இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானை பற்றி நாம் வாசிக்கின்றோம்.
யார் இந்த திருமுழுக்கு யோவான்? என்ற கேள்வி எழுப்பினால் அதற்கு இவ்வாறு பதில் தரலாம்.
பழைய புதிய ஏற்பாடுகளை இணைக்கும் இறைவாக்கினர்.
இவர் இயேசுவோடு இணைந்து வாழ்ந்தவர்.
அஞ்சாநெஞ்சம் கொண்ட வீரர்.
தவறை சுட்டிக்காட்டிய தைரியசாலி.
தன் நிலையை நன்கு அறிந்திருந்த ஞானி.
இயேசுவுக்கு முன்னோடி.
வார்த்தையை வாழ்வாக்கியவர்..
எளிமையின் வடிவமானவர்.
இயேசுவின் வருகையை எட்டுத்திக்கும் அறிவித்தவர்.
அடுத்தவன் கொடுத்த வாக்கால் தன் உயிரை இழந்தவர்.
தன் போதனைகளில் எப்போதும் தளராது நிலைத்து நின்றவர்.
இவரின் இறப்பை பற்றித் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.
இவர் தனது வாழ்வை இன்றைய நாளின் முதல் வாசகங்களுக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொண்டவர்.
இன்றைய முதல் வாசகத்தில் சகோதர அன்பில் நிலைத்திருக்க (எபிரே.13: 1) நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். திருமுழுக்கு யோவானும் இவ்வுலகத்தில் வாழ்ந்த போது இயேசுவின் அன்பை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே மனம் மாறிட அழைப்பு விடுத்தவர்.
அன்னியரை வரவேற்று அவரோடு விருந்தோம்ப மறவாதீர் (எபிரே. 13:2) என்ற முதல் வாசகத்திற்கு ஏற்றவகையில் யோவானும் மனம் மாறிட அனைவரையும் அழைத்து, இயேசுவின் அன்பு என்ற விருந்தில் இணைய காரணியாக இருந்தவர்.
தன்னுடைய வாழ்வில் ஏற்படும் துன்பம் போலத்தான் அனைவரது வாழ்விலும் துன்பமானது உருவாகிறது(எபிரே 13: 3) என்பதை உணர்ந்த வகையில் திருமுழுக்கு யோவான் தன்னை போலவே அனைவரும் மீட்படைய வேண்டுமென்று நாம் அனைவரும் மீட்படைய திருமுழுக்குப் பெற அழைப்பு விடுத்தார்.
மண உறவு என்பது புனிதமானது (எபிரே 13:4) இதனை உணர்ந்தமையால் தான் மண உறவில் இருக்கக்கூடிய புனிதமற்ற செயலை சுட்டிக் காண்பித்தார். அதன் விளைவே அவர் இறப்பையும் சந்திக்க நேர்ந்தது.
பொருளாசையை விலக்குங்கள் (எபிரே 13:5) என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப எளிமையின் வடிவமாக இருந்தவர் திருமுழுக்கு யோவான்.
ஆண்டவரே எனக்குத் துணை நான் அஞ்சமாட்டேன் (எபிரே 13: 6) என்ற வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில் அஞ்சாது சமூகத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டியவர்.
கடவுளது வார்த்தைகளை எடுத்துச் சொன்ன தலைவர்களை நினைவு கூறுங்கள் (எபிரே 13: 7) என்ற இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது முன்னோருக்கு இறைவன் செய்த நன்மைகளை நினைத்து பாருங்கள் அவரை விட்டு நாம் அவருக்கு எதிராக தவறிழைத்து கொண்டிருக்கிறோம். அதிலிருந்து மனம் மாறிட வழிகாட்டியவர் இந்த திருமுழுக்கு யோவான்.
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் (எபிரே. 13: 8 ) என்ற வார்த்தைகளின் அடிப்படையில் நாமும் நமது வாழ்வில் நற்செயல்கள் செய்வதில் நேற்றும் இன்றும் என்றும் மாறாது வாழ வேண்டுமென தன் வாழ்வு வழியாக அழைப்பு விடுத்தவர் திருமுழுக்கு யோவான்.
இத்தகைய இறை வார்த்தைகளின் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக் கொண்டதால் தான் திருமுழுக்கு யோவானின் நினைவு இன்றும் நம்மிடையே மாறாது மறையாது நிலைத்திருக்கிறது. நாமும் அவரைப் போல இறை வார்த்தைகளின் படி நமது வாழ்வை அமைத்துக் கொண்டு இச்சமூகத்தில் பயணிக்கும் போது நாமும் நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசுவைப் போல இச்சமூகத்தில் ஒளி வீசிட முடியும்.
மாறாதவர் இயேசு நாம் எப்படி? சிந்திப்போம் .....
நாமும் அவர்களை போல நேற்றும் இன்றும் என்றும் நற்பண்புகளிலும், கொள்கைப் பிடிப்பிலும் நல்லவர்களின் நல்லுறவிலும் மாறாது மறையாது நிலைத்திருப்போம்!
பதிலளிநீக்கு