ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
"எழுகிறது ஆனால் மறைக்கப்படுகிறது..."
எதார்த்தமாய்
நடக்க வேண்டிய செயல்கள்
இன்றைக்கு
எதர்த்தமாய் நடைபெறுவதில்லை
வாடிக்கையாய்
நடைபெற வேண்டிய பணிகள்
தடையின்றி
வாடிக்கையாய் நிகழ்வதில்லை
சொல்லிச் செய்ய வேண்டியவை
நடப்பதில்லை
ஆனால்
சொல்லாமல் செய்ய கூடியவை
மட்டும்
இன்னும் சிறப்பாய்
நடந்தேறுகிறது
எங்குமே சிரமமங்கள்
இல்லாதது போன்று
சுழல்கிறது நம்முடைய பூமி
நாமும் சுற்றி வருகின்றோம்!
அவசரம் எதற்கு?
ஆரவாரம் எதற்கு?
ஆர்பாட்டம் எதற்கு?
என்று கேட்ட நாள்கள் எல்லாம்
இன்று மறைந்துவிட்டன
இப்போதெல்லாம்
போராட்டங்கள்
நடக்கவில்லையென்றால்தான்
ஆச்சரியம்...
மனிதன் வாழ்வதை நிறுத்திவிட்டான்
வாழ்வதுபோன்று
நடிக்க பழகிவிட்டான்
பாசாங்கான சிரிப்பு
போலியான வார்த்தை
மாற்றிடும் நட்பு
ஆளுக்கு ஏற்றாற் பேசுவது
நகர்ந்து செல்லும் வாழ்க்கையில்
மூழ்காமல்
நனைந்துவிட்டு செல்லும்
மனிதர்களில் ஒருவராக
நீங்களும் நானும்
வாழ தொடங்கிவிட்டோம்
ஆனால் அப்படிப்பட்ட
சிந்தனைகளைத் தூக்கியெறிந்துவிட்டு
கடவுள் துணையோடு
நேரிய வாழ்;வை
அமைத்து கொள்ள
அழைப்பு விடுக்கிறது
இன்று நாம் கொண்டாடும்
திருக்காட்சி பெருவிழா!
இன்றைய வாசகங்களும்
நற்செய்தியும்
நாம் எப்படிப்பட்ட வாழ்வு
மேற்கொள்ள வேண்டுமென்ற
புரிதலைத் தருகிறது.
மூன்று ஞானிகள்
இயேசுவைக் காண வந்தார்கள்
அவர்கள் விண்மீன்
வழிகாட்ட வந்தார்கள்
உலகின் ஒளியாய் பிறந்திருக்கும்
இயேசுவைக் காண
விண்மீன் ஒளியின் வழியில்
தொலைதூரத்திலிருந்து
பாலகன் இருந்த பெத்லகேமிற்கு
வந்தார்கள்
அன்று வந்திருந்த ஞானிகள்
காணிக்கைகளை வைத்துவிட்டு
கடவுளை வணங்கிவிட்டு
தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்!
இது நற்செய்தியின் சுருக்கம்...
நமக்கான செய்தி என்ன?
நம்மிடையே ஞானிகளும் உண்டு
இடையர்களும் உண்டு
ஏரோதும் உண்டு
இது நற்செய்தியிலிருந்து
நாம் அறிய வேண்டிய முதல் பாடம்
இது அவர் அவரைப் பொறுத்தது
நீங்களும் நானும்
முடிவு செய்வோம்
நாம் ஞானிகளா? இடையர்களா? ஏரோதா?
இரண்டாவதாக
நான் மையப்படுத்த விரும்புவது
எழுந்த விண்மீன்
இன்று மறைகிறது
எழுந்த விண்மீன்
இன்று காணாமல் போகிறது
எழுந்த விண்மீன்
இன்று ஒதுக்கப்பட்டுவிட்டது
எழுந்த விண்மீன்
இன்று புறந்தள்ளப்பட்டுவிட்டது
வந்த மூன்று பேரும்
உண்மையிலேயே ஞானிகள்தான்
எவ்வாறு?
அவர்கள் கடவுளி;ன் உடனிருப்போடு
பெத்லகேமை அடைந்தார்கள்
ஏரோதுவின் அரண்மனைக்குள்
நுழைந்தார்கள்
ஆனால் தங்கவில்லை
அங்கிருந்து சென்று
இயேசுவைக் கண்டார்கள்
வருகிறேன் என்று
ஏரோதுவிடம் சொன்னார்கள்
ஆனால் போகவில்லை...
நாம் எப்படி?
கடவுளைச் சந்திக்க வருவோம்
நமக்கு முன்னும் விண்மீன்
துணைக்கு வரும்
நாமும் ஏரோதுவின் அரண்மனைக்குள்
நுழைவோம்
அது எது?
நம்முடைய பொழுதுபோக்கு
நம்முடைய தீயநாட்டம்
நம்முடைய சுயவிருப்பம்
நம்முடைய சுயநலம்
நம்முடைய பழிவாங்கும் எண்ணம்
நம்முடைய பொறாமை
நம்முடைய பகைமை
நம்முடைய கடவுள் சார் இல்லா திட்டம்
நம்முடைய போலியான வாழ்க்கை
நம்முடைய நிரந்தரமற்ற மகிழ்ச்சி
அடுக்கிக்கொண்டே போகும்
இந்த அட்டவணை நிச்சயம்
நிற்காது
நம்மில் ஞானிகளைவிட
ஏரோதுகள் இன்று அதிகமாய்
தோன்றிவிட்டனர்
தோற்றுவிக்கப்பட்டுவிட்டனர்
கடவுளைப் பார்க்க விரும்பிய
நாம் ஏரோதாய் எட்டிப்பார்க்கும்
நம்முடைய சுய விருப்பு வெறுப்புக்குள்
நுழைந்துவிட்டு
வெளியே வர யோசிக்கிறோம்
அப்படியிருக்க நாம்
எப்படி கடவுளைக் காண முடியும்?
கண்டால்தானே அது காட்சியாகும்?
சிந்திப்போம்
திருக்காட்சி பெருவிழா நமக்கு
விழாவாய் வருகிறதா?
அல்லது வாடிக்கையாய் வந்து
நம்மைக் கடந்துச் செல்கிறதா?
இத்தகைய சிந்தனைகளை
உள்வாங்குவோம்
விண்மீன் எப்போதும் எழுகிறது
அது நமக்கு வழியும் காட்டுகிறது
நாம் அதைப் பார்க்கிறோமா
நம் கண்களுக்குத் தென்படுகிறதா
இதுதான் நாம் கேட்கப்பட வேண்டிய
கேள்வி...
அருமை சகோ.. 👌
பதிலளிநீக்குசிந்திக்கத் தூண்டும் பதிவு.. 🙏
திருக்காட்சி விழாவினை இதில் உள்ளடங்கியுள்ள நிகழ்வுகளை மிக எளிமையாகவும் ஆழமாகவும் உணரக்கூடிய வகையில் இன்றைய கால வாழ்க்கையை கண்ணாடி போல் அழகாய் வெளிப்படுத்துகின்றது இந்த அழகிய கவிதை!
பதிலளிநீக்குஉங்களது வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்!🎁🎁🎁🎁🎁👍👍👍👍👍