செவ்வாய், 21 டிசம்பர், 2021

அர்ப்பணம்! என் ஆண்டவருக்கு சமர்ப்பணம்!(22.12.2021)

அர்ப்பணம்! என் ஆண்டவருக்கு சமர்ப்பணம்!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடை
கிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேலின் தாய் அன்னா சிறுவன் சாமுவேலை கூட்டிக்கொண்டு எருசலேம் ஆலயத்திற்கு வந்து ஆண்டவர் திருமுன் சிறுவன் சாமுவேலை காணிக்கையாக அர்ப்பணிக்கின்றார். தான் மன்றாடிய நாளில் தனது மான்றாட்டுக்கு செவி சாய்த்து
தனக்கு ஒரு குழந்தையை அளித்து தனது வம்சத்திற்கு வாரிசை அளித்து தனது இழிநிலையை போக்கிய ஆண்டவரை மகிழ்வுடனும் நன்றியுடனும் அறிக்கையிடுகின்றார். 

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் அன்னை மரியா, தந்தையாம் இறைவன், எலிசபெத்தம்மாளின்
முதிர்ந்த வயதில் அவருக்குக் கொடுத்த  குழந்தை பேற்றை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறுகின்றார்.  

கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட எலிசபெத்தம்மாள், தமது வாழ்நாள் முழுவதும் வாழ்வின் ஆதாரமாகிய குழந்தைச் செல்வம் இல்லாத காரணத்தினால் பல்வேறு நபர்களின் ஏச்சுக்களுக்கும் பேச்சுகளுக்கும் பல்வேறு துன்பங்களுக்கும் மன போராட்டங்களுக்கும் ஆளாகி இருந்தார். 
     அது போலவே இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேலின் தாயாகிய அண்ணா சாமுவேலைப்  பெற்றெடுக்கும் வரை தனது சுற்றத்தினரின் ஏச்சுகளுக்கும் பேச்சுக்களுக்கும் நகைப்புக்கும் உள்ளாகி நாள்தோறும் மனவேதனை அடைந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தார். 

இன்றைய வாசகங்களில் நாம் காண்கின்ற மூன்று பெண்களாகிய அன்னாவும் அன்னை மரியாவும் எலிசபெத்தம்மாளும் தம் வாழ்வில் சந்தித்த இன்னல்கள் இடையூறுகள் மற்றும் ஏளனப் பேச்சுகளையும் கடந்து, தங்களது வாழ்வில் ஒளி பிறக்கும், விடியல் தோன்றும். தனது குடும்பம் தழைக்கும் என்று நம்பிக்கையோடு ஆண்டவரிடத்தில் அனுதினமும் தம்மை அர்ப்பணித்து தம்முடைய வேண்டுதல்கள் ஜெபங்கள் வழியாக இறைவனில் இணைந்திருந்தார்கள். அவர்களின் ஜெப அர்ப்பணமே இன்று அவர்களின் வாழ்வில் அவர்களது நம்பிக்கையை மெய்யாக்கியது, அவர்களின் விண்ணப்பங்களுக்கு உயிரோட்டம் அளித்தது. அவர்களுக்கு நல்வாழ்வையும் நற்பெயரையும் அளித்தது. 

          ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் நாம் நமது உள்ளத்தில் எத்தகைய மன உணர்வு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்ப்போம். நமது சிந்தனைகளும் வார்த்தைகளும் செயல்களும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படவும், இறை வல்லமையை வெளிப்படுத்தவும், அதன் வழியில் நமது வாழ்வு ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக அமைந்திடவும் இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...