வெள்ளி, 12 நவம்பர், 2021

நம்பிக்கையால் இணைந்திருப்போம்.....(13.11.2021)

நம்பிக்கையால் இணைந்திருப்போம்.....

 அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

கருவறையில் இருக்கும் குழந்தைக்கும் கற்பாறையில் இருக்கும் தேரைக்கும் உணவளித்து பாதுகாத்து பராமரித்து வருகின்றவர் இறைவன். இந்த இறைவன் மீது ஆழமான பக்தியையும் நம்பிக்கையையும் கொண்டிருக்க நாம் ஒவ்வொருவரும் நாளில் அழைக்கப்படுகின்றோம். 

மனிதன் தன் வாழ்நாளில் மிகப்பெரிய ஆறுதலை ஜெபத்தின் மூலமாக அடைகிறான் என்பார்கள்....

ஜெபம் என்பது வெறுமனே தேவைகளை கேட்பது மட்டுமல்ல. நம்மை நாம் சுய ஆய்வு செய்வது. நாம் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்ப்பது. சரியான பாதையை நோக்கி பயணிக்க நமக்கு நாமே வழிவகை செய்து கொடுப்பது....

ஜெபத்தின் வாயிலாக மனிதன் கடவுளோடு உரையாடுகிறார். கடவுளும் மனிதனும் உரையாடுகின்ற இடம் ஜெபமாக இருக்கின்றது. பல நேரங்களில் இந்த உரையாடலில் மனிதன் பேசிக்கொண்டிருக்கிறான். கடவுள் மௌனமாக இருக்கிறார் ஏனென்றால் மனிதன் கடவுள் பேசுவதை கேட்க விரும்பவில்லை. தான் பேசுவதை கடவுள் கேட்க வேண்டும் என்ற எண்ணமே நமது ஜெபங்களில் மேலோங்கி காணப்படுகிறது. 

 நாம் கேட்பதை நாம் தொந்தரவின் பொருட்டாவது இறைவன் செய்து தருவார் என்ற மையச் செய்தி நற்செய்தி வாசகத்தின் வாயிலாக தரப்பட்டாலும், நாம் கேட்பதற்கு முன்பாகவே நம் தேவைகளை அறிந்தவராக இருக்கின்றவர் இறைவன். இந்த இறைவன் தகுந்த நேரத்தில் நமது மன்றாட்டு களுக்கு செவிசாய்த்து அவைகளை நிறைவு பெறச் செய்வார். 

இந்த இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு பயணிக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.

இதையே  1 பேதுரு 5:6- 11 கூறுகின்றது...


கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.

உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.

அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது.

அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?

எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென்.
1 பேதுரு 5:6- 11


இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் நாம் ஜெபத்தின் வாயிலாக  இறைவனோடு இணைந்திருக்க இறைவனது அருளை இந்த திருப்பலி வழியாக தொடர்ந்து வேண்டுவோம்....




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...