செயல்படத் துவங்குவோம்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒரு மனிதன் நல்லதை செய்கிறான். ஆனால் அவனுக்கு துன்பமே கிடைக்கிறது. இதை எப்படி புரிந்து கொள்வது? என்ற நோக்கத்தோடு அலையக்கூடிய நம்மில் பலருக்கு இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கப்படும் யோபுவின் வாழ்வு நமக்கு பாடம் கற்பிக்கிறது.
ஊருஞ் சதமல்ல
உற்றார் சதமல்ல
உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல
பெண்டிர் சதமல்ல
பிள்ளையும் சீரும் சதமல்ல
நின் தேசத்திலே யாதும் சதமல்ல
நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே....
அதாவது ஊரும் நிரந்தரமல்ல உற்றாரும் நிரந்தரமல்ல நாம் பெற்ற பெயரானது நிரந்தரமல்ல கட்டிய மனைவியாக இருந்தாலும் சரி பெற்ற பிள்ளையாக இருந்தாலும் சரி அல்லது மனைவி கொண்டுவந்த சீராக இருந்தாலும் சரி இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமல்ல ஒன்றே ஒன்று நிரந்தரம் அதை இறைவன் ஒருவனே என்ற பட்டினத்தாரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இறைவனை உறுதியாக பற்றிப் படித்துக் கொண்டிருந்தவர் தான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்ட யோபு ...
செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்த யோபு சாத்தானின் சோதனைக்கு உள்ளாகும் போது இருந்ததை எல்லாம் இழந்துவிடுகிறான் தன்னுடன் இருந்த நண்பர்களும்,கட்டிய மனைவியும் அவனை ஏளனம் செய்தார்கள்.
ஆனால் இவை அனைத்தையும் கடவுள் கொடுத்தார் கடவுள் எடுத்துக்கொண்டார் நன்மைகளை மட்டும் பெற்றுக்கொள்ளக்கூடிய நாம் ஏன் கடவுளிடமிருந்து துன்பங்களை பெறக்கூடாது என்றவராய் அனைத்தையும் இழந்த போதும் அவரிடமிருந்த இறைவன் மீதான நம்பிக்கையை மட்டும் இழக்காமல் உறுதியோடு இருந்தார்.
உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.
1 பேதுரு 5:7
என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப ஆண்டவர் மீது அனைத்து விதமான நம்பிக்கையையும் கொண்டவராக இருந்தவர் தான் இந்த யோபு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சி பணிக்கென சீடர்களை அழைத்துக் கொண்டு, நோயுற்றவர்கள் பேய் பிடித்தவர்கள், சமூகத்தால் புறம்தள்ளப்பட்ட நோயாளிகள் என ஒவ்வொருவரையும் தேடிச்சென்று குணப்படுத்துகிறார். மேலும் இறைவனையும் தேடிச் சென்று தனிமையில் ஜெபிக்கிறார். வாருங்கள் அடுத்த ஊருக்கும் சென்று இப்பணியைச் செய்வோம் என சீடர்களை அழைத்துக் கொண்டு புறப்படுகிறார்.
இயேசுவின் வாழ்வு இவ்வுலகில் நாம் வாழும் போதும், எப்போதும் நல்ல பணிகளைச் செய்து கொண்டே செல்ல வேண்டும் நல்ல பணிகளைச் செய்வதால் துன்பங்களே பரிசாக கிடைக்கிறது என்றாலும், நல்லது செய்வதை நிறுத்தாது நலமான பணிகளை முன்னெடுத்துச் செல்ல இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இயேசுவின் இந்த மகத்துவமான நல்லது செய்யக்கூடிய பணியினை செய்யக்கூடிய மனிதர்கள் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு துணை நிற்பதற்கு எவருமில்லை பல நேரங்களில் அவர்களது வீட்டில் உள்ளவர்களே அவர்களுக்கு எதிராக கூறுகிறார்கள் நீ மட்டும் ஏன் இப்படி இருக்கிறாய் அடுத்த பிரச்சனை என்று போய் ஏன் நீ பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொண்டு சிக்கி தவிக்கிறாய் இவ்வாறு இருக்காதே என்றெல்லாம் உறவினர்கள் கூறுகிறார்கள். ஆனால் அடுத்த பிறகான வாழ்வுதான் அர்த்தமுள்ள வாழ்வு என்பதை உணர்ந்தவர்களாய் ஒரு துன்பம் தன்னை தீண்டாத வரை அதைப் பற்றி பேசாமல் இருக்கக் கூடிய மனிதர்களுக்கு மத்தியில் சக மனிதனுக்கு ஒரு துன்பம் நேர்கிறது என்றால் அது தனக்கே இருந்த துன்பம் என கருதி அத்துன்பத்தை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடக் கூடியவர்கள் மிகவும் குறைவு.
ஒரு கவிஞன் அழகாகக் கூறுவார்.
நாம் வாழும் இந்த உலகத்தில்
ஒரு இனத்திற்கு துன்பம் என்றால்
அந்த இனத்தைச் சார்ந்த மற்ற அனைத்தும் இணைந்து போரிடும்.
ஆனால்
மனித இனம் மட்டுமே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்...
எனக் கூறினார்.
இன்று நாம் வாழும் சமூகத்தில் நடக்கக்கூடிய அநீதிகளை வேடிக்கை பார்ப்பவர்கள் ஆகவும் அதைப்பற்றி பேசுபவர்களாகவும் மட்டும்தான் என்று பலர் இருக்கிறார்கள் அந்த அநீதியை நீதியாக மாற்றவும் நல்ல செயலாக மாற்றவும் முன் வருபவர்கள் மிகவும் குறைவு.
இவர்களெல்லாம் தங்கள் வாழ்வில் நல்லது செய்வதனால் பலவிதமான இன்னல்களையும் துன்பங்களையும் அடைந்தாலும் இவர்களுக்கு கிடைக்கும் கைமாறு என்ன? என்ற கேள்வியை எழுப்பும் பொழுது அதற்கு பதில் தர கூடிய வகையில் இன்றைய இரண்டாம் வாசகமானது அமைந்துள்ளது.
ஆம்
நலமான பணிகளை மட்டுமே முன்னெடுத்தால் கைம்மாறு துன்பமாக இருக்கும் போது எப்படி அதனை முன்னெடுப்பது? என்ற கேள்விக்கு விடை தரும் வகையில் இன்றைய இரண்டாம் வாசகமானது அமைகிறது. கொரிந்து நகர மக்களுக்கு பவுலடியார் எழுதிய முதல் கடிதத்தில், மனநிறைவே கைம்மாறு எனக் குறிப்பிடுகிறார். நல்லதை செய்கிறோம், ஆனால் துன்பமே பரிசாக கிடைக்கிறது. துன்பங்களைக் கண்டு துவண்டு விடக்கூடாது நாம் மாறாக இயேசுவை நேரத்தில் மனதில் இருத்தி அவர்களால் தொடர்ந்து நல்லதை செய்து கொண்டே செல்ல வேண்டும் நல்லது செய்வதனால் நமக்குள் கிடைக்கும் மன நிறைவுதான் இறைவன் தருகின்ற கைமாறு இன்றுவரை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் துன்பங்களை கண்டு அஞ்சாது நலமான நல்ல செயல்களை நாம் வாழும் சமூகத்தில் செய்திட வேண்டும்.
பேசுவது எளிது
ஆனால்
செயல்படுத்துவது மிகவும் கடினம்...
வாருங்கள் பேசுவதை நிறுத்தி...
செயல்படத் துவங்குவோம்....
அதற்கான அருளை வேண்டி தொடர்ந்து மன்றாடுவோம் இந்த திருப்பலியில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக