புதன், 28 ஜூலை, 2021

வலையில் சிக்கிய நீங்கள் எங்கே செல்வீர்கள்?(29.7.2021)

வலையில் சிக்கிய நீங்கள் எங்கே செல்வீர்கள்?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
 இன்றைய நாளின் முதல் வாசகத்தில், கடவுள்  மேகத்தூண் வழியாக இஸ்ரயேல் மக்களை வழிநடத்தியது குறித்து வாசிக்க கேட்டோம். இன்றைய நாள் நற்செய்தி வாசகமோ, இறைவன் நம்மை பராமரித்துக் கொண்டு இருந்தாலும், இறைவன் ஒவ்வொரு நாளும் அவரது பராமரிப்பை நாம் உணர்ந்து நாம் கொண்டு, இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ற வகையில் ஒருவர் மற்றவருக்கு சேவை செய்து வாழ வேண்டும் என்ற செய்தியினை மார்த்தாவை நினைவு கூருகின்ற இந்த நாளில் நமக்குத் தருகின்றது.

          மார்த்தா பல பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் ஈடுபட்ட பணிகள் அனைத்தும் அடுத்தவர் சேவையை மையப்படுத்தியதாகவே இருந்தது.  இந்த மார்த்தா தான் ஆண்டவர் இயேசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்.  

"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே" என்ற ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின் வார்த்தையை முழுமையாக நம்பி, அவ்வார்த்தைகளின் அடிப்படையில்,  லாசர் உயிர்பெற்று எழுவதற்கு காரணமாய் நின்றவரும் இந்த  மார்த்தா தான். இந்த மார்த்தாவை இன்று திருஅவை நினைவு கூருகிறது என்றால்,  மார்த்தாவிடம் காணப்பட்ட நற்பண்புகளான சேவை செய்யும் மனப்பான்மையை நாம் கொண்டிருக்க வேண்டும்.  நம் மீது கொண்ட அதீத அன்பின் காரணமாகத்தான் இறைவன் பல வழிகளில் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். அவரது வழிநடத்துதலை உணர்ந்து கொண்டு நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், நாம் நம்பிக்கையோடு நலமான பணிகளை முன்னெடுத்துச் செல்ல கூடியவர்களாக இருக்க வேண்டும். இந்த இறையரசை முன்னெடுத்துச் செல்ல கூடியவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு நாம் செயல்படும்போது இறையாட்சிக்கு உட்பட்டவர்களாக நாம் இருக்கமுடியும் . இறைவன் இறையரசை கடலில் வீசப்பட்ட வலைக்கு ஒப்பிடுகின்றார்.

 

 கடலில் வலை வீசிய போது அதில் நல்லது தீயது என இரண்டு விதமான  பொருட்களுமே அகப்பட்டுக் கொண்டு வந்தது. அது போல இந்த உலகத்தில் இன்று கடவுள் வலையை வீசும் போது நாம் அனைவரும் அந்த வலைக்குள் அகப்பட்டு அவரிடம் செல்கின்றோம்.  நம்மை அவர் எடுத்து நல்லது எனக் கருதி சேர்த்து வைப்பாரா? அல்லது  தீயது என கருதி புறம் தள்ளுவாரா? கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்புவோம்.  நம்மை  நல்லது எனக் கருதி இறைவன் தன்னுடைய சேமிப்பில் நம்மை வைத்துக் கொள்ள வேண்டுமாயின் நாம் இறையாட்சி யின் மதிப்பீடுகளுக்கு ஏற்ற வகையில் மார்த்தாவைப் போல பிறர் தேவையை முன்னிறுத்தக் கூடியவர்களாக இச்சமூகத்தில் வலம் வரவேண்டும்.  அவ்வாறு நமது செயல்பாடுகள் இல்லை என்றால் இன்றைய நாளில் நாம் நமக்குள்ளாக மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, இனி வருகின்ற காலங்களில் இறைவன் நல்லது எனக் கருதி சேர்த்து வைக்கக் கூடிய மீன்களாகிட இறையருளை வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...