ஞாயிறு, 18 ஜூலை, 2021

அடையாளமாக விளங்க... (19.7.2021)

அடையாளமாக விளங்க...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடக்கின்ற நிகழ்வை நாம் வாசிக்க கேட்டோம். இஸ்ராயேல் மக்கள் தங்கள் வாழ்வில் இதுவரை கண்டிராத மாபெரும் அற்புதமாக அதிசயமாக செங்கடலை கடக்கின்ற நிகழ்வை சந்தித்தார்கள். தங்கள் கண்களால் கடல் நடுவே பாதையை கண்டார்கள். வாக்களிக்கப்பட்ட புதிய வாழ்வை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஆனால், காலப்போக்கில் அவர்கள் தங்களை காத்து வந்த இறைவனை மறந்தவர்களாக, ஆண்டவரை விட்டு விலகிச் சென்ற மக்களாக இருந்தார்கள். எனவேதான் பல நேரங்களில் இவர்கள் வணங்கா கழுத்துள்ள மக்கள் என்று விவிலியத்தில் சொல்லப்படுகிறார்கள். 

            ஆண்டவர் இயேசுவின் காலத்திலும் கூட அவர் எவ்வளவோ, நன்மையான காரியங்களை செய்து கொண்டே சென்றார். இயேசுவிடம் குற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு இயேசு செல்கின்ற இடமெல்லாம் அவரைப் பின் தொடர்ந்து சென்றவர்கள் தான் இன்று நாம் வாசிக்கின்ற பரிசேயர்களும்  சதுசேயர்களும். இவர்கள் ஒவ்வொரு நாளும் இயேசுவின் அருஞ்செயல்களையும் அதிசயங்களையும் கண்ணாரக் கண்டவர்கள். ஆனால் மேலும் மேலும் இயேசுவிடம் வந்து இன்னும் எங்களுக்கு அடையாளங்களை காட்டும் என்று கேட்கிறார்கள். அப்போது இயேசு ஆண்டவர் அவர்களிடம் இவ்வாறு கூறுகிறார்:  வெறும் அடையாளங்களைக் கண்டு மட்டுமே நம்பிக்கை கொள்பவர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு எந்தவிதமான அடையாளமும் தரப்படமாட்டாது என்கிறார். 

        இன்று நாம் வாழும் சமூகத்திலும் கூட மனிதர்கள் ஏதாவது ஓர் அதிசயம் நிகழ்கிறது என்று கேள்விப்பட்டால் அதனை நோக்கி ஓடக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.  சமீபத்தில் கூட மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில், மக்கள் அதிகமாக கூட வேண்டுமென்றால் அங்கு ஏதாவது அற்புதம் நிகழ்த்தப்பட வேண்டும் என்ற கருத்து சொல்லப்பட்டது. வெறும் அற்புதத்தையும் அடையாளத்தையும் நிகழ்வுகளையும் மட்டும் மையமாக வைத்து நாம் ஆண்டவரைத் தேடிச் செல்ல வேண்டும் என விரும்பினால், கண்டிப்பாக நாம் ஆண்டவர் மீது முழுமையான நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. எந்தவித அற்புதங்களும் அதிசயங்களும் நமது வாழ்வில் நடக்காத நிலையிலும், அதனை எதிர் பார்க்காதவர்களாய் ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டு, படைத்த இறைவன் இந்த நொடி வரை நம்மை பாதுகாத்து வருகிறார், பராமரித்து வருகிறார் என்பதை உணர்ந்தவர்களாய், அவரைத் தேடிச் சென்று, நாம் அடையாளமாக மாற வேண்டும். 

ஆனால் அவ்வாறு மாறாது, வெளிப்படையாக அடையாளங்களை எதிர்பார்ப்பதும், அதைக் கொண்டு கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொள்ள வேண்டும் என எண்ணுவதும் இறைவனுக்கு ஏற்புடைய செயலல்ல. இதைத்தான் இன்றைய வாசகங்கள் வெளிப்படுத்துகின்றன. 
     நாம் எத்தகைய மக்களாக இருக்கிறோம்? வாழ்வில் நடந்த பலவிதமான அற்புதங்களை, அதிசயங்களை, கண்ட போதும், வணங்கா கழுத்துள்ள மக்களாக இருந்த இஸ்ரயேல் மக்களாக இருக்கிறோமா? அல்லது ஏதேனும் அருளடையாளம் நிகழ்ந்தால் மட்டுமே கடவுளை நம்புவேன் என்ற மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கின்றோமா? அல்லது நாமே ஒரு நல்ல அடையாளமாய் மாறக் கூடியவர்களாய் படைத்த இறைவனின் பராமரிப்பை உணர்ந்தவர்களாய் இருக்கின்றோமா? 

கேள்வி நம்முன் இருக்கிறது. நாம் எத்தகைய மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கிறோம்?  அவரவர் உங்களையே சுய ஆய்வு àசெய்து, உரிய பதிலை கண்டு கொண்டு, உங்கள் வாழ்வை நல்லதொரு பாதையில் வழிநடத்திச் சென்று இந்த சமூகத்தில் நல்லதொரு அடையாளமாக விளங்க இறையருள் வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...