வியாழன், 29 ஜூலை, 2021

அறிந்தவரால் அலட்சியம் சாத்தியமே... (30.7.2021)

அறிந்தவரால் அலட்சியம் சாத்தியமே!...

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
இன்றைய முதல் வாசகமானது,
கொண்டாட வேண்டிய விழாக்களையும், இஸ்ரயேல் மக்களிடம் காணப்பட்ட ஒருமைப்பாட்டையும் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆனால் இன்றைய நற்செய்தி வாசகமோ,  அறிந்தவர்களே நம்மை அலட்சியப்படுத்தும் சூழ்நிலை உருவாகும். அச்சூழலில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. மனிதர்கள் பெரும்பாலும் ஒன்றாக இணைந்து வாழ விரும்புகிறார்கள். ஆனால் ஒன்றாக இணைந்து இருக்கின்றபோது, நானா? நீயா?  என்ற போட்டியானது உள்ளத்தில் உதிக்கின்றது. அந்த உதிக்கக் கூடிய எண்ணமானது,  உள்ளத்தில் பலவிதமான தவறான எண்ணங்களுக்கும் வித்திடுகிறது. எனவேதான், சொந்த மக்களுக்கு அவர்களைச் சார்ந்தவர் நல்லது சொல்லும்போதும் என்னைவிட உயர்ந்தவனா நீ?  என்ற எண்ணத்தோடு அலட்சியப் படுத்தக் கூடிய போக்கானது இன்றும் சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கின்றது. அன்று ஆண்டவர் எகிப்தில் இருந்து இஸ்ரேல் மக்களை மீட்டு வந்தபோது,  அவர்கள் எப்படி வழிபட வேண்டும்? எப்போது விழா எடுக்க வேண்டும் என்பதை எல்லாம் திட்டமிட்டு மோசே வழியாக இறைவன் வெளிப்படுத்தினாலும்,  பல நேரங்களில் மோசேயை உதாசீனப்படுத்தக் கூடிய மக்களாக அம்மக்கள் இருந்தார்கள் என்று நாம் விவிலியத்தின் துணை கொண்டு அறிந்து கொள்ள முடியும். விவிலியத்தில் மட்டும் நடப்பது அல்ல இது.  நமது வாழ்விலும் அவ்வப்போது அரங்கேறக்கூடிய நிகழ்வு தான் இது. நல்லது என கருதி நாம் முன்மொழியும் போது,  எங்களுக்கு அறிவுரை கூற நீ யார்? என்ற கேள்வியை கேட்டு, பலர் நம்மை வாயடைக்க செய்யலாம். 
 ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்கிறார்,  இறைவாக்கினர்கள் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று. இறைவாக்கினர்கள், அது உடன்பிறப்புகளாக இருந்தாலும் சரி, உதவியவர்களாக இருந்தாலும் சரி,  தவறு என்று வருகின்ற போது அவர்கள் செய்வதை சுட்டிக் காட்ட வேண்டும். அவர்கள் ஏற்கிறார்களோ, ஏற்கவில்லையோ, அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்ற செய்தியை இன்றைய நாள் நற்செய்தி வாசகம் தெளிவாக தந்தாலும் நாம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் படி வாழ்வை அமைத்துக் கொண்ட அவரது பணியைச் செய்யும் இறைவாக்கினர்கள். நாம் நமது செயலில் பின்வாங்கக் கூடாது,  ஏற்றுக் கொள்ளாத அவர்களுக்காக நம்மை நாம் மாற்றிக் கொள்வதை விட நீதி எதுவோ? சமத்துவம் எதுவோ?  உண்மை எதுவோ அதை உலகிற்கு அறிவிக்கக்கூடிய உண்மைச் சீடர்களாக அலட்சியப் படுத்துபவர்களுக்கு  மத்தியிலும் அயராது பணி செய்ய இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...