சனி, 31 ஜூலை, 2021

வாழ்வு தரும் உணவாக மாறிட...(1.8.2021)

வாழ்வு தரும் உணவாக மாறிட...

இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாளில் வாசிக்கப்பட்ட வாசகங்களில் இருந்து,  என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இயேசு  இந்த மண்ணில் வாழ்ந்த போது பலர் அவரைத் தேடிச் சென்றார்கள்.  

அவர் மீது குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு கூட்டம் அவரை பின்தொடர்ந்தது.  

அவரிடமிருந்து நல்ல உடல் நலனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு கூட்டம் பின்தொடர்ந்தது. 

இவரிடமிருந்து எதையாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என ஒரு கூட்டம் பின்தொடர்ந்தது.  

ஆனால் இன்று இயேசுவின் பின்னால் பின்தொடர்ந்த கூட்டமோ,  இவர் வயிறார உணவு தருகிறார் என்று உணவை மையப்படுத்தி பின்தொடர்ந்தது.

இயேசு தன்னை பின்தொடர்பவர்கள் யார் என்பதை நன்கு அறிந்தவராய் அவ்வபோது அவர்களுக்கு இறையாட்சியின் மதிப்பீடுகள் எது என்பதையும் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கக் கூடியவராக இருந்தார். 

இன்று நாம் எதை மையப்படுத்தி ஆண்டவர் இயேசுவை பின்தொடரும் என சிந்திக்கவும்.... வானிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு இயேசுவைப் போல நாமும் இச்சமூகத்தில் வாழவும் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.
இன்றைய முதல் வாசகத்தில் கூட எகிப்தில் அடிமையாய் இருந்த இஸ்ராயேல் மக்களை இறைவன் அழைத்து வந்ததோடு நின்றுவிடாமல்,  அவர்களின் தேவையை அறிந்தவராய் அவர்களுக்கு பசியைப் போக்க மன்னாவை வழங்கினார். ஆனால் அவர்கள் அந்த ஆண்டவரை இறுகப் பற்றிப் பிடித்து இருந்தார்களா? என்ற கேள்வியை எழுப்பும் பொழுது, தேவைக்கு இறைவனிடம் செல்பவர்களாக தான் அவர்களுள் பலர் இருந்தார்கள் என்பது வெள்ளிடைமலையாகப் புலப்படுகிறது. 
       இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறுகிறார், நானே வானினின்று இறங்கி வந்த உணவு. என்னை உண்டால் உங்களுக்கு பசியே இராது என்று கூறுகின்றார். வானிலிருந்து இறங்கி வந்த உணவான இந்த இயேசு கிறிஸ்து, இந்த சமூகத்தில் எப்படி வாழ்ந்தார் என சிந்திக்கின்ற போது, அவர் பிறர் வாழ தன்னையே தியாகம் செய்தவர். 

     இந்த சமூகத்திற்கு எது நல்லது? எது தவறானது? எதை செய்ய வேண்டும்? எதை முன்னிலைப்படுத்தி நாம் பயணிக்க வேண்டும்? என்பதை இயேசு கிறிஸ்து தான் சென்றவிடமெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே சென்றார். அவர் தனது கடமையை சரியாக செவ்வனே செய்து கொண்டே பயணித்தார். 


 மனித வாழ்க்கை என்பது ஒரு தொடர் தேடல் மிகுந்தது.  தேடலோடு பயணிக்கின்ற போது நமது வாழ்வானது சுவாரசியம் மிகுந்ததாக மாறுகிறது.  மண்ணில் பிறந்த ஒவ்வொருவருமே மிகவும் நலமோடு நல்ல முறையில் இச்சமூகத்தில் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறோம். ஓடி ஓடி உழைப்பதும் சேர்த்து சேர்த்து வைப்பதும் எதற்காக என சிந்திக்கின்ற போது, அரை சாண் வயிற்றுக்காக தான் என்ற உண்மையை புரிந்து கொள்ள முடியும்.ஆனால் இன்று  நாம் உணவை மட்டும் மையப்படுத்தி வாழ்வதைவிட, பல நல்ல உள்ளங்களை ஊக்கம் ஊட்டக்கூடிய வாழ்வாக நமது வாழ்வு அமைய வேண்டும் என்ற செய்திதான் இன்றைய நாளில் நமக்கு இறைவன் தருகின்றார். 

 ஒரு ஊரில் ஒரு பையன் இருந்தான். அந்த பையன் தன் பெற்றோரிடம் அம்மா, அப்பா,  எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. அதனால் நான் சாகப் போகிறேன் என்று கூறினான். உடனே பெற்றோர் அவனிடம், இல்லை மகனே! நீ அவ்வாறு செய்தல் கூடாது. இந்த உலகத்தில் உனக்கு பல்வேறு திறமைகள் இருக்கின்றன. நீ நன்றாக வாழவேண்டும் என்று கூறினார்கள்.

இல்லை அம்மா நான் கண்டிப்பாக சாகப் போகிறேன். என்னை யாரும் தடுக்க முடியாது என்று கூறினான். உடனே அவனுடைய தந்தை நீ எவ்வாறு சாகப் போகிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் நான் தூக்கு மாட்டிக் கொள்வேன் என்றான். தந்தை அவனிடம் நான் கயிறுகளை எல்லாம் ஒளித்து வைத்து விடுவேன் என்றார். மீண்டும் மகன் அவரிடம் நான் மருந்து குடித்து இறந்து விடுவேன் என்றான். உடனே தந்தை அந்த மருந்தை எடுத்து ஒளித்து வைத்து விடுவேன் என்றார். மீண்டும் மகன் அவரிடம் இல்லை என்றால் நான் மேலிருந்து குதித்து விடுவேன் என்றான். 

 அப்போது தந்தை மகனிடம் கூறினார், சாவதற்கு இத்தனை வழிகள் இருக்குமானால் இதைவிட அதிகமாக, நாம் வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. உன்னுடைய திறமைகளும் உன்னுடைய நற்பண்புகளும் உன்னை உலகத்தில் உயர்த்தும். உன்னை காண்போர் உனது நற்செயல்களால் மகிழ்வர். அதனால் நீயும் மகிழ்ந்திருப்பாய் என்று மகனை நோக்கி மகிழ்வோடு கூறி, வாழ்வைப் பற்றி அவனுக்கு எடுத்துரைத்தார்.



                நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் எதை மையப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? சிந்திப்போம்... பொதுவாக சொல்வார்கள், உண்பதும் உறங்குவதுமே வாழ்க்கை என்றால் அதை மண்ணும் செய்யும், மரமும் செய்யும்.   நீங்களும் நானும் மனிதர்கள். நாம் உண்பதற்காக மட்டுமல்ல,  இந்த உலகத்தில் பல நல்ல உள்ளங்களை ஊக்கம் ஊட்டுவதற்காக இச்சமூகத்தில் வாழ வேண்டும்.  இயேசுவின் போதனைகள் எல்லாமே,  அந்த சமூகத்தில் வாழ்ந்த மக்களுக்கு அறநெறியை கற்பித்தது.  மனிதநேயத்தை கற்பித்தது. நல்ல செயலை செய்வதற்கான ஊக்கமூட்டுதலை அளித்தது. இது தான் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியின் மையமாக இருக்கிறது.  அதுவே இயேசுவின் வாழ்வில் வெளிப்பட்டது.  இதன் வழியாகத்தான் இயேசு வானினின்று இறங்கி வந்த வாழ்வு தரும்  உணவாக மாறினார். 


நாமுன் இச்சமூகத்தில் பிறந்தோம் இறந்தோம் என வாழாமல்,  ஒருவரை ஒருவம்  ஊக்கமூட்டக்கூடிய அடுத்தவருக்காக நம்மையே தியாகம் செய்யக்கூடிய ஆண்டவர் இயேசுவைப் போல இச்சமூகத்தில் வாழ அழைக்கப்படுகிறோம்.


நமது பங்கு தந்தை அவர்கள் கூட நமது குழந்தைகளை பாட வைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.   இவர்களின் பாடலாலும் நமது கூட்டு ஜெபத்தால் இந்த திரு பலியானது  மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த திருப்பலியில் நாம் வெறுமனே பங்கேற்பாளர்களாக மட்டுமில்லாமல் ஒருவர் மற்றவரை பாராட்ட கூடியவர்களாகவும் மாறிட இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.


எனவே இனி வரும் நாட்களில் நாம் ஒருவர் மற்றவரை தேவையின் நிமிர்த்தமாக மட்டும் தேடிச் செல்லாமல் அன்போடும் அக்கறையோடும் அடுத்தவர் நலனில் ஆர்வம் கொண்ட மனிதர்களாக ஒருவரை ஒருவர் ஊக்கமூட்டும் கூடியவர்களாக மாறுவோம். அப்போது தான்     வானினின்று இறங்கி வந்த வாழ்வுதரும் உணவாகிய இயேசுவைப் போல நமது வாழ்வும் அர்த்தமுள்ள வாழ்வாக மாறும் அதற்கான அருளை வேண்டி தொடர்ந்து இணைந்து இந்த திருப்பலி வழியாக ஜெபிப்போம். 

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...