வியாழன், 15 ஜூலை, 2021

மனிதநேயத்தை முன் நிறுத்தலாமே! ...(16.7.2021)

மனிதநேயத்தை முன் நிறுத்தலாமே!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
கடந்த வாரத்தில் ஒளிபரப்பான, "நீயா? நானா?" நிகழ்ச்சியில் ஒருபுறம் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும், மற்றொருபுறம் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய மக்களுக்கு உதவி செய்த தன்னார்வத் தொண்டர்களும், சமூக சேவகர்களுமாக,  இரு குழுவினருக்கு இடையேயான உரையாடல் நடந்தது. அந்த உரையாடலில் பல நல்லவற்றை இச்சமூகத்தில் உள்ளவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டது.  எப்படி ஒருவர் நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடினார் என்பதையும், அந்த நேரத்தில் கடவுள் போல வந்து காத்தருளிய பல சமூக சேவகர்களையும், பல தன்னார்வ தொண்டர்களையும், நினைவு கூரும் விதமாக அந்நிகழ்வு அமைந்திருந்தது. இன்று மனிதர்களிடத்தில் இந்த மனித நேயப் பண்பு குறைந்து கொண்டே செல்கிறது.  ஏதேனும் ஒரு துன்பமுமோ, துயரமுமோ நேரும் போது மட்டும் தான் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்களை நாம் கண்டுகொள்கிறோம். பல நேரங்களில் இவர்களை கண்டுகொள்ளாமல் மனிதநேயமற்ற முறையில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  சட்டமா? மனிதநேயமா? என்று முன்னிறுத்தும் போது,  மனித நேயப் பண்புகளைத் தான் இறைவன் முதன்மையானது எனக் கருதுகிறார்.  இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் கூட கதிர்களை ஓய்வுநாளில் கொய்தார்கள் என்ற குற்றமானது இயேசுவின் சீடர்கள் மீது சுமத்தப்பட்டது. ஆனால் இயேசு பசியால் இருக்கிறவனுக்கு தன் பசியைப் போக்குவதற்காக அவன் கதிர்களை கொய்து உண்பதை சரி எனவும், சட்டத்தை வெறுமனே பிடித்துக் கொண்டிருப்பது தவறு எனவும் சுட்டிக் காட்டுகின்றார்.  நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், நாம் மனிதநேய செயல்களில் ஈடுபடுகிறோமா? தேவையில் இருப்பவரைக் கண்டு கொள்கிறோமா? அல்லது சட்ட திட்டங்களை மட்டுமே பிடித்துக்கொண்டு, ஏன் நான் அடுத்தவருக்கு உதவ வேண்டும்?  நான் ஈட்டிய வருமானம், அது எனக்குத்தான் என்ற மனநிலையோடு நகர்ந்து கொண்டு இருக்கின்றோமா? என சிந்தித்து பார்க்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
  மனித நேயச் செயல்கள் நம்மிடத்தில் வெளிப்படும் போது தான்,  நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்பக்கூடிய,  அவரது பிள்ளைகளாக இச்சமூகத்தில் இருக்க முடியும். நாம் மனித நேய செயல்களில் ஈடுபடாது, நம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிராது இந்த சமூகத்தில் வாழ முற்படுவோமானால்,  நாம் கடவுளுக்கு உகந்தவராக இயலாது.  நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிர்வோம். மனிதநேய செயல்களை நமது வாழ்வில் முன்னெடுப்போம்.  எப்படி இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமையாக இருந்தபோதும், அவர்களின் அடிமைத்தனத்தை கண்டு அவர்களை மீட்டு வர வேண்டும் என ஆண்டவர் மோசேயை அனுப்பினாரோ, அதுபோல இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நம்மோடு அவர் உரையாடுகிறார்.  நமது வாழ்வில், நாம் வெறுமனே எழுதப்பட்ட சட்டங்களை பிடித்துக் கொண்டிருப்பதை விட மனித நேயச் செயல்களை முன்னிறுத்தி, அதன்வழி நடக்கக் கூடியவர்களாக மாறிட இந்நாளில் அழைக்கப்படுகின்றோம்.  அழைக்கும் இறைவனின் குரலைக் கண்டுகொண்டு வாழ்வில் மாற்றத்தை வெளிக்காட்டிட இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...