ஞாயிறு, 17 அக்டோபர், 2021

இயேசுவின் பணியைசெய்ய....(17.10.2021)

இயேசுவின் பணியைசெய்ய....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாம் தாய் திருஅவையாக இணைந்து புனித லூக்கா அவர்களின் திருநாளை நினைவு கூறுகிறோம்.

புனித லூக்கா அவர்கள் புனித பவுலின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் மிகவும் பக்கபலமாக இருந்தவர். புனித பவுலின் வார்த்தைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் இந்த புனித லூக்கா அவர்கள்.... இந்த புனித லூக்கா ஒரு மருத்துவர். மருந்து கொடுப்பது மருத்துவர் பணி குணம் தருவது  இறைவனின் பணி என்பதை இவர் அதிகம் உணர்ந்தவர். இவர் எழுதிய லூக்கா நற்செய்தியில் அதிகமாக இயேசு நோயாளிகளுக்கு குணம் தருகின்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இன்றைய முதல் வாசகத்தில் புனித லூக்கா தனக்கு எந்த வகையில் நற்செய்தி பணியாற்ற உதவினார் என்பதை பவுல் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார். தன்னோடு இருந்தவர்களையும் தன்னைவிட்டு சென்றவர்களையும் அவர் குறிப்பிடுகிறார். அவர்களுக்கு மத்தியில் நல்ல ஒரு பங்கினை தெரிந்து கொண்டவராக, நற்செய்தி அறிவிப்புப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பதை முதல் வாசகம் தெளிவுபடுத்தி காட்டுகிறது.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களை நற்செய்தி பணியாற்றுவதற்காக அனுப்பி வைக்கின்றார். எதையும் நம்பி செல்ல வேண்டாம் விவேகத்தோடு செல்லுங்கள் என்ற பாடத்தை அவர்களுக்கு கற்பிக்கின்றார்.

இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாமும் நற்செய்தி பணியாற்ற கூடியவர்களாக மாறிட அழைக்கப்படுகின்றோம். அதற்கு நல்லதொரு முன் உதாரணமாக இருப்பவர் புனித லூக்கா அவர்கள். இந்த புனித லூக்கா படித்த மேதையாக இருந்தாலும், எழுத தெரிந்தவராக, மருத்துவராக இருந்தாலும். அவர் தனது திறமைகள் அனைத்தையும் ஆண்டவரின் பணியை செய்வதற்கு என அர்ப்பணித்தார். 

இன்று நாமும் நமது வாழ்வில் பல பணிகளிலும், பல பொறுப்புகளிலும் இருந்தாலும்... நாம் இருக்கும் தளத்தினை, நாம் கொண்டு இருக்கின்ற அனைத்து விதமான திறமைகளையும் அடிப்படையாக கொண்டு ஆண்டவரின் பணியை பறைசாற்றக் கூடிய சீடர்களாக இச்சமூகத்தில் வாழ அழைக்கப்படுகிறோம். 

ஏழை எளியவர்ககு உதவியும்....
பிறர் நலம் பேணும் பண்பும்.... 
மனித நேய குணமும்.... நமது சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும். அதுவே இறைவனது பணியைச் செய்வதற்கான வாய்ப்புகளாகின்றன. நாம் நம்மிடம் இருக்கும் திறமையை கொண்டு ஆண்டவர் இயேசுவின் பணியை இன்று சமூகத்தில் செய்திட இன்றைய நாளில் இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...