புதன், 6 ஏப்ரல், 2022

நிலை வாழ்வை நமதாக்கிக்கொள்ள...(7.4.2022)

நிலை வாழ்வை நமதாக்கிக்கொள்ள...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நீங்கள் என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றுமே  சாக மாட்டீர்கள் என்று கூறுகிறார்.
ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்த யூதர்கள், அவற்றுக்கு செவி கொடுக்க, ஆண்டவரது வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மனம்  இல்லாதவர்களாக இருந்தார்கள். 

          ஆனால் வார்த்தையான இறைவன் இவ்வுலக படைப்பின் முதல் முதல் பொழுதில் இருந்தே நம்மோடு உரையாடிக் கொண்டே இருக்கிறார். இந்த உலகை படைப்பதற்கும் அவரது வார்த்தைகளே அடித்தளமாக இருந்தன. தான் தேர்ந்து கொண்ட இஸ்ரேல் மக்கள் பாவத்தில் மூழ்கிய போதும் அவர்களது பாவத்தை சுட்டிக்காட்டி, மன்னித்து அவரது வார்த்தைகளை உடன்படிக்கையாக இஸ்ரயேல் மக்களுக்கு வழங்குகிறார். 
"நானே உங்கள் கடவுள், நீங்கள் என் மக்கள்" என்று தனக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் உள்ள உறவின் பிணைப்பை வெளிப்படுத்துகிறார்.

 அதே வார்த்தையான இறைவன் இன்றும் நம்மோடு உரையாடுகிறார். அவர் படைத்த இயற்கையின் இன்னொலியின் வழியாகவும், நமது ஆன்மாவின் ஆழத்தில் எழும் மெல்லிய குரலோசை வழியாகவும், நாம் வாழ தம்மையே இழக்கும் நமது பெற்றோரின் வார்த்தைகள் வழியாகவும்,  அன்றாட வாழ்வில் எதிர்வரும் சவால்களில் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க நமக்கு வழிகாட்டும் நல்ல மனிதர்கள் வழியாகவும் ஆண்டவர் நம்மோடு உரையாடுகிறார்.  அவரது குரலுக்கு செவிமடுக்க, அவரது வார்த்தைகளை கடைபிடிக்க, நிலை வாழ்வை நமதாக்கிக்கொண்டு ஆண்டவரின் அன்புப் பிள்ளைகளாக வாழ அருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...