ஞாயிறு, 16 ஜூன், 2024

பகைவரிடமும் அன்பு கூருங்கள்! (17-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தைகளை வாசித்த போது நினைவிற்கு வந்த ஒரு திருக்குறள், 

 "இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என்பதாகும். இந்தக் குறளின் விளக்கம், யாரேனும் ஒருவர் நமக்குத் தீங்கு செய்தால் கூட அவர் வெட்கமுறும் அளவிற்கு நன்மைகளை செய்பவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதாகும். இந்த வார்த்தைகளின் அடிப்படையில் தான் இன்றைய இறைவார்த்தையும் அமைந்திருக்கிறது. யாரேனும் ஒருவர் நம்மிடத்தில் ஏதாவது ஒன்றை எதிர்பார்த்தால் நாம் அதை இரண்டு மடங்காக அவர்களுக்கு செய்கின்றவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 

   பல நேரங்களில் பலரிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணுகிற நாம், பல நேரங்களில் பெறுபவர்களாகவே இருக்கிறோம். பெறுபவர்கள் ஆக இருப்பது அல்ல நமது பெருமை. கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். இயன்ற வகையில் மற்றவர்களுக்கு நம்மால் இயன்றதை கொடுக்கவும், பல நன்மைகளை தொடர்ந்து முன்னெடுப்பதும் நமது வாழ்வை அலங்கரித்துக் கொள்வதற்கு ஆண்டவர் இயேசுவால் முன்மொழியப் படக்கூடிய வார்த்தைகள் என்பதை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசுவின் வாழ்வை திரும்பிப் பார்க்கிறபோது 33 ஆண்டுகள் இந்த அகிலத்தில் வாழ்ந்தாலும் அவர் சென்ற இடமெல்லாம் நன்மை செய்தார். எத்தனையோ விமர்சனங்களை அவர் சந்தித்தார். ஆனால், சந்தித்த போதும் கூட தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கும் நன்மை செய்பவராகத்தான் தன் வாழ்வை இயேசு அமைத்துக் கொண்டார்.

 ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்து இந்த இயேசுவை பின்பற்றுகின்ற நீங்களும் நானும் இந்த இயேசுவைப்போல இயன்ற அளவிற்கு நன்மைகளை முன்னெடுப்போம். நம்மிடம் எதிர்பார்ப்பதை விட இன்னும் மிகுதியான நன்மைகளை அவர்களுக்கு கொடுப்பவர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...