பவுலின் மனமாற்ற விழா முன்னுரை
நிஜத்தை விட்டுவிட்டு, நிழலை நம்பி வாழ்வதால் பயனில்லை!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று நாம் நமது தாய்த்திரு அவையோடு இணைந்து பவுலின் மனமாற்ற விழாவினை சிறப்பித்துக் கொண்டிருக்கிறோம்.
இன்றைய நாளின் முதல் வாசகத்தில் பவுல், தன்னுடைய வாழ்க்கையில் அவர் பெற்ற மன மாற்றத்தை நமக்கு எடுத்துரைக்கிறார்.
எந்த இயேசுவின் பெயரை அறிக்கை இடுபவர்களையும், அந்த இயேசுவின் பெயரால் ஒன்றிணைந்தவர்களையும் தேடித் தேடிச் சென்று கொன்று குவித்தாரோ, அந்த இயேசுவின் பெயரை இதயத்தில் சுமந்தவராய், பல கடல்கள் தாண்டி நாடு நாடாகச் சென்றும், வீதிவீதியாக சென்றும், அந்த இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, பலரை அந்த இயேசுவின் பெயரில் ஒருங்கிணைக்கக்கூடிய பணியினை செய்ததைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கின்றோம்.
ஆண்டவர் இயேசுவின் நற்செய்திப் பணியை உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் அறிவிக்க வேண்டியது நமது கடமையாகும். ஏனென்றால் அது ஆண்டவர் இயேசுவால் அவரை பின்தொடர்ந்த சீடர்களுக்கு சொல்லப்பட்டது. இன்று நாமும் இதையே தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம்.
இன்று அந்த இயேசுவின் சீடர்களாக, அவரை மையப்படுத்தி, நற்செய்திப் பணியை செய்பவர்களாக நாம் இவ்வுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறோம்.
கண்டிப்பாக பவுலைப்போல மனமாற்றம் கொண்டவர்களாக, உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றவும் நம்பிக்கை கொண்டவரை இயேசுவிடம் அழைத்து வரவும் நாம் இந்த மனமாற்றப் பெருவிழாவில் அழைக்கப்படுகிறோம்.
மனமாற்றம் என்பது மனதில் இருந்தால் மட்டும் போதாது, அது நமது செயலிலும் வெளிப்படவேண்டும். பவுலைப் போல மனமாற்றம் பெற்றவர்களாக, நிழலை நம்பி வாழாமல் நிஜமான இயேசுவை நம்பி வாழவும், இயேசுவை நம்பக்கூடியவர்களை ஒருங்கிணைத்து ஒன்று சேர்க்கவும் அருள்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
நமது வாழ்வின் நோக்கத்தை கூர்மைப்படுத்திய அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! நன்றிகளும்! ஜெபங்களும்!
பதிலளிநீக்கு