வெள்ளி, 16 ஜூலை, 2021

இடமாற்றம் - எண்ண மாற்றம்....(17.7.2021)

இடமாற்றம் - எண்ண மாற்றம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 
இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெற்ற இடமாற்றம் என்பதை மையமாகக் கொண்டு எண்ண மாற்றத்தைக் குறித்து சிந்திக்க உங்களை அன்போடு அழைக்கின்றேன்.
இடம்பெயர்தல் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. இடம் பெயர்தலை பல நேரங்களில் நாம் ஏற்றுக்கொள்வதில்லை. இடம் பெயரும் போது நாம் இருந்த இடத்திலிருந்த நமக்கு நெருக்கமான,  நமக்கு பிடித்த பலவற்றை பிரிந்து நாம் செல்ல வேண்டிய நிலை உருவாகும். அதேசமயம், இடம் பெயர்தலால் நாம் பல புதியவற்றை கண்டு கொள்ளவும் இயலும்.  எனவே, எதிர்கால இலக்கை முன்னிட்டு நிகழ்காலத்தில் சின்னஞ்சிறு தியாகங்கள் செய்தவர்களாய்,  இடம் பெயர்தலை நாம் செய்தாக வேண்டும்.  மனித மனம் என்பது சுதந்திரமானது. இந்த சுதந்திரமான மனதிலே இடம்  பெயர்தலை ஏற்றுக் கொள்வதற்கும் ஏற்றுக் கொள்ளாதிருப்பதற்கும் உரிமை இருக்கிறது. ஆனால் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் நாம் சில இடம் பெயர்தலை நமது வாழ்வில் பின்பற்ற வேண்டியதும் அவசியமான ஒன்றாகிறது.

 இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது பலவிதமான அற்புதங்களை செய்து கொண்டே இருந்தார். ஆனால் அவர்மீது குற்றம் சாட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரைப் பின் தொடர்ந்த பரிசேயர் சதுசேயர்கள், இயேசுவின் மீது குற்றம் சாட்ட வாய்ப்பு தேடினார்கள். அவர்களின் தீய எண்ணத்தில் இருந்து  இடமாற்றம் அடைய விரும்பவில்லை.  மாறாக தீய எண்ணத்தோடு தொடர்ந்து உழன்று கொண்டிருப்பதுதான் நிறைவு எனக் கண்டார்கள். ஆனால் இயேசுவோ, தன்னைச் சுற்றி இருக்கக் கூடிய தீய எண்ணம் கொண்ட மனிதர்களை பொருட்டாக எண்ணாது, நல்லதை செய்து கொண்டே தொடர்ந்து இடம்பெயர்தலை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.

 சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த ஏழை,  எளியவர்களைத் தேடிச் சென்றார். தொட மறுத்த தொழுநோயாளர்களை தொட்டார். அவர்களோடு உறவாடினார்.  பாவிகள் என ஒடுக்கப்பட்ட, முத்திரை குத்தப்பட்ட மக்களிடையே சென்றார். அவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார். இயேசு தன் வாழ்நாள் முழுவதும் இடம் பெயர்தலை பின்பற்றக் கூடிய மனிதராக இருந்தார். 

நாம் வாழும் இந்த உலகத்தில் நாம் எப்படி வாழ்கிறோம்? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பி பார்ப்போம். பல நேரங்களில் நாம் இந்த உலகத்தில் வலிமையான ஒருவரை பின்பற்றக் கூடிய வகையில் மாறுகிறோம். அந்த வலிமையானவரைப் பொறுத்து, அவருக்கு ஏற்ற வகையில், அவருக்கு பிடித்த வகையில், அவரை புகழ்ந்து கொண்டே, அவரது நல்ல செயல்களை மட்டுமே முன்னிறுத்தி பயணிக்கக் கூடியவர்களாக இருக்கின்றோம். ஆனால் பல நேரங்களில் நாம் ஒன்றை மட்டும் பற்றிக் கொண்டு இருப்பதை விட்டு விட்டு, இடம்பெயர்தலையும் வாழ்வில் முன்னெடுக்க அழைக்கப்படுகிறோம்.

 இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் இருந்து இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் உரிமை தேசமான கானான் தேசத்தை கண்டுகொண்டார்கள், வந்தடைந்தார்கள். நாமும் நமது வாழ்வில் நிலையானது என எண்ணி,  இந்த உலக நாட்டங்களைப் பற்றிக் கொண்டு இருப்பதை விட்டுவிட்டு, காலத்திற்கும் சூழலுக்கும்  ஏற்ற வகையில் இட மாற்றத்தை மனத்தில் இருத்திக் கொள்வோம்.  இடமாற்றம் என்பது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறிக் செல்வது என்று மட்டும் புரிந்து கொள்ளாது, நமது எண்ணங்களில் இருக்கக்கூடிய மாற்றமாக அது இருக்க வேண்டும் என்பதை உள்வாங்கிக் கொண்டவர்களாய், இன்றைய நாளில் நமது வாழ்விலும் இட மாற்றத்தை முன்னெடுக்க துவங்குவோம். இடமாற்றங்களால் பல நல்ல மாற்றங்களை நமது வாழ்வில் காணவும், அதன் வழியாக இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்யவும் இறையருள் வேண்டுவோம்.

1 கருத்து:

  1. இந்த உலகத்தில் பச்சோந்தியாக நிறம் மாறும் மனிதர்கள் மத்தியில், நமது எண்ண மாற்றங்களால் இடமாற்றம் பெற்று வாழ்வில் இயேசுவின் அன்புக்குரிய மக்களாக வாழ்ந்திட நம்மை அன்போடு அழைக்கும் திருத்தொண்டர் சகாயராஜ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும்! செபங்களும்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...