ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

உன்னை மற அடுத்தவரை நினை...(13.9.2021)

உன்னை மற அடுத்தவரை நினை

இறைவனே சபையில் அன்புக்குரியவர்களை இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நாம் இவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதை நமக்கு கற்றுத் தருவதாக அமைகின்றன. ஜெபிக்க நேரமில்லை என கூற கூடியவர்களுக்கு மத்தியில் நாம் பலரை பார்த்து எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறோம். ஆனால் உண்மையில் நாம் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்? என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைப்பு தரப்படுகின்றது. 

பவுல் தன்னுடைய கடிதத்தில் மக்களை அடுத்தவருக்காக மன்றாட அழைப்பு விடுக்கின்றார். அடுத்தவருக்காக பரிந்து பேசவும், கடவுளுக்கு நன்றி செலுத்தவும், அறிவுரை தருகின்றார்.

 நமக்காக மட்டுமே ஜெபிக்கின்ற சூழலில் அடுத்தவருக்காக மன்றாடுவது தான் உண்மையான சீடத்துவ வாழ்வு என்பதை பவுல எடுத்துரைக்கின்றார். தமது நலனை முன்னிட்டு நமக்காக அடுத்தவர் இறைவனிடம் வேண்ட வேண்டும் பரிந்து பேச வேண்டுமென எண்ணக்கடிய நபர்களுக்கு இடையே அடுத்தவருக்காக பரிந்து பேசக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும் என்ற செய்தியினை பவுல் நமக்கு ஆழமாக எடுத்துரைக்கின்றார்.

தேவைக்கு மட்டும் இறைவனை நாடுகின்ற மனிதர்களுக்கு மத்தியில் எல்லா சூழ்நிலையிலும் நன்றி கூறக் கூடியவர்களாக நாம் இருக்கவேண்டும் என்ற செய்தியினை பவுல் தெளிவாக முதல் வாசகம் வழியாக எடுத்துரைக்கின்றார். 

பவுல் எப்படி ஜெபிக்க வேண்டும்? யாருக்காக ஜெபிக்க வேண்டும்? என்பதை தன்னுடைய கடிதத்தின் வாயிலாக நமக்கு தெரிவித்தாலும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் உண்மையான ஜெபத்திற்கு அடையாளம் தரும் விதத்தில் தான் நூற்றுவர் தலைவரின் செயல்பாடு அமைந்திருக்கின்றது. நூற்றுவர் தலைவர் தன்னுடைய பணியாளரின் நலனுக்காக இறைவனிடத்தில் உதவி வேண்டினார். நூற்றுவர் தலைவர் என்றாலே அவருக்கு கீழ் 100 பேர் பணிபுரிகிறார்கள் என்பது அர்த்தம். நூற்றுவர் தலைவர் தன்னை அறிந்தவராய் இருக்கின்ற காரணத்தினால் தா, தன் நிலை உணர்ந்து ஆண்டவரே இயேசுவினிடத்தில் நீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் பணியாள் குணம் பெறுவான் என்று கூறி தனது நம்பிக்கையையும், தான் கொண்டிருக்கக்கூடிய இயேசுவின் மீதான பற்றையும், புரிதலையும் வெளி காட்டுகின்றார்.  நூற்றுவர் தலைவரை கண்டு வியந்துபோன இயேசு இவரைப் போன்று வேறு ஒரு நம்பிக்கையாளனை கண்டதில்லை என்று கூறி நூற்றுவர் தலைவனை பாராட்டுகின்றார்.
நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நமது நலனை மட்டும் முன்னிறுத்தி பயணம் செய்கின்ற மனிதர்களுக்கு மத்தியில், அடுத்தவர் நலனை முன்னிறுத்தி அடுத்தவருக்காக ஜெபிக்கவும்...  தன்னை மறந்து பிறரை நினைத்து.... இந்த சமூகத்தில் எல்லாவித நன்மைகளுக்காகவும் இறைவனுக்கு நன்றி கூறக் கூடியவர்களாக கடவுளின் முன்னிலையில் நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு பிறரை, பிறர் நலனை மட்டுமே முன்னிறுத்தக் கூடிய இயேசுவின் சீடர்களாக மாறிட இன்றைய நாளில் இறைவனது அருளை வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...