவர்களாக மாறுவோம்.
ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன் என்னும் தன்னம்பிக்கை பேச்சாளரான் அடிக்கடிச் சொல்லுவார், எந்த ஒரு நாட்டில், தான் வைக்கக்கூடிய மரத்தின் கனியை தான் உண்ண இயலாது என்று தெரிந்தும் ஒருவன் மரம் வைக்கிறானோ, அப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கும் வரை இந்த உலகம் இயங்கிக் கொண்டே இருக்கும் என்று கூறுவார்.
இறைவனின் படைப்பின் சிகரமாகிய மனிதர்களாகிய நாம், நமது சொல் செயல் வழியாக அடுத்தவருக்கு எடுத்துக்காட்டான வாழ்வை வாழுவோம். அந்த வாழ்வு பிறருக்கு பயன் தரக் கூடிய வாழ்வாக அமைய நமது சொல்லும் செயலும் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை இன்றைய நாளில் இறைவன் நமக்குத் தருகிறார்.
இறைவன் தருக்கின்ற சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டவர்களாக இதுவரை எப்படியோ வாழ்ந்திருந்தாலும் அதையெல்லாம் புறந்தள்ளி, இனி இருக்கின்ற நாட்களில் அர்த்தமுள்ள வகையில் அடுத்தவருக்கான ஒரு வாழ்வை வாழ உள்ளத்தில் உறுதியேற்போம். அதற்கு இறைவன் தாமே நம்மோடு இருந்து நம்மை வழிநடத்த வேண்டும் என இறைவனிடம் மன்றாடி இந்த திருப்பலியில் தொடர்ந்து ஜெபிப்போம்.
புனித மார்த்தா விழா! ( 29-7-2024)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...