வியாழன், 8 ஜூலை, 2021

நல்லெண்ணத்தோடு நலமான பணிகளை செய்ய (11.7.2021)

நல்லெண்ணத்தோடு நலமான பணிகளை செய்ய ...

இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களே 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 



இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் ஆடு மேய்க்கின்ற பணியை செய்து வருகின்றார் ஆனால் அவர் இறைவாக்கு உரைக்கும் பொழுது மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருக்கின்றனர். இவனெல்லாம் ஒரு பெரிய ஆளா! இவன் சொல்லி நான் கேட்கணுமா? இந்த எண்ணத்தோடு இருந்தனர். ஆனால் ஆமோஸ் இறைவனால் தேர்ந்து எடுக்கப்பட்டவர். கடவுளின் தேர்ந்தெடுத்தல் மிகவும் வித்தியாசமானது. ஆமோஸ் இறைவாக்கினர் தன்னைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார். நான் சாதாரண ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவன் தான். பெரிய படிப்பெல்லாம் படிக்கவில்லை. ஆனால் கடவுள் என்னை அழைத்தார். நான் சொன்னதைச் செய்கிறேன் என்று கூறினார்.

ஆமோசை அழைத்ததுப்போல கடவுள் நம்மையும் அவர் பணிக்காக அழைக்கின்றார்.ஆனால் நம்மில் பலர் கடவுள் ஒரு சிலரை மட்டுமே அழைக்கிறார் என எண்ணுகிறோம். ஆனால் கடவுள் ஒவ்வொருவரையுமே அழைக்கின்றார். ஏழை - பணக்காரன், படித்தவன் - படிக்காதவன்,வலிமையுள்ளவன் - வலிமையற்றவன் என்ற எந்தவித வேறுபாடும் இன்றி எல்லாரையுமே இறைவன் அழைக்கின்றார்.  ஆனால் பலர் அதை உணர்ந்து கொள்வதில்லை. அதை உணர்ந்து கொண்டு அவருக்கு ஏற்றவர்களாக வாழ்வதில்லை. மொத்தத்தில் அழைத்தல் எல்லோருக்குமாக இருக்கிறது. அதை உணராதவர்களாக நாம் இருக்கிறோம்.



இன்று இறைவனது அழைத்தல் என்றாலே குருக்களாக பணியாற்றுவது என்று தான் எண்ணுகிறோம். எனவே அழைத்தலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சாக்கு சொல்பவர்கள் ஏராளம். நாங்கள் தான் திருமணம் முடித்து விட்டோமே.. நான் என்ன பணியாற்றுவது? என் பணி என் குடும்பத்தினருக்கு மட்டுமே என எண்ணுவோர் நம்மிடையே பலர்.

இதை தான் பாரதிதாசன்.

தன் பெண்டு 

தன் பிள்ளை 

சோறு, வீடு, சம்பாத்தியம் 

இவையுண்டு தானுண்டேன்போன் 

சின்னதொரு கடுகு போல் உள்ளங் கொண்டோன்!

அதாவது தான், தன் குடும்பம் என்பவர்கள் கடுகு போன்ற உள்ளம் கொண்டவர்கள் என்கிறார் பாரதிதாசன். அன்று குடும்பத்தில் உள்ளவர்கள் தான் பலவிதமான அறப்பணிகளில் ஈடுபட்டார்கள்;. அன்று வீட்டில் திண்ணை வைத்து கட்டியவர்கள் எல்லாம் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் காரணம் வழிப்போக்கர்கள் அமர்ந்து இளைப்பாறி விட்டுச் செல்லட்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டிருந்ததால். ஆனால் இன்று அன்னார்ந்துப் பார்க்கும் வகையில் மாளிகை போன்ற வீட்டைகட்டி அதற்கு அன்னை இல்லம் என பெயர்சூட்டி மகிழ்கின்றனர். ஆனால் அந்தோ பரிதாபம்…. வீட்டின் பெயர் மட்டுமே அன்னை இல்லம். ஆனால் அன்னை இருப்பதோ அனாதை இல்லம்…. இதுவே இன்று எதார்த்தம் இவ்வுலகில்.

ஆனால் கடவுள் பார்வையில் நாம் ஒவ்வொருவருமே சமமானவர்கள் தான். திருமணம் செய்து கொண்டவர்கள், திருமணம் செய்யாதவர்கள், ஏழை - பணக்காரர், தாழ்ந்தவன் - உயர்ந்தவன் இந்த வேறுபாடு எல்லாம் ஆண்டவர் பார்ப்பதில்லை. அவரது பார்வையில் நாம் அனைவரும் சமம். 

இயேசு கிறிஸ்து தன் இன்னுயிரை சிலுவையில் தியாகம் செய்தது ஒரு சிலருக்காக அல்ல நம் அனைவருக்காகவே. இவ்வுலகில் உள்ள அனைவரும் அவரது பிள்ளைகள். ஒவ்வொருவரையும் அவர் தம் பணிக்கென அழைக்கின்றார். அழைத்தவர்களை தகுதியுள்ளவர்கள் ஆக்குகின்றார். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்க கேட்டோம்.

இயேசு தன் பணிக்கு அழைத்த சீடர்கள் எல்லாம் பெரிதாக சட்டம் படித்தவர்களோ, பட்டம் வாங்கியவர்களோ அல்ல. சாதாரண ஏழை எளிய மீனவர்களைத் தான். ஆனால் அழைத்தவர்களை தகுதியுடையவர்களாக மாற்றினார். இன்று கடவுள் நம்மையும் அழைத்திருக்கிறார். நம்மை தகுதியுள்ளவர்களாக அவர் மாற்றுவார். அதற்கு நாம் நம்பிக்கையோடு நலமான பணிகளையும் முன்னெடுத்து செல்லக்கூடியவர்களாக இச்சமூகத்தில் இருக்க வேண்டும். இதுதான் இன்றைய நாளில் இறைவன் நமக்குத் தருகின்ற செய்தி. அவரால் அழைக்கப்பட்ட நாம் அனைவரும் நல்லெண்ணத்தோடு இச்சமூகத்தில் நலமான பணி செய்ய வேண்டும்.  

இது எளிதான ஒன்று அல்ல… நாம் நல்லது செய்ய எண்ணலாம் ஆனால் மிக எளிதாக ஒருவர் நமது இயல்பை மாற்றிட முடியும்...

ஒருமுறை ஒருவன் ஒரு நாயைப் பிடித்துக் கொண்டு நடைப் பயிற்சியை செய்து கொண்டு இருந்தானாம். அவனருகில் சென்று மற்றொருவன் என்ன சக்கரை நோய் இருக்கா? என்று கேட்டானாம். உடனே அவன், இல்லை என்றானாம். உடனே மற்றவன்,  நான் உன்னையா கேட்கல உன்னுடைய நாயை தான் கேட்டேன் என்று கூறினானாம். உடனே அவனுடைய எண்ணங்கள் மாறின கோபத்தோடு கத்த தொடங்கினாம். 

இன்று நீங்கள் ஒரு நல்ல செயல்களை செய்ய தொடங்கும் போது உங்களை தடுப்பதற்கான ஆயிரம் வழிகளை பலர் கையில் எடுப்பது உண்டு. ஆனால் எந்த நேரத்திலும் நம்பிக்கையில் தளராது நீங்கள் உங்கள் பணியை செய்ய வேண்டும். நல்ல பணிகளை  செய்யும் போது, "இவன் விளம்பரத்திற்காக செய்கிறான்" என்று பலர் கூறுவார்கள். இவர் பெரிய ஆளா இதையெல்லாம் செய்ய வந்துவிட்டான். இவரைப் பற்றி நமக்கு தெரியாதா? என்று சிலர் ஏளனமாகவும் சொல்பவர்களும் உண்டு. சொல்லுபவர்கள் எல்லாம் செயலில் இறங்கியவர்கள் அல்ல. ஆனால் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆண்டவர் இயேசுவின் பெயரால் அனைத்து நலமான பணிகளையும் முன்னெடுத்து செல்லுங்கள். ஏற்பவர் இருக்கட்டும் ஏற்காதவர்கள் ஏற்காதவராக இருக்கட்டும். கடவுள் அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் நம்மை வெளிப்படுத்துவார்.

நாம் இந்த இயேசுவை மனதில் கொண்டு இந்த சமூகத்தில் பயணிக்க வேண்டும். அப்படித்தான் இயேசுவின் சீடர்கள் இருந்தார்கள். பேய்களை ஓட்டுவும், நோய்களை குணப்படுத்தவும் பலவிதமான அதிகாரங்கள் அனைத்தும் அவர்களுக்கு கிடைத்தது. அனைத்து சூழல்களிலும் அவர்கள் அப்பணியைச் செய்து கொண்டே சென்றார்கள். அவர்களைப் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஏற்றுக் கொள்ளாதவர்களை பற்றி கவலைப்படத் தேவையில்லை. நீ செய்ய வேண்டியதைச் செய் என்று கூறி இயேசு அவர்களை வழி அனுப்பினார். இதையே அன்றைய நற்செய்தி வாசகத்திலும் வாசிக்க கேட்டோம்.



இன்று நிலவும் இந்த இக்கட்டான சூழலில் நம்மை மட்டும் காத்துக் கொள்வோம் பிறரைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை என ஒதுங்கக் கூடியவர்களுக்கு மத்தியில்  அந்த இயேசு கிறிஸ்து அவரது சீடர்களைப் போல நம்மையும் நலமான பணிகளை முன்னெடுக்க இன்று உங்களையும் என்னையும் அழைக்கின்றார். நல்லெண்ணத்தோடு நலமான பணிகளை முன்னெடுத்துச் செல்ல பணமோ, படிப்போ, பட்டமோ  தேவையில்லை. நல்லெண்ணம் இருந்தால் போதும். அந்த நல்லெண்ணம் என்பது வெறும் எண்ணமாக மட்டுமே இருந்தால் ஆகாது. அது நம் வாழ்வில் செயலாக்கப்பட வேண்டும். செயலாக்கப்படுவதை தான் இறைவன் விரும்புகிறார். அதனை செய்யவே இறைவன் இன்று நமக்கு அழைப்பு தருகின்றார். 

அன்று இயேசு சீடர்களை அனுப்பியது போல இன்று தளர்வுகளுக்கு மத்தியில் நாமும் இந்த சமூகத்திற்குள் செல்வோம். சமூகத்தில் நம் அண்டை வீட்டாரோடு அருகில் இருப்பவர்களோடு நம்மிடம் இருப்பதை பகிர்வோம். துன்பத்தில் துணை நிற்போம். அவர்களும் நல்ல செயல்களை செய்வதற்கு நமது செயல்கள் அவர்களுக்கு பாடமாகிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...