சனி, 17 ஜூலை, 2021

மந்தையின் மணம் அறிந்தவனே நல்ல ஆயன்!...(18.7.2021)

மந்தையின் மணம் அறிந்தவனே நல்ல ஆயன்!

இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின்  அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
நெஞ்சை தொட்ட ஒரு குடும்பம். ஒரு குடும்பத்தில் ஒரு தாய் தந்தையருக்கு மூன்று பெண் குழந்தைகள். தாயும் தந்தையும் கடினப்பட்டு குழந்தைகளை வளர்த்தனர். குழந்தைகள் வளர்ந்தார்கள். திருமண வயதை எட்டிய நிலையில் இருக்கும் பொழுது தந்தை பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு, படுக்கையில் விழுந்தார். படுக்கையில் விழுந்த தந்தையை மூன்று மகள்களுமே போட்டி போட்டு கவனித்துக் கொண்டார்கள். பொதுவாக நோய்வாய்ப்பட்ட தந்தையை பார்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டாத பலருக்கு மத்தியில், இந்தக் குடும்பத்தினர் மிகவும் பாசத்தோடும் நேசத்தோடும் இதுவரை காட்டிய அன்பை கடந்து, இன்னும் அதிகமாக அன்பை பொழியக் கூடியவர்களாக, அந்த தந்தையை, கவனித்துக் கொண்டார்கள். ஒரு சிறு குழந்தையை போல் அவரை தாங்கினார்கள். அப்போது ஒன்று புரிந்தது, இந்த தந்தை தன்னுடைய பிள்ளைகளை சிறுவயதிலிருந்தே மிகவும் நல்லமுறையில் பராமரித்து, பாதுகாத்து, வளர்த்து வந்திருக்கிறார். அவரது வளர்ப்பு இன்று அவர் கண்ணால் காணக்கூடிய வகையில், அவரது மகள்களின் குழந்தைப் பருவத்தில், அவர்  பெரியவராக, தந்தையாக, இருந்தபோது அவர் எப்படி தன்னுடைய மகள்களை வளர்த்தாரோ, அது போல, அந்த குழந்தைகள் இளம்வயதுப் பெண்மணிகள் ஆனபோது, தங்கள் தந்தையை ஒரு குழந்தையாக பாவித்து அவரைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.  பெற்றோர் எவ்வழியோ, அவ்வழியே தான் குழந்தைகளும் செல்வார்கள்,  என்று கூறுவார்கள். ஒரு குழந்தையானது பெற்றோரிடமிருந்து தான் பலவற்றை கற்றுக் கொள்கிறது.  அதுபோல இந்த சமூகத்தை நாம் ஒரு குடும்பமாக இணைத்துப் பார்க்கும்போது, இந்த சமூகத்தில் பல மேய்ப்பர்கள் உண்டு. இந்த மேய்ப்பர்களை பார்த்துதான் மந்தையாகிய பல மக்கள் பலவற்றை கற்றுக் கொள்கிறார்கள். 

      இந்த சமூகத்தில் மேய்ப்பன் பெரியவனா? மந்தை பெரியதா? என்ற கேள்வியை எழுப்பும் பொழுது, இரண்டும் இணைந்திருப்பதில் தான் இன்பமும் நிறைவும் இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள முடியும். இன்றைய நாள் முதல் வாசகம், தவறான மேய்ப்பர்களை சுட்டிக் காட்டுகிறது.  ஒன்று சேர்க்க வேண்டிய மேய்ப்பர்கள், பிரிவினைக்கு காரணமாக இருக்கிறார்கள். இதை இன்றைய நாளில் இன்று நாம் வாழுகின்ற சமூகத்திலும் நம்மால் காணமுடியும். அனைவரையும் ஒன்றிணைப்பதற்காக உருவான தலைவர்கள், பல நேரங்களில் பிரிவினைகளுக்கு வித்திடக் கூடியவர்களாகத் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். பிரிவினைக்கு வித்திடுவதை ஆண்டவர் இயேசு விரும்புவதில்லை. ஒரு நல்ல தலைவன் என்பவன், அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தலைவனாக இந்த சமூகத்தில் வாழ்ந்தவர் தான், ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

 இதையே இன்றைய இரண்டாம் வாசகம் நமக்குத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த சமூகத்தில் ஒரு நல்ல ஒரு மேய்ப்பனாக இருந்தார். ஏழை- பணக்காரன், குற்றம் செய்தவன் - குற்றம் செய்யாதவன்,  சமூகத்தால் ஒதுக்கப்பட்டவன்-  உயர் நிலையில் இருப்பவன், அதிகாரத்தில் இருப்பவன்- அதிகாரம் அற்றவன் என பல பாகுபாடுகளுக்கு மத்தியிலிருந்த சமூகத்தில், இயேசுகிறிஸ்து அனைவரையும் தேடித் செல்லக்கூடிய, ஒன்றிணைக்கக் கூடிய ஒரு நல்ல தலைவனாக, நல்ல மேய்ப்பனாக இருந்தார். எனவே தான், அந்த மேய்ப்பனைத் தேடி மக்கள் கூட்டம், சாரை சாரையாக செல்லத் தொடங்கியது என்பதை இன்றைய நாள் நற்செய்தி வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. 

  இயேசு கிறிஸ்து தூய ஆவியின் உதவியால் எவ்வாறு கடவுளோடு ஒன்றித்திருந்தாரோ, அதுபோல இந்தச் சமூகத்தில் இருந்த ஒவ்வொருவருடனும் ஒன்றித்திருந்தார்.  அவரது அந்த ஒன்றிப்பு மனப்பான்மைதான், அனைவரையும் அவரை நோக்கி வர வைத்தது. 

 ஒரு நல்ல தலைவனாக இந்த சமூகத்தில் அவர் திகழ்ந்தார். எனவே அவரை நோக்கிச் சென்றவர்கள் எல்லாம் பலவிதமான நலன்களைப் பெற்றுக் கொண்டார்கள்.  இந்த இயேசுவைப் போல, ஒரு நல்ல மேய்ப்பனாக இந்த சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் இருப்பதற்கு கடமைப்பட்டு இருக்கிறோம். ஆனால் பல நேரங்களில் நம்மிடையே இருக்கக்கூடிய சுயநலத்தின் காரணமாக, மந்தைகளை நமது தேவைக்கு பயன்படுத்தக் கூடிய மேய்ப்பர்களாகத் தான் இன்று நம்மில் பலர் இருந்து கொண்டிருக்கிறோம். 

ஒரு குடும்பம் என்றாலே 
அந்த குடும்பத்தில் நானா? நீயா? என்ற கேள்வியை எழுப்பி, யார் பெரியவர்? யார் உயர்ந்தவர்? என்ற பாகுபாட்டிற்கு வித்திடக்கூடிய நிலை, இன்று பல குடும்பங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஆண்டவர் இயேசு கிறிஸ்து பாகுபாடுகளையும் சுயநலப் போக்கையும் தகர்த்தெறிந்தவராய், அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு உன்னதமான ஆயராகிறார்.  அவரைப் போல, அவரைப் பின்பற்றுகிற நாமும் நல்ல  ஒரு ஆயனாக, மேய்ப்பனாக, இந்தச் சமூகத்தில் இருப்பதற்கு இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு  அழைப்பு  தருகின்றார்.  

           நான் தான் பெரியவன் என்று,  "தான்" என்ற மனப்பான்மையோடு இந்த சமூகத்தில் நாம் பயணிக்காமல், நம்மிடம் வரக்கூடிய மந்தையாகிய மக்களை நமது சுயநலப் போக்கின் படி வழி நடத்தாது, மந்தையாகிய மக்களின் தேவையை அறிந்தவர்களாக நாம் இச்சமூகத்தில் வலம் வர வேண்டும்.  அவ்வாறு வலம் வருகின்ற போது, மந்தைகளாகிய மக்கள் நம்மைத் தேடி வரக் கூடியவர்களாக மாறுவார்கள்.  நம்மைத் தேடி வருகின்ற போது அவர்கள் பலவிதமான நலன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின், நாம் இயேசுவைப் போல நல்ல  ஒரு மேய்ப்பனாக 
 இந்த சமூதத்தில் இருக்க வேண்டும். 

மேய்ப்பன் என்றால் யாரோ ஒருவர் தான் தலைவர் என்று கூறிவிட்டு, அவன் தான் மேய்ப்பன் என எதிர்பார்த்துக் கொண்டு நகராமல், நாம் ஒவ்வொருவருமே நல்லதொரு மேய்ப்பனாக மாற வேண்டும். சமூகத்திலும், குடும்பத்திலும், வீட்டிலும், நாட்டிலும் நல்ல ஒரு தலைவர்களாக, நல்ல ஒரு மேய்ப்பர்களாக, பொதுநல சிந்தனையோடு செயல்படக்கூடிய தன்னார்வ மனம் கொண்ட நல்ல மனிதர்களாக இந்த சமூகத்தில் நாம் மாறிட வேண்டும் என்ற செய்தியினை, இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகின்றார்.  இறைவன் தருகின்ற செய்திகளை செவிகளில் கேட்டு விட்டு நகர்ந்து விடாது, கேட்டவற்றை வாழ்வாக மாற்றி,  இதுவரை எப்படியோ நாம் வாழ்ந்திருக்கலாம்.  ஆனால்  இனி வருகின்ற காலத்தில், நல்லதொரு மேய்ப்பனாக, அடுத்தவர் நலனை முன்னிறுத்தக் கூடிய ஒரு மேய்ப்பனாக, ஆயனாக இந்த சமூகத்தில் நாம் நின்று,  பலதரப்பட்ட மக்களும் நம்மை நோக்கி வந்து பலவிதமான நன்மைகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாம் மாறிட இறையருள் வேண்டுவோம்.  வேண்டலோடு  நின்று விடாது,  அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். சமூகத்தில் நல்லதொரு மேய்ப்பன் ஆவோம். பல நல்ல தலைவர்களை உருவாக்கிட இறையருள் வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...