சனி, 5 பிப்ரவரி, 2022

அழைத்தவர் தகுதியுள்ளவராக்குவார்... (06.02.2022)

அழைத்தவர் தகுதியுள்ளவராக்குவார்...



இயேசுவில் அன்பு உறவுகளே  இன்றைய வாசகங்கள் அனைத்தும் இறைவன் நம்மை தனது பணிக்கு அழைக்கின்றார். அழைத்த இறைவன் நம்மை தகுதியுள்ளவராக மாற்றுகின்றார் என்பதை வலியுருத்துகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கு உரைக்க இறைவன் எசாயாவையும், இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலையும், நற்செய்தியில் தம் சீடராக பேதுருவையும் இறைன் அழைக்கின்றார். அழைத்தவர்களை தகுதியுள்ளவராகவும் மாற்றுகிறார். கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை இம்மூவரின் வாழ்வும் நமக்கு வலியுருத்துகின்றன. 

எசாயா கி.மு. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எருசலேமில் வாழ்ந்தவர். ‘எசாயா’ எனும் பெயருக்கு ‘கடவுள் மீட்கிறார்’ என்பது பொருள். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கு உரைக்க இறைவன் இந்த எசாயாவை அழைத்தபோது, நான் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் என்கிறார் எசாயா. ஒன்றுமில்லாமையிலிருந்து உலகைப் படைத்த இறைவன் எசாயாவின் பவாங்களை அகற்றி அவரை தம் பணிக்கு தகுதியுள்ளவராக மாற்றுகிறார்.  இறைவன் இவரை தகுதியுள்ளவராக மாற்றியதற்கு மூலக் காரணம் எசாயா தன்னை அறிந்தவராய் தன் நிலையை உணர்ந்தவராய் இறைவனிடம் சரணடைந்ததுவே. தகுதியுள்ளவராக மாறிய எசாயா யாரை நான் என் பணிக்கு அணுப்புவேன் என்ற இறைவனின் கேள்விக்கு இதோ நானிருக்கிறேன். என்னை அனுப்பும் என துணிவோடு முன் வாருகிறார். 

அதுப்போலவே இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தான் “திருத்தூதர் என அழைக்கப் பெற தாம் தகுதியற்றவர்” என்கிறார் (1 கொரி 15:9). அதே சமயம் உயிர்த்த இயேசுவைப் பற்றி துணிவோடு எடுத்துரைக்கிறார். எந்த சக்தியாலும் இயேசுவின் உயிர்ப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை என்று சுற்றி இருந்தவர்களுக்கு சான்று பகர்கிறார்.


இன்றைய நற்செய்தி வாசகத்திலும் பேதுரு, செபதேயுவின் மக்கள் யாக்கோபு, யோவான் இரவு முழுவதும் கடலிலே மீன் பிடிக்க முயற்ச்சித்து ஒன்றும் அகப்படாமல் ஏற்றம் அடைந்த நிலையில் இருந்தபோது, இயேசு அவர்களைச் சந்திக்கிறார். ஆழத்திற்கு தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். வயதிலும் சரி அனுபவதிலும் சரி பேதுரு இயேசுவைக் காட்டிலும் கடலையும் அங்கு மீன் பிடிப்பது எப்படி என்பதையும் நன்கு நுட்பமாகவே அறிந்திருக்க கூடும். ஆனால் இயேசு அவரிடம் சென்று மீண்டும் போய் வலையை வீசுங்கள் என்று கூறுகிறார். பேதுருவும் நம்பிக்கையோடு வலையை வீசி வலைகள் கிழிந்து போகும் அளவிற்கு ஏராளமான மீன்களை பெறுகிறார். இயேசுவின் வார்த்தைகளால் நிகழ்ந்த இந்த வல்லச் செயல்களை கண்டு தன் நிலையை அறிந்தவரான பேதுரு இயேசுவிடம், ‘ஆண்டவரே நான் பாவி. நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்கிறார் (லூக் 5:8). ஆனால் இயேசு அவரை தம் பணிக்கு அழைக்கிறார் தகுதியுள்ளவராக்குகிறார். எனவே தான் இயேசு பேதுருவிடம், "அஞ்சாதே, இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்கிறார் (லூக் 5:10).


இந்த வாசக பகுதிகள் நமக்க தரும் பாடம் கடவுள் தகுதியுள்ளவர்களை அழைக்கிறார் என்பதைவிட, தகுதியற்றவர்களை அழைத்து அவர்களைத் தமது பணிக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறார். நாம் எந்நிலையில் இருந்தாலும் கடவுளிடம் நாம் நம்மை முமுமையாக கையளிக்கின்ற போது அவர் நம்மை தகுதியுள்ளவராக்குவார் என்ற ஆழமான நம்பிக்கையோடு இறைவனை நாடிச் செல்ல நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் இறையாட்சி  பணியான அன்பின் பணியினை நமது பணியாக எண்ணிச் செயல்பட இறைவாக்கினர் எசாயாவைப் போல ஆண்டவரின் பணியை செய்ய நான் இருக்கிறேன் என்று கூறக்கூடியவர்களாய் நாம் மாறிட இறைவனது அருளை இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...