புதன், 27 ஜனவரி, 2021

ஒளி ஏற்றுவது வழியை கண்டுகொள்ளவே... (28.1.2021)

ஒளி ஏற்றுவது வழியை கண்டுகொள்ளவே...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு வாக்களித்த இறைவன் நம்பிக்கைக்கு உரியவர் . நாம் வாழும் இந்த உலகில் ஒருவர் மற்றவரை அன்பு செலுத்தவும், நற்செயல் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும் என முதல் வாசகம் எடுத்துரைக்கிறது .

ஒரு ஊரில்  கடவுளை மறுத்து, கடவுளுக்கு  எதிராக எப்போதும் பேசிய நபர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள் காட்டுக்குள் சென்ற போது, ஒரு சிங்கம் அவரை துரத்திக் கொண்டு வந்தது. அப்போது அவர் பயந்து கொண்டு கடவுளே  என்னை காப்பாற்றும் என்று கத்தினார். கடவுள் அவரிடம் வாழ்நாள் முழுவதும் என்னை மறுத்த உனக்கு சாகும்போது மட்டும் எப்படி என் நினைவு வருகிறது? உன்னை என்னை சார்ந்தவராக ஏற்றுக் கொள்வது எப்படி? என்று கேட்டார். அதற்கு அந்த நபர்  என்னை உன்னுடைய பக்தனாக மாற்றவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது. ஆனால் இந்த சிங்கத்தையாவது உன் விழுமியங்களின் படி வாழ கூடியதாக மாற்றுங்கள் என்றார்.  அப்போது இந்த சிங்கம் என்னை கொல்லாமல் விட்டு விட்டுப் போய்விடும் என்றான். உடனே கடவுள் அந்த சிங்கத்தை தன்னை அறிந்த சிங்கமாக மாற்றினார். உடனே அந்த சிங்கம் தனது இரண்டு கால்களையும் குவித்து இறைவா நான் உண்ண போகும் இந்த உணவை ஆசீர்வதியும் என்று ஜெபித்தது.பின் அந்த மனிதனை சாப்பிட்டுவிட்டு தனக்கு கிடைத்த உணவுக்காக நன்றி செலுத்தியது.

வேடிக்கையான கதையாக இருந்தாலும் இன்றைய வாசகங்கள் நாம் நற்செயல் செய்யவும், ஒருவரை ஒருவர்  அன்பு செய்யவும் வேண்டும் என்ற அன்பு கட்டளையை நமக்கு கற்ப்பிக்கின்றது.
பொதுவாகவே நம்மில் பலர் நமக்கு துன்பம் நேரும் போது தான் இறைவனை நினைக்கின்றோம். அப்போதுதான் இயேசுவின் விழுமியங்களின் படி வாழ வேண்டுமென சிந்திக்கின்றோம். ஆனால் எந்நேரமும் எல்லாச் சூழ்நிலையிலும் நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், நற்செயல்கள் செய்யவும், ஒருவரை ஒருவர் ஊக்கமூட்டவும் அழைக்கப்படுகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு விளக்கை ஏற்றி மரக்காலுக்கு அடியில் வைப்பது முறையா? என்ற கேள்வியை எழுப்புகிறார்.விளக்கு ஏற்றப்படுவது வழி காட்டுவதற்காகத்தான் அன்புக்குரியவர்களை நாம் அனைவரும் இச்சமூகத்தில் விளக்காக ஏற்றப்பட இருக்கிறோம், நாம் அடுத்தவருக்கு வழிகாட்டக்கூடிய விளக்காக இருக்க அழைக்கப்படுகிறோம்.

விளக்குத் தண்டின் மீது வைக்கப்பட்ட விளக்கானது வெளிச்சத்தின் மூலம் பலருக்கு இருளை அகற்றி வழியை காண்பிப்பது போல, நாம் நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான திறமைகளையும் பயன்படுத்தி ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், நற்செயல்களை இச்சமூகத்தில் செய்திடவும், நற்செயல்கள் செய்பவர்களையும், அன்பு செய்பவர்களையும், தொடர்ந்து ஊக்கம் ஊட்டிக் கொண்டே வாழவும் இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
உருகும் மெழுகு திரியைப் பார்த்து யாரும் இறந்து கொண்டிருக்கிறது என்று கூறுவது இல்லை.  

நாம் அன்பானவர்கள், நற்செயல் செய்பவர்கள், ஊக்கமூட்டுபவர்கள் என பிறர் கூற வேண்டும் என்பது அல்ல, மாறாக இப்பண்புகள் நமது செயல்பாடுகளில் வெளிப்பட வேண்டும். இதனை செய்யவே இன்றைய நாளில் நீங்களும் நானும் அழைக்கப்படுகிறோம்.
நாம் அதிகமான நூல்களை வாசிப்பதும் நமது திறமைகளை அதிகம் வளர்த்துக் கொள்வதும் பிறருக்கு பயன்படுத்தவே அவற்றைப் பயன்படுத்தாமல் நமக்கு உள்ளே வைத்து இருப்போமாயின் அதனால் பயன் எதுவுமில்லை.நான் கற்றவைகளையெல்லாம் செயல்படுத்தாமல் நமக்குள்ளே வைத்திருக்கக் கூடியது விளக்கை ஏற்றி மரக்காலுக்கு அடியில் வைப்பதற்கு இணையாகும்.நமது சுயநலத்திற்காக மட்டும் நமக்குள் இருக்கக்கூடிய திறமைகளையும் நாம் தெரிந்த வகைகளையும் பயன்படுத்துவதை விட, நாம் கற்றுக்கொண்டவைகளை பயன்படுத்தி அடுத்தவர் வாழ்வில் ஒளியேற்றிட நாம் ஒளியாக இருக்க வேண்டும்.  துன்பம் வரும்போது மட்டும் இறைவனை  நினைத்த அந்த நபரைப் போல இல்லாமல் எப்போதும் நம்மிடம் இருப்பவைகளை எல்லாம் கொண்டு அடுத்தவரை அன்பு செய்யவும், நற்செயல்கள் செய்யவும், ஊக்கமூட்டும் முயலுவோம்.  
 வருவது வரட்டும் என்று வாழத் துவங்கி விட்டால் வருவது எல்லாம் வரவே என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நாம் நமது வாழ்வில் நற்செயல்களைச் செய்யவும், நல்லதை ஊக்கப்படுத்தவும், ஒருவர் மற்றவரை அன்பு செலுத்தவும்,அன்பு செய்யும் பிறரை ஊக்கமூட்ட கூடியவர்களாக உருவாகிட, ஒளியாக இருந்து வழிகாட்டிட இறையருளை இணைந்து வேண்டுவோம். 

1 கருத்து:

  1. இன்றைய கிறிஸ்தவ சிங்கம் பற்றிய கதை மிகவும் அருமை! வித்தியாசமான கதையின் மூலம் கருத்துக்களை வழங்கிய அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும்! செபங்களும்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...