ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

தன்னையறிதல்...(4.4.2022)

தன்னையறிதல்...


தன்னை  பற்றிய ஆழமான புரிதலே இந்த தரணியில் ஆண்டவர் இயேசுவை அறிந்து கொள்ள வழிவகுக்கும்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
          இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை பற்றியும் தனது தந்தையைப் பற்றியும் ஆழமாக அறிந்திருந்தார். தன்னை பற்றி அவர் கொண்டிருந்த நலமான,  ஆழமான புரிதலே தந்தையின் மீதான நம்பிக்கையில் நிலைத்திருக்க வைத்தது.

            மனிதர்களாகிய நாமும் நம்மை பற்றி ஆய்ந்து அறிந்து கொள்ளவே இந்த தவக்காலம் நமக்கு தரப்படுகிறது. இந்த தவக் காலத்தில் நம்மை குறித்து நாம் ஆய்வு செய்கின்ற போது,  நமது செயல்கள், நமது சொற்கள், நமது எண்ணங்கள் வழியாக நம்மை நாம் அறிந்து கொள்வதன் வழியாக இறைவனை அறிந்து கொள்ள இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது. 


தன்னை அறிந்து கொள்வதே
கடவுளை அறிந்து கொள்வதற்கான வழி.  இயேசு தன்னை அறிந்து இருந்தார். எனவே, தந்தையாம் இறைவனின் விருப்பத்தை அறிந்து கொண்டார். அதை நிறைவேற்றக் கூடியவராக இயேசு செயல்பட்டார்.  

    இந்த இயேசுவைப் போல நாமும் இறைவனின் விருப்பத்தை அறிந்து செயல்பட வேண்டுமாயின்,  நம்மைப் பற்றிய ஆழமான புரிதல் இருக்கவேண்டும்.  நம்மைப் பற்றிய ஆழமான புரிதல் நம்மிடம் இருக்கும்போது இந்த சமூகத்தில் நாம் சந்திக்கக் கூடிய சவால்கள் எதுவானயினும் அனைத்திற்கு மத்தியிலும் நாம் ஆண்டவருக்கு உகந்த மக்களாக இருக்க முடியும்.                                    இன்றைய முதல் வாசகத்தில் செய்யாத குற்றத்தை சூசன்னாவின் மீது சுமத்தி மரண தண்டனைக்கு இழுத்துச் செல்லப்பட்ட நேரத்தில் கூட சூசன்னா மனிதர்களை நம்பவில்லை.  ஆண்டவரை நம்பினாள்.  நான்  நேர்மையானவள். நான் எத்தவறும் செய்யவில்லை.  ஆனால் இந்த மக்கள் என்னை தவறாக தீர்ப்பிட்டு
 எனக்கு மரண தண்டனை விதிக்க இழுத்துச் செல்கின்றார்கள்.   இந்நேரத்திலும் நான் நேர்மையானவள் என்பதை அறிந்த  ஒரே நபர் இறைவன் ஒருவரே.  அந்த இறைவன் என்னை காத்தருள்வார் என்று நடக்கக்கூடிய நிகழ்வுக்கு தன்னை முழுவதும் கையளிக்கின்றார் அந்த சூசன்னா. சூசன்னா தன்னைப் பற்றி அவர் கொண்டிருந்த ஆழமான புரிதல், தான் நம்புகிற இறைவன் மீது அவர் கொண்டிருந்த ஆழமான புரிதல், அன்று தானியில் இறைவாக்கினர் மூலமாக, 
உண்மை மெய்ப்பித்து காண்பிக்கப்பட்டு, தவறான தீர்ப்பிட்ட மனிதர்கள் தண்டனைக்கு உள்ளானார்கள்.  சூசன்னா பாதுகாக்கப்பட்டார் என்பதை முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்.  இந்த இறைவார்த்தை பகுதிகள் இன்று நமக்கு உணர்த்துகின்ற வாழ்வுக்கான பாடம்,  நாம் கடவுளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும். அதற்கு நாம் நம்மைப் பற்றிய ஆழமான புரிதலில் வளர வேண்டும்.  நம்மை பற்றி நாம் கொண்டிருக்கக் கூடிய ஆழமான புரிதலே இந்த அகிலத்தில் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியின் மதிப்பீடுகளை உணர்ந்து கொள்ள நமக்கு வழிவகுத்து தருகிறது. நம்மைப் பற்றிய ஆழமான புரிதலில் நாளும் வளருவோம். அதன் வழியாக இறைவனோடு உள்ள உறவில் இன்னுமாக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவரின் மக்களாக, அவர் காட்டும் பாதையில், பயணம் செய்வோம். அதற்கு நம்மை நாம் அறிந்து கொள்ள, இன்றைய நாளில் இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலியில் செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...