சொல்லாதே செய்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
செபமும் தவமும் இறைவனிடம் மனிதன் வர உதவக்கூடியவை...
பக்திகளில் சிறந்தது இறைபக்தி என்பார்கள்.
அந்த இறைவனை மனதில் கொண்டு அடுத்தவரின் பாவத்திற்குக் கழுவாயாக பலியை நிறைவேற்றக்கூடிய பொறுப்பினை பல குருக்கள் செய்கிறார்கள். அப்படிப்பட்ட குருக்களில் ஒருவராக மெல்கிசேதேக்கு என்பவரை பற்றி தான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். ஒரு குருரவின் பணி என்பது அடுத்தவரின் பாவங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுவதும், அவர்களுக்காக ஜெபிப்பதுமே. விவிலியத்தில் இப்பணியைச் செய்த பலரை நாம் காண இயலும். ஆனால் இது குருக்களுக்கான ஒரு பணி என நாம் கருத்தில் கொள்ளுதல் கூடாது.
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் அடுத்தவருக்காக, அடுத்தவரின் தவறுக்காக, அவர்களுடைய வாழ்வு நலமான வாழ்வு அமைய வேண்டுமெனவும் இறைவனிடத்தில் ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் திருப்பலியில் நாம் பாவமன்னிப்பு வழிபாட்டில் பயன்படுத்தக்கூடிய செபம் ...
"எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே உங்களிடமும், நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். என் சிந்தனையாலும் ,சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே... ஆகையால் எப்பொழுதும் கன்னியான புனித மரியாவிடமும் ,வானதூதர்கள், புனிதர்களிடமும், சகோதர சகோதரிகளே உங்களிடமும் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்".
இந்த செபத்தினை அனுதினமும் திருப்பலியில் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் நம் அருகில் இருக்கக் கூடியவர்களின் தவறான வாழ்க்கைக்கு, அவர்கள் செய்த தவறுக்காக இறைவன் அவர்களை மன்னிக்க வேண்டும் என உண்மையாலுமே நாம் ஜெபிப்பது உண்டா? ...நம்மை நாமே சுய ஆய்வு செய்து பார்ப்போம்.
வெறும் வார்த்தைகளை மட்டும் சொல்லுவதற்கு பெயர் செபமல்ல ...
ஜெபிக்கின்ற போது....
இதயம் இல்லாத வார்த்தைகளை விட வார்த்தைகள் இல்லாத இதயம் எவ்வளவோ மேலானது ...
என கூறுவார்கள்.நமது ஜெபம் என்பது வார்த்தைகளாக மட்டுமில்லாமல் இதயத்திலிருந்து வெளிப்படக்கூடிய உண்மை வேண்டுதலாக இருக்க வேண்டும். இதனை உணர்ந்தவர்களாக நாம் ஒருவர் மற்றவருக்காக ஜெபிக்க கூடிய குருவினுடைய பணியை சிரமேற்கொண்டு செய்ய வேண்டுமென்பதை இன்றைய முதல் வாசகம் வழியாக நாம் அனைவரும் அறிந்து கொள்கின்றோம்.
இப்பணியை செய்வதில் பொதுவாகவே நாம் காலம் தாழ்த்த கிறோம். பொதுவாகவே நம்மிடம் ஒருவர் தங்களது துன்பங்களை பகிரும் போது, நான் உங்களுக்காக செபிக்கிறேன் என கூறுகிறோம். ஆனால் உண்மையிலேயே நாம் அவர்களுக்காக ஜெபிக்கிறோமா? இன்றைய நற்செய்தி வாசகத்தில் புதிய ஆடையோடு பழைய ஆடையை ஓட்டு போடுவதை பற்றி இறைவன் கூறுகிறார். இதனை நாம் ஒரு நாளுக்குரிய செயலை இன்னொரு இன்னொரு நாளுக்கு என தள்ளிக்கொண்டே செல்லும் செயலுக்கு ஒப்பிடலாம்.
நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இன்று நாம் செய்ய வேண்டிய பல பணிகளை செய்யாமல் பிறகு என்று அடுத்த நாளோடு ஒப்பிட்டுக் கொண்டே சொல்கிறோம்... உதாரணமாக இன்றைய நாளில் நாம் ஒருவரோடு கருத்து முரண்பாடு ஏற்படுகிறது என்றால், அதனை இன்றே நாம் சரி செய்து கொள்ளாமல் அதனை எடுத்துக்கொண்டு அடுத்த நாளுக்கு செல்கிறோம். அப்படி செல்லும்போது அந்த நாளானது இனிய நாளாக இருப்பதற்கு பதிலாக மனவருத்தத்தோடு நாம் பயணிக்க கூடியவர்களாக இருப்போம்.பல நேரங்களில் பலரிடம் நான் உங்களுக்காக ஜெபித்துக் கொள்கிறேன். உங்களுக்காக இறைவனிடத்தில் வேண்டுகிறேன் என்ற வார்த்தைகளை பயன்படுத்தும் நாம். அவர்களை பற்றி அந்நாளிலே நினைப்பது இல்லை. மாறாக பிறகு அவர்களுக்காக ஜெபிக்கலாம் என காலம் தாழ்த்துகிறோம். ஆனால் சபை உரையாளர் 5:4
" நீ ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால், அதை நிறைவேற்றுவதில் காலந்தாழ்த்தாதே". என்ற இறை வார்த்தைகளை மனதில் கொண்டு செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம்.
புதிய ஆடையில் போடப்படும் பழைய துணி ஒட்டானது எப்படி புதிய ஆடையை பாதிக்குமோ அதுபோல இன்றைய நாள் கவலைகளை அடுத்த நாளோடு ஒப்பிடும்போது அந்நாளானது மகத்துவம் மற்ற துன்பகரமான நாளாக மாறுகிறது.எனவே அன்றைய நாளின் பணியை அன்றே முடிக்கவும்,அடுத்தவருக்கு உரிய நலன்களுக்காக இறைவேண்டல் செய்யக்கூடிய பணியினை அன்றே செய்து முடித்து விடவும். இறை அருளை வேண்டுவோம்.
சபை உரையாளர் 9:10 கூறுகிறது
நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்.
இவ்வார்த்தைகளின் அடிப்படையில் நம் அருகாமையில் இருக்கக்கூடிய அடுத்தவருக்காக ஜெபிக்கும் செயலை செய்ய இன்றே செயலில் இறங்கி மாற்றத்தை நமக்குள் விதைத்து கொள்ள தொடர்ந்து ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக