வியாழன், 21 அக்டோபர், 2021

கனிகளால் கடவுளோடு இணைந்திடுவோம் ... (23.10.2021)

கனிகளால் கடவுளோடு இணைந்திடுவோம் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய வாழ்வில் உயரிய இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தார்.அவர் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற போது அவருடைய நண்பர் அவரிடம் சொன்னாராம். கடவுள் உன்னோடு இருக்கிறார் எனவே தான் ஒவ்வொரு நாளும் உனது புகழ்  ஓங்கிக் கொண்டே செல்கிறது என்றாராம். அதற்கு ஆபிரகாம் லிங்கன் தன் நண்பரிடம் கூறினாராம். கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. ஆனால் நான் அவரோடு இருக்கின்றேனா? நான் அவரோடு இணைந்து இருக்கின்றனா? என்பதுதான் என்னுள் இருக்கின்ற கேள்வியாக உள்ளது என்றாராம்.



மனிதர்களாகிய நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் இறைவன் என்றும் நம்மோடு இருக்கின்றார். நம்மோடு உடன் பயணிக்கின்றார்.  பல நேரங்களில்  இந்த ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் உணர்வதில்லை. ஆனால் இன்றைய  முதல் வாசகம்  இந்த ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து, அவரோடு இணைந்து வாழ அழைக்கிறது. அவரோடு இணைந்து வாழும்போது தூய ஆவியார் நம்முள் இருந்து நம்முள் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கி இந்த சமூகத்தில் நலமான பணிகளைச் செய்யக்கூடிய நபராக நம்மை மாற்றுகிறார். இதையே இன்றைய நற்செய்தி வாசகம் வலியுறுத்துகிறது.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான நல்லதொரு மனமாற்றத்தையே... ஒரு மனமாற்றம் பல மனங்களை மாற்றும் என கூறுவார்கள்.

 பரபரப்பான  இந்த உலகத்தில் பல பணிகளுக்கு மத்தியில் ஏதோ வாடிக்கையாக ஆண்டவரை தேடக்கூடிய கூடிய மக்களாக நாம் இல்லாது, எல்லா நேரத்திலும் சமூகத்திற்கான நலமான பணிகளை முன்னெடுக்க கூடியவர்களாய் மாறிட மனமாற்றம் பெற்றிட இன்றைய வாசகங்கள் அழைப்பு தருகின்றன.


அன்று தவறான வழியில் வாழ்ந்த மக்களுக்கு யோனாவின் இறைவாக்கு மனமாற்றத்தை மக்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்தது. அதுபோலவே  தவறான வழிமுறைகளில் தங்கள் வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்த தொடக்ககால திருஅவையில் திருத்தூதர் பவுலின் இறைவார்த்தைகள் நல்லதொரு மாற்றம் பெற்ற மனிதர்களாக வாழ வழிவகுத்தது. அந்த அடிப்படையில் இன்றைய நாள் நற்செய்தி வாசகம்

இறைவன் கொடுத்துள்ள இந்த புதிய நாளில் நல்ல கனிகளைக் கொடுத்து 
எப்போதும் எல்லா நேரத்திலும் ஆண்டவரோடு இணைந்து இருக்க கூடியவர்களாக வாழக்கூடிய நல்லதொரு மாற்றத்தை நம்முள் விதைத்துக் கொண்டு இந்த சமூகத்தில் பயணம் செய்ய நமக்கு அழைப்பு தருகிறது.

 இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டு, எப்போதும், எல்லா நேரத்திலும், ஆண்டவரோடு இணைந்து  இந்த சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுக்க கூடிய இயேசுவின் சீடர்களாக மாறி நல்ல கனிகளை தந்திட  நாம் நல்லதொரு மனமாற்றம் அடைந்திட இறைவனது அருளை இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக ஜெபித்து பெற்றுக்கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...