வெள்ளி, 23 ஜூலை, 2021

வாழ்வும் - இறையாட்சி மதிப்பீடும்... (24.7.2021)

வாழ்வும் - இறையாட்சி மதிப்பீடும்

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 கடந்த வாரம் முழுவதும் வாசிக்கப்பட்ட வாசகங்கள் அனைத்துமே இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி நாம் வாழவேண்டும் என்ற செய்தியை தருகின்றன. இயேசு மண்ணில் வாழ்ந்த போது இறையாட்சியைப் பற்றிய செய்திகளை எடுத்துரைத்துக்கொண்டே இருந்தார்.  அவரது வார்த்தைகளை பலர் வாழ்வாக மாற்றினார்கள், பலர் அதனை பொருட்படுத்தாது சென்றார்கள். பலர் அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு மயங்கினார்கள், ஆனால் செயலில் ஈடுபடாமல் இருந்தார்கள்.  இவ்வாறு பலதரப்பட்ட மனநிலையில் இருந்த அந்த மக்களிடையே ஆண்டவர் இயேசு இன்று புதியதொரு உவமையை சொல்லுகிறார். 

அதுதான் ஒரு நிலத்தில் அதன் உரிமையாளர் விதைகளை விதைக்க, அதில் முளைத்த களைகளைக் குறித்த உவமை. 

 ஒரு வயலில் எப்படி நல்ல விளைச்சல் தரக்கூடிய செடிகளும், எதற்கும் பயன்படாத களைகளும் வளர்ந்து நிற்கிறதோ, அதுபோலத்தான் இந்த உலகத்தில் பல நேரங்களில் இறையாட்சியின் மதிப்பீடுகளை அறிந்தவர்களும் அறிந்து அதனை செயல்படுத்தாமல் இருப்பவர்களும் இணைந்தே இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறு நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த காலத்தில் பல நேரங்களில் இறையாட்சியின்  மதிப்பீடுகளை உணர்ந்து கொள்ளாமல் நடக்கக் கூடியவர்கள் மீது நமக்கு கோபம் எழுவது உண்டு.  அவர்கள் நன்றாக இருப்பார்கள்,  ஆனால் இறையாட்சியின் மதிப்பீடுகளை பின்பற்றுவதால் நாம் பல துயரங்களை அடைகிறோம்  என்ற எண்ணமானது, உள்ளத்தில் அவ்வப்போது வாட்டிக் கொண்டே இருக்கலாம்.  ஆனால், அந்தச் சூழ்நிலையில் நாம் எப்படி செயல்பட வேண்டும்? என்பதைத் தான் இறைவன் இன்று உணர்த்துகின்றார்.

நாம் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக மாற்றிக்கொண்டே பயணிக்க வேண்டும். பல களைகள் நம்மை நெருக்குவது போல் இருந்தாலும்,  நாம் பலன் தரக்கூடிய நல்ல செடியாக உருவெடுத்து கொண்டே இருக்க வேண்டும். காலம் வரும்பொழுது இறைவன் நல்ல விளைச்சல் தரக்கூடிய நம்மை பாதுகாப்பார்.  இடையூறாக இருந்த களைகளை எவ்வாறு அகற்றி, தீயிலிட்டு இருக்கிறார்களோ, அது போல இறையாட்சியின் மதிப்பீடுகளை உணர்ந்திருந்தும் அதனை செயலில் காட்டாதவர்களை இறைவன் பார்த்துக் கொள்வார் என்ற மனநிலையோடு இந்த சமூகத்தில் நாம் பயணிக்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.  வாசகங்கள் உணர்த்துகின்ற உண்மை நெறியை உணர்ந்து கொண்டவர்களாய், நமது வாழ்வில் இறையாட்சியின் மதிப்பீடுகளை அனுதினமும் வெளிக்காட்டக் கூடியவர்களாக மாறிட இறையருளை வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...