செவ்வாய், 12 அக்டோபர், 2021

நமது மனம் பரிசேயர்களின் மனதை போன்றதா? ....(13.10.2021)

 நமது மனம் பரிசேயர்களின் மனதை போன்றதா? ....

 
அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ...
நீ விரும்பும் மாற்றத்தின் முதல் விதையாக நீ இரு என்ற காந்தியடிகளின் வார்த்தைகளுக்கு ஏற்ப மண்ணில் வாழும் மனிதர்கள் அனைவரும்  தன்னை போல மற்றவரையும் அன்பு செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும்... இத்தகைய பண்பு குறைப்படுகின்ற காரணத்தினால்தான் மற்றவரை குறை சொல்லி நம்மை நியாயவான்களாக காட்டிக் கொள்ளக் கூடிய பரிசேயர்களின் மனப்பாங்கு இன்றும் நம்மிடம் நிலவுகிறது. 


யூத சமூகத்தில் பரிசேயர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும், புனித மிக்கவர்களாகவும், நேர்மையாளராகவும்  மற்றவர்கள் முன்பாக காண்பித்துக் கொள்வதற்கு பிறரை குற்றவாளிகள் என தீர்ப்பிடக் கூடியவர்களாகவும், தாங்கள் மட்டுமே இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என சொல்லிக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருந்தார்கள் என்பது வரலாற்றிலிருந்து நாம் வெளிப்படையாகவே உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் இயேசுகிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது பரிசேயர்களிடம் காணப்பட்ட இத்தகைய மனப்பாங்கு தவறு எனச் சுட்டிக் காண்பித்தார். தன்னை நேசிப்பது போல அடுத்தவரையும் நேசிக்க வேண்டும் என்பதை வாழ்வால், வார்த்தையால் அவர்களுக்கு கற்பித்தார். தன்னைச் சூழ்ந்து கொண்டு இருந்தவர்களுக்கு எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கற்பித்தவராய் இயேசு இந்த மண்ணில் பயணப்பட்டார். 

இந்த இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழும்  நாம் நம்முடைய  வாழ்வில்  நாம் மட்டுமே நேர்மையாளர்கள், மற்றவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்று எண்ணக்கூடிய எண்ணமும், நம்மை முதன்மைப்படுத்திய போக்கும் கொண்டவர்களாய் இருக்கின்றோமா?  என நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்க்க இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.

 இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாய் நமது வாழ்வை இன்றைய நாளில் சீர்தூக்கி பார்ப்போம். நமது வாழ்வில்  முதன்மையான இடத்தை நாடுவது, பிறரை மட்டம் தட்டுவது, நம்மை மட்டுமே உயர்ந்தவராக கருதி மற்றவரை தாழ்வாக எண்ணுவது, போன்ற பண்புகள் மேலோங்கி இருக்குமாயின் நம்மை நாம் சரிசெய்துகொண்டு ஆண்டவர் இயேசு காட்டும் பாதையில் பயணத்தைத் தொடர்ந்து இயேசுவின் சீடர்களாகிவிட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.
இறைவன் தாமே தூய ஆவியார் வழியாக நம்மை நல்வழிப்படுத்தி வழிநடத்துவாராக .....ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...