சனி, 18 செப்டம்பர், 2021

விதைப்பவருக்குத் தெரியும்!....(18.9.2021)

விதைப்பவருக்குத் தெரியும்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
         எங்கு விதைத்தால் விதை நன்கு முறைக்கும் என்பது விதைப்பவருக்கு தெரியும். அனைத்தையும் நன்கு அறிந்த அவரின் விதைகளை, பாறைகள் மேலும் விதைக்கிறார், முட்செடிகளும் விதைக்கிறார், பாதையோரங்களிலும் விதைக்கிறார், நல்ல நிலத்திலும் விதைக்கிறார். இதற்கு என்ன காரணம் என்று சற்று ஆழமாக சிந்தித்து பார்க்கின்ற பொழுது, விதைப்பவரின் நோக்கத்தை நாம் கண்டுகொள்ள முடியும். 

         விதைப்பவரின் நோக்கம் விளைச்சல் கிடைக்க வேண்டும் என்பதே. அந்த விளைச்சல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது  அது விழக்கூடிய இடத்தை பொறுத்து தான் இருக்கிறது. 

      இறைவார்த்தை என்பதும் நற்சிந்தனை என்பதும் நன்மைத்தனம் என்பதும், நல்ல செயல்கள் என்பதும் நம் அனைவரிடத்திலும் சொல்லப்பட்டு இருக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. 
இங்கு இறைவார்த்தை ஆனது, இந்த உலகத்திலேயே தீமையின் உருவமாக இருக்கக் கூடிய அயோக்கியத் தனம் நிறைந்த மனிதனுக்கும் சொல்லப்படுகிறது, மிக நல்லவன் என்று போற்றப்படக் கூடிய மனிதனுக்கும் சொல்லப்படுகிறது. அதிகாரத்தில் இருக்கக்கூடிய மனிதனுக்கும் சொல்லப்படுகிறது, வறுமையிலும் ஏழ்மையிலும் உழலக்கூடிய மனிதனுக்கும் சொல்லப்படுகிறது. 

             இதனை ஒவ்வொருவரும் எவ்வாறாக எடுத்துக் கொள்கின்றனர் என்பதை பொறுத்தே அவரவருடைய வளர்ச்சியானது அமைக்கப்படுகிறது. ஏதோ சொல்கிறார்கள்! அதனைக் கேட்டு விட்டு நாம் நகர்ந்து விடுவோம்! என்று நினைத்து வாழக்கூடிய மனிதனிடத்தில் எந்த ஒரு வளர்ச்சியும் இருக்காது. இந்த இழை வார்த்தையானது உள்ளத்தை ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது, அது தான் வாழ வேண்டிய அறநெறியினைக் காட்டுகிறது, அதற்கு நாம் செவி கொடுத்து வாழ்வோம் என நினைக்கக்கூடிய மனிதனிடத்தில் நிச்சயம் வளர்ச்சியைக் காண முடியும். 

                 இவன் என்ன சொல்வது? அதை நான் என்ன கேட்பது? என்ற மனநிலையோடு இருப்பவனிடத்தில் வளர்ச்சி இருக்காது. இவன் ஏதோ ஒன்றை சொல்ல வருகிறான். அதற்கு செவி கொடுத்து தான் பார்ப்போமே! என்று இசைந்து போகக்கூடிய மனிதனின் வாழ்வில் நிச்சயம் வளர்ச்சி என்பது இருக்கும். 

            இறைவனது பார்வையில் இறைவன் அனைத்து மனிதரையும் நேசிக்கக் கூடியவராக, அன்பு செய்யக் கூடியவராக, இருக்கிறார். அவர் எல்லோருக்குமான கடவுளாக இருக்கின்றார். ஒரு குறிப்பிட்ட  இனத்திற்கோ, குறிப்பிட்ட மக்களுக்கோ மட்டும் உரியவர் என அவரை சுருக்கிவிட முடியாது.  

           அந்தக் கடவுள் வழங்கக் கூடிய சட்ட திட்டங்களாக இருக்கட்டும், அவர் கொடுக்கக்கூடிய நல்ல விஷயங்களாக இருக்கட்டும், அவை எல்லோருக்கும் பொதுவானது.  அவ்வாறு எல்லோருக்குமானது என இறைவனிடத்திலிருந்து வரக் கூடிய நன்மைத்தனங்கள் ஒவ்வொன்றையும் நமக்கானது என ஏற்றுக் கொண்டு, அதனைப் பற்றிப் பிடித்துக்கண்டு நாம் செயல்படும் பொழுது, நாம் நல்ல நிலத்தில் விழுந்து, நூறு மடங்கு விளைச்சலைத் தரக்கூடிய நல்ல விதைகளை போல நாம் மாறலாம். 

            அப்படிப் பிடித்துக் கொள்ளாத போது, நாம் முட்செடிகளில் விழுந்த விதைகளைப் போலவும், வழியோரம் விழுந்த விதைகள் போலவும், பாறையில் விழுந்த விதைகள் போலவும், சில நாட்கள் மட்டுமே இறைவார்த்தையை பிடித்துக் கொண்டு பின்னர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடுகிறோம். 
           எனவே இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தருகின்ற பார்வை, அனைவருக்குமான இறைவன் அனைவருடைய நலவாழ்விற்கும் வழிகாட்டுகிறார். அவர் காட்டுகின்ற வழியை பின்பற்றி, அவரது பாதையில் பயணம் செய்து, நல்ல விளைச்சல் தரக்கூடிய, கனிகளைத் தரக்கூடிய பலன் பெருக்கக்கூடிய நபராக வாழ்வது நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கிறது.  எனவே நமது வாழ்வின் அர்த்தம் உள்ள நல்ல விளைச்சலைத் தரக்கூடிய ஒன்றாக மாற்றிக் கொள்ள இன்றைய நாளில் இறையருளை இணைந்து வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...