செவ்வாய், 23 நவம்பர், 2021

வலிகள் இல்லாமல் நமக்கான பாதைகள் பிறப்பதில்லை...(24.11.2021)

 வலிகள் இல்லாமல் நமக்கான பாதைகள் பிறப்பதில்லை...


அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

துன்பம் துன்பமா? என்ற கேள்விக்கு விடை தேடிய போது உள்ளத்தில் எழுந்த ஒரு உணர்வு துன்பங்கள் துன்பங்களே அல்ல, மாறாக துன்பங்கள் நமது வாழ்வை செதுக்கும் உளிகளை போன்றவை....


உளித் தொடும் முன்னே வலி என அழுதால் சிலையாகிட முடியாது ...

வலிகள் இல்லாமல் நமக்கான பாதைகள் பிறப்பதில்லை...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவர் காட்டுகின்ற விழுமியங்களின் படி வாழ்வை அமைத்துக் கொண்டு இந்தச் சமூகத்தில் அவரை பிரதிபலிக்கும் மக்களாக வாழுகின்ற போது பலவிதமான துன்பங்களை நாம் சந்திக்க நேரிடும் என்பதை எடுத்துரைக்கின்றன.

மனித வாழ்வே இன்பமும் துன்பமும் கலந்த ஒன்று... எது எப்போது வரும் என அறியாத வண்ணம் இறைவன் இரண்டையும் நமது வாழ்வில் அனுமதிக்கிறார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் நமது வாழ்வாக மாறும் போது துன்பங்கள் வழியாக நமது வாழ்வை நெறிபிறழ செய்கின்ற செயலில் பலர் ஈடுபடலாம். ஆனால் துன்ப நேரத்தில் துணையாக இருப்பவர் ஆண்டவர் அவர் மீது நம்பிக்கை கொண்ட மக்களாக நாம் தொடர்ந்து அவர் காட்டும் பாதையில் பயணம் செய்திட இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

துன்ப நேரத்தில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் தருவேன் என ஆண்டவர் குறிப்பிடுகின்றார். 
நம்மால் தாங்க முடியாத துன்பத்தை இறைவன் நமக்குத் தருவதில்லை துன்பங்கள் வழியாக அவர் நம்மை செதுக்கி நல்வழிப்படுத்த முயலுகிறார்...
துன்பம் இல்லாத மனிதன் இவ்வுலகத்தில் இல்லை.... உலகெங்கிலும் உள்ள சகோதர சகோதரிகள் நம்மைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்... ஆனால் துன்பங்களுக்கு மத்தியில் நாம் ஆண்டவரோடு கொண்டுள்ள நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும்.

இதையே 1பேதுரு 5 அதிகாரம் 10 - 11 வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென். என்று...

எனவே துன்ப நேரங்களில் ஆண்டவர் துணை இருக்கின்றார் என்ற ஆழமான நம்பிக்கையின் அடிப்படையில் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி விழுமியங்களை நமது வாழ்வாக மாற்றிக்கொண்டு நாம் வாழுகின்ற சமூகத்தில் நமது செயல்களால் ஆண்டவர் இயேசுவின் சீடர்கள் நாம் என்பதை பறைசாற்ற இறைவனது அருளை இணைந்து தொடர்ந்து ஜெபிப்போம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...