புதன், 24 நவம்பர், 2021

அவரது பின்னே பயணம் செய்ய...(25.11.2021)

 அவரது பின்னே பயணம் செய்ய....

இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்க்கை என்பது எதிர்பாராத நிகழ்வுகளால் பின்னப்படுவது... இந்த வாழ்வில் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு வருடமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரு வருகையை குறித்து சிந்திக்கின்றோம். 

ஒன்று மனுகுலத்தை  மீட்பதற்கு இயேசு   மனுவுருவெடுத்து இவ்வுலகிற்கு வந்த அவரது பிறபப்பு வருகை. 
மற்றொன்று இறுதி நாளில் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகை.

 இன்றைய நாள் நற்செய்தி வாசகமானது இரண்டாம் வருகையை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஆண்டவர் வருகையின் போது நாம் தகுதி உள்ளவர்களாக அவர் முன்னிலையில் தலை நிமிர்ந்து நிற்கக் கூடிய மனிதர்களாக வேண்டும் என்ற சிந்தனை இன்றைய நாளிலும் இந்த வாரங்கள் முழுவதிலும் நமக்குத் தரப்படுகிறது.

ஆண்டவரின் திருமுன் நிலையில் தலை நிமிர்ந்து நிற்பது எப்படி? என சிந்திக்கின்ற போது ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியின் விழுமியங்களை வாழ்வாக்குவாதனாலே சாத்தியமாகும்.  ஆனால் நமது உன்னியல்புகள் பல நேரங்களில் நம்மை ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி விழுமியங்களின் படி வாழ விடாது மனம் போன போக்கில் வாழ நம்மை தூண்டுகிறது. நாமும் பல நேரங்களில் நமது உன்னியல்புகளுக்கு அடிமையானவர்களா நம் மனம் போன போக்கில் வாழ்ந்து ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளை புறம்தள்ளியவர்களாக வாழ்ந்திருக்கக்கூடும். அத்தகைய நாட்களை எல்லாம் ஆண்டவர் இயேசுவின் இறுதி வருகையைப் பற்றி சிந்திக்கின்ற இந்த நாட்களில் நினைவுகூர்ந்து, உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது இரண்டாம் வருகையின்போது தகுதி உள்ளவர்களாக  நிற்பதற்கு இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார். 

ஆண்டவரின் திருமுன் நிலையில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமானால் நாம் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்த்து தவறிய தருணங்களை எல்லாம் நினைத்து மனம் வருந்தி வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 


இந்த மாற்றத்தை நாம் அனுதினமும் உள்ளத்தில் ஏற்க வேண்டும் என்பதற்காகவே தான் திருஅவை ஒப்புரவு அருள்சாதனத்தை தந்திருக்கிறது. ஒப்புரவு அருள்சாதனத்தை முதல்முறையாக நற்கருணை பெறும்போதும், பின் என்றாவது ஒருநாள் விரும்புகின்ற போது செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் பின்பற்றுபவர்கள் பலர். ஆனால் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்து சிந்துகின்ற நாம் ஒவ்வொருவருமே நமது வாழ்வில் நாம் கடந்து வந்த பாதையில் ஆண்டவரின் இறையாட்சி விழுமியங்களை விட்டு விலகிச் சென்று இருப்போமாயின் அதற்காக மனம் வருந்தி ஒப்புரவு அருள்சாதனம் வழியாக மன்னிப்புப் பெற்று... மீண்டும் ஆண்டவர் இயேசு விரும்பக்கூடிய அவரது இறையாட்சியின் மதிப்பீடுகளை பின்பற்றக்கூடிய மனிதர்களாக நாம் வாழ்ந்து இறுதி நாளில் அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திரு முன்நிலையில்  அவரது இரண்டாம் வருகையின் போது தலை நிமிர்ந்து நிற்கக் கூடிய மனிதர்களாக மாறிட இறைவன் அழைக்கின்றார். 
எனவே கடந்து வந்த பாதைகளை நினைத்துப்பார்த்து கண்ணீரோடு நமது குற்றம் குறைகளுக்காக மனம் வருந்தி வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிக்கொண்டு, ஆண்டவர் இயேசு காட்டும் பாதையில் அவரது பின்னே பயணம் செய்ய இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. இறைவன் தாமே நம்மோடு இருந்து நம்மை காத்து வழிநடத்தி நம்மை தனது நலன்களால்  நிரப்பி நம்மை அவரது பாதையில் செல்லும் மக்களாக வழி நடத்திட இறையருள் வேண்டி இணைவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...