சனி, 22 ஜூன், 2024

காற்றையும் கடலையும் கடிந்து கொள்கிறாரே, இவர் யாரோ! (23-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 நாம் வாழுகிற இச்சமூகத்தில் ஒவ்வொரு நாளும் நமது வாழ்வை அடுத்தவருக்கு அர்ப்பணிப்பவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகிறோம். பல நேரங்களில் நாம் வாழுகிற சமூகத்தில் நமக்கும் மற்றவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்ற மனநிலை நம்மில் மலரலாம். ஆனால் அறிந்தும் அறியாமலும் நாம் ஒவ்வொருவரும் தொடர்பில் இருக்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த உண்மைகளை பல நேரங்களில் உணர்ந்து கொண்டவர்களாக, நீங்களும் நானும் நமது வாழ்வை அடுத்தவருக்கு பயன்படுகிற ஒரு வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற செயல்பாட்டில் ஈடுபடுகிறபோது பலவிதமான தடைகளை நாம் சந்திக்கிறோம். 
       நமது வாழ்வில் வருகின்ற பலவிதமான திருப்பங்களும் எதிர்பாராத இழப்புகளும் நம்மை பல நேரங்களில் நமது வாழ்வு அடுத்தவருக்கானது என்பதை மறக்கடிக்கச் செய்யக்கூடிய வகையில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு நாளுமே நமது வாழ்வு அடுத்தவருக்கான வாழ்வு என்பதை உணர்ந்து கொண்டவர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். 

   இன்றைய இறைவார்த்தையிலும் கூட ஆண்டவர் இயேசுவின் சீடர்கள் எத்தனையோ நன்மைத்தனங்களை இயேசு செய்வதை உடனிருந்து கண்டிருந்தாலும் கூட அவர்கள் வாழ்வில் வந்த ஒரு எதிர்பாராத இடர்பாடாகிய கடலின் கொந்தளிப்பு, அவர்கள் கொண்டிருந்த அத்தனை விதமான நம்பிக்கையையும் புரட்டி போட்டது. சாகப்போகிறோம் என்ற பயத்தில் அவர்கள் இயேசுவை எழுப்பினார்கள். இன்னும் நம்பிக்கை கொள்ளவில்லையா? என்று சொல்லி, காற்றையும் கடலையும் கடிந்து கொண்டு, தன் சீடர்களின் நம்பிக்கையை ஆண்டவர் இயேசு உறுதிப்படுத்தினார். இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடியவர்களாகத்தான் இன்று நீங்களும் இருக்க அழைக்கப்படுகிறோம். 

      நமது வாழ்வு அடுத்தவருக்கான வாழ்வு. ஆயிரக்கணக்கான அறப்பணிகளை நாம் அவர்களுக்காக முன்னெடுக்க அழைக்கப்படுகிறோம். இந்த அறப்பணிகளை முன்னெடுப்பதில் எதிர்பாராத விதத்தில் பலவிதமான இடர்பாடுகளை சந்தித்தாலும் கூட, நாம் இந்த அகிலத்தில் வாழ்க்கை அடுத்தவருக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பதை இயேசுவின் வாழ்வில் இருந்து நமது வாழ்வுக்கான பாடமாக எடுத்துக் கொண்டு நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...