திங்கள், 21 செப்டம்பர், 2020

நீ என் சகோதரனா...(22.09.2020)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே ....

"இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவரே என் தாயும் சகோதரரும் ஆவார் ..."


இன்றைய நற்செய்தி வாசகங்கள் நாம் உண்மையில் இறைவன் இயேசுவின் சகோதர சகோதரிகளா?என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அமைகிறது.  இயேசுவை காண வந்த தாயும், சகோதரர்களும் அவரை பார்ப்பதற்காக வெளியே காத்திருந்த சூழலில் அங்கிருந்தவர்கள் இயேசுவிடம் வந்து உன்னை சந்திப்பதற்காக உன் தாயும் உன் சகோதரர்களும் காத்திருக்கிறார்கள் என்று கூறிய போது இயேசு கூறிய வார்த்தைகள்  யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்? என்பதாகும்.
இந்த வார்த்தைகளை பிடித்துக்கொண்டுதான் பலர் அன்னை மரியாவை  விமர்சிக்கக் கூடிய செயலில் ஈடுபடுகிறார்கள்.

"ஒன்றின் துவக்கம் அல்ல
 முடிவே கவனிக்கத்தக்கது"

என்ற சபை உரையாளரின் வாக்கிற்கிணங்க நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தை முழுமையாக வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இயேசு யார் என் தாய்?, யார் என் சகோதரர்கள்? என கேள்வி எழுப்பி விட்டு, கூடியிருந்தவர்களை பார்த்துக் கூறினார்:  இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்வரே என் தாயும் சகோதரரும் ஆவார் எனக் கூறினார்.

குழந்தையாக இயேசுவை வயிற்றில் சுமக்க வேண்டும் என்ற இறைவார்த்தையை கபிரியேல் தூதர் மரியாவிடம் சொன்னதை ஏற்றுக் கொண்டு, இயேசுவை தன் வயிற்றில் சுமந்தாள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இறைவனிடமிருந்து வந்த வார்த்தையைக் கேட்டு அதன்படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர் அன்னை மரியாள் என்பதை சுட்டிக் காட்டும் விதமாகவும், நானும் இறைவார்த்தையை நமது செயலாக்க வேண்டும் என்பதையும் தான் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமக்குத் தஉணர்த்துகிறார்.
இன்று நாம் வாழக்கூடிய உலகத்தில் பல நேரங்களில் நாம் இயேசுவின் உண்மை சீடர்கள் என கர்வம் கொள்கின்றோம். ஆனால் உண்மையில் இயேசுவின் வார்த்தைகளான இறை வார்த்தைகளின் படி நமது வாழ்வை அமைத்து இருக்கின்றோமா? என்ற கேள்வியை இன்று நாம் எழுப்பி பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

இறை வார்த்தையை ஏற்று அதனை செயலாக்க படுத்தக்கூடிய ஒவ்வொருவரும் இயேசுவின் சகோதரர்களாக மாறுகிறார்கள். நாமும் இயேசுவின் சகோதரர்களாக மாற வேண்டுமாயின் இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நம் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.


"பேயாய் யஉழலுஞ் சிறுமனமே 
பேணாய்  என்சொல் இன்றுமுதல்
 நீயாய் ஒன்றும் நாடாதே
 நினது தலைவன் யானேகாண் ..."


அதாவது பேய்போல் அலைகின்ற அற்ப மனமே, இத்தினம் தொடங்கி என் அறிவுரையை கடைபிடிப்பாய். நீயாக உன் இஷ்டப்படி எதையும் விரும்பிச் செல்லாதே.... உன் எஜமானன் நானேயாவேன். 

என்ற பாரதியாரின் வார்த்தைகளுக்கு இணங்க அனுதினமும் அற்ப காரணங்களுக்காக அலைந்து திரிய கூடிய நமது மனதினை கட்டுப்படுத்தக் கூடியவர்களாக, அதன் எஜமானன் நாம் என்பதை உணர்ந்தவர்களாக, இறைவார்த்தையைக் கேட்பதோடு நிறுத்தி விடாமல் அதனை உள்ளத்தால் ஏற்று செயலில் வெளிகாட்டி இறைவார்த்தையின் படி நம் வாழ்வை அமைத்துக் கொண்டு இயேசுவின் உண்மையான சகோதரர் சகோதரிகளாக மாற உறுதியேற்றவர்களாக தொடர்ந்து இயேசுவின் பாதையில் பயணிப்போம்... 

5 கருத்துகள்:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...