புதன், 23 பிப்ரவரி, 2022

தூய்மையாவோம்....(24.02.2022)

தூய்மையாவோம்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பலி பொருட்களில் உப்பு கலந்து தூய்மையாக்கப்படுவது போல,  நெருப்பால் நாம் ஒவ்வொருவரும் தூய்மையாக்கப்பட வேண்டும் என நாம் வாசிக்கக் கேட்டோம். அன்றைய காலகட்டத்தில் யூதர்கள் கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்கக் கூடிய பலிப் பொருள்கள் மீது உப்பினை கலப்பார்கள். இந்த உப்பு கலக்கப்படுவது காணிக்கைப் பொருளை தூய்மைப்படுத்துவதற்கான அடையாளமாக கருதப்பட்டது. 

    இதனை குறித்து லேவியர் புத்தகம் 2 அதிகாரம் 13 வசனத்தில் நாம் வாசித்து அறிந்து கொள்ளலாம். எப்படி ஒரு பலி பொருளின் மீது உப்பு கலந்து தூய்மைப்படுத்தப்படுகிறதோ அதுபோல நாம் நெருப்பால் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். 

           இங்கு நெருப்பு என்பது தூய ஆவியானவரின் வடிவமாக பார்க்கப்படுகிறது. திருத்தூதர் பணிகள் இரண்டாம் அதிகாரத்தில் இதனை நாம் வாசிக்கலாம், தூய ஆவியானவர் அங்கிருந்தவர்கள் மீது நெருப்பு வடிவத்தில் வந்தார் என்று. இந்தத் தூய ஆவியானவர் என்னும் நெருப்பால் நாம் தூய்மையாக்கப்பட வேண்டும். நாம் தூய்மையாக்கப்படுவதற்கு இரண்டு வழிகளை ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் முன்னிறுத்துகிறார். 

      முதல் வழி: நாம் யாரென அறியாதவர்களுக்கு சின்னஞ் சிறு உதவிகள் செய்வதன் மூலம், நாம் தூய ஆவியாரால் தூய்மைப்படுத்தப்படுகிறோம்.

இரண்டாவது வழி: பாவம் செய்வதற்கு ஏதுவான சூழல் உருவாகின்ற போது, அச்சூழலில் இருந்து நாம் விலகி செல்கின்ற போது, தூய ஆவியானவரால் தூய்மைப்படுத்தப்படக் கூடியவர்களாக நாம் மாறுகிறோம்.  

           இறைவன் கற்பிக்கின்ற இந்த வழிகளை நமது வாழ்வின் நெறிகளாக மாற்றிக் கொண்டு நாம் வாழுகின்ற சமூகத்தில் நாம் அறியாதவர்களுக்கு நம்மாலான சிறு சிறு உதவிகள் செய்வோம். அதுபோல பாவம் செய்வதற்கு ஏதுவான சூழல் இருக்கின்ற போது அச்சூழலை விட்டு விலகிச்செல்லக் கூடியவர்களாக நாம் மாறுவோம். அதன் வழியாகத் தூய ஆவியானவரின் நெருப்பால் தூய்மைப்படுத்தப் பட்டவர்களாக இறைவனின் பாதையில் ஒவ்வொரு நாளும் இன்முகத்தோடு பயணம் செய்ய இறையருள் வேண்டி இன் முகத்தோடு தொடர்ந்து பயணம் செய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...