மண்ணில் மலர வேண்டியது மனித நேயமே!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நம்முள் மனிதநேயம் மலர வேண்டும் என அழைப்பு தருகின்றார். ஆம்! பசியில் இருந்த சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டபோது அவர்களின் செயலை குற்றம் சாட்டினார்கள், பரிசேயர்கள். ஓய்வுநாள் சட்டத்தை மீறி செயல்படுகிறார்கள் உங்களுடைய சீடர்கள் என்று இயேசுவிடம் குற்றம் சுமத்தினார்கள்.
கதிர்களைக் கொய்து உண்பது குற்றமா? என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்கும் பொழுது, ஓய்வு நாள் சட்டத்தின் அடிப்படையில் இதனை சிந்திக்கின்ற பொழுது, கதிர்களை கொய்வது என்பது அறுவடைக்கு சமமாக பார்க்கப்படுகிறது. கைகளில் கசக்கித் தின்பதை நெல்லிருந்து உமியை பிரித்தெடுப்பதாக பார்க்கப்படுகிறது. இவை இரண்டும் விவசாயம் சார்ந்த வேலைகள் ஆகின்றன. இந்த வேலைகளை அவர்கள் செய்வதாகக் கூறி, ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக அவர்கள் மேல் குற்றம் சுமத்தப்படுகிறது.
ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோ, சட்டம் என்பது மனிதனுக்காக உருவாக்கப்பட்டது, சட்டத்திற்காக மனிதன் இல்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக, தாவீது பசியால் இருந்த போது என்ன செய்தார் என்பதை மேற்கோள்காட்டி, தன் சீடர்களை குற்றவாளிகள் என்றவர்களை வாயடைக்கச் செய்யக்கூடிய பணியினை இயேசு செய்கின்றார்.
ஆபத்தில் இருக்கும் நபருக்கு உதவி செய்யத்தான் நாம் ஒவ்வொருவருமே படைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் இன்றைய நாளில், இன்றைய உலகில், ஆபத்தில் ஒருவர் இருக்கிறார் என்றால், அதனை புகைப்படம் எடுத்து மற்றவரோடு பகிரக் கூடியவர்களாகத் தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். சிறிது சிறிதாக ஒவ்வொரு நாளும் இந்த நவீன உலகில் மனித நேயம் என்பது மறைந்து கொண்டே செல்கிறது. ஆனால், இயற்கைப் பேரிடர்களும், இயற்கைச் சீற்றங்களும், கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா தொற்றுநோயும் நம்முள் இருக்கும் மனிதநேயத்தை மீண்டும் தூண்டிப் பார்க்கும் விதமாக, நம்மை மனிதநேயம் கொண்ட மனிதர்களாக மாறிட, ஏதோ ஒரு விதத்தில் நம்மை தட்டி எழுப்பி உள்ளன என்று தான் இன்றைய சூழலை கருத முடிகிறது.
நிகழும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், நலன் காக்க வேண்டும் என்பதற்காக பலர் செய்கின்ற தியாகங்கள் ஏராளம். இந்தத் தியாகங்கள் எல்லாம் ஏதாவது ஒரு இயற்கை பேரிடர் வந்தாலோ, அல்லது ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டாலோ மட்டுமே எழக் கூடியது அல்ல. மாறாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு நிமிடமும், நமது வாழ்வில் இந்த மனித நேயக் குணமானது, மனிதநேயப் பண்பானது வெளிப்பட வேண்டும். ஆண்டவர் இயேசுவை பின்பற்றுகிறேன் என்று சொல்லக்கூடிய நாம் ஒவ்வொருவருமே, அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போல, இந்த சமூகத்தில், துன்புறக்கூடிய ஒவ்வொருவரையும் கண்டு, அவர்களின் துன்பத்தைத் துடைக்கக் கூடியவர்களாக நாம் இச்சமூகத்தில் இருக்க அழைக்கப்படுகின்றோம். அழைக்கின்ற இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய் நாம் மாறிட முயல்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க கேட்டது போல, நாம் பல நேரங்களில் இறைவனோடு உறவற்றவர்களாக இருந்தோம். இறைவனோடு உறவற்றவர்கள் என்றால், சின்னஞ்சிறியவருக்கு நீங்கள் செய்யாததெல்லாம், இறைவனுக்கு செய்யாததாகக் கருதப்படுகிறது. சின்னஞ்சிறியோருக்கு நாம் செய்கின்ற ஒவ்வொன்றும் கடவுளுக்கே செய்ததாக கருதப்படுகிறது. நாம் துன்பத்தில் இருப்பவரைக் கண்டு, நம்முள் இருக்கும் மனிதநேயத்தை தட்டி எழுப்பி அவரது துன்பத்தை துடைக்கும் பணியில் ஈடுபடாமல் இருந்திருப்போமாயின், நாம் கடவுளை விட்டு சற்று அப்பால் தான் நிற்கிறோம் என்பது உண்மையாகிறது. இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நம்மையே நாம் சுய ஆய்வு செய்து மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, இனி வருகின்ற நாட்களில் இந்த சமூகத்தில் சமத்துவமான, நீதியான, நல்ல பணிகளை, அதிலும் குறிப்பாக மனித நேயப் பணிகளை இச்சமூகத்தில் செய்ய அழைப்பு தருகின்றார். அழைக்கும் இறைவனின் குரலுக்கு கொடுத்து, வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டு, இயேசுவின் பாதையில் பயணம் செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக