வியாழன், 28 ஜனவரி, 2021

எண்ணங்களால் நகரும் வாழ்வு (29.1.2021)

எண்ணங்களால் நகரும் வாழ்வு 
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்


நான் எண்ணுவதால் வாழுகின்றேன் ...

என்ற தத்துவ அறிஞரின் வார்த்தைகளுக்கு ஏற்ப இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நம்மை நமது எண்ண அலைகளை குறித்து சிந்திக்க அழைப்பு தருகின்றது .

இன்றைய முதல் வாசகத்தில் ஒருவன் ஒளியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறான். அவன் அந்த ஒளியை பெற்ற பின் அந்த ஒளியை பெறுவதற்கான முயற்சியில் அவனுக்கு ஏற்பட்ட துன்பம் நிறைந்த போராட்டங்களை மன உறுதியோடு ஏற்றுக்கொள்கிறான். இந்த ஒளியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடும்போது, அவன் பலவிதமான இகழ்ச்சிக்கும், வேதனைக்கு ஆளாகி பலரும் பார்க்கும் வகையில் வேடிக்கை பொருளாகவும் இருந்திருக்கிறான். இப்படி எல்லாம் இருந்தாலும், ஒளியை பெற்ற பின்பு நேரிட்ட அனைத்து துன்பம் நிறைந்த போராட்டங்களையும் மன உறுதியோடு ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறான் மனிதன் என்ற செய்தியானது மிகவும் ஆழமாக  நமக்குத் தரப்படுகிறது.

இத்தகைய இறைவார்த்தையின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுடைய எண்ண ஓட்டங்களை சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது, மனித மனமானது ஒன்றின் மீது நாட்டம் கொள்கிறது. அதனை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. அதனால் பலவிதமான இன்னல்களை சந்தித்து, இறுதியில் அந்த எண்ணம் ஈடேறியவுடன் அதற்கடுத்ததாக அடுத்த ஒன்றின் மீது நாட்டம் கொண்டு, அதனை நோக்கி பயணிக்க கூடியதாக இருக்கிறது. 
எண்ணங்கள்தான் ஒன்றின் மீது நாட்டத்தையும் உருவாக்குகிறது. அதே எண்ணங்கள் தான் அந்த நாட்டத்தின் காரணமாக வரக்கூடிய துன்பங்களையும் ஏற்றுக் கொள்கின்றது. அதே எண்ணங்கள் தான் அந்த  நாட்டமானது ஈடேறும்போது வரக்கூடிய மகிழ்ச்சியையும் ஏற்றுக்கொள்கிறது. பின் அதற்கடுத்ததாக அடுத்த ஒன்றினை நோக்கியும் நகர்கிறது...

நான் எண்ணுவதால் வாழ்கின்றேன் என்ற தத்துவ அறிஞரின் வார்த்தைகளுக்கு ஏற்ப எண்ணங்கள் நகர்த்தக்கூடிய நமது வாழ்வில் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இறைவன் தரக்கூடிய செய்தி... உங்கள் எண்ணங்களையும் அதன் செயல்பாடுகளையும் சீர்தூக்கிப் பாருங்கள் என்பதாகும்.

எப்படி ஒருவர் விதையை நிலத்தில் விதைத்து விட்டுச் செல்ல, விதைத்தவர்க்கு தெரியாமலேயே விதையானது முளைத்தெழுந்து தளிர்,கதிர் பின் கதிர் முழுக்க  தானியங்கள் என தானாக வளர்ந்து இருக்கிறதோ, அதுபோல  யாரோ ஒருவரால் நம்மிடையே விதைக்கப் படக்கூடிய எண்ணங்களும் படிப்படியாக நமக்குளாகவே வளர்ச்சியடைந்து நிற்கின்றது.

இத்தகையை எண்ணங்களின் வளர்ச்சியில் இருக்கக்கூடிய அழகு என்னவென்றால். நாம் வாழும் இந்த உலகத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களைப் பற்றி ஒவ்வொரு விதமான எண்ணங்களை யாரோ ஒருவராலோ அல்லது நாமாகவோ  நமக்குள் விதையாக விதைக்கின்றோம் அல்லது விதைக்கப்படுகிறது.
விதைக்கப்பட்டுள்ள இந்த விதைக்குள் ஒருவரை பற்றிய நேர்மறையான, எதிர்மறையான என அனைத்துவிதமான குணநலன்களும் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் தான் மிகவும் வேகமாக வளர்ச்சி எடுக்கின்றன.  

நமக்குத் தெரியாமலேயே நமக்குள்ளாகவே அதிகமாக வளர்ந்திருக்கக்கூடிய இந்த அடுத்தவரை பற்றிய எதிர்மறையான எண்ணங்களை பற்றிய சுய ஆய்வுக்கு தான் இன்றைய வாசகங்கள் நமக்கு சிந்திக்க அழைப்பு தருகின்றன.

ஒருவர் மீது நாம் கொண்டிருக்கக்கூடிய தவறான எண்ணங்கள் தான், நமது வாழ்வில் பெரும்பாலான நேரங்களில் அமைதியை இழக்க செய்யக்கூடியதாக இருக்கின்றது.  

இந்த உலகில் உள்ள யாருமே சண்டையிட்டுக் கொள்வது இல்லை மாறாக கருத்து வேறுபாடுகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கருத்து வேறுபாடு என்பது ஒவ்வொரு மனிதனும் தான் கொண்டிருக்கக்கூடிய கருத்துக்களை சரியா? தவறா? என சுய ஆய்வு செய்து சிந்திக்கவும் சீர்தூக்கிப் பார்க்கவும் முயலும்போது மட்டுமே வளர்ச்சியில் முழு நிறைவை நாம் கண்டுகொள்ள முடியும்.  

நாம் நமக்குள்ளாக அடுத்தவர்களைப் பற்றி கொண்டிருக்கக்கூடிய எண்ணங்களில் நேர்மறை, எதிர்மறை எது அதிகமாக வளர்ந்து இருக்கிறது என்பதனை சீர்தூக்கிப் பார்ப்போம். அச்சம் தவிர்த்து அடுத்தவர் பற்றிய நல்லவிதமான எண்ணங்களோடு பயணிக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றது .

அச்சம் என்பது பகுத்தறிவின் துணையை கைவிடுவதே  

சாலமோனின் ஞானம் 17:12

அச்சம் கலைந்து பகுத்தறிவின் துணையோடு நமது எண்ணங்களை சீர் தூக்கி பார்க்க முயலுவோம். அதற்கான இறையருளை வேண்டுவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...